“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” (மத்தேயு 5:11). இந்த வசனம் “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்…” என்று கூறுகிற முந்தைய வசனத்தைப் போலவே இருக்கிறது. ஆனால் இயேசு ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.
10-ஆம் வசனத்திற்கும் 11-ஆம் வசனத்திற்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால், மத்தேயு 5:10--ஆம் வசனத்தில் நீங்கள் நீதிக்காக நிற்கிறீர்கள். சில சமயங்களில் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் கூட நீதிக்காக நிற்கிறார்கள். நீதியினிமித்தம் வேலை இழந்தவர்கள் இருக்கிறார்கள். நியாயமான தீர்ப்பு வழங்கியதற்காகக் கொல்லப்பட்ட நீதிபதிகள் இருக்கிறார்கள். நேர்மைக்காக நின்றதால் தங்கள் எதிரிகளால் கொல்லப்பட்ட வணிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிறரும் இருக்கிறார்கள். இப்படி இருப்பது கிறிஸ்தவர்கள் மட்டுமே அல்ல. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அநேகர் நேர்மைக்காக நிற்கத் தயங்கும்போது, கிறிஸ்தவர் அல்லாதவர்கள் சில சமயங்களில் அதிக விருப்பத்துடன் நீதிக்காக நிற்பதைக் காண்பது வெட்கத்துக்குரியதாயிருக்கிறது. நியாயத்தீர்ப்பு நாளில், தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதாக நினைத்த அத்தகைய கிறிஸ்தவர்கள் சமரசம் செய்தவர்களாகவும், பின்வாங்கியவர்களாகவும் இருந்தது வெளிப்படும்போது உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நீதிமானாக இருந்து, நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்பட மனமிருந்தால் மாத்திரமே பரலோகராஜ்யம் உங்களுடையதாயிருக்கும்; இல்லையெனில் அப்படியிராது.
இயேசுவின் நிமித்தம் துன்புறுத்தப்படுவதைப் பற்றி மத்தேயு 5:11 பேசுகிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷன் என்பதைப் பற்றி மவுனமாக இருந்தால், உங்கள் வேலையிடத்தில் சில நன்மைகளைப் பெறலாம். நீங்கள் நீதிமானாக இருக்கலாம், அது மற்றவர்களால் பாராட்டப்படலாம், ஆனால் இயேசு கிறிஸ்துவே இரட்சிப்பின் வழி என்பதை நீங்கள் விசுவாசிப்பதைப் பற்றி அமைதியாக இருக்கிறீர்கள். ஏனெனில் உங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்காது என்று அஞ்சுகிறீர்கள். ஒருவேளை உங்கள் முதலாளிகளைப் போலவே நீங்களும் கிறிஸ்தவர் அல்லாதவர் என்று மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று விரும்புகிறீர்கள். மேலும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வெட்கப்படுகிறீர்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் கிறிஸ்தவர் அல்லாதவர்கள் தங்கள் விருப்பமான விக்கிரகத்தின் படத்துடன் கூடிய காலண்டரை தொங்கவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், தான் கிறிஸ்தவன் என்பதை அறிவிக்கும் தேவனுடைய வசனம் எழுதப்பட்ட காலண்டரை தொங்கவிட விருப்பமுள்ள கிறிஸ்தவனை கண்டுபிடிப்பது மிகவும் அரிது. இது ஏனென்றால் ஜனங்கள் தன்னைப் பற்றி என்ன சொல்வார்கள் என்று பயப்படுகிறான். “என் முதலாளி இதைப் பார்த்து நான் பதவி உயர்வு பெறுவதைத் தடுப்பாரா, அல்லது ஏதாவது வகையில் என்னை துன்புறுத்துவாரா?” என்று எண்ணி அஞ்சுகிறான்.
“என்னைக்குறித்து வெட்கப்படாதிருந்து எனக்காகத் துன்புறுத்தப்படுபவர்கள் பாக்கியவான்கள்.” உங்கள் வேலையிடத்தில் இயேசுவைக் குறித்து வெட்கப்படுகிறீர்களா? நீங்கள் வெளிப்புறமாக நீதிமான்களாக இருப்பதில் பெருமைப்படாதீர்கள், ஏனென்றால் பல கிறிஸ்தவர் அல்லாதவர்களும் வெளிப்புறமாக நீதிமான்களாக இருக்கிறார்கள். அதையும் தாண்டி, ஒரு படி மேலே சென்று, “நான் ஒரு கிறிஸ்தவன். நான் இயேசு கிறிஸ்துவின் சீஷன்" என்று அறிவியுங்கள். நீங்கள் தேவனுக்காகவும் அவருடைய வசனத்திற்காகவும் நிற்கிறவராயிருந்தால் (இது வேலையிடத்தில் மட்டும் அல்ல, ஒரு பிரசங்கியாக இருந்தாலும் கூட தேவனுடைய வசனத்தில் கற்பிக்கப்படும் எல்லாவற்றிற்காகவும் நிற்கிறவராயிருந்தால்), இன்றைய கிறிஸ்தவ வட்டங்களிலுள்ள வஞ்சகத்தை வெளிப்படுத்த ஆவலுடன் இருந்தால், சத்தியத்திற்காக நிற்பதால் ஜனங்கள் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, உங்களைப் பற்றி சகலவித பொய்யான கதைகளையும் சொல்வார்கள்.
அப்படி நடக்கும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நம்மைப் பற்றி வருந்த வேண்டுமா? அது முற்றிலும் தவறு! சந்தோஷப்பட்டு, “களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்” என்று (மத்தேயு 5:12) கூறுகிறது. பூமியில் உங்களுக்கு பிரதிபலன் கிடைக்காது - நீங்கள் துன்புறுத்தப்பட்டு வெளியே தள்ளப்படலாம் - ஆனால் பரலோகத்தில் உங்கள் பிரதிபலன் பெரிதாயிருக்கும், ஏனென்றால் உங்களுக்கு முன்பிருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் அவர்கள் இப்படித்தான் துன்பப்படுத்தினார்கள். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் பார்த்தால், தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகள் துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் காணலாம். எனினும், அவர்கள் என்னவிதமான துன்புறுத்தல்களை சந்தித்தார்கள் என்று பெரும்பாலான சமயங்களில் குறிப்பிடப்படவில்லை. உதாரணமாக, இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைப் பேசிய ஏசாயாவைப் போன்ற ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். ஏசாயா புத்தகத்தில் அவர் எப்படி மரித்தார் என்று நமக்குச் சொல்லப்படவில்லை. ஆனால் சரித்திரம் நமக்குச் சொல்வது என்னவென்றால், அவரை ஒரு காலியான உள்கூட்டையுடைய மரத்துண்டுக்குள் வைத்து, அவரைத் துன்புறுத்தியவர்கள் அவரை இரண்டாக அறுத்துக் கொன்றார்கள் என்று கூறுகிறது.
எபிரெயர் 11-இல் குறிப்பிடப்பட்டிருக்கும் “வாளால் அறுப்புண்டவர்களில்” அவரும் ஒருவர். கிறிஸ்துவுக்காக நிற்கும் எல்லோரும் துன்பப்படுவார்கள். அப்போஸ்தலர் 7-இல் பிரதான ஆசாரியர்களின் முன்பு நின்றுகொண்டிருந்த ஸ்தேவான், தன் நீண்ட செய்தியின் முடிவில் கூட்டத்தினரிடம் மிகவும் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்கிறார்: “உங்கள் பிதாக்கள் எந்த தீர்க்கதரிசியைத் துன்பப்படுத்தாமல் விட்டார்கள்? நீதிபரான இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களை உங்கள் பிதாக்கள் கொன்றார்கள். இஸ்ரவேலில் உங்கள் பிதாக்கள் எந்த தீர்க்கதரிசியைத் துன்பப்படுத்தாமல் விட்டார்கள்? ஒருவரையாவது பெயர் சொல்ல முடியுமா?” (அப்போஸ்தலர் 7:52). ஸ்தேவான் இஸ்ரவேலின் வரலாற்றை விவரித்தார். அவர் இஸ்ரவேலின் வரலாற்றைப் படித்திருந்தார். இஸ்ரவேலின் முழு வரலாற்றிலும் துன்பப்படுத்தப்படாத ஒரு தீர்க்கதரிசி கூட இல்லை என்று முடிவு செய்தார். உண்மையான தீர்க்கதரிசி ஒருவரும் பழைய ஏற்பாட்டிலோ புதிய ஏற்பாட்டிலோ பிரபலமாக இருக்கவில்லை.
மேய்ப்பர்கள் (pastors) பிரபலமாக இருக்கலாம், சுவிசேஷகர்கள் பிரபலமாக இருக்கலாம், மேலும் அப்போஸ்தலர்கள் கூட சில நேரங்களில் பிரபலமாக இருக்கலாம். போதகர்கள் மிகவும் பிரபலமாக இருக்கலாம். ஆனால் ஒரு தீர்க்கதரிசி கிட்டத்தட்ட ஒருபோதும் பிரபலமாக இருக்க மாட்டார். ஏனென்றால் அவர் ஒரு சபையிலோ அல்லது ஜனங்களிடத்திலோ உள்ள குறைகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்த வருகிறார். மேலும் அவர் ஒரு சபைக்குள் வந்து ஜனங்கள் கேட்க விரும்புவதை அல்ல, அவர்களுக்குத் தேவையானதைப் பேசுவார். அவர்கள் புறக்கணிக்கும் தேவனுடைய வசனத்தின் பகுதிகளை அவர் அவர்களுக்குக் காண்பிப்பார். அவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய தரங்களுக்குக் குறைவாக இருக்கும் பகுதிகளை அவர்களுக்குக் காண்பிப்பார். பின்னர் அவர் துன்பப்படுத்தப்படுவார். இது இன்றும் நடக்கிறது. “என்னிமித்தமும் என்னுடைய வசனத்தின் நிமித்தமும்” இயேசுவுக்காக நிற்பது என்பது இதுதான். நீங்கள் துன்பப்படுத்தப்பட்டால், நீங்கள் பாக்கியவான்களாயிருக்கிறீர்கள்; அதாவது நீங்கள் மற்றவர்களின் பொறாமைக்குரியவர்கள். வேறொரு மொழிபெயர்ப்பில் “ஆனந்தத்தால் குதியுங்கள்!” என்று கூறுகிறது. நீங்கள் பரவசமடைய வேண்டும், ஏனென்றால் நீங்கள் தீர்க்கதரிசிகளின் அடிச்சுவடுகளிலும் இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளிலும் நடக்கிறீர்கள்.