“இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்தேயு 5:7). “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, எங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோலவே எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்” என்று ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார். அந்த ஜெபத்தின் அர்த்தம் என்ன? எனக்கு விரோதமாக ஒருவர் செய்த பாவத்தை நான் மன்னிக்கவில்லை என்றால், கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார் என்பதுதான் அதன் அர்த்தம். நான் தேவனிடம் ஜெபிப்பது என்னவென்றால், “ஆண்டவரே, இந்த நபரை நான் மன்னித்த விதத்திலேயே என்னையும் மன்னியும்” என்பதுதான். ஆனால் நான் இந்த நபரை மன்னிக்கவில்லை என்றால், ஆண்டவரும் என்னை மன்னிக்க வேண்டாம் என்றே நான் கேட்கிறேன்.
நீங்கள் கர்த்தருடைய ஜெபத்தை ஜெபிக்கும்போது, நீங்கள் மற்றவர்களை மன்னித்த விதத்திலேயே உங்களையும் மன்னிக்கும்படி தேவனிடம் கேட்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா? நீங்கள் இன்னொருவரை மன்னிக்க மறுக்கும் போது, “நான் இந்த நபரை மன்னித்ததைப் போலவே என்னை மன்னியும்; நான் அவரை மன்னிக்காதபடியினால், நீர் என்னை மன்னிக்க வேண்டாம்” என்று தான் ஜெபிக்கிறீர்கள். அல்லது, “நான் அவரை மன்னித்துவிட்டேன், ஆனால் அவர் எனக்குச் செய்ததைக் குறித்து அவர் மீது எனக்குப் பயங்கரமான வெறுப்பு இருக்கிறது. ஆகவே தேவனே, நீர் என்னை மன்னிக்கும் போது, என் மீதும் வெறுப்பை வைத்துக் கொள்ளும்” என்று ஜெபிக்கிறீர்கள்.
ஜனங்கள் நமக்கு ஏதாவது ஒரு வழியில் தீங்கு செய்யும்போதோ அல்லது நம்மைக் காயப்படுத்தும்போதோ, நம் மனதில் இரண்டு முரண்பாடான எண்ணங்கள் எழுகின்றன. ஒன்று இரக்கத்தின் சிந்தனை, மற்றொன்று நியாயத்தீர்ப்பின் சிந்தனை. நாம் மன்னிக்கவும் இரக்கமுள்ளவராக இருக்கவும் பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் கூறுகிறார், ஆனால் நம்முடைய மாம்சமோ, அந்த நபரிடம் கடுமையாக நடந்து கொள்ளவும், அவரை நியாயந்தீர்க்கவும், தேவன் அவரை நியாயந்தீர்க்க வேண்டும் என்று ஜெபிக்கவும் கூறுகிறது. ஆனால், “இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்” என்று யாக்கோபு 2:13 கூறுகிறது. நான் ஒருவரிடம் இரக்கமற்றவனாக இருந்தால், தேவன் என்னிடம் இரக்கமற்றவராக இருப்பார். நியாயத்தீர்ப்பு நாளில் நமக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. மற்றவர்களை மன்னிக்காத விசுவாசிகள் மீது தேவன் மிகக் கடுமையான நியாயத்தீர்ப்பை விதிப்பார் - அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்.
“நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” என்று யாக்கோபு 2:13 தொடர்ந்து கூறுகிறது. அதாவது, ஒருவரை நியாயந்தீர்ப்பதா அல்லது அவரிடம் இரக்கம் காட்டுவதா என்று என் இருதயத்தில் குழப்பம் இருக்கும் போது, நியாயத்தீர்ப்பு அல்ல, இரக்கமே என் இருதயத்தில் ஜெயம் பெறட்டும். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். அது தான் ஒரு தேவ மனிதனின் அடையாளம். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
“நீங்கள் மற்றவர்களைப் பழிவாங்காதீர்கள்” ஏனென்றால் அது தேவனுக்குரிய வேலை என்று ரோமர் 12:19 கூறுகிறது. “பழிவாங்குதல் என்னுடைய வேலை. அது உங்களுடைய வேலை அல்ல” என்று தேவன் கூறுகிறார். “பழிவாங்குதல் என்னுடையது, நான் திருப்பிச் செலுத்துவேன்” என்று கர்த்தர் கூறுகிறார். எனவே, உங்கள் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடுங்கள். நாம் பழிவாங்கக் கூடாது. நாம் இரக்கமுள்ளவர்களாகவும், மற்றவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய இடங்களில் நன்மை செய்ய முற்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். நாம் மற்றவர்களை மன்னிக்கவில்லை என்றால், தேவன் நம்மை மன்னிக்க மாட்டார் என்பதை நியாயத்தீர்ப்பு நாளில் கண்டுபிடிப்போம். இயேசு இதே போதனையைக் கர்த்தருடைய ஜெபத்தில் மீண்டும் கூறுகிறார்.
“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத்தேயு 6:15). “உங்கள் பரம பிதா” என்பது, ஏற்கனவே அவர் உங்கள் தகப்பன் என்றும், நீங்கள் தேவனுடைய பிள்ளை என்றும் குறிக்கிறது. “தேவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் குறிப்பிடவில்லை. அவர் “தேவன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தால், இந்த வசனம் அவிசுவாசிகளைக் குறிக்கிறது என்று நாம் கூறலாம். ஆனால் மத்தேயு 6:15-இல், "உங்கள் பிதா" என்று கூறியிருப்பதைக் கவனியுங்கள். தேவன் அவிசுவாசிகளின் பிதாவா? இல்லை! ஆனால் நீங்கள் தேவனுடைய மறுபடியும்-பிறந்த பிள்ளையாக இருந்தால், தேவன் உங்கள் பிதாவாயிருக்கிறார். மேலும் அவ்வசனம், “உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறுகிறது. ஏன்? ஏனென்றால் நீங்கள் வேறு யாரோ ஒருவரை மன்னிக்கவில்லை.
உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால், நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் எவ்வாறு பிரவேசிக்க முடியும்? நீங்கள் மரித்த பிறகு அவைகள் மன்னிக்கப்படும் என்று நினைக்கிறீர்களா? நாம் மரித்த பிறகு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறதா? ஒருவரை மன்னிக்காமல் நீங்கள் மரித்தால், நித்தியத்தில் உங்கள் கதி என்னவாக இருக்கும்? பூமியில் பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் யாரும் பரலோகத்தில் பிரவேசிக்க முடியாது என்பதால், நீங்கள் நரகத்திற்கே செல்வீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நாம் மரித்த பிறகு பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அவை இப்பொழுதே மன்னிக்கப்பட வேண்டும், அதனால்தான் மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவது மிகவும் அவசியமாயிருக்கிறது. அது நீங்கள் வேறொருவருக்குப் பாராட்டும் ஓர் இரக்கத்தின் செயல் அல்ல. அது நீங்கள் உங்களுக்கே பாராட்டும் இரக்கம் ஆகும், ஏனென்றால் தேவன் உங்களிடம் இரக்கம் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.