WFTW Body: 

யாக்கோபு தேவனை இரு முறை எதிர்கொண்டார். முதல் முறை பெத்தேலிலும் (ஆதியாகமம் 28) இரண்டாம் முறை பெனியேலிலும் (ஆதியாகமம் 32) எதிர்கொண்டார்.

பெத்தேல் என்றால் “தேவனுடைய வீடு” (சபைக்கொப்பான மாதிரி) என்றும், பெனியேல் என்றால் “தேவனுடைய முகம்” என்றும் அர்த்தமாகும். நாமெல்லாரும் தேவனுடைய சபைக்குள் நுழைவதற்கும் மேலாக, தேவனுடைய முகத்தைப் பார்க்க வேண்டிய அவசியமுள்ளவர்களாய் இருக்கின்றோம். பெத்தேலில் “சூரியன் அஸ்தமித்தது” (ஆதியாகமம் 28:11) என்பது ஒரு பூகோள உண்மைதான் என்ற போதிலும், யாக்கோபின் வாழ்வில், அடுத்த 20 ஆண்டுகளாக ஓர் ஆழ்ந்த இருள் சூழ்ந்த நிலை காணப்படும் என்பதைக் குறிப்பதாக அது இருந்தது. பின்பு பெனியேலில் “சூரியன் உதயமாயிற்று” என்று சொல்லப்படுகிறது (ஆதியாகமம் 32:31). மீண்டுமாக இது ஒரு பூகோள உண்மைதான் எனினும், யாக்கோபு தேவனுடைய வெளிச்சத்துக்குள் வந்துவிட்டார் என்பதை பறைசாற்றுவதாக இருந்தது.

பெத்தேலில், பூமியின் மீது வைக்கப்பட்ட ஓர் ஏணியின் மறு முனையானது வானபரியந்தம் எட்டுவதைப் பற்றி யாக்கோபு ஒரு கனவு கண்டதைப் பார்க்கிறோம். யோவான் 1:51-ல், தானே அந்த ஏணி என்பதை இயேசுவானவர் வியாக்கியானப் படுத்துவதைப் பார்க்கிறோம். அவரே பூமியிலிருந்து பரலோகத்திற்குச் செல்லும் வழி. இயேசுவானவர் பரலோகத்திற்குச் செல்லும் வழியைத் திறப்பதை தீர்க்கதரிசனமாக யாக்கோபு கண்டார். பின்பு அந்தக் கனவிலே தேவன் யாக்கோபுக்கு பல காரியங்களை வாக்குத்தத்தம் பண்ணினார். ஆனால் யாக்கோபோ பூமிக்குரிய சிந்தையுள்ளவராயிருந்து, பூமிக்குரிய பாதுகாப்பு, சரீர சுகம், பொருளாதார செழிப்பு ஆகியவற்றைப் பற்றியே சிந்தித்தார். ஆகவே அவர், தேவனை நோக்கி, “கர்த்தாவே, நீர் என்னுடைய இந்தப் பயணத்தை வாய்க்கப்பண்ணி, உணவும் உடையும் தந்து, என்னை சுகபத்திரமாய் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வருவீரானால், என் சம்பாத்தியத்திலெல்லாம், 10% உமக்குக் கொடுப்பேன்” என்று சொன்னார்.

இன்றும் பல விசுவாசிகள் தேவனை அப்படித்தான் நடத்துகிறார்கள். அவர்கள் அவரிடமிருந்து உலகத்திலுள்ள வசதிகளை மட்டுமே விரும்புகிறார்கள். கர்த்தர் இவற்றையெல்லாம் அவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் சபை கூட்டங்களில் உண்மையுடன் கலந்துகொண்டு, தங்கள் பணத்தில் கொஞ்சம் கர்த்தருடைய வேலைக்காகக் கொடுக்கிறார்கள். அத்தகைய விசுவாசிகள் உண்மையில் தேவனிடத்தில் வியாபாரம் செய்கிறார்கள், எந்தவொரு உலக வியாபாரிகளையும் போலவே தங்கள் சொந்த வசதியையும் லாபத்தையும் தேடுகிறார்கள்.

யாக்கோபு தனது வாழ்நாளில் 20 வருடங்களை பூமிக்குரிய பொருட்களைப் பறித்துப் பற்றிக் கொள்வதில் செலவிட்டார்.லாபானின் குடும்பத்திலிருந்து ஒரு மனைவியைப் பற்றி பிடிக்க முயன்றான், இரண்டைப் பெற்றான்! அவர் இரண்டு மனைவியை அடைய விரும்பவில்லை, ஆனால் அவருக்கு எப்படியோ இரண்டு கிடைத்தது!! பிறகு லாபானை ஏமாற்றி அவனது ஆடுகளைப் பற்றி பிடித்துக்கொண்டு பெரும் செல்வந்தனானான். அவர் லாபானின் வீட்டிற்கு பணமில்லாமல் போனார், ஆனால் முடிவிலே அங்கு பெரும் செல்வந்தராக ஆனார். இன்று பல விசுவாசிகள் செய்வது போலவே - அவர் தனது செழுமைக்கு காரணம் தேவனின் ஆசீர்வாதமே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேவ ஆசீர்வாதத்திற்கான மெய் அடையாளம் எது? செழிப்பா? இல்லை. அது கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மறுரூபமடைவதாகும். நீங்கள் ஒரு நல்ல வேலையையும், நல்ல வீட்டையும், அநேக வசதிகளையும் பெற்றிருந்தும், உங்கள் வாழ்க்கை தேவனுக்கும் மனுஷனுக்கும் பயனற்றதாய் இருந்தால், பிரயோஜனம் என்ன? தேவன் யாக்கோபுடனான இடைபடுதலை முடித்துக் கொள்ளவில்லை. அவர் இரண்டாவது முறையாக யாக்கோபை பெனியேலில் சந்தித்தார்.

என் சகோதர சகோதரிகளே, உங்களில் அநேகருக்கு தேவனுடனான இரண்டாவது சந்திப்பு அவசியம் என்று நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் நிர்கதியான நிலையில், உங்கள் தேவையின் அடிமட்டத்தைத் தொடும்போதுதான் அச்சந்திப்பு நிகழும். அப்பொழுது தேவன் உங்களை நியாய்ந்தீர்த்து நரகத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார்.

ஆதியாகமம் 32-ல், ஏசா தன்னைச் சந்திக்க வெளியே வருகிறான் என்று கேள்விப்பட்டதால், (20 வருடங்களுக்கு முன் அவன் ஏசாவிடம் சேஷ்ட புத்திரபாகத்தை ஏமாற்றியவன் என்பதால்) யாக்கோபு பயந்தான் என்று வாசிக்கிறோம் . ஏசா தன்னைக் கொன்றுவிடுவார் என்பதில் உறுதியாக இருந்தார். நாம் பயப்படும்படி சில சூழ்நிலைகளை எதிர்கொள்ள தேவன் அனுமதிக்கும்போது அது நமக்கு நல்லது. ஏனென்றால், மனிதர்கள் நமக்கு என்ன செய்வார்கள் என்று நாம் பயப்படும்போது, ​​நாம் தேவனிடத்தில் நெருங்கி சேருவோம். பெனியேலில், யாக்கோபு தனித்திருந்தான் (ஆதியாகமம் 32:24). தேவன் நம்மைச் சந்திப்பதற்கு முன்பாக, அவர் நம்மைத் தனியாய் இருக்கும்படி செய்ய வேண்டியுள்ளது. அதனால்தான், இன்றைய உலகில் வாழ்க்கை மிகவும் அவசரமாகவும், பரபரப்பாகவும் இருக்குமாறு சாத்தான் கட்டளையிட்டுள்ளான் (குறிப்பாக நகரங்களில்) பல விசுவாசிகள் கூட தேவனிடத்தில் தனித்திருக்க நேரமில்லை. அவர்களின் வாழ்க்கை மிகவும் பரபரப்புபாகிவிட்டது, குறைந்த முன்னுரிமை கொண்ட விஷயங்கள் அவர்களின் கால அட்டவணையை முழுதும் நிரம்பிவிட்டன! இதுதான் இன்றைய கிறிஸ்தவத்தின் அவலநிலை.

பெனியேலில், யாக்கோபு தனித்திருந்தான் (ஆதியாகமம் 32:24). தேவன் நம்மைச் சந்திப்பதற்கு முன்பாக, அவர் நம்மைத் தனியாய் இருக்கும்படி செய்ய வேண்டியுள்ளது. தேவன் அந்த இரவிலே யாக்கோபுடன் பல மணி நேரம் போராட வேண்டியிருந்தது. ஆனால் யாக்கோபு இணங்கிப் போகவில்லை. அந்தப் போராட்டமானது, கடந்த காலத்தில், யாக்கோபின் வாழ்வில் 20 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்ததை அடையாளப்படுத்துவதாக இருந்தது. யாக்கோபு தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததைக் கண்ட தேவன், அவருடைய தொடைச்சந்தைச் சுளுக்கச் செய்தார். அச்சமயத்தில் யாக்கோபு சுமார் 90 வயதுடையவராய், மிக பெலவானாய் இருந்தார். அவருடைய தாத்தா ஆபிரகாம் 175 வருடங்கள் உயிர் வாழ்ந்தார். ஆதலால், யாக்கோபு தனக்கு முன்பாக இன்னும் சுமார் 75 வருட வாழ்க்கை மீதமிருக்க, வாலிபத்தின் உச்ச நிலையில் இருந்தார். அந்த வாலிப வயதிலேயே தொடைச் சந்து சுளுக்கியது அவர் விரும்பாத ஒன்று. அவர் தனது எதிர்காலத்திற்கென்று தீட்டியிருந்த திட்டங்களையெல்லாம் அது தவிடுபொடியாக்கிவிட்டது. அதை இன்றைய மொழியில் சொன்னால், 20 வயதான ஒரு வாலிபன், தொடைச் சந்து சுளுக்கி, அதன்பின்னர், வாழ்நாள் முழுவதும் ஊன்றுகோலின் துணையோடு வாழ்வதைப் போன்றது என்று சொல்லலாம். அது ஒரு கசப்பான அனுபவமாகும். யாக்கோபால், அதன்பின்னர், ஓர் ஊன்றுகோலின் துணையின்றி வாழ்ந்திருக்கவே முடியாது. தேவன் யாக்கோபை உடைப்பதற்குப் பல வழிகளைக் கையாண்டார். ஆனால் வெற்றியடையவில்லை. ஆகவே தேவன் அவருக்கு ஒரு நிரந்தர உடல் ஊனத்தைத் தந்துவிட்டார்.

தேவன் யாக்கோபின் தொடைச்சந்தைச் சுளுக்கியவுடன், “நன்று, நான் எனது வேலையை முடித்துவிட்டேன். இப்பொழுது நான் போகட்டும். நீ ஒருபோதும் என்னை விரும்பியதில்லை. உனக்கு வேண்டியதெல்லாம் ஸ்திரீகளும் பணமும்தான்” என்று சொன்னார். ஆனால் இப்போது யாக்கோபு தேவனைப் போக விடவில்லை. அவர் கடைசியாக மாறிவிட்டார். இதுவரையில் பெண்களையும் சொத்தையுமே பறித்துக் கொண்டிருந்த யாக்கோபு, இப்போது, தேவனைப் பறித்துப் பற்றிக் கொண்டவராய், “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடமாட்டேன்” என்றார். யாக்கோபின் தொடைச் சந்து சுளுக்கப்பட்டவுடன், அவரது இருதயத்தில் எவ்வளவு பெரிய சாதனை நிகழ்ந்துவிட்டது. அவர் இப்போது தேவனை மாத்திரமே வாஞ்சித்தார். “உனக்கு ஒன்றுமே இல்லாமல், தேவன் மாத்திரமே இருக்கும் போது, அவரே சகலவற்றிற்கும் போதுமானவராய் காண்பாய்“ என்று ஓர் பழைய கூற்று உண்டு. அது உண்மையே. இறுதியாக தேவனை முகமுகமாய்க் கண்டேன், என்று சொல்லி, யாக்கோபு அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். பெத்தேலில், அவர் தேவனுடைய வீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். நீங்கள் பல வருடங்கள் தேவனுடைய வீட்டில் இருந்திருக்கலாம், இன்னும் நீங்கள் தேவனுடைய முகத்தைப் பார்க்காமல் இருக்கலாம். அப்படியென்றால் உங்களுக்கு தேவனுடனான இரண்டாவது சந்திப்பு அவசியம் - அங்கு அவருடைய முகத்தைப் நீங்கள் காண்பீர்கள். யாக்கோபு உற்சாகத்துடன் கூறுகிறார், "இப்போது நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், தேவனே, என் உயிர் தப்பிப் பிழைத்தேன்.