வெளிப்படுத்துதல் 3:1-6 வசனங்களில், சர்தை சபையின் தூதனுக்கு ஆண்டவரிடமிருந்து செய்தி கடந்துவந்தது. இந்த சர்தை சபையின் தூதுவன் மற்றவர்களுக்கு முன்பாக “ஓர் சிறந்த ஆவிக்குரிய மனுஷன்” என்ற பெயரும் புகழும் பெற்றிருந்தான். ஆனால் ஆண்டவரோ இந்த சர்தை சபை விசுவாசிகளின் அபிப்பிராயத்திற்கு நேர்மாறான அபிப்பிராயத்தையே இந்தத் தூதுவன்மீது கொண்டிருந்தார். இந்த சர்தை சபை விசுவாசிகள் எத்தனை மாம்சத்திலும், வஞ்சனையிலும் நிறைந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இன்று 90% விசுவாசிகளுக்கும் மேலாக, “ஓர் ஆவிக்குரிய பிரசங்கிக்கும் ஓர் மாம்ஷீகமான பிரசங்கிக்கும்” உள்ள வித்தியாசத்தை பிரித்துப் பார்க்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதைவிட இன்னும் அதிகமாய் 99% விசுவாசிகளுக்கும் மேலாக “மனுஷீக ஆத்தும வல்லமைக்கும், பரிசுத்த ஆவியின் வல்லமைக்கும்” உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்திக் காணமுடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இன்று அநேக விசுவாசிகளை ஒரு பிரசங்கியுடைய ஆவிக்குரிய வரங்களின் கிரியைகள் அதிகமாய் கவர்ச்சிக்கிறபடியால், அதையே அடிப்படையாகக் கொண்டே ஒரு பிரசங்கி அல்லது ஒரு மூப்பனை மதிக்கிறார்கள்! ஆகவேதான் இவர்கள் யாவரும் இன்று வஞ்சிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தேவனோ இருதயத்தையே காண்கிறார். இந்த சர்தை சபை தூதுவன் ஆவியின் வரங்களைப் பெற்றிருக்கக்கூடும். ஆனால் அவனோ தன் ஆவிக்குரிய நிலையில் செத்தவனாய் இருந்தான்! இது நாம் யாவரும் கவனிக்கவேண்டிய ஓர் எச்சரிப்பாய் இருக்கிறது. அதாவது 99% விசுவாசிகள் நம்மைக் குறித்து கொண்டிருக்கிற அபிப்பிராயங்கள் 100% தவறாய் இருக்கமுடியும். ஆம், தேவன் நம்மைக் குறித்து கொண்டிருக்கிற அபிப்பிராயமோ இவர்கள் யாவரும் கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கு முரணாய் இருந்திடமுடியும். இதே கண்ணோட்டம் ஒரு சபைக்கும் பொருந்தும். ஒரு சபையை, மற்றவர்கள் “ஜீவனுள்ள ஆவிக்குரிய சபை” என அபிப்பிராயம் கொள்ளலாம். ஆனால் ஆண்டவரோ அதற்கு நேர்மாறாக அந்த சபை தன் ஆவிக்குரிய நிலையில் “செத்த சபை” என அந்த சபையைக் குறிப்பிடமுடியும். அல்லது “செத்த சபை” என மற்றவர்கள் அபிப்பிராயம் கொள்ளும்போது தேவனோ அந்த சபையை “ஜீவனுள்ள சபையாக”வும் காணக்கூடும். இவ்வாறு சரியாகப் பகுத்தறியத் தவறும் மனுஷர்களால் ஜீவனில்லாத சபை என எண்ணக்கூடும் சபைகள் தேவனுடைய பார்வையில், “ஜீவனுள்ள சபையாக” விளங்குவதையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.
இன்று அநேக விசுவாசிகள், தாங்கள் கூட்டங்களுக்கு வரும்போது பெறுகின்ற அன்பான வரவேற்பையும், திரளான சபை மக்களையும், சபையின் ஆரவாரத்தையும், உணர்ச்சி அலையையும், பாடல் நேரத்தில் மனங்கவரும் இன்னிசைக் குழுவையும், புத்திக்கூர்மையான பிரசங்கங்களையும், திரளான காணிக்கைகளையும் வைத்து சபையை கணக்குப் பார்த்து மதிப்பிடுகிறார்கள்! ஆனால் இவர்கள் மதிப்பிடும் மேற்கண்ட அத்தனையிலும் ஒன்றைக் குறித்தாகிலும் தேவன் கவரப்படுவதேயில்லை!!
மாறாக, கிறிஸ்துவைப் போன்ற தாழ்மை, பரிசுத்தம், அன்பு, சுயத்தின் மையத்திலிருந்து பெற்ற விடுதலை ஆகிய யாவையும் அந்தச் சபையில் கூடி வரும் ஜனங்களின் இருதயத்தில் இருக்கிறதா என்பதைக் கண்டே தேவன் சபையை மதிப்பிடுகிறார்! ஆகவேதான் தேவன் ஒரு சபையை மதிப்பிடுவதற்கும், மனுஷன் ஒரு சபையை மதிப்பிடுவதற்கும் ஒன்றுக்கொன்று முரணாய் இருந்திடமுடியும். உண்மையில், இவ்வித நிலை இன்றும் நிலவுகிறது! சர்தை சபையில் யேசபேலோ அல்லது பிலேயாமின் உபதேசங்களோ அல்லது நிக்கொலாய் மதஸ்தருடைய போதகங்களோ இல்லை என்பது உண்மைதான். ஆனால், இவர்களிடமோ இதுபோன்றவைகளைக் காட்டிலும் மோசமான “மாய்மாலம்” குடிகொண்டிந்தது! இந்த சர்தை சபையின் தூதுவன், சபையில் தனக்கென உருவாக்கிவைத்திருக்கும் தன்னுடைய கனமுள்ள நிலைக்காக, தன் அந்தரங்கத்தில் பூரணத் திருப்தி அடைந்திருக்கக்கூடும்! இவ்வாறு இருந்திருக்காவிட்டால் அவன் எப்படி ஒரு மாய்மாலக்காரனாய் முடிவடைந்திருக்க முடியும்? மற்றவர்கள் நம்மை “ஆவிக்குரிய ஜீவன் கொண்டவர்கள்” என அறிந்திருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், இவ்வாறு நம்மீது கொண்ட அபிப்பிராயத்தில் நாமோ எவ்வித திருப்தியும் அடைந்து விடவே கூடாது. நாம் ஆண்டவருக்குச் செய்யும் யாதொன்றிலும் நமக்கென்று ஒரு பெயரை நாடுவோமென்றால், தேவனுடைய முகத்திற்கு முன்பாக அல்ல, மனுஷர் முகத்திற்கு முன்பாக வாழ்பவர்களாகவே முற்றுப்பெறுவோம் என்பது உறுதி. அவ்விதக் கொடிய நிலையில் “மனுஷருடைய அபிப்பிராயங்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றது” என்ற உண்மையை இதுவரை நாம் உணராமல் வாழ்ந்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்!
இன்றைய கிறிஸ்தவத்தில், தங்களுக்குப் பெயருண்டாகும்படி தொடர்ச்சியாக ஏதாவது செய்துகொண்டும், அறிக்கைகளை எழுதிக்கொண்டும் இருக்கிற பிரசங்கிகள் நிறைந்திருப்பதையே நாம் காண்கிறோம். இவர்கள் யாவரும் சர்தை சபையின் தூதுவனின் பரிதாப நிலைக்கே முடிவில் வந்துவிடுகிறார்கள். இவர்களுடைய கிரியைகள் தேவனுக்கு முன்பாக சரியாய் இல்லாதபடியால், கடைசிநாளில் இவர்கள் ஆண்டவரால் நிச்சயமாய் நியாயந்தீர்க்கப்படுவார்கள். மனுஷரைக் கவர்ச்சிப்பதுதான் நம் மன நோக்கமாயிருந்தால் நம்முடையக் கிரியைகள் தேவனுக்கு முன்பாக செம்மையாய்க் காணப்படுவது ஒருக்காலும் கூடாததாகும்! இது மாத்திரமல்ல, சர்தை சபையின் தூதுவன் ஆவிக்குரிய நிலையில் தூக்கத்தில் இருப்பவனுமாயிருந்தான்!
தன்னுடைய வருகைக்கு ஆயத்தமாய் இருப்பதற்கு அவருடைய சீஷர்கள் எப்போதும் விழிப்பாயும், ஜெபிக்கிறவர்களாயும் இருக்கவேண்டிய அவசியத்தை இயேசு அவர்களுக்கு எச்சரித்துக் கூறினார். ஏனெனில், லெளகிகக் கவலையோ அல்லது உலகத்தின் சிநேகமோ இயேசுவின் சிறந்த சீஷர்களைக்கூட “தூக்கத்தில்” ஆழ்த்திவிடும் என இயேசு குறிப்பிட்டார் (லூக்கா 21:34-36). ஒரு மனிதன் தூங்கும்போது, தான் வாழும் நிஜ உலகில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவன் அறியமாட்டான். அதற்குப் பதிலாய் நிஜமற்ற கனவு உலகில் தெளிவுடன் காணப்படுவான். இவ்வாறாகவே “ஆவிக்குரிய தூக்கத்தில்” ஆழ்ந்தவர்களுக்கும் சம்பவிக்கிறது. இவர்கள் தங்கள் நிஜ உலகமாகிய பரலோக இராஜ்யத்தையும், தங்களைச் சுற்றியுள்ள இழந்துபோன ஆத்துமாக்களையும், நித்திய மதிப்புடைய அனைத்தையும் அறியாதவர்களாய் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் உயிரோடிருந்தாலும், அவர்களின் உயிரோட்டத் தொடர்பு நிஜமற்ற தற்காலிகமான லெளகிக உலகத்திலும், சுகபோக ஆடம்பரத்திலும், இம்மண்ணுக்குரிய கனத்திலும், புகழ்ச்சியிலுமே இருக்கிறது! இந்நிலைக்கொப்பாகவே சர்தை சபையின் தூதுவனும் இருந்தான்.
ஆண்டவரோ அவனை விழித்துக்கொள்ளும்படி சொன்னார் (வசனம் 2). அதாவது நிஜமற்ற அவனது கனவு உலகமாகிய லெளகிக உலகத்தை விட்டுவிடும்படியும், ஏற்கனவே ஆவிக்குரிய மரணநிலையில் மூழ்கிக்கொண்டு, இன்னமும் செத்துவிடாத சிலவற்றை ஸ்திரப்படுத்தும்படியும் புத்தி கூறினார். அவன் இன்னமும் ஆவிக்குரிய மரணம் அடைந்துவிடவில்லை! ஆகவே, “முற்றிலும் அவன் மரித்துவிடாதபடி, இந்தத் தூதுவன் தன் மங்கியெரியும் தீயை அனல்மூட்டி எழுப்பவேண்டும்” (2தீமோ. 1:6 -விரிவாக்க மொழிபெயர்ப்பு) என்றே ஆண்டவர் கூறினார். மேலும் அவனுடைய கிரியைகள் தேவனுக்குமுன் “நிறைவுள்ளவைகளாக” (Perfect) காணவில்லை என்றும் ஆண்டவர் கூறினார். இன்று அநேக விசுவாசிகள் நிறைவு அல்லது “பூரணம்” என்ற வார்த்தையினிமித்தம் பயப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இங்கோ இந்தத் தூதுவனின் கிரியைகள் தேவனுக்கு முன்பாக பூரணமுள்ளதாய் இருக்கவே ஆண்டவர் எதிர்பார்ப்பதை நாம் காண்கிறோம்.
ஆவிக்குரிய பூரணம் என்பது ஓர் பரந்த பொருள் கொண்ட ஜீவியமாகும். இங்கு, இந்தப் பூரணத்திற்கு தேவன் கொண்ட பொருள் யாதெனில், இந்த மூப்பனின் கிரியைகள் தேவனுடைய அங்கீகரிப்பை மாத்திரமே பெறவேண்டி முழு இருதயமாய் இல்லையென்பதுதான்! அவன் கிரியைகள் யாவும் நல்ல கிரியைகள்தான். ஆகவேதான் அவனுடைய ஆவிக்குரிய நிலையில் “உயிருள்ளவன்” என்று பெயரைப் பெற்றிருந்தான்! ஆனால் அவையாவும் தேவனுடைய மகிமைக்காக மாத்திரமே செய்யப்பட்ட கிரியைகள் அல்ல! ஆம், அவைகள்யாவும் மனுஷர்களைக் கவர்ச்சிப்பதற்காகவே செய்யப்பட்டக் கிரியைகள் ஆகும். ஆகவே அவன் செய்த கிரியைகள் அனைத்தும் வெறும் செத்த கிரியைகளாய் இருந்தது!! யாத்திராகமம் 28:38 -ம் வசனம் கூறுவதைப்போல் “அவனுடைய பரிசுத்தமான கிரியைகளிலும் தோஷம் இருந்தது.” எனவே தேவன் அவனை அங்கீகரிப்பதற்கு முன்பாக அவன் தன் ஆவியிலுள்ள அசுசிகள் நீங்க தன்னைச் சுத்திகரிக்க வேண்டியதாயிருந்தது (2கொரி. 7:1). மனுஷருடைய கனத்தை நாடி செய்யப்படும் நற்கிரியைகள் யாவும் செத்தக் கிரியைகளேயாகும்! ஆகவே, நம்மைப் பூரணத்துக்கு நடத்தும் முதல்படியே, நாம் எதைச் செய்தாலும் அதைத் தேவனுடைய பார்வைக்கு முன்பாக மாத்திரமே செய்திடவேண்டும்! இந்த முதல் ஆரம்பத்தை நாம் செய்யத் தவறிவிட்டால், தேவனுடைய இலக்கு ஒன்றைக்கூட நாம் கண்டடைய முடியாது. அது ஜெபமோ அல்லது உபவாசமோ அல்லது பிறருக்கு உதவி செய்வதோ அல்லது ஊழியமோ அல்லது வேறு எதுவானாலும் நம்மை நாமே கேட்டுப் பார்க்கவேண்டிய முக்கியமான கேள்வி யாதெனில்: “நான் செய்வதை யாரோ சிலர் கண்டு என்னை மெச்சிக் கொள்ளவேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறேனா? அல்லது இதைத் தேவனுடைய முகத்திற்கு முன்பாக அவருடைய மகிமைக்காக மாத்திரமே செய்து கொண்டிருக்கிறேனா?” என்றே கேட்டுப் பார்க்க வேண்டும். அநேக நற்கிரியைகளை “ஒரு தவறான நோக்கம்” கறைப்படுத்தி அக்கிரியைகள் ௮னைத்தையம் தேவனுடைய பார்வையில் “நிறைவற்ற” கிரியைகளாய் மாற்றிவிடுகிறது!