“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத்தேயு 5:9). நாம் நம்மை தேவனுடைய புத்திரர் என்று அழைத்துக்கொள்ள நமக்கு உரிமை இருக்கிறதா? இங்கே நம்மை தேவனுடைய புத்திரர் என்று அழைப்பது நாம் அல்ல என்று கூறுகிறது; மாறாக அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் என்று வசனம் கூறுகிறது. அதாவது, நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்கும்போது, தேவனே நம்மைத் தம்முடைய புத்திரர் என்று அழைக்கப்போகிறார். நாம் சமாதானம் பண்ணுகிறவர்கள் என்ற நற்பெயரைப் பெற வேண்டும். சமாதானம் பண்ணுகிறவர்கள் என்பதற்கு எதிரான சொல் கலகம் பண்ணுகிறவர்கள் என்பதாகும். உங்கள் சபையில் உங்களுக்கு என்ன பெயர் இருக்கிறது? ஒருவேளை நீங்கள், “நான் கலகம் பண்ணுகிறவனும் இல்லை, சமாதானம் பண்ணுகிறவனும் இல்லை, ஆனால் நான் நடுநிலை வகிக்கிறேன்” என்று கூறலாம். அப்படியானால் நீங்கள் தேவனுடைய புத்திரர் என்று அழைக்கப்பட முடியாது! “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்றே இங்கு கூறப்பட்டிருக்கிறது. எப்போதும் சமாதானத்தை நாடுகிறவர்களே சமாதானம் பண்ணுகிறவர்கள்.
இயேசு பிறந்தபோது, வானத்திலிருந்து தேவதூதர்கள் வந்து, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” (லூக்கா 2:14) என்று உரைத்தார்கள். சமாதானத்தை நாடுபவர்களிடம் தேவன் பிரியப்படுகிறார். சகலவித வாக்குவாதங்களும், சண்டைகளும், முறுமுறுப்புகளும், குறைசொல்லுதல்களும், முறையிடுதல்களும் இவ்வுலகத்தில் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே, நாம் இந்தப் பூமியை பரலோகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அது இருளால் நிறைந்திருப்பதைக் காண்போம். ஆனால் அந்த இருளின் நடுவில் சில ஒளிச்சுடர்கள் காணப்படுகின்றன - அவர்கள் தேவனுடைய பிள்ளைகளும், தேவனுடைய புத்திரருமேயாவர்; மேலும், இந்த தேவ புத்திரரின் ஓர் அடையாளம் என்னவென்றால், அவர்கள் சமாதானம் பண்ணுகிறவர்களாயிருப்பார்கள்.
பிலிப்பியர் 2-வது அதிகாரத்திலும் இதே காரியம் திரும்பவும் கூறப்படுவதைக் காண்கிறோம். நாம் ‘எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும், குறை சொல்லுதல் இல்லாமலும்’ செய்ய வேண்டும் என்று ஏன் இந்த வசனம் கூறுகிறது (பிலிப்பியர் 2:16)? நம் வாழ்வில் ஒவ்வொரு காரியத்தையும் எவ்வித முறுமுறுப்பில்லாமலும், எவ்வித தர்க்கிப்பில்லாமலும், எவ்வித குறை சொல்லுதல் இல்லாமலும் செய்ய வேண்டும் - அது மிகவும் உயர்ந்த தரம். ஆனால் 15-ஆம் வசனத்தில், “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கிறோம்” என்று நாம் நம்மை நிரூபிக்க ஒரே வழி அதுதான் என்று கூறுகிறது. இருள் நிறைந்த இந்த உலகில் நாம் வெளிச்சமாக இருக்க ஒரே வழி அதுதான். அது எப்படி? இருள் என்றால் என்ன? அது முறுமுறுப்பது, தர்க்கிப்பது, குறை சொல்வது. வெளிச்சம் என்றால் என்ன? முறுமுறுக்காமல், குறைசொல்லாமல், மற்றவர்களோடு எப்போதும் சமாதானம் பண்ணுகிற ஜனங்களே அவர்கள்.
இயேசு தம்முடைய சீஷர்களை இஸ்ரவேல் ஜனத்திடம் அனுப்பியபோது, எழுபது பேரை இரண்டிரண்டு பேராக, தாம் போகவிருந்த ஒவ்வொரு இடத்திற்கும் தமக்கு முன்னே செல்லும்படி அனுப்பினார் (லூக்கா 10:1). அவர்கள் ஓர் ஊருக்குள் நுழையும் போதெல்லாம் தங்குவதற்கு ஒரு சமாதான பாத்திரவானைத் தேடும்படி அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார். “நீங்கள் ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருங்கள். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள், ஏனென்றால் ஓர் ஊரில் இதுபோன்ற வேறொரு வீட்டை நீங்கள் காண்பது அரிதாகவே இருக்கும்” (லூக்கா 10:5-6) என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “ஓர் ஊரில் ஒரு மனிதன் சமாதான பாத்திரவானாக இருக்கும் ஒரே ஒரு வீட்டை மட்டுமே ஒருவேளை நீங்கள் காண முடியும்” என்று அவர் கூறினார். இல்லையென்றால், வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் என்று அவர் அவர்களிடம் கூறவேண்டிய அவசியம் என்ன? அப்படி 10, 20, 30 அல்லது 100 வீடுகள் இருந்தால் என்ன செய்வது? அப்படிப்பட்ட வீடுகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சாத்தியமற்றது என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் அப்படிப்பட்ட வீடுகளில் தான் தேவன் வாசம் பண்ணுகிறார்.
உங்கள் வீடு சமாதானம் நிறைந்ததொரு வீடா? ஒரு கணவராக உங்களைக் குறித்து, நீங்கள் ஒரு சமாதான பாத்திரவான் என்று சொல்ல முடியுமா? வாக்குவாதம் செய்வதற்கு எப்போதும் இரண்டு பேர் தேவை; ஒரு நபர் சண்டையிட மறுத்தால் நீங்கள் வாக்குவாதம் செய்ய முடியாது. உங்கள் இரண்டு கைகளும் ஒன்றோடொன்று தட்டினால் சத்தம் எழும்புகிறது அது போலவே தான். ஒரு கை தட்டினால் மட்டும் சத்தம் வராது. ஒரு கை கைதட்ட மறுத்தால், மறு கை சத்தம் போட முடியாது; வாக்குவாதம் செய்வதும் அப்படித்தான். யாரோ ஒருவர் (கணவனோ அல்லது மனைவியோ) சண்டையிட மறுத்து, சுயத்துக்கு மரித்துவிட்டால், அங்கே சண்டை இருக்காது. மாறாக, அங்கு சமாதானம் நிலவும். எனவே, என் சபையிலோ அல்லது என் வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும் சரி, சமாதானமின்மைக்கு நான் ஒருபோதும் வேறொருவரைக் குறை கூறவே முடியாது.
“என் மனைவிதான் சமாதானத்தைக் குலைக்கிறாள்” அல்லது “என் கணவர்தான் சமாதானத்தைக் குலைக்கிறார்” என்று நீங்கள் சொல்ல முடியாது. நீங்கள் அந்த வாக்குவாதத்திலும், சண்டையிலும் ஒத்துழைப்பதால்தான் சமாதானம் இல்லை. ஏதாவது ஒரு கை மற்றொன்றோடு தட்ட மறுத்தால் கூட அங்கு எந்த சத்தமும் வராது. எனவே முரண்பாடு வரும் ஒரு சூழ்நிலையில், நீங்கள் சமாதானத்தை நாடுகிற நபராய் இருந்தால், நீங்கள் உங்கள் சுயத்துக்கு மரித்து, மற்ற நபர் தான் விரும்பும் அளவுக்குப் பொங்கியெழும்படி விட்டுவிடுவீர்கள். அப்போது அங்கே சமாதானம் நிலவும்.
தேவன் சர்வவல்லமையுள்ளவர் என்றும், என்னுடைய திராணிக்கு மிஞ்சிய சோதனையை அவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் நான் நம்பினால், நான் என் சுயத்திற்கு மரிக்க விருப்பமுடைய நபராக இருப்பேன். “நீங்கள் இந்தப் பாதையைப் பின்பற்றினால், ஜனங்கள் உங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்; அவர்கள் உங்களை ஒரு கால் மிதியடியைப் போல நடத்தி, உங்கள் மேல் நடந்து செல்வார்கள்” என்று அநேகர் கூறுகிறார்கள். அப்படி அல்ல. “தேவன் உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடம் தரமாட்டார்” என்று கூறுகிற 1கொரிந்தியர் 10:13-ஐ நீங்கள் நம்பினால், ஜனங்கள் உங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தேவன் அனுமதிக்க மாட்டார் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டு, நம்பிக்கையுடன் சமாதான வழியைப் பின்பற்றுவீர்கள். நீதிமொழிகள் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளபடி, “கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (நீதிமொழிகள் 18:10) என்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் ஒரு சர்ச்சையைக் காணும்போது, இயேசுவின் நாமத்தில் அடைக்கலம் புகுந்திடுங்கள், அப்போது, “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவன் வந்து கர்த்தருக்குள் தன்னை மறைத்து கொள்வான், அதோடு அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்கிறார்” என்று கூறும் நீதிமொழிகள் 16:7 உங்களுக்கு நிறைவேறுவதைக் காண்பீர்கள். தேவனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது! நான் அதை அனுபவித்திருக்கிறேன். நீங்கள் ஆண்டவரைப் பிரியப்படுத்த முயற்சித்தால், உங்கள் சத்துருக்களும் கூட அடக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.” தேவனுடைய புத்திரர் என்பதன் அர்த்தமும் தேவனுடைய பிள்ளைகள் என்பதன் அர்த்தமும் வேறுபட்டவை. தேவனுடைய பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கிறார்கள்; ஒரு புத்திரன் [மகன்] என்பவர் தான் சுயத்திற்கு எப்படி மரிப்பது என்பதையும், இயேசுவின் அடிச்சுவடுகளில் எப்படி நடப்பது என்பதையும் நன்கு அறிந்த ஒரு முதிர்ந்த நபராய் இருக்கிறார்.