ஒரு முறை தேவாலயத்திலே சிறு பிள்ளைகள் ஆரவாரித்து தேவனைத் துதித்த போது, இயேசு சங்கீதம் 8:2-லிருந்து சுட்டிக்காட்டியதாக நாம் வாசிக்கிறோம். மத் 21:15,16 வசனங்களில் வாசிப்பது போல, இயேசு ஒரு கழுதையின் மேலேறி எருசலேமுக்குள் நுழைவதற்காக அவர்கள் தங்கள் கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, வழியில் தங்கள் வஸ்திரங்களை விரித்தார்கள். அச்சமயத்திலே இயேசு தேவாலயத்திற்குள் நுழைந்த போது அங்கிருந்த சிறுபிள்ளைகள் கூச்சலிட்டு, 'அல்லேலூயா', 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' என்று கத்தினார்கள். இது போன்ற சத்தத்தையும், பிற காரியங்களையும் விரும்பாத பிரதான ஆசாரியர்களோ, தேவனை ஆராதிப்பது, மௌனமாகவும், அடக்க ஆராதனை நடப்பது போல மயான அமைதியுடனும்தான் இருக்க வேண்டுமென நம்பினார்கள். இன்றும் கூட தேவனைத் துதிப்பது என்பது ஓர் அடக்க ஆராதனை போலவே அமைதியாகவும், பௌயமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவனை அமைதியாகத் துதிக்கும் ஒரு வழி இருக்கிறது என்பதை நானும் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவன் ஏற்றுக் கொள்ளுகிறதான ஆரவாரம் மிகுந்த சத்தத்துடன் கூடிய துதியும் இருக்கின்றது என்றும் அறிந்திருக்கிறேன். "கர்த்தருக்கு ஆனந்த சத்தம் செய்யுங்கள்" என்று வேதம் சொல்லுகிறது.
நாங்கள் மிகுந்த ஆரவார துதியுடனும் தேவனை ஆராதிப்போம்; மிகுந்த மௌனத்தோடும் தேவனை ஆராதிப்போம். எப்பொழுதுமே ஒரே முறையைப் பின்பற்றுவதில்லை. ஆனால் இந்த இடத்தில் அச் சிறுபிள்ளைகள் தேவனை சத்தமிட்டுத் துதித்தது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். நீங்கள் என்றாவது கிரிக்கெட் விளையாட்டில் வென்ற அணியை மக்கள் பாராட்டி ஆரவாரிப்பதைக் கண்டதுண்டா? எடுத்துக்காட்டாக, இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடிய போட்டியில், இந்தியா வென்று விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த மைதானம் முழுவதும் எப்படியாக மகிழ்ச்சிக்கடலில் நீந்தும் என்ற காட்சியை உங்கள் மனக்கண் முன் கொண்டுவர முடிகிறதா? அப்படியானால், ஏன் கிறிஸ்தவர்களால் மட்டும் இயேசு அவர்களுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தாரென்றும், சாத்தானைத் தோற்கடித்தார் என்றும், சிலுவையிலே எல்லாவற்றையும் ஜெயித்தார் என்றும், தம்முடைய மகிமையோடு திரும்பி வந்து அவரது இராஜ்ஜியத்தை இப்பூமியில் ஸ்தாபிக்கப் போகிறார் என்றும் அறிந்து அதினிமித்தம் உள்ளக் கிளர்ச்சி அடைய முடியவில்லை? ஜனங்கள் வாடிப்போன முகங்களுடன் அமர்ந்துள்ளனர். இயேசு துதியின் சத்தத்தைக் கேட்டு மெய் சிலிர்த்தார். ஆதலால் சிறுபிள்ளைகள் தேவனைத் துதிப்பதைக் குற்றப்படுத்திய பிரதான ஆசாரியர்களை இடைமறித்த அவர், அவர்களைப் பார்த்து சங்கீதம் 8:2- ஐக் குறிப்பிட்டுக் காட்டி. "பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?" என்று வினவினார். எனவே நாம் அங்கே என்ன வாசிக்கிறோம்? துதியின் மூலம் தேவன் சத்துருவின் வாயை அடைக்கிறார் என்று வாசிக்கிறோம். இதை நாம் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும். தேவனைத் துதிப்பதின் மூலமாக பிசாசின் வாய் அடைக்கப்படுகிறது. நீங்கள் தேவனைத் துதிக்காததினால், அடிக்கடி உங்களுடைய ஜீவியத்திலும், குடும்பத்திலும் பிசாசின் வாயானது அடைக்கப்படாமல் இருக்கிறது.
பிசாசானவன் துதியை வெறுக்கிறவன் என்பதை உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். அவன் ஒரு குடும்பத்திலோ, ஒருவரின் ஜீவியத்திலோ, ஒரு சபையிலே உண்டாகும் துதியை வெறுக்கிறவன். அதற்காகத்தான் அவன் ஜனங்களை சிடுசிடுவென்றும், சுருங்கிப்போன முகத்தோடும், முறுமுறுப்போடும், குறைசொல்லோடும் இருக்கப் பண்ணுகிறான். இப்படியெல்லாம் செய்து அவர்களுடைய ஜீவியங்களையும், குடும்பங்களையும் தான் ஆதிக்கம் செய்யும் ஸ்தலமாக வைத்துக் கொள்ளுகிறான். தேவனை உண்மையாய் துதிக்கின்ற இடத்திலே சாத்தானால் இருக்க முடியாது. அதனால்தான் அவனால் பரலோகில் இருக்க முடியவில்லை. அங்குள்ள ஒவ்வொரு தூதனும் கூக்குரலோடும், மகா சத்தத்தோடும் தேவனைத் துதிக்கிறதை அவனால் தாங்கிக் கொண்டு அங்கே தங்கியிருக்க முடியவில்லை. ஒரு சபையானது, அங்கிருக்கும் ஒவ்வொருவராலும் தேவனைச் சத்தமிட்டு துதிக்கிறதும், ஸ்தோத்தரிக்கிறதுமான இடமாக இருக்குமெனில், அந்த சபையின் பக்கமே அவனால் வர முடியாது. தேவனைத் துதிக்கின்ற ஜனங்களின் ஜீவியத்திலும், இருதயத்திலும் பிசாசானவன் அமர முடியாது. சிறுபிள்ளைகள் சத்தமிட்டு துதித்த விதமானது, இயேசுவுக்குத் தமது சொந்த வீடாகிய பரலோகமானது நினைவூட்டப்பட்டபடியால், அவர் மெய் சிலிர்த்துப் போனார். பரலோகத்திலே இடிமுழக்கம் போன்ற சத்தத்தோடே தேவனைத் துதிப்பதைக் கேட்டு நித்திய காலமாய் அங்கு வாழ்ந்த இயேசு, இப்பூமிக்கு வந்து நாசரேத்து ஊரிலே வாழ்ந்த போது, அங்கே அநேக ஜனங்கள் முறுமுறுப்புடனும், குறை சொல்லோடும், சோக முகத்தோடும் இருப்பதைக் கண்டார். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலே, அவர் இப்பவும் அப்பவுமாக இது போன்று குழந்தைகள் சத்தமிட்டு தேவனைத் துதித்த போது, அவருக்குத் தமது வீடாகிய பரலோகந்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அந்த மதவாதிகளால் இதையெல்லாம் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களால் இந்த விதமான துதிகளை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உண்மையில் இது அவர்கள் பிசாசோடுதான் ஐக்கியப்பட்டு நின்றார்கள் என்பதைத்தான் நிரூபிக்கிறது. பிசாசு அந்தத் துதியை வெறுத்தான். அந்த மதவாதிகளும் அந்தத் துதியை வெறுத்தார்கள். உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? இதே முறுமுறுக்கிற, குறைசொல்லுகிற ஆவியினிமித்தம் நீங்களும் பிசாசுக்கு இடங்கொடுத்து விட்டீர்களா?
சங்கீதம் 8-லே, குழந்தைகள் பாலகர் வாயினால் துதி உண்டு பண்ணினீர் என்ற பதத்தின் வாயிலாக நாம் என்ன அறிகிறோம்? அது பகைஞனின் வாயை அடைத்து, பழிகாரனைத் தடுப்பதற்கானப் பலத்தை உண்டு பண்ணுகிறது என்று அறிகிறோம். இன்று சுற்றி இருக்கிற கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது, சாத்தான் எவ்வளவாய் ஜெயித்துவிட்டான் என்பதைக் காண முடிகிறது. இதை அவன் இரு வழிகளில் செய்கிறான். ஒன்று அவன் பலரது ஜீவியத்திலும், குடும்பத்திலும், சபையிலும் துதி என்கிற வாசனையே இல்லாமல் பண்ணிவிட்டான். இப்படி செய்ய முடியாத இடங்களிலே அவன் வேறொரு யுக்தியைப் பயன்படுத்துகிறான். அது என்னவெனில், துதிக்கிற ஜனங்களை உண்மையற்ற விதத்திலே, அதாவது வாயினால் துதித்து, இருதயத்திலும், சொந்த ஜீவியத்திலும் உண்மையற்றவர்களாய் இருக்கும்படி செய்து விடுகிறான். ஆக, இவ்விரு வழிகளிலுமே வெற்றி அவனுக்குத்தான். எனவே சில சபைகளில் ஜனங்கள் தேவனைத் துதிப்பதே கிடையாது. அதே சமயம் மற்ற சபைகளில் இருப்பவர்கள் தேவனைத் துதித்தாலும், அவர்கள் தங்களது வாழ்க்கையில் எப்போதுமே துதிக்கிற வழக்கமற்றவர்களாய், வெறும் ஞாயிரன்று மாத்திரம் செய்யும் சடங்காச்சாரமாக அதை மாற்றிவிட்டார்கள். இப்படிப்பட்ட இரு சபைகளையுமே பிசாசானவன் வென்று விட்ட நிலையில், தேவன் என்ன எதிர்பார்க்கிறார்? உண்மையான துதிகளை ஏறெடுத்து, அதன் மூலமாக தங்களுடைய சபையிலிருந்தும், இல்லத்திலிருந்தும், தனிப்பட்ட ஜீவியத்திலிருந்தும் பிசாசை விரட்டியடிக்கிற சபைகளையும், இல்லங்களையும், தனிப்பட்ட நபர்களையும் தேடுகிறார்.
ஏன் சாத்தான், தேவனை உண்மையாய் துதிப்பதை வெறுக்கிறான்? ஏனெனில், நாம் சங்கீதம் 8-ல் கண்ட வண்ணமாக, நாம் உண்மையாய் துதிக்கும் போது, அவனுக்கு நம் மீது இருக்கும் வல்லமை போய் விடுகிறது. பரிசுத்தமான வாழ்க்கையிலிருந்தும், இருதயத்தின் ஆழத்திலிருந்தும் வராத துதிக்கு வல்லமை எதுவும் இல்லை. உண்மையாகவே தேவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட இருதயத்திலிருந்து புறப்படும் துதிக்குப் பிரம்மாண்டமான வல்லமை உண்டு. இஸ்ரவேலர் அந்த பொன் கன்றுக்குட்டியைப் பணிந்து கொண்ட போது, அதை 'யேகோவா' என்றெல்லாம் சொல்லிச் சத்தமிட்டார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால் தூரத்திலிருந்து அந்த சத்தத்தைக் கேட்ட மோசேக்கும், யோசுவாவுக்கும் அது உண்மையான ஆராதனை இல்லை என்பது தெரிந்திருந்தது. அது வெறுமையானதும், பொக்குத்தன்மையான ஆராதனையாகும். அந்தத் துதியின் மத்தியிலே வேசித்தனம் நிலை கொண்டிருந்தது போலவே, இன்றைக்கும் நேரிடக் கூடும். ஜனங்கள் உரத்த தொனியோடே தேவனைத் துதிக்கிற வேளையிலே, அவர்களுக்கு நடுவே வேசித்தனம் இருக்க முடியும். ஆனால் துதியானது ஓர் உண்மையுள்ள இருதயத்திலிருந்து பிறக்குமானால், அதற்கு பிசாசை விரட்டியடிக்கும் வல்லமை இருக்கும். நீங்கள் ஏன் இதை இன்றிலிருந்தே அப்பியாசிக்கக் கூடாது?