WFTW Body: 

யோசுவா புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கானான் தேசமானது, (ஒரு சில விசுவாசிகள் தங்களுடைய கீர்த்தனையில் பாடுவதைப் போல), பரலோகத்தைக் குறிப்பிடும் ஒரு சித்திரமன்று. ஏனெனில் பரலோகத்தில் கொல்லப்பட வேண்டிய ராட்சதர்கள் எவருமில்லையே! கானான் என்பது ஆவியில் நிறைந்து, வெற்றியுடன் வாழும் வாழ்க்கையைக் குறிப்பதாகும். அங்கேதான் மாம்சத்தின் இச்சைகளான பாவ ராட்சதர்களெல்லாம் சிலுவையில் அறையப்பட வேண்டும். ராட்சதர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் கொன்றொழிக்கப்படவில்லை. ஒவ்வொருவராகத்தான் கொல்லப்பட்டனர்.

இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுடைய கானான் பயணத்திலே, இருமுறை தண்ணீரைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஒன்று சிவந்த சமுத்திரம், இன்னொன்று யோர்தான் ஆறு. இரண்டுமே மரணத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. சிவந்த சமுத்திரத்திற்குள் போன காரியமானது, 1கொரிந்தியர் 10-ஆம் அதிகாரத்தில் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு ஒப்பிட்டுப் பேசப்படுகின்றது. யோர்தான் நதியும் இன்னொரு வகையான மரணத்தைக் குறிப்பிடுகின்றது. 1500 ஆண்டுகளுக்குப் பிறகு, இதிலேதான் யோவான்ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.

நம்முடைய பழைய மனுஷன் தேவனால் சிலுவையிலே அறையப்பட்டான் என வேதம் நமக்குப் போதிக்கின்றது (ரோமர் 6:6). நம்முடைய பழைய மனுஷனை நாமாகவே சிலுவையில் அறைந்துவிட முடியாது. நம்முடைய பழைய மனுஷன் (பாவம் செய்ய விரும்புகின்ற மனது) கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டது. தேவனேதான் அதைச் செய்தார். ஆனால் நாமாக ஒன்றைச் சிலுவையில் அறைய வேண்டும். அதுதான் (ஆசை இச்சைகளின் பண்டகசாலையாகிய) நம்முடைய மாம்சமாகும். “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” என கலாத்தியர் 5:24 சொல்லுகிறது.

மாம்சம் என்பது பழைய மனுஷனிலிருந்து வேறுபட்டதாகும். கொள்ளைக் கூட்டத்தினரைப் போலுள்ள இச்சைகளோடு நம்முடைய இருதயத்திற்குள் புகுந்து நம்மைக் கறைப்படுத்த முனைகின்ற ஒன்றுதான் மாம்சமாகும். ஆனால் பழைய மனுஷன் என்பவன் நம்முடைய இருதயத்திற்குள்ளே குடியிருந்து, கொள்ளையர்கள் வரும்போதெல்லாம் கதவைத் திறந்துவிடும் ஓர் உண்மையில்லாத வேலைக்காரனைப் போலிருப்பவன் ஆவான். இவையிரண்டில் தேவன் எதைக் கொல்லுவார்? வேலைக்காரனைத்தான் கொல்லுவார். கொள்ளையர் அனைவரும் சுகமும் நலமுமாய்த்தான் உள்ளனர். ஆகவேதான் நாம் மறுபடியும் பிறவாத நாட்களில் சோதிக்கப்பட்டதற்கு இணையாகவே, மறுபடியும் பிறந்த பிறகும் சோதிக்கப்படுகிறோம். கொள்ளையர்கள் உயிருடன் இருப்பதற்கு இது ஓர் அத்தாட்சியாகும். நாம் மறுபடியும் பிறந்த பிறகும் அவர்கள் நம்முடைய இருதயத்திற்குள் புக முயல்கிறார்கள். ஆனால் இந்தத் திருடர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டுக் கொண்டிருந்த பழைய மனுஷனாகிய வேலைக்காரன் இப்போது செத்துப் போய்விட்டான். நாம் மறுபடியும் பிறந்த போது, தேவன் அந்த வேலைக்காரனைக் கொன்றுவிட்டு, அவனுக்குப் பதிலாக ஒரு புதிய வேலைக்காரனை நியமித்துள்ளார். இப்புதியவன் திருடர்களுக்குக் கதவைத் திறந்துவிட விரும்பாதவன். இப்போது நமக்குச் சோதனை வரும்போது, புது வேலையாள் “இல்லை” என்று சொல்லுகிறான். அப்படியானால் விசுவாசிகள் எப்படிப் பாவத்தில் விழுகின்றனர்? அவர்கள் புதிய வேலைக்காரனுக்குப் போதுமான போஷாக்குக் கொடுக்காமல் இருப்பதே அதற்கான காரணமாகும். அதனால் கொள்ளையர்கள் உள்ளே நுழையும் போது அவனால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடிவதில்லை. கொள்ளையர்களும் திடுதிடுவென உள்ளே நுழைந்து விடுகின்றனர். இப்படித்தான் ஒரு விசுவாசி பாவம் செய்கின்றான்.

ஆனால் ஒரு விசுவாசி பாவம் செய்வதற்கும், ஓர் அவிசுவாசி பாவம் செய்வதற்கும் இடையே ஒரு பெருத்த வித்தியாசம் உண்டு. ஏனெனில் விசுவாசி பாவம் செய்ய விரும்புவதில்லை; ஆனால் அவிசுவாசி பாவம் செய்ய விரும்புகிறான். உண்மையில், நீங்கள் மெய்யாகவே மறுபடியும் பிறந்தவர்தானா இல்லையா என்பதற்கான பரீட்சையே இதுதான். நீங்கள் மறுபடியும் பிறந்தவர்தானா என்பதற்கான நிரூபணமானது நீங்கள் பாவம் செய்கிறீர்களா இல்லையா என்பதைப் பொறுத்ததல்ல; நீங்கள் பாவம் செய்ய விரும்புகிறீர்களா இல்லையா என்பதைப் பொறுத்ததாக உள்ளது. உங்களுக்குப் பாவம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் இன்னும் இருக்குமானால், நீங்கள் இன்னும் மனந்திரும்பவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். ஞானஸ்நானம் தர வேண்டும் என என்னிடம் கேட்டு வருகிறவர்களிடம், “நீங்கள் இன்னும் ஒரேயொரு முறையாவது பாவம் செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியை நான் கேட்கிறேன். “நீங்கள் பாவம் செய்வீர்களா?” எனக் கேட்பதில்லை. ஏனெனில் எவராலும் தான் இனி பாவம் செய்வதில்லை எனச் சொல்லவே முடியாது. ‘விரும்புவது’ என்பதுதான் பழைய மனுஷன் ஆவான்.

புதிய உடன்படிக்கை தெரிவிக்கும் இரு மரணங்கள் உள்ளன. இவை இரண்டுமே இஸ்ரவேலரின் சரித்திரத்தில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பார்வோனின் சேனைகள் முழுவதும் ஒரேயொரு கணப்பொழுதில் சிவந்த சமுத்திரத்தில் புதைக்கப்பட்டனர். அது பழைய மனுஷனை உருவகப்படுத்துவதாகும். அதைச் செய்தது யார்? தேவன். பழைய மனுஷன் தேவனாலே சிலுவையிலே அறையப்பட்டது. பின்பு இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்தனர். அது இன்னொரு மரணத்தைக் குறித்துக் குறிப்பிடுகிறது. நாம் நம்முடைய இச்சைகளுக்குக் கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டதை ஏற்றுக் கொள்ளுகிறோம். கிறிஸ்துவினுடையவர்கள், இச்சைகளைக் குறித்த விஷயத்தில் இந்த மனப்போக்கையே எடுக்கின்றனர். இச்சைகள் இன்னும் இருக்கின்றன; ராட்சதர்கள் இன்னும் தேசத்தை ஆட்சி செய்து கொண்டுதான் உள்ளனர். ஆனால் யோசுவாவும், பிற இஸ்ரவேலரும் ஒவ்வொரு ராட்சதனாகக் கொன்றுவிடத் தீர்மானித்தனர். சோதிக்கப்படுகிற போதெல்லாம், நாமாகத்தான், நம்முடைய இச்சைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கொல்ல வேண்டும். பரிசுத்த ஆவியானவர் தரும் வல்லமையைக் கொண்டு, சரீரத்தின் கிரியைகள் எல்லாவற்றையும் நாம் அழிக்க வேண்டும் (ரோமர் 8:13). எகிப்து ராணுவம் ஒரே நேரத்தில் முழுமையாகத் தேவனால் புதைக்கப்பட்டதலிருந்து இது வேறுபட்டதாகும்.

புதிய ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்துகிற விஷயம் என்று வரும்போது, வேதமானது மிகவும் துல்லியமாக இருக்கிறது. நாம் பரிசுத்த ஆவியானவருக்கு நம்மைத் திறந்து கொடுக்கும்போது, இந்த மறைவான காரியங்களையெல்லாம் அவர் நமக்கு வெளிப்படுத்துவார். வேதம் ஓர் உள்ளக் கிளர்ச்சியூட்டும் புத்தகமாகும். அது புதிய உடன்படிக்கை வாழ்வைப் பற்றிய பழைய ஏற்பாட்டு மாதிரிப்படிவத்தில் பூரணமுள்ளதாகவும், துல்லியமுள்ளதாகவும் உள்ளது. பழைய ஏற்பாட்டுப் பக்தர்கள் இவற்றையெல்லாம் என்னவென்று அன்று அறிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அவையெல்லாம் எவற்றிற்கு நிழலாட்டமாய் இருந்தன என்று இன்று நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. கானான் தேசம் என்பது, ராட்சதர்கள் போன்ற பல விதமான இச்சைகளால், பல ஆண்டுகளாக ஆளப்பட்டு வரும் நம்முடைய உடலை அடையாளப்படுத்துகிறது. ஆனால் நாமோ, இந்த ராட்சதர்கள் விஷயத்தில், “நான் என்னைப் பாவத்திற்கு மரித்தவனாக எண்ணிக் கொள்ளப் போகிறேன்” என்னும் மனோபாவத்தையே பெற்றிருக்கிறோம். நாம் அனுதினமும் சிலுவையை எடுக்க வேண்டுமென இயேசு நமக்குச் சொல்லியிருக்கிறார். அது பழைய மனுஷனைக் கொல்வதல்ல. பழைய மனுஷன் ஏற்கனவே சிலுவையில் அறையப்பட்டுவிட்டது. சிலுவையை எடுப்பதென்றால், நம்முடைய சுய சித்தத்தை (வேதம் இதை நம்முடைய “மாம்சம்” என்றழைக்கிறது) அனுதினமும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரணத்திற்கு ஒப்புக் கொடுப்பதாகும்.

பாவத்தைப் பற்றிய விஷயத்தில், உங்களிடத்தில் சாவதானமான மனோபாவம் காணப்படுமானால், நீங்கள் மீண்டுமாய் பழைய மனுஷனைத் தரித்துக் கொள்வீர்கள் (எபே 4:22). “மாம்சத்திற்கேற்றபடி தொடர்ந்து வாழுகிற” நபர் - ஒரு காலத்தில் ஆவிக்கேற்றபிரகாரமாய் வாழ்ந்திருந்தாலும் – மரித்துவிடுவார் (விசுவாசிகளுக்காக எழுதப்பட்ட ரோமர் 8:13, இந்தக் காரியத்தைத் தெளிவுபடுத்துவதில் பளிங்கு போலத் தெளிவாக உள்ளது).