WFTW Body: 

கிறிஸ்துவின் சரீரத்தை “ஒரு மருத்துவமனைக்கு” ஒப்பிட்டுக் கூறலாம். ஒரு மனிதன் வியாதிப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது, அவனுக்கு சேவை செய்வதற்கென பல மருத்துவத்துறைகள் செயல்படுகின்றன. ஊசி மருந்தோ அல்லது சரீர-அப்பியாசம் தரும் சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ அவனுக்குத் தேவைப்படலாம். ஒருவேளை அவன் கண் மருத்துவரையோ அல்லது காது மருத்துவரையோ சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். இவ்வாறு, மருத்துவமனையில் பல்வேறு துறைகள் செயல்படுகின்றன. கண் மருத்துவர் தன்னுடைய எல்லா நேரமும் ஜனங்களுடைய கண்களையே கவனித்துக் கொண்டிருப்பாரேயல்லாமல் வேறு எதிலும் கவனம் செலுத்தமாட்டார்! அதற்குக் காரணம், சரீரத்தில் உள்ள மற்ற அவயவங்கள் அவ்வளவு முக்கியமானதல்ல என அவர் நினைக்கின்றார் என்றல்ல.... மாறாக, அவருடைய திறமை "கண் மருத்துவம்” மாத்திரமே என்பதினால் தான்!

இதைப்போலவே, கிறிஸ்துவின் சரீரத்திலும், ஒவ்வொரு விசுவாசிக்கும் வித்தியாசமான வரங்களும், அழைப்பும் இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் சமநிலையற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்த பூமியில் முழு சமநிலை பெற்று நடந்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மட்டுமே! அவரைத் தவிர “நம்மில் மிகச் சிறந்தவர்” என எண்ணப்படுபவர்கூட சமநிலையற்றவர்தான்! ஆகவே, மருத்துவமனையில் அந்தந்த துறையினரோடு சேர்ந்து செயல்படுவது போல.... ஆண்டவருடைய “மருத்துவமனையிலும்” மற்ற சகோதர சகோதரிகளோடு நாம் இணைந்து செயல்படும் போதுதான், நம்மில் சமநிலையை காணமுடியும். ஆகவே ஆண்டவருடைய இந்த மருத்துவமனையில், “தனித்தன்மைக்கு" இடமேயில்லை.

ஒரு நல்ல மருத்துவமனையில், ஜனங்களின் பல்வேறு தேவைகளை சந்திப்பதற்கு பல துறைகளை (Departments) ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். அதுபோலவே ஜனங்களுக்கு ஊழியம் செய்யும்படி கிறிஸ்துவின் சரீரத்திலும் பல்வேறு ஊழியங்களும், பல்வேறு ஆவிக்குரிய வரங்களும் இருக்கின்றன. ஆவியின் வரங்கள் அனைத்தையும் பெற்ற ஒரு சபையும், ஒரு குழுவும் இல்லை! ஆனால், கிறிஸ்துவின் முழு சரீரத்தையும் தொகையிடும் போது, அனைத்து வரங்களும் அதில் இருப்பதை நாம் காணமுடியும்.

ஆகவே, அவரது சரீரத்தில் நமக்கென்று சொந்தமான விசேஷித்த அழைப்பு என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்!

இந்த உலகம் ஆவிக்குரிய வியாதி கொண்டவர்களால் நிறைந்திருக்கிறது. இருப்பினும், இவர்களில் ஒரு நபருடைய நிலைகூட “நம்பிக்கையற்றது” என நாம் கூறிட முடியாது. ஆம், ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து சம்பூரண சுகத்தைப் பெற்றுவிட முடியும்! இதுவே நாம் அறிவித்துவரும் சுவிசேஷத்தின் நற்செய்தியாகும்! மிக மோசமான பாவியும், அதிக மாறுபாடான ஜீவியமும் கொண்ட நபர்கூட, ஆண்டவருடைய மருத்துவமனையில் சுகம் பெற்றுவிட முடியும். ஒரு நல்ல மருத்துவமனை “சீரியஸான வியாதி” கொண்ட ஒரு மனிதனைக் கூட திருப்பி அனுப்பாது! தரம் குறைந்த மருத்துவமனையில் அப்படிச் செய்வார்கள்.... ஏனெனில், மோசமான கேஸ்களை கையாளுவதற்குப் போதுமான உபகரணங்கள் அவர்களிடம் இருப்பதில்லை. ஆனால், ஒரு நல்ல சபையானது. இவ்வுலகில் மகா மோசமான பாவியைப் பார்த்துக்கூட அவனுடைய 'கேஸிற்கு' இனி நம்பிக்கையில்லை எனக் கூறாது. அவன் தனக்குரிய வைத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், மிக மோசமான பாவியையும் ஒரு மாபெரும் பரிசுத்தவானாய் அந்த நல்ல சபை அவனை மாற்றிவிட முடியும்!

சபையை “மானிட சரீரத்திற்கும்” ஒப்பிட்டுக் கூறலாம். மானிட சரீரத்தில், ஒவ்வொரு அவயவத்திற்கும் ஒரு வேலையுண்டு. அந்தந்த அவயவங்கள் தன் தன் வேலைகளை நிறைவேற்றி முடிப்பதற்கே கவனம் கொண்டிருக்கும். அதேசமயத்தில், வேறு வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் மற்ற அவயவங்களையும் இந்த அவயவம் மெச்சிக்கொள்ளும்! மதிப்பு தரும்! அதோடு சேர்ந்து ஒத்துழைக்கவும் செய்யும்! இதைப்போலவே, கிறிஸ்துவின் சரீரத்திலும், நாம் மற்ற ஊழியங்களோடு சேர்ந்து பணி செய்திட வேண்டும்!

ஆவியின் வரங்கள் கிறிஸ்துவின் சரீரங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை பரிசுத்த ஆவியானவர், கண்களையும், காதுகளையும், கரங்களையும், கால்களையும் மாதிரியாக வைத்து விளக்கியிருப்பதை 1கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோமே!

கைகள் செய்திடும் வேலைகளுக்கு நம் வயிறு அதிக மதிப்பைக் கொடுத்த போதிலும், கைகள் செய்யும் அதே வேலைகளை தானும் செய்திட ஒருபோதும் முயற்சிப்பதில்லையே! உதாரணமாக, தட்டில் உள்ள உணவுகளைத் தானாகவே எடுத்துப் புசிக்க வயிறு ஒரு போதும் முயற்சிப்பதில்லை. மாறாக, அந்த வேலையை கைகள் செய்யும்படி அனுமதித்துவிட்டு, கை அள்ளி அனுப்பிய உணவுகளை “ஜீரணிக்கும்” தன் சொந்த வேலையை மாத்திரமே செய்யத் தொடங்குகிறது! கிறிஸ்துவின் சரீரத்திலும், நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டுமென்பதை இந்த உதாரணம் மிகவும் அருமையாகவே சித்தரிக்கிறது.

இவ்வாறு “சரீரத்தில் உள்ள” பல்வேறு ஊழியங்களைப்பற்றிய இந்த சத்தியத்தை அநேக விசுவாசிகள் இன்னமும் காணவேயில்லை! அவ்விதமே, நீங்களும் இந்த சத்தியத்தைத் தொடர்ந்து காணமுடியாத நிலையில் இருந்தால், தேவன் நிறைவேற்றி முடித்திட விரும்பிய அனைத்தையும் உங்களால் ஒருக்காலும் நிறைவேற்றி முடித்துவிடவேமுடியாது!

பழைய ஏற்பாட்டில் ஒரு தீர்க்கதரிசிகூட தன் ஊழியத்தில் சமநிலை கொண்டோராய் இருந்ததில்லை. மனுஷர் மேன்மையை விரும்பும் நாசூக்கான பிரசங்கிகளே தாங்கள் “சமநிலை கொண்டவர்கள் போல்” காண்பித்திட முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில், வேதாகமத்திலிருந்த தீர்க்கதரிசிகள் அனைவருமே சமநிலை அற்றவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் “ஒரே காரியத்தைத்”திரும்பத் திரும்ப தங்கள் சார்பில் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். ஏனெனில் அவர்களுடைய சந்ததியில் இஸ்ரவேலின் அல்லது யூதாவின் தேவை 'அதுவாகவே' இருந்தது. மாத்திரமல்லாமல், அவைகளைத்தான் தேவனும் அவர்களின் இருதயங்களில் பாரமாய் வைத்தார்!

நம்மை தேவன் எந்த வேலைக்காக அழைத்திருக்கிறார் என்பதில் நம் எல்லோருடைய மனமும் தெளிவாய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்!

நம்முடைய இருதயங்களில் ஆண்டவர் தந்திருக்கும் பாரமே, அவருடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் ஊழியத்திற்குரிய ஓர் அடையாளமாகும்!

நம்முடைய வரமும், அழைப்பும் என்னவென்பதை கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்த நாட்களிலேயே நாம் யாவரும் அறிந்து கொள்ள முடியும் என நான் இங்கு கூறவில்லை. நான் மறுபடியும் பிறந்த பிறகு, என்னுடைய ஊழியம் என்ன என்பதை தெளிவாய் அறிந்து கொள்ள 15 ஆண்டுகள் எனக்குப் பிடித்தது. உங்களுக்கோ, இவ்வளவு நீண்ட ஆண்டுகள் அவசியம் இல்லாதிருக்கலாம். மிகக் குறைந்த வருடங்களில் கூட உங்கள் ஊழியம் என்ன என்பதை நீங்கள் கண்டறியக் கூடும்! இதற்குரிய கால இடைவெளி நிர்ணயத்தை தேவனிடம் ஒப்புக்கொடுத்துவிடுவதே நல்லது. ஆனால், கிறிஸ்துவின் சரீரத்தில், உங்களுக்கென்று ஒரு தெளிவான விசேஷித்த ஊழியம் இருக்கிறது என்பதையும் அதை வேறு ஒருவரும் நிறைவேற்றிட முடியாது என்பதையும் நாம் திட்டமாய் அறிந்திருப்போமாக! அதே சமயம், நீங்கள் பெறும் ஊழியம் ஒருக்காலும் சமநிலை கொண்டதாயும் இருக்காது! ஆம், நீங்கள் யாராயிருந்தாலும் அந்த ஊழியம் சமநிலை அற்றதாகவேயிருக்கும்! கிறிஸ்துவின் சரீரத்தில் வித்தியாசமான ஊழியங்களைப் பெற்றவர்களோடு ஐக்கியம் கொண்டு, சேர்ந்து ஊழியம் செய்யும்போதுதான் “உங்கள் சமநிலையை” நீங்கள் கண்டடைய முடியும்! இவ்வாறு மற்றவர்களைச் சார்ந்து கொள்ளும்படி செய்வதே....தேவன் நம்மை தாழ்மைப்படுத்துவதற்குரிய வழியாய் இருக்கிறது! கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக!