வேதாகமத்தின் வேறு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறாத சொற்றொடர் ஒன்றை மத்தேயு சுவிசேஷத்தில் நாம் காண்கிறோம் – அது “பரலோகராஜ்யம்” என்னும் சொற்றொடரே. இச்சொற்றொடர் மத்தேயு சுவிசேஷத்தில் 31 முறை இடம்பெறுகிறது. இப்புத்தகம் பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறபடியால், இச்சொற்றொடரை அவர் ஏன் அடிக்கடி இங்கே பயன்படுத்தினார் என்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று யோவான் ஸ்நானன் பிரசங்கம் பண்ணினார் (மத்தேயு 3:2). அவருடைய நாட்களுக்குப் பிறகு, இயேசுவானவர் அதே செய்தியைப் பிரசங்கித்தார் (மத்தேயு 4:17). “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்தேயு 5:3)” என்பதே அவர் மலைப்பிரசங்கத்தைத் தொடங்கியபொழுது சொன்ன முதல் வார்த்தைகள். எனவே “பரலோகம்” என்பதின் வலியுறுத்தலை புதிய ஏற்பாட்டின் தொடக்கத்திலிருந்தே நாம் காண்கிறோம். மலைப்பிரசங்கத்தில் மட்டும், "பரலோகம்" என்ற சொல் 17 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவன் இஸ்ரவேலரோடு செய்த பழைய உடன்படிக்கையானது, இப்பூமிக்குரிய ராஜ்யம் சம்பந்தமாகவே இருந்தது. இஸ்ரவேலருக்குக் கானான் தேசம் கொடுக்கப்பட்டு, பொருளாதார செழிப்பும், சரீர சுகமும், பூமிக்குரிய மற்ற பலன்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. பின்னர், அவர்களுக்குப் பூமிக்குரிய ராஜாவும், பூமிக்குரிய ஐசுவரியமும், பூமிக்குரிய மற்ற ஆசீர்வாதங்களும் இருந்தன. ஆனால் இயேசு முற்றிலும் வேறுபட்ட ராஜ்யமான பரலோகராஜ்யத்திற்கு மனிதனை உயர்த்த வந்தார். எனவே புதிய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது, இங்கே சொல்லப்படுகிற நற்செய்தியானது பூமியைப் பற்றியதாயிராமல், பிரதானமாகப் பரலோகத்தைப் பற்றியது என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இதை நாம் புரிந்துகொண்டால், இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் காணப்படும் பெரும்பாலான குழப்பங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்.
“இரட்சிக்கப்பட்டோம்” என்று நாம் சொல்கிறோம். இது விசுவாசிகளின் மத்தியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு சொற்றொடர். ஆனால் நாம் எதிலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்? பூமிக்குரிய வழிகளிலிருந்து நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா அல்லது வெறும் நம்முடைய பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டிருக்கிறதா? பூமிக்குரியக் காரியங்கள் மீதுள்ள ஆர்வத்திலிருந்தும், ஜனங்ளையும் சூழ்நிலைகளையும் உலக கண்ணோட்டத்தில் பார்ப்பதிலிருந்தும், பூமிக்குரிய நடத்தையிலிருந்தும் (Behave) இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா?
புதிய உடன்படிக்கையானது பரலோகராஜ்யத்தின் சுவிசேஷமாகும். அமெரிக்கா தேசத்தின் குடிமக்களாகுவதற்கு உலகெங்கிலும் உள்ள அநேக ஜனங்கள் ஆவலாக உள்ளனர். ஏனென்றால் அமெரிக்கா தேசம் வாழ்வதற்கு மிகவும் கவர்ச்சிகரமான ஓர் இடம். ஆனால் ஆப்பிரிக்காவிலுள்ள சில பின்தங்கிய தேசங்களின் குடிமக்களாகுவதற்கு யாரும் ஆர்வமாக இருப்பதில்லை. எல்லாவற்றையும்விட அதிக கவர்ச்சிகரமான இடமாகிய பரலோகராஜ்யத்தின் குடிமக்களாகுவதற்கு இவ்வுலகில் வெகு சில ஜனங்களே ஆர்வமாக உள்ளனர். அது ஏன்? ஏனெனில் பரலோக குடியுரிமையின் மெய்யான மகிமையை அவர்கள் கண்டதில்லை. சுவிசேஷம் சரியாகப் பிரசங்கிக்கப்படாததே இதற்குக் காரணம். எனவே பெயரளவில் விசுவாசிகள் என்று அழைக்கப்படும் ஒரு திரளான ஜனக்கூட்டம் பரலோகராஜ்யத்தில் ஆர்வமில்லாமல் சபையில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மரிக்கும்போது பரலோகத்திற்கு செல்ல விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் பரலோகராஜ்யத்தை இப்போது விரும்பவில்லை.
'ராஜ்யம்' என்ற வார்த்தை இன்றைய காலத்தில் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தை அல்ல, ஏனென்றால் முதல் நூற்றாண்டு போல் அல்லாமல், இப்பொழுது ராஜாக்களால் அரசாளப்படுகிற ராஜ்யங்கள் மிகக் குறைவாகவே நமக்கு உள்ளன. “ராஜ்யம்” என்பதற்கு இன்று நாம் பயன்படுத்துகிற நிகரான சொல் “அரசாங்கம்”. “இந்தியராஜ்யம்” என்று சொல்லாமல் “இந்திய அரசு” என்று நாம் சொல்லுகிறோம்.
பரலோக அரசு என்பதே பரலோகராஜ்யத்தின் பொருளாகும். தேவன் உங்களுடைய வாழ்க்கையை ஆளுகிறார் என்பதே இதன் பொருள். நீங்கள் இந்தியாவில் வாழும்போது, இந்திய அரசாங்கத்தின் விதிகளுக்குக் கீழ்ப்பட்டு வாழ வேண்டும். நீங்கள் பரலோக அரசாங்கத்திற்குள் வந்தால், பரலோக அரசாங்கத்தின் விதிகளுக்குக் கீழ்ப்பட்டு வாழ வேண்டும். உங்களுடைய குடியுரிமையை பூமியிலிருந்து பரலோகத்திற்கு நீங்கள் மாற்றிவிட்டீர்களா?
இரட்சிப்பு என்பது பூமியின் ராஜ்யத்திலிருந்து மீட்கப்பட்டு பரலோக ராஜ்யத்திற்குச் செல்வதாகும். ஆனால் அநேக விசுவாசிகளின் இரட்சிப்பு அவ்வளவு தூரம் செல்லவில்லை. அவர்கள் மரிக்கும்போது பரலோகத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் இப்போது தங்களுடைய வாழ்க்கையில் பரலோகத்தின் ஆட்சியை விரும்புகிறதில்லை. இப்பூமியின் முழு குடிமக்களாக இப்போது வாழ விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் ஆழமற்றதாயிருக்கிறது.
வேறெந்த சுவிசேஷத்திலும் காணப்படாத இன்னொரு வார்த்தை மத்தேயு சுவிசேஷத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ‘சபை’ என்ற வார்த்தையாகும். இது மூன்று முறை இடம்பெறுகிறது – ஒரு முறை மத்தேயு 16:18 -ம் வசனத்திலும், இரண்டு முறை மத்தேயு 18:17 -ம் வசனத்திலும் இடம்பெறுகிறது. இந்த வார்த்தையை (சபை) நாம் பரிசீலித்துக் கொண்டிருக்கும் சொற்றொடருக்கு (பரலோக ராஜ்யம்) பக்கத்திற்குப் பக்கமாக வைத்தால், சபையானது பரலோகராஜ்யமாக இப்பூமியிலே இருக்க வேண்டுமென்பதை நாம் பார்ப்போம். பரலோகத்தில் அனைவரும் தேவன் அரசாளுகிற பரலோக அரசாங்கத்திற்குக் கீழ்ப்பட்டு வாழ்கிறார்கள். ஆனால் இங்கே பூமியிலேயோ, இது வேறுபட்டுள்ளது. எல்லோரும் அவர்களுடைய சொந்த வாழ்க்கையை தாங்களே நடத்துகிறார்கள். அத்தகைய மக்கள் மத்தியில், அவர்களுடைய சொந்த வாழ்க்கையை தாங்களே நடத்தாத ஒரு ஜனக்கூட்டம் கர்த்தருக்கு உண்டு. அவர்கள் பரலோக அரசாங்கத்திற்குக் கீழ்ப்பட்டு உள்ளனர்.
அதுதான் சபை. பரலோக அரசாங்கத்தின் முழுமையான அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டு உலகத்திலுள்ள சபைகளானது வாழ்ந்துகொண்டு இருக்கின்றனவா? “இல்லை” என்பதே இதற்குப் பதில். இது அநேக வருடங்களாக என் இருதயத்தை துக்கப்படுத்தியிருக்கிறது. உங்களுடைய இருதயத்தையும் இது துக்கப்படுத்துகிறது என்று நான் நம்புகிறேன். நான் மற்றவர்களைக் குற்றஞ்சாட்டவில்லை. “அவர்கள் அப்படி இருக்கிறார்கள்” என்று சொல்லாமல், “நாம் அப்படி இருக்கிறோம்” என்று நான் சொல்லுகிறேன். சபையாகிய நாம் பரலோக ஆட்சிக்குக் கீழ்ப்பட்டு வாழும் பாக்கியத்தை உலகத்திற்குக் காண்பிப்பதில் தோல்வியடைந்துள்ளோம். எனவே, "கர்த்தாவே, எங்கள் தோல்வியை எங்களுக்கு மன்னித்து, தேவனுடைய ஆட்சிக்குக் கீழ்ப்பட்டு வாழ்வதின் பொருளை உலகிற்குக் காண்பிக்க எங்களுக்கு உதவும்” என்று நான் ஜெபிக்கிறேன்.