தீர்க்கதரிசன ஊழியத்தைப் பற்றி உங்களுக்கு சிலவற்றைக் காண்பிக்க விரும்புகிறேன். தேவனுடைய மனதை அறிந்து தீர்க்கதரிசனம் உரைக்கும் பொருட்டு, எலிசா “ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்” என்றார் (2இராஜாக்கள் 3:15). சுரமண்டல வாத்தியக்காரன் வாசித்தபோது கர்த்தருடைய கரம் எலிசாவின்மேல் இறங்கி, அவர் வல்லமையாகத் தீர்க்கதரிசனம் உரைத்தார். தேவ பக்தியுள்ள இசையின் மதிப்பை இங்கு நாம் காண்கிறோம்.
காலை துதி ஆராதனை சமயத்தில், கர்த்தருடைய கரம் என்மேல் இறங்கி, கூட்டத்திற்கு வரும்போது என்னிடத்திலில்லாத ஒரு தீர்க்கதரிசன வார்த்தையைக் கர்த்தர் கொடுத்த பல தருணங்களை என்னுடைய வாழ்கையில் நான் நினைவுக்கூறமுடியும். அந்த அபிஷேகிக்கப்பட்ட இசைக்கு ஒரு வல்லமை இருந்தது, அது எலிசாவின்மேல் தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டுவந்தது.
ஒரு தீர்க்கதரிசிக்குக்கூட சில நேரங்களில் இராகத்தலைவர்களின் உதவி தேவைப்படுகிறது. அதனால்தான் துதி ஆராதனையில் நம்மை வழிநடத்துபவர்கள் அபிஷேகம் பெற்றவர்களாயிருக்க வேண்டும். அவர்கள் நல்ல இராகத்தலைவர்களாக மட்டும் இருந்துவிடக்கூடாது. அவர்கள் அபிஷேகம் பெற்றவர்களாயும் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும். தாவீது பாடகர்களையும் இராகத்தலைவர்களையும் நியமித்தார், அவர்கள் அபிஷேகம் பெற்றவர்களாயிருக்க வேண்டியிருந்தது. இராகத்தலைவர்களில் ஆசாப் போன்றவர்கள் பன்னிரண்டு அற்புதமான சங்கீதங்களை (சங்கீதம் 50,73-83) எழுதியிருக்கிறார்கள். இராகத்தலைவர்களில் இரண்டுபேர் ஞானதிருஷ்டிக்காரர்கள் (தீர்க்கதரிசிகள்) என்றழைக்கப்பட்டனர் – ஏமான் (1நாளாகமம் 25:4), எதுத்தூன் (2நாளாகமம் 35:15).
எனவே, அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசிகளை ஊக்குவிப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அபிஷேகம் பெற்ற இராகத்தலைவர்கள் தேவனுக்கு தேவை. அப்படித்தான் சபைக் கட்டப்படுகிறது. உங்களில் சிலர் தீர்க்கதரிசியின் அழைப்பைப் பெறாமல் பாடல் பாடுகிறவர்களாக அழைப்பைப் பெற்றிருக்கக்கூடும். அப்படியிருந்தால் அபிஷேகம் பெற்ற இராகத்தலைவர்களாயிருங்கள். அந்த சுரமண்டல வாத்தியக்காரன் ஒருவேளை உலகத்தின் நடையில் (Style) இசை வாசிப்பதற்கு முயற்சி செய்திருந்தால், எலிசாவுக்கு அந்நாளில் கர்த்தருடைய வார்த்தை அருளப்பட்டிருக்காது என்று நான் நினைக்கிறேன். அந்த இசையில் பரத்திற்குரிய ஏதோவொன்று இருந்திருக்க வேண்டும்.
இரண்டு வகையான இசை நடை உண்டு. ஒன்று உலகத்தின் நடை, மற்றொன்று பரலோகத்தின் நடை. பரலோகத்தின் நடையிலுள்ள இசை எதுவென்று நீங்கள் உணரமுடியும், ஏனென்றால் அது தேவனை ஆராதிக்க உங்கள் ஆவியை உயர்த்தும். சில இசை பாடுகிறவர்களைப் பாராட்ட மட்டுமே உங்களுக்கு உதவி செய்கிறது! தேவனை ஆராதிப்பதற்கு ஜனங்களை வழிநடத்தவும், கூட்டத்திற்குள் தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டுவரவும் முடியுமென்றால் நீங்கள் ஓர் அபிஷேகம் பெற்ற பாடகர்.
2நாளாகமம் 20 -ல், தேவனைத் துதிப்பதின் வல்லமையை விளக்கும் பழைய ஏற்பாட்டின் மிக அருமையான கதைகளில் ஒன்றுண்டு. நாம் அநேகப் பாடங்களை இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். யோசபாத் ராஜாவுக்கு எதிராக யுத்தஞ்செய்ய ஏராளமான சத்துருக்கள் சேர்ந்து கூடிவந்தனர். ஆகாபோடு தனக்கிருந்த முந்தைய சமரசத்திலிருந்து யோசபாத் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டபடியால், இப்போது கர்த்தரைத் தேட தீர்மானம் செய்தார். தன் தகப்பனாகிய ஆசா ஜெபித்த ஜெபத்தைப் போலவே, யோசபாத் “கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கிற” ஒரு சிறந்த ஜெபத்தை ஜெபிக்கிறார் (2நாளாகமம் 14:11). யோசபாத் தன்னுடைய ஜெபத்தில், தேவனுக்கும் தனக்கும் நினைவுபடுத்தி, ஒத்துக்கொண்ட ஏழு காரியங்களைக் கவனியுங்கள் (2நாளாகமம் 20):
01. தேவனுடைய சர்வத்தையும் ஆளுகிற தன்மை (2நாளாகமம் 20:6).
02. தேவன் கடந்த காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் செய்தவைகள் (2நாளாகமம் 20:7).
03. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் (2நாளாகமம் 20:8,9).
04. இஸ்ரவேல் தேவனுடைய சுதந்திரம் (2நாளாகமம் 20:11).
05. தாங்கள் முற்றிலும் பலவீனமுள்ளவர்கள் (2நாளாகமம் 20:12).
06. தாங்கள் முற்றிலும் ஞானத்தில் குறைவுள்ளவர்கள் (2நாளாகமம் 20:12).
07. தாங்கள் முற்றிலுமாய் தேவனையே சார்ந்திருக்கிறவர்கள் (2நாளாகமம் 20:12).
தேவன் அந்த ஜெபத்திற்கு உடனடியாகப் பதிலளிக்கும்படி, ஒரு செய்தியைத் தீர்க்கதரிசி மூலமாக அனுப்பினார். அந்த தீர்க்கதரிசி சொன்னது, பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள். இந்த யுத்தம் உங்களுடையதல்ல தேவனுடையது. உங்கள் சத்துருக்களுக்கு எதிராகப் புறப்படுங்கள். கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றார் (2நாளாகமம் 20:15-17).
எனவே யோசபாத் படைவீரர்களுக்கு முன்பாகப் பாடகர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பினார்! இந்தப் பாடகர்கள் பாடித் தேவனைத் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவின் சத்துருக்கள் அனைவரையும் கர்த்தர் தோற்கடித்தார். அவர்களுடைய சத்துருக்களிடமிருந்து கொள்ளையிட்ட செல்வத்தின் மூலம் யூதாவின் ஜனங்கள் செல்வந்தர்களானார்கள். இந்தக் கதை வெற்றியின் வழியை விளக்குகிறது: சத்துருக்கள் (பிரச்சனைகள்) இன்னும் இருக்கும்போதே, தேவனுடைய முழுமையான ஆளுந்தன்மையையும், வாக்குத்தத்தங்களையும் விசுவாசத்தோடு அறிக்கையிட்டு, முன்கூட்டியே கர்த்தரைத் துதிப்பதே அவ்வழியாகும். நம்முடைய விசுவாசம் துதியினால் வெளிப்படுகிறது. “அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்” (சங்கீதம் 106:12). இதனுடைய மறுபக்கமும் உண்மையே: நாம் தேவனுடைய துதியைப் பாடவில்லையென்றால், அது நாம் கர்த்தருடைய வார்த்தைகளை விசுவாசிக்கவில்லையென்று நிரூபிக்கிறது!