ஸ்தேவான், யூத மதத் தலைவர்களிடத்தில் பேசின போது, அவர்களால் அவன் பேசின ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்து நிற்க கூடாமற்போயிற்று என்று எழுதப்பட்டுள்ளது (அப் 6:10). நாம் பேசின போதும் இது போன்ற அனுபவம் நமக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். ஸ்தேவான் அவர்களைப் பார்த்து, “தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? (அப் 7:52)” என்று கேட்டான். பழைய ஏற்பாட்டில் வாழ்ந்த ஒவ்வொரு தீர்க்கதரிசியும், பிரபலமில்லாமலும், துன்புறுத்தப்பட்டவராகவுமே இருந்தனர். ஒரு தீர்க்கதரிசிக்கும், ஒரு போதகனுக்கும் வேறுபாடு உண்டு. ஒரு போதகன் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாய் இருக்கக்கூடும். ஆனால் ஒரு தீர்க்கதரிசியோ நிராகரிக்கப்பட்டும், பிரபலமற்றுமே இருப்பான். ஒரு போதகன் சர்ச்சைக்குரிய நபராக இருப்பதில்லை. ஆனால் ஒரு மெய்யான தீர்க்கதரிசியோ எப்பொழுதுமே சர்ச்சைக்குரியவனாகவே இருப்பான். எனவே தீர்க்கதரிசிகள் எப்பொழுதுமே உபத்திரவப்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ஒரு போதகனுக்கும், சுவிசேஷகனுக்கும் நிலைமை அவ்வாறு இருப்பதில்லை. யூதர்கள் உணர்த்துவிக்கப்படும்படியாக ஸ்தேவான் பேசினான். அதினிமித்தம் அவர்கள் சினங்கொண்டு அவனைக் கொன்றார்கள். அவன்தான் கிறிஸ்தவ சபையின் முதல் இரத்தச்சாட்சியாக விளங்கினான் (அப் 7:54,55).
அப்போஸ்தலர் 7:55-57-ல் உள்ள வசனங்களில் சொல்லப்பட்டவைகளிலிருந்து ஆவியில் நிறைந்த ஒரு மெய்யான தீர்க்கதரிசியின் அடையாளங்கள் என்ன என்பதைக் காண முடிகிறது. அவையாவன:
01. அவனுடைய மனமானது பரலோகக் காரியங்களில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
02. அவன் எல்லாச் சூழ்நிலைகளிலுமே தேவனுடைய மகிமையைப் பார்க்கிறான்.
03. அவன் மனிதருடைய எதிர்ப்புகளைக் கண்டு கலங்கி நிற்க மாட்டான்.
04. அவனுடைய தரிசனமானது தேவனுடைய வலதுபாரிசத்திலுள்ள இயேசுவின் மீதே உள்ளது.
05. அவன் உயிர்த்தெழுந்த இந்தக் கிறிஸ்துவைப் பற்றித் துணிவுடன் சாட்சி பகருகிறான்.
06. அவன் உபத்திரவப்படுத்தப்படுகிறவனாகவும், சில வேளைகளில் கொல்லப்படுகிறவனாகவும் இருக்கிறான்.
07. அவன் தன்னை உபத்திரவப்படுத்துகிறவர்களை மன்னித்து, அவர்களுக்காக வேண்டுதல் செய்கிறான்.
தேவன் பல்வேறு காரணங்களுக்காக ஸ்தேவான் கொல்லப்படும்படியாக அனுமதித்தார். தரிசு பட்டணத்தானாகிய சவுலின் மனமாற்றம் என்பது அவற்றில் ஒரு காரணமாகும். ஸ்தேவான் கொல்லப்படும்போது, அவனுடைய கடைசி நிமிட மனோபாவங்களை பவுல் நேரில் காணாமலிருந்திருந்தால், அவன் மனம் மாறி இருக்கக்கூடுமோ என நான் ஆச்சரியம் அடைகிறேன்.
இயேசு தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக ஜெபிக்கிறதைக் கேட்ட ரோம நூற்றுக்கு அதிபதியானவன், இயேசுவானவர் தேவக் குமாரன் என்பதை மனதார நம்பினான்.
ஸ்தேவான் ஜெபிக்கிறதை பவுல் கேட்ட போது, அவனுடைய மனச்சாட்சி அவனைக் குத்தியது. எனவே அவன், “இது ஒரு பொய்யான மார்க்கமாய் இருக்க முடியாது. ஒரு வேளை நான் தவறாக இருக்கக்கூடும்” என்று சிந்திக்கத் தொடங்கினான். பிறகு தமஸ்கு சாலை ஒன்றிலே, கர்த்தர் அவனைப் பார்த்து, “உன்னுடைய மனச்சாட்சியின் குத்தல்களுக்கு எதிராக நீ உதைத்துக் கொண்டிருப்பது உனக்குக் கடினம்” என்று சொன்னார் (அப் 26:14). அப்பொழுது அவன் மனந்திரும்பினான்.
நீங்கள் உங்களுக்கு விரோதமாகத் தீமை செய்பவர்களிடத்திலே நடந்து கொள்ளுகிற விதத்தைப் பார்க்கிற ஒருவர் ஒருவேளை அதினிமித்தமாக இரட்சிப்புக்குள் நடத்தப்படுவதற்கான அது ஒரு தூண்டுகோலாய் அமையக்கூடும். கடந்த 2000 ஆண்டுகளாக உபத்திரவத்திற்குள் உட்படுத்தப்பட்ட அநேகக் கிறிஸ்தவர்களின் தேவபக்தியுள்ள எதிர்வினைகளைக் கண்டு பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலில் முதலாவது நிற்பவர் பவுல் ஆவார். ஆனால் அவ்வாறு எதிர்வினை புரிய, நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.