WFTW Body: 

உன்னதப்பாட்டு 1:5 -இல், அந்த மணவாட்டி, “நான் கறுப்பாயிருந்தாலும் அழகாய் இருக்கிறேன்” என்று கூறுகிறாள். அவள் கவர்ச்சியற்றவளாய் இருந்த போதிலும், மணவாளவன் தன்னைத் தெரிந்து கொண்டதையே அவள் அப்படிக் கூறினாள். தேவன் இவ்வுலகில் பலவான்களையும், பிரபுக்களையும், ஞானிகளையும் தெரிந்து கொள்ளாமல், ஏழைகளையும், பைத்தியமானவைகளையுமே பிரதானமாய் தெரிந்து கொண்டதாக வேதம் விளம்புகின்றது (1கொரிந்தியர் 1:26–29). “நான் மற்ற மக்களைப் போல திறமையுடையவன் அல்ல. நான் ஒரு புத்திசாலியும் கிடையாது. மற்றவர்களைப் போல என்னால் பேசவும் முடியாது. என்னுடைய திறமைகளெல்லாம் மிகவும் குறைவானவைகளாக உள்ளன” என்று நம்மில் சிலர் நினைக்கக் கூடும். இப்படியெல்லாம் இருப்பினும், ஆண்டவர் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார்! எருசலேமிலே இன்னும் அழகான ஸ்திரீகளெல்லாம் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் மணவாளனோ இந்தக் கறுப்பானவளைத் தான் தெரிந்து கொண்டார்.

இயேசு அப்படித்தான் செய்கின்றார். ஏனெனில் அவர் உள்ளத்தின் குணலட்சணங்களைத் தான் பார்க்கிறாரே தவிர, வெளிப்பிரகாரமான தோற்றத்தையோ, வரத்தையோ, திறமைகளையோ பார்ப்பதில்லை. இங்கே நாம் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய இயல்பான திறமைகள், குடும்பப் பின்னணி, சாதனைகள் ஆகியனவெல்லாம் தேவனிடமிருந்து எந்த ஒரு மதிப்பையும் பெறுவதில்லை. பக்தியுள்ள இருதயமே அவர் தேடுகிற ஒன்றாய் இருக்கிறது. தம்முடைய ஊழியக்காரனாய் இருக்கும்படி கர்த்தர் ஒருவனைத் தேடும்போது, இவற்றைத்தான் அவனிடத்திலே தேடுகிறார்.

அந்த மணவாட்டியானவள் தான் கறுப்பாக இருந்தாலும், மணமகனின் கண்களுக்கு, தான் அழகானவளாக இருப்பதை உணர்ந்திருந்தாள். மணமான அநேக பெண்கள், தங்களுடைய கணவர்கள் மெய்யாகவே தங்களை ஏற்றுக் கொண்டு, தங்களிடத்தில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா என்பதை உணர முடியாததினால் தவிக்கிறார்கள். நான் என் மனைவியில் மகிழ்ந்திருக்கிறேன். கணவர்களாகிய நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என நம்புகிறேன். நீங்கள் உங்கள் மனைவியிடத்தில் மகிழ்ந்திருப்பதை அவர் அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதே வண்ணமாக அநேக விசுவாசிகளும், ஆண்டவர் தங்களிலே மகிழ்ந்திருக்கிறார் என்பதை உணரக் கூடாதவர்களாய் இருக்கிறார்கள். “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் உன் பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்திருப்பார்” என்று செப்பனியா 3:17 கூறுகின்றது. தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாய்ப் பெற்றிருப்பதிலே மகிழ்ச்சியாய் இருக்கிறார். இது உங்களுக்குத் தெரியுமா? நாம் மனுஷரின் கண்களுக்கு அழகற்றுத் தெரியலாம். ஆனால் தேவனுடைய கண்களில் அழகுள்ளவர்களாகவே இருக்கிறோம். நாம் இதைத் தெளிவாக புரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

அழகும், சௌந்தரியமுமான எருசலேமின் குமாரத்திகளே, என்னை நீங்கள் தரக்குறைவாகப் பார்க்காதீர்கள்” (உன்னதப்பாட்டு 1:6 – ஆங்கிலத்தின்படி). அவள் ஒரு நாகரிகமற்ற, கிராமத்துப் பெண்ணாய் இருந்தாள். எருசலேமின் பண்பட்ட பட்டணத்துப் பெண்கள் எல்லாரும் இந்தக் கிராமத்துப் பெண்ணை தரம் தாழ்த்திப் பார்த்தனர். ஆனால் மணவாளனோ, நளினமும் வனப்பும் நிறைந்த பட்டணத்துப் பெண்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஒரு கிராமத்துப் பெண்ணையே தெரிந்து கொண்டார். நம்மையும் ஆண்டவர் இப்படியாகத்தான் தெரிந்து கொண்டார். அதற்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! மற்ற விசுவாசிகள் உங்களை இகழ்ச்சியாய்ப் பார்க்கிறார்களா? சோர்ந்து போக வேண்டாம். நீங்கள் கர்த்தருக்கு விலையேறப் பெற்றவர்கள். அழுக்கிலே அழுகிப் போய், நிராதரவாய், உதவுவாரில்லாமல், வழியருகே கிடந்த நம்மை தேவன் எப்படியாய்த் தூக்கியெடுத்தார் என்பதை எசேக்கியல் 16 –ஆம் அதிகாரம் நன்றாய் வருணிக்கின்றது.

உன்னதப்பாட்டு 5:16 -இல், “அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே எனக்கன்பானவர், என் சிநேகிதர்” என்று மணவாட்டி, தன்னுடைய மணவாளனை வருணித்துக் கூறுகிறாள். நீங்களும் இயேசுவை உங்களுடைய இரட்சகர் என்று மாத்திரம் சொல்லாமல், உங்களுடைய சிநேகிதராகவும் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? இயேசு உங்களுக்கு மிகவும் நெருக்கமான, மிகவும் பிரியமான சிநேகிதராக இருப்பாராக.