WFTW Body: 

தேவனுடைய சித்தம் செய்து வாழ்வதே’ இப்பூமியில் மனுஷனுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமும் சிலாக்கியமுமாயிருக்கிறது! இந்த வாழ்க்கையைத்தான் ஆண்டவராகிய இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதன் முக்கியத்துவத்தை இயேசு குறிப்பிடுகையில், “என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான்” (மத்தேயு 7:21) என்றார். மேலும் அதை வலியுறுத்தி, “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே என்னுடைய உண்மையான சகோதரனும், சகோதரியுமாய் இருக்கிறார்கள்” (மத்தேயு12:50) எனவும் குறிப்பிட்டார்!! பிற்காலத்தில் அப்போஸ்தலர்களும் தங்கள் தலைமுறையினருக்கு இந்த மேன்மையான வலியுறுத்தலையே உத்தமமாய் கொடுத்துக்கொண்டு வந்தனர். ‘பாவங்களிலிருந்து மனுஷர்களாகிய நம்மை தேவன் ஏன் விடுவித்தார்?’ என்ற கேள்விக்கு விடையாக “விடுதலை பெற்றவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்திட வேண்டும் என்பதற்காகவே!” என பேதுரு தேவனுடைய நோக்கத்தைப் பிரகடனம் செய்தார் (1பேதுரு 4:1,2). பவுல் அப்போஸ்தலன் கூறுகையில், “விசுவாசிகளாகிய நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் புதுசிருஷ்டியாக சிருஷ்டிக்கப்பட்டதின் காரணம், நமக்கென தேவன் ஏற்கெனவே திட்டம் வகுத்த பாதையில் நாம் நடந்து வர வேண்டும் என்பதற்கே!” எனக் கூறினார். ஆகவே, அவர் எபேசு கிறிஸ்தவர்களுக்கு புத்திகூறும் போது, “நீங்கள் இன்னமும் மதியற்றவர்களாயிராமல், உங்களுடைய வாழ்க்கைக்கென்ற கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து வாழுங்கள்” (எபேசியர் 2:10;எபேசியர் 5:17) எனக் கூறினார். கொலோசெய கிறிஸ்தவர்களுக்காக அவர் ஜெபித்தபொழுது, அவர்கள் தேவ சித்தத்தை அறிகிற அறிவினால் நிரப்பப்பட வேண்டும் என்று ஜெபித்தார். தன்னைப் போலவே தன் உடன் ஊழியனாகிய எப்பாப்பிராவும், அந்த கொலோசெய கிறிஸ்தவர்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்களுக்காக ஜெபித்ததாக அவர்களிடம் கூறினார் (கொலோசெயர் 1:9;கொலோசெயர் 4:12). அதேபோல் அப்போஸ்தலனாகிய யோவானும், “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவன் மாத்திரமே என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1யோவான் 2:17) என கற்றுக் கொடுத்தார்.

தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்” என அப்போஸ்தலர் 13:22-ஆம் வசனம் குறிப்பிடுவதற்கு ஓர் உறுதியான காரணம் உண்டு! அது என்னவெனில், அவன் தேவ சித்தம் ஒன்றையே தன் மிகப்பெரிய விருப்பமாய் வைத்து அதை நிறைவேற்றிட வாஞ்சித்தான்! என்ற காரணமேயாகும். இதை தாவீதே தன் சங்கீதத்தில் குறிப்பிட்டு, “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம் 40:8) எனக் கூறினார். தாவீது ஒன்றும் பூரணமான மனுஷனல்ல! அவன் அநேகப் பாவங்கள் செய்திருக்கிறான். அவைகளில் ஒரு சில பாவங்கள் மிகக்கேடாக இருந்தபடியால் தேவன் அவனை வெகுவாய் தண்டிக்க வேண்டியதாயும் இருந்தது! அப்படியெல்லாம் இருந்தும், தேவனோ அவனை முழுவதுமாய் மன்னித்துவிட்டார்! அவன்மீது பிரியமும் வைத்தார்!! அது ஏனென்றால், “தன் வாழ்வில் தேவனுடைய சித்தம் முழுவதையும் நிறைவேற்றிவிட அவன் கொண்டிருந்த வாஞ்சையே”யாகும். ஆகவே, நம்மிடம் எவ்வளவுதான் குறைவான ஜீவியம் காணப்பட்டாலும், நாமும்கூட தேவனுடைய இருதயத்திற்கேற்ற புருஷர்களாயும், ஸ்திரீகளாயும் மாறிவிட முடியும்! அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தாவீதைப்போலவே, ஆண்டவருடைய சித்தம் செய்வதற்கே நம் முழு இருதயமும் திசைமாற்றம் கண்டிருக்க வேண்டும்!!

இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, அவர் நடந்தது போலவே விசுவாசிகளாகிய நாமும் நடந்திட வேண்டுமென்று புதிய ஏற்பாடு வலியுறுத்துகிறது (1யோவான் 2:6). இயேசு கிறிஸ்துவின் முழு ஜீவியத்திற்கும், வழி நடத்தும் ஓர் ஆதாரமாயிருந்த கோட்பாடு “தம் பிதாவின் சித்தத்தை செய்திட வேண்டும்” என்பதாக மாத்திரமே இருந்தது. தம் பிதா தமக்கு யாதொன்றைச் சொல்லும் வரை எந்த இடத்திற்கும் அவர் சென்றிட மாட்டார்! ஆனால், தம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி சென்றுவிட்டால், எதிரிகளுடைய அச்சுறுத்தலோ அல்லது நண்பர்களுடைய பரிவான கெஞ்சுதலோ அவரை ஒருக்காலும் நிறுத்தி வைக்க முடியவில்லை! ஆம், தம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே அவருடைய அன்றாட போஜனமாயிருந்தது (யோவான் 4:34). ஒரு மனிதன் தன் சரீரத்தை போஷித்திட உணவுக்காக ஏங்குவதைப்போலவே, தம்மை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு இயேசு ஏங்கி நின்றார்! தேவனுடைய முழு சித்தத்தையும் நம் வாழ்வில் நிறைவேற்றி முடிப்பதற்கு இயேசு கொண்ட 'அதே பசி' விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருந்திட வேண்டும்! மிக எளிதாய் “உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போலவே பூமியிலும் செய்யப்படுவதாக” என ஜெபித்துவிட்டு, அதன் பின்பு நம் அன்றாட ஜீவியத்திலோ மிக சாதாரணமாய் தேவனுடைய வழிநடத்தும் ஆலோசனைகள் யாதொன்றையும் கேளாமல், நாம் விரும்புகிறவைகளையே செய்து விடுகிறோம்!

நம் ஒவ்வொருவருடைய ஜீவியத்திற்கும் ஒரு விசேஷித்த திட்டத்தை தேவன் வகுத்து வைத்திருக்கிறார் என்று வேதம் நமக்குப் போதிக்கிறது (எபேசியர் 2:10). ஒரு வேலையை நமக்காகத் திட்டம் செய்து வைத்திருக்கிறார்! ஒரு வாழ்க்கைத் துணையை நமக்காகத் தெரிந்து வைத்திருக்கிறார்! நாம் எங்கே வாழவேண்டும் என்பதையும் திட்டம் செய்திருக்கிறார்! ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்திட வேண்டும் என்பதைக்கூட திட்டமிட்டிருக்கிறார்! இவ்வித ஒவ்வொரு சமயத்திலும் அவருடைய தெரிந்து கொள்ளுதலே மிகச் சிறந்ததாய் இருக்கும்; ஏனெனில், நம்மை அவரே அதிகமாய் அறிந்திருக்கிறவராயும், நமக்குரிய ஒவ்வொரு பகுதியையும் மிகக் கரிசனையாய் ஆராய்ந்து வழி வகுக்கிறவராயும் இருக்கிறார்! ஆகவே, காரியம் மிகப்பெரியதோ அல்லது மிகச்சிறியதோ, அது எதுவாக இருந்தாலும் அவருடைய சித்தத்தை நாம் தேடி அறிவதே மிகுந்த ஞானமுள்ளதாய் இருக்கிறது!!

தங்கள் வாலிப நாட்கள் தொடங்கி, தங்கள் வாழ்கையில் தேவ சித்தத்தை தேடாமல் இருந்துவிட்ட எண்ணற்றவர்களுடைய வாழ்கை “சேதமடைந்த கப்பலின்” பயணமாகவே தத்தளிக்கிறது! “இளம் பிராயத்தில் நுகத்தை சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” என்று புலம்பல் 3:27 கூறுகிறது. நாம் நம்முடைய நுகத்தை சுமக்கும்படியே மத்தேயு 11:28-30 வசனங்களில் இயேசு நம்மெல்லோரையும் வருந்தி அழைக்கிறார். நுகத்தை சுமப்பதின் அர்த்தம் என்ன? ஒரு வயல் நிலத்தை இரண்டு காளை மாடுகள் உழும்போது, அந்தக் காளைகளின் கழுத்தில் ஒரு நீண்ட தடியாகிய நுகம் பூட்டப்படுவதுண்டு. ஒரு புதிய காளைக்கு உழுவதற்குப் பயிற்சியளிக்க வேண்டுமென்றால், அந்தக் காளை மாட்டை ஓர் அனுபவமுள்ள காளை மாட்டோடு சேர்த்து நுகம் பூட்டுவார்கள். அந்த அனுபவமுள்ள காளை செல்லும் திசையிலும், வேகத்திலும் இந்த புதிய காளையும் செல்லும்படி ஒரு கட்டாயப் பயிற்சி அப்போது ஏற்பட்டு விடும்!! இதுவே இயேசுவின் நுகத்தை நம்மீது சுமப்பதின் அர்த்தமாகும். இயேசு விரும்பி நடத்தும் பாதையில்தான் நாமும் அவரோடு நடந்து செல்ல வேண்டும்! அவர் நடத்தாமல் நாமாக எதையும் செய்திட வேகமாய் முன் சென்றிடக் கூடாது! அதுபோலவே அவர் நடத்தும் சில கீழ்ப்படிதலின் புதிய பாதைகளில் நாமாக பின்தங்கிவிடவும் கூடாது. இவ்விதமாய் இயேசுவின் இந்த நுகத்தடியின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டவர்கள் மிகவும் கொஞ்ச பேர்களே இருக்கிறார்கள். அந்தக் கொஞ்ச பேர்களுக்குள்ளும் 'வெகு சிலரே' அவரது நுகத்தை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறார்கள். பொதுவாய், நுகத்தடியை கழுத்தில் ஏற்றுக்கொள்ளும்படி நிலச்சுவான்தார்கள் தங்கள் காளை மாட்டை கட்டாயப்படுத்துவது வழக்கம். ஆனால் இயேசுவோ நம்மை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தாமல், வருந்தியே அழைக்கிறார்! இன்றும், அவருடைய இந்த அழைப்பை நாம் புறக்கணிப்பது பெருத்த மதியீனமல்லவா! இவர்களோ, தங்கள் சுய-சித்தமாகிய பாரமுள்ள நுகத்தை சுமந்து, அதன் விளைவாய் மன உளைச்சலையும், தோல்வியையும் அடைந்திட விரும்புகிறார்களேயல்லாமல்... இலகுவான “இயேசுவின் நுகத்தை” சுமந்து, அது வழங்கும் மெய்யான விடுதலையையும், ஆழமான இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாய் இல்லை!

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்” அல்லது நடந்து சென்றான் என ஆதியாகமம் 5:22 கூறுகிறது. அதாவது, அவனாகவே துரிதமாய் முன் செல்லவோ அல்லது அவனாகவே பின் தங்கிவிடவோ செய்யாமல், தேவன் நியமனம் செய்த பாதையில் “நுகம் ஏற்றுக்கொண்ட மனிதனாக” 300 வருடங்கள் தேவனோடு இசைவாய் நடந்து சென்றான்! அதன் விளைவாய் அவன் “தேவனுக்குப் பிரியமானவன்” (எபிரெயர் 11:5) என்ற நற்சாட்சியின் முத்திரையை தேவன் அவனுக்கு வழங்கினார். நாமும் அவருக்குப் பிரியமாய் இருந்திட வேண்டுமென்றால், அவருடைய நுகத்திற்குக் கீழாய் பூட்டப்பட்டு அவருடைய பூரண சித்தத்தின்படி இசைந்து வாழும் வழியேயல்லாமல் வேறுவழி ஏதுமில்லை. இவ்வித வாழ்க்கையைக் கொண்டவர்கள் மாத்திரமே கர்த்தருடைய வருகையில் “யாதொரு இழப்புமற்றவர்களாய்” அவருக்கு முன் மகிழ்ச்சியுடன் நின்றிட முடியும்!

விசுவாசிகளாகிய நம் ஜீவியத்தில், தேவனுடைய பூரண சித்தத்தை இழந்திடும் அபாயம் நம் யாவருக்குமே இருக்கிறது. இஸ்ரவேல் தேசத்திற்கு ராஜாவாய் இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன்தான் சவுல்! ஆனால், காலாவட்டத்தில், அவனுடைய பொறுமையின்மையினிமித்தமும், அவனுடைய கீழ்ப்படியாமையினிமித்தமும் தேவன் அவனைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவர் புறக்கணித்தப்பிறகும் கூட, சிலவருடங்கள் சவுல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கத்தான் செய்தான். ஆயினும் அவனோ, தேவன் அவனுடைய வாழ்க்கையில் கொண்டிருந்த அவருடைய சித்தத்தை இழந்து போனான்! சாலொமோனைக்கூட மற்றொரு மாதிரியாய் நாம் கூறிட முடியும். தன்னுடைய ஆரம்ப வருடங்களில் தேவனைப் பிரியப்படுத்திய சாலொமோன் தன் பிற்கால ஜீவியத்தில், புறஜாதி ஸ்திரீகளைத் திருமணம் செய்து வீழ்ச்சியுற்றான்! வனாந்தரத்தில் அழிந்த இஸ்ரவேலர்களின் மாதிரியை வைத்து நமக்கு எச்சரிப்புகளை புதிய ஏற்பாடு இரண்டுமுறை எடுத்துரைத்திருக்கிறது. “கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதே” இஸ்ரவேலர்களைக் குறித்த தேவனுடைய பரிபூரண சித்தமாயிருந்தது. இருப்பினும் அவர்களில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் “தேவனுடைய மிகச் சிறந்த வாக்குத்தத்தத்தை தங்கள் அவிசுவாசத்தினிமித்தமும், தங்கள் கீழ்ப்படியாமையினிமித்தமும் இழந்து போனார்கள்” (1கொரிந்தியர் 10:1-12; எபிரெயர் 3:7-14). இன்றும் இவர்களைப் போலவே திரளான விசுவாசிகள் தேவன் தங்கள் வாழ்விற்காக கொண்டிருந்த பூரண திட்டத்தை தங்கள் கீழ்ப்படியாமையினிமித்தமும், தங்கள் திருமணம் அல்லது தங்கள் வேலையைத் தெரிந்துகொள்வதில் கைக்கொண்ட ஒத்த வேஷத்தினிமித்தமும் இழந்து போனார்கள்!

நாம் யாராயிருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது! இந்த ஒரே வாழ்க்கையின் முடிவில், பவுலைப்போலவே “தேவன் எனக்கென நியமித்த ஓட்டத்தை நிறைவாய் ஓடி முடித்தேன்” (2தீமோத்தேயு 4:7) எனக் கூற முடிந்தவர்கள் மெய்யாகவே பாக்கியவான்கள்!!

இந்த உலகமும் அதிலுள்ள இச்சையான யாவும் ஒரு நாள் ஒழிந்து மறைந்து போகும்! ஆனால், தேவனுடைய சித்தத்தை கவனமாய் பின்பற்றி வாழ்கிறவனெவனோ, அவனே என்றென்றைக்கும் ஒழிந்து போகாத நிரந்தரமான பங்கைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவான்” (1யோவான் 2:17 JBP ஆங்கில வேதாகமம்) எனக்கூறும் அற்புத வசனத்தை நாம் மனதில் கொள்ளக்கடவோம்.

நீங்கள் வாழ்வின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் அறியாத மனுஷர்களைப்போல் இராமல், இந்த ஜீவியத்தை மிகுந்த பொறுப்புள்ள உணர்வோடு கடைபிடித்து வாழுங்கள். இந்த நாட்களின் பல்வேறு கஷ்டங்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல், உங்கள் காலத்தை செம்மையாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனோ-தானோ என்று இராமல் தேவனுடைய சித்தம் என்று அறிந்ததை உறுதியாகப் பற்றிக் கொண்டு வாழுங்கள்” (எபேசியர் 5:15-17 JBP ஆங்கில வேதாகமம்) என எச்சரிக்கும் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.