WFTW Body: 

பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் சந்தோஷத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. “நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம் பண்ணுகிறேன்” (பிலிப்பியர் 1:4) என்றும் “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலிப்பியர் 4:4) என்றும் உள்ளது.

பவுல் சிறைச்சாலையில் இருந்தபோது பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்டது (பிலிப்பியர் 1:13). பவுல் ஒரு சிறைச்சாலையில் இருந்தபொழுது சந்தோஷத்தைக் குறித்து இவ்வளவு அதிகமாக எழுதினார் என்பதைப் பார்ப்பது சவாலாய் இருக்கிறது. நம்முடைய சூழ்நிலைகளெல்லாம் சௌகரியமாய் இருக்கும்பொழுது சந்தோஷத்தைக் குறித்துப் பிரசங்கிப்பது எளிதாய் இருக்கலாம். ஆனால் நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக இருக்கும்பொழுது சந்தோஷத்தைக் குறித்து எழுதுவது முற்றிலும் வேறுபட்ட ஒரு காரியம். ஒரு கிறிஸ்தவன் எல்லா சூழ்நிலைகளிலும் சந்தோஷத்தோடு இருப்பது சாத்தியம் என பவுலின் வார்த்தைகள் நமக்குப் போதிக்கிறது. அதுவே கிறிஸ்துவின் சிந்தையும் மனப்பான்மையுமாகும்.

தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள் இரவில், இயேசு சந்தோஷத்தைக் குறித்து அதிகமாய் பேசினார் (யோவான் 15 மற்றும் 16 ஆம் அதிகாரம்). கடைசி இராபோஜனத்தில், “உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்கு சொன்னேன்” என்றும் “உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்” என்றும் “என்னுடைய சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்” என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். இன்னும் சில மணி நேரங்களில் அவர் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஒரு குற்றவாளியைப் போல வெளியரங்கமாகச் சிலுவையில் அறையப்படப் போகிறார். இருப்பினும், அவர் தம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து, அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த கிறிஸ்துவின் சிந்தையையும் மனப்பான்மையையும் பவுல் பெற்றிருந்தார். அவர் சிறைச்சாலையில் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார். பவுல் இந்தக் கடிதத்தை எழுதியபோது (அப்போஸ்தலர் 28:16,30,31) வெறும் வீட்டுக்காவலில் (House Arrest) இருந்தாரோ அல்லது உண்மையான ரோம சிறைச்சாலையில் இருந்தாரோ என்பது நமக்குத் தெரியாது. அந்த நாட்களில் ரோம சிறைச்சாலைகளானது எலிகளினாலும், கொசுக்களினாலும், ஊரும் பூச்சிகளினாலும் நிறைந்த இருண்ட நிலவறைகளாய் (Dark Dungeons) இருந்தது. இங்கே கைதிகள் தரையிலே உறங்க வேண்டும். அவர்களுக்கு மிகவும் குறைவான உணவே கொடுக்கப்பட்டது. இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்தில் பவுல் இருந்தாலும், சூழ்நிலைகள் மோசமாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும்கூட பவுல் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார். சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக அவர் சிறைப்பட்டிருந்தார். ஆனால் தன்னுடைய துக்கங்களுக்காக அவர் கண்ணீர் விடவில்லை. யாரிடத்திலும் எந்த ஒரு அனுதாபத்தையும் அவர் விரும்பவில்லை. அவர் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தார்.

சௌகரியமாய் வாழ்ந்து கொண்டு, மிகவும் சிறிய சிரமத்திற்கும் குறை சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு, பவுல் ஒரு அருமையான மாதிரியாய் இருக்கிறார். ஒரு சிறிய கஷ்டத்தை எதிர்கொள்ளும்போது அல்லது ஒரு சிறிய சோதனையின் வழியே செல்லும்போது மற்றவர்களுடைய அனுதாபத்தைப் பெற முயற்சிக்கும் விசுவாசிகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். பவுல் தன்னுடைய பாடுகளைக் குறித்து ஒரு வார்த்தையும் இங்கே சொல்லவில்லை. மாறாக, “நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்”. (பிலிப்பியர் 1:4, 6) என்று சொன்னார். ஒருவேளை இரவு முழுவதும் கொசுக்களினால் கடிக்கப்பட்ட பிறகு இந்த காரியத்தை அவர் எழுதியிருப்பார். தன்னை குளிரிலிருந்து பாதுகாப்பதற்கு அவருக்குச் சூடு தருகின்ற ஆடைகளும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவருடைய சந்தோஷம் தன்னுடைய சூழ்நிலைகளினால் வராமல், பிலிப்பி பட்டணத்தின் விசுவாசிகளிடம் அவர் கண்ட தேவ கிருபையினாலேயே வந்தது.

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தரிசனத்தின் மூலமாக பிலிப்பி பட்டணத்திற்கு போகும்படி கர்த்தரால் வழிநடத்தப்பட்டார். (அப்போஸ்தலர் 16:9-12). அவர் அந்த தரிசனத்தைப் பின்பற்றி, அங்கே சென்று ஜனங்களைக் கர்த்தரிடம் வழிநடத்தினார். பிறகு அந்த பட்டணத்திலேயே சிறைப்பட்டார். அங்கே மனந்திரும்பின சிறைச்சாலைக்காரன், பிலிப்பி பட்டணத்தின் சபையில் இப்பொழுது ஒரு மூப்பராக ஒருவேளை இருக்கலாம். “இந்த மனுஷன் சிறைச்சாலையில் சந்தோஷமாயிருந்ததை நான் பார்த்தேன்.” என்று பவுலைக் குறித்து அவர் ஜனங்களுக்குச் சொல்லியிருக்கக் கூடும். கர்த்தருக்குப் பிரயோஜனமாகச் செலவழித்த ஒரு வாழ்க்கையிலிருந்து பவுலின் சந்தோஷம் வெளிப்பட்டது. கர்த்தர் உங்களுக்கு ஆரோக்கியத்தையும், பெலனையும் கொடுத்த நாட்களில், அவருக்கு ஊழியஞ்செய்ய, அதாவது அவருடைய இராஜ்ஜியத்திற்காக ஜனங்களைச் சேர்க்கவும், அவருடைய சபையை கட்டவும், உங்களுடைய வாழ்நாட்களைச் செலவழித்தீர்கள் என்ற உண்மையே, உங்களுடைய வாழ்க்கையின் முடிவிற்கு நீங்கள் வரும்பொழுது உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவரும். இப்பொழுதே இதைச் சிந்தியுங்கள், அப்பொழுது உங்களுடைய வாழ்க்கையின் முடிவிற்கு நீங்கள் வரும்பொழுது, தேவன் உங்களுடைய வாழ்க்கையைக் கொண்டு செய்த காரியங்களுக்காகப் பவுலைப்போல அவருக்கு நன்றி சொல்லுவீர்கள்.

“கர்த்தருக்குள் எப்பொழுதும் (சில நேரங்களில் மட்டுமல்ல, பெரும்பாலான நேரங்களில் மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும்) சந்தோஷமாயிருங்கள்" என்று பிலிப்பியர் 4:4-ல் பரிசுத்த ஆவியானவர் நமக்கு வலியுறுத்துகிறார். பல வருடங்களுக்கு முன்பாக இந்த வசனம் எனக்குச் சவாலாக இருந்தது. இந்த வசனம் என் வாழ்க்கையில் மெய்யாகவில்லை என்பதை ஒத்துக்கொண்டேன்: பிறகு இந்த வசனம் என் வாழ்க்கையில் மெய்யாகும்படி தேவனிடத்தில் கேட்டேன். நீங்கள் சில நேரங்களில் மட்டும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது பெரும்பாலான நேரங்களில் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறோம். இதுபோலவே நீங்கள் சில நேரங்களில் மட்டும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது பெரும்பாலான நேரங்களில் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது எல்லா நேரத்திலும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? “இது சாத்தியமா?” என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், தேவனுடைய கிருபையால் இது சாத்தியமாகும்.

இது சாத்தியமற்றது என்று தேவன் அறிந்திருந்தால், அத்தகைய கட்டளையை அவர் நமக்கு வழங்கியிருக்க மாட்டார். இது நம் வாழ்வில் இன்னும் மெய்யாகவில்லை என்றால், நாம் நேர்மையாகத் தேவனிடத்தில் சொல்வோம். பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்பும்படி அவரிடம் கேளுங்கள், கிறிஸ்துவுக்கு வெளியே உலகத்திலுள்ள அனைத்துமே குப்பை என்பதை உங்களுக்குக் கற்பிக்கும்படியும் அவரிடம் கேளுங்கள். அப்பொழுது நீங்கள் எல்லா நேரத்திலும் சந்தோஷமாயிருப்பீர்கள். கிறிஸ்துவுக்கு வெளியே உலகத்திலுள்ள அனைத்துமே குப்பை என்பதை அறியாததினால் அநேக விசுவாசிகளிடையே முணுமுணுப்பும் குறைசொல்லும் முறுமுறுப்பும் அதிகமாகக் காணப்படுகிறது - அப்பொழுது எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பது மெய்யாகவே சாத்தியமில்லை! பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது ரோம சிறைச்சாலையில் ஒரு மோசமான நிலவறையில் கைதியாக இருந்தார். அத்தகைய சூழ்நிலைகளில் அவர் சந்தோஷமாயிருக்கக் கூடுமென்றால், ஏன் நம்மால் கூடாது?