WFTW Body: 

இஸ்ரவேலரின் சத்துருக்களை எதிர்க்க கிதியோன் ஒரு சேனையைத் திரட்டினபோது, அவனுடன் 32,000 இஸ்ரவேலர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும் முழு இருதயத்துடன் இல்லை என்பதை தேவன் அறிவார். ஆதலால், தேவன் அவர்களை வடிகட்டி கழித்துவிட்டார். முதலாவது, பயப்படுகிறவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அப்படியும் 10,000 பேர் மீதமிருந்தார்கள். அவர்கள் ஆற்றண்டை கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டார்கள். அதில் 300 பேர் மட்டுமே சோதனையில் ஜெயம் பெற்று தேவனால் அங்கீகரிக்கப்பட்டார்கள். (நியாயாதிபதிகள் 7:1-8)

தங்கள் தாகத்தைத் தீர்க்கும்படி அந்த 10,000 பேர்கள் ஆற்றில் தண்ணீர் குடித்தவிதம், கிதியோனின் சேனையில் இருப்பதற்கு தகுதியுடையவர்கள் யார் என்பதைத் தேவன் தேர்ந்தெடுக்கும் முறையாயிற்று! தாங்கள் சோதிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேயில்லை!! 9,700 பேர்கள் சத்துருவைப் பற்றிய எல்லாவற்றையும் மறந்து தங்கள் தாகத்தை திருப்தியாக்க முழங்கால் படியிட்டனர். 300 பேர்கள் மாத்திரம் நின்றவண்ணம், ஜாக்கிரதையாய் குவிந்த கைகளால் தண்ணீரைக் குடித்தனர்.

தேவன் நம்மை சோதிப்பது, அனுதின வாழ்வில் சாதாரண விஷயங்களில்தான்! பணம், உலக மரியாதை, லௌகீக சுகங்கள் போன்றவற்றைப் பற்றிய நமது மனப்பான்மையில்தான்! நாமும்கூட கிதியோனின் சேனையில் இருந்தவர்களைப்போல, தேவன் நம்மை சோதித்தறிகிறார் என்பதை அநேக முறை உணர்வதில்லை.

“உலகக் கவலைகளால்" பாரமடையாதபடிக்கு இயேசுகிறிஸ்து நம்மை எச்சரித்துள்ளார். உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லௌகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு உரைத்தார் (லூக்கா 21:34).

கொரிந்து பட்டண கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஆலோசனை சொல்லும்பொழுது “மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள் போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன், என்கிறார் (1கொரிந்தியர் 7:29-35).

இந்த உலகத்திலுள்ள எதுவும் தேவனிடத்தில் கொண்டுள்ள முழு பக்தியிலிருந்து நம்மை திசை திருப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. உலகத்தின் நியாயமான காரியங்கள் மிகவும் கள்ளமில்லாதது போலவும் தீங்கு ஏற்படுத்தாதது போலவும் இருக்கிறபடியால் உலகத்தின் நியாயமான காரியங்கள் பாவமான காரியங்களை விட மிகப்பெரிய கண்ணியாகும்.

நமது தாகத்தை நாம் தீர்க்கலாம்... ஆனால், கரங்களைக் குவித்து குறைந்தபட்ச தேவை எவ்வளவோ அவ்வளவே நாம் குடிக்க வேண்டும்! நம்முடைய மனம் பூமிக்குரியவைகளையல்ல, மேலானவைகளையே சார்ந்திருக்க வேண்டும். நாம் இயேசுவின் சீஷர்களாக இருக்க வேண்டுமானால் நமக்குண்டான எல்லாவற்றையும் நாம் வெறுக்க வேண்டும்! இழுக்கப்பட்ட நிலையில் உள்ள ஒரு ரப்பர் பேண்ட்(Rubber Band) போல, நமக்கு தேவையான பூமியின் அலுவல்களில் நம் மனம் கவனம் செலுத்தி கொள்ளலாம். ஆனால், ரப்பர் பேண்ட்(Rubber Band) அதன் இழுக்கப்பட்ட விசையிலிருந்து தளர்த்தபட்ட உடன் இயல்பான நிலைக்குத் திரும்புவது போல் நம்முடைய பூமிக்குரிய அலுவல்கள் முடித்தவுடன் நம்முடைய மனம் தேவனுடைய காரியங்களிலும், நித்யத்துக்குரியவைகளிலும் மீண்டும் சுண்டி இழுக்கப்பட்ட திரும்ப வேண்டும். நமது மனதை வைத்திருப்பது என்பதன் அர்த்தம் இதுதான். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் (கொலோசெயர் 3:2). இருப்பினும், அநேக விசுவாசிகளிடத்தில், ரப்பர் பேண்ட்(Rubber Band) வேறு விதமாக வேலை செய்கிறது. நித்தியத்துக்குரிய காரியங்களில் அவர்கள் மனம் இழுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது, விடுபட்டவுடன் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதும் இந்த உலக காரியங்களால் ஆளப்படுகிறது.