WFTW Body: 

தேவனுடைய முகத்திற்கு முன்பாக ஒரு விசுவாசி வாழவில்லையெனில், தன்னுடைய மெய்யான ஆவிக்குரிய நிலையைக் குறித்து அவன் அறியாமல் இருப்பது மிகவும் எளிது. வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு சபைகளின் மூப்பர்களுக்குக் கர்த்தர் கொடுத்த கடிந்துகொள்ளுதல்களிலிருந்து இது தெளிவாகிறது. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு (மூப்பருக்கு), "நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியவில்லை”, என்று அவர் கூறினார்.

நம் இருதயத்தில் மறைந்திருப்பதை வெளியரங்கப்படுத்துவதற்காக தேவன் வெவ்வேறு சூழ்நிலைகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார். பல ஆண்டுகளாக நாம் வெவ்வேறு நபர்களுடன் அனுபவித்த கடினமான அனுபவங்களின் விளைவாகப் பல விரும்பத்தகாத நினைவுகளை நம் இருதயத்தில் சேர்த்து வைத்திருக்கிறோம். அவை நம் இருதயத்தின் அடிப்பகுதியில் மறைந்திருக்கின்றன - நாமோ நமது இருதயங்கள் சுத்தமாக இருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிறோம். பின்னர் தேவன் ஏதோ ஒரு சிறு காரியம் நடக்க அனுமதிக்கிறார். அது நம் இருதயத்தின் அடிப்பகுதியில் கிடக்கிற அழுகிப் போனவற்றையெல்லாம் கிளறி, அவைகளையெல்லாம் நம் மனதிற்குக் கொண்டுவருகிறது. அந்த நேரத்தில்தான் நம்மை நாமே சுத்திகரித்துக்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை மன்னித்து, அவர்களை நேசிக்க முடிவு செய்ய வேண்டும். இவற்றிலிருந்து நம் இருதயத்தைச் சுத்திகரித்துக்கொள்ள இதுபோன்ற ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்தாவிட்டால், கொந்தளிப்பு முடிந்தபின், அவைகள் மீண்டும் இருதயத்தின் அடிப்பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கிவிடும். பிறகு, எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நாம் கற்பனை செய்துகொள்ளக் கூடும். ஆனால் நிலைமை அப்படியல்ல. மற்றொரு சிறிய நிகழ்வு, அவை அனைத்தையும் மீண்டும் நம் மனதிற்குக் கொண்டு வரும். எனவே, ஒவ்வொரு முறையும் நம் இருதயத்தின் மேற்பரப்பிற்கு ஏதாவது வரும்போது, அவற்றிலிருந்து நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.

கெட்ட குமாரனுடைய மூத்த சகோதரன் காரியத்தில், அவன் தனது இளைய சகோதரன் மீது எப்படியாகத் தவறானதொரு மனப்பான்மையைக் கொண்டிருந்தான் என்பதை நாம் காண்கிறோம். ஆனால், அவன் சகோதரன் திரும்பிவந்தபின், அவனுக்காக ஒரு விருந்து செய்யப்பட்ட போதுதான், அவனது இந்தத் தவறான மனப்பான்மை மேற்பரப்பில் தோன்றியது. தனது வார்த்தைகள் உண்மையா இல்லையா என்பதைச் சரிபார்க்காமல், தான் கற்பனை செய்த குற்றச்சாட்டுகளுடன் சகோதரனை எவ்வாறு குற்றஞ்சாட்டினான் என்பதைப் பார்க்கிறோம் (உதாரணமாக, "வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்டான் - லூக்கா 15:30" என்று இளைய சகோதரனைப் பற்றிக் கூறுகிறான்). ஒருவருடன் நமக்கு ஒரு நல்ல உறவு இல்லாதபோது, அவரைப் பற்றி மிகவும் மோசமான விஷயங்களையே நாம் எப்போதும் நம்புவோம்.

"எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது" (லூக்கா 15:31) என்று தகப்பன் தன் மூத்த குமாரனிடம் கூறினார். தகப்பன் கொடுத்ததிலே லயித்துப்போய் இருப்பதற்குப் பதிலாக, தனது சொந்த சாதனைகளிலே மூத்த சகோதரன் லயித்துப்போய் இருந்தான்: “இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தேன்” (லூக்கா 15:29). தன்னுடைய சகோதரனுடைய குறைபாடுகளிலேயும் அவன் லயித்துப்போய் இருந்தான்: "உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இந்த மகன்" (லூக்கா 15:30). அந்தத் தகப்பனைப் போலவே, "எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது" என்று தேவன் நம்மிடம் கூறுகிறார். இயேசுவில் உள்ள அனைத்தும் நம்முடையவை - அவருடைய எல்லாத் தூய்மையும், அவருடைய எல்லா தயையும், அவருடைய எல்லாப் பொறுமையும், அவருடைய எல்லா மனத்தாழ்மையும், இது போன்ற அனைத்தும் நம்முடையவை.

இந்த கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்: உங்கள் சொந்த சாதனைகளிலோ அல்லது உங்கள் சக விசுவாசிகளின் தோல்விகளிலோ லயித்துப்போய் இருக்காமல், தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தில் எப்போதும் லயித்துப்போய் இருங்கள்.

நம் இருதயத்தில் மறைந்திருப்பதை வெளியரங்கப்படுத்துவதற்காக தேவன் வெவ்வேறு சூழ்நிலைகளை நம் வாழ்வில் அனுமதிக்கிறார் – எனவே, ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு காரியம் (தீய மனப்பான்மை) நம் இருதயத்தில் மேலெழும்பும்போது, அவற்றிலிருந்து நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்ள வேண்டும்.