பழைய ஏற்பாட்டில் எல்லாத் தீர்க்கதரிசிகளுமே தேவ ஜனங்களுக்கு மத்தியிலுள்ள மீதியானவர்களைப் பற்றிப் பேசியிருக்கின்றனர். தேவ ஜனங்கள் மத்தியிலே ஆவிக்குரிய வீழ்ச்சி ஏற்படுகிற சமயங்களிலெல்லாம், அவர்களுக்குள்ளே ஒரு சில ஜனங்கள் எப்படியாய்த் தேவனுக்கென்று உண்மையுள்ளவர்களாய் இருப்பார்கள் என்பதைக் குறித்து அவர்கள் பேசினர். இத்தீர்க்கதரிசிகளின் கருப்பொருளானது, முன்பிருந்த நிலைக்கு மீட்டெடுப்பதைப் (Restoration) பற்றியதாகவே இருந்தது.
உதாரணமாக, ஓசியா ஆவிக்குரிய விபசாரம் மற்றும் தேவனுடைய மாறாத அன்பு பற்றி பேசினார். ஆபகூக் விசுவாசத்தின் மனப்போராட்டம் மற்றும் விசுவாசத்தின் ஜெயத்தை பற்றி பேசினார். தேவனுடைய ஜனங்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குச் செல்கிறதான பயணமே சகரியாவின் பாரமாயிருந்தது. தேவனுடைய ஆலயம் கட்டுவதே ஆகாயின் பாரமாயிருந்தது. ஒவ்வொரு தீர்க்கதரிசியும் தேவனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தனித்துவமான பாரத்தைப் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம் - ஆனால் அவர்கள் எல்லோருமே தேவனுடைய ஜனங்கள் மத்தியிலுள்ள பரிசுத்த குறைச்சலுக்காக அக்கறை கொண்டிருந்தனர்.
பரிசுத்தமும், தேவனுடைய மாறாத அன்புமே எல்லாத் தீர்க்கதரிசிகளுடைய பாரமாக இருந்தன. தேவனுடைய ஜனங்களிடத்தில் பரிசுத்தமும், தம்முடைய ஜனங்கள் ஆவிக்குரிய வேசித்தனம் நடப்பித்து வழி விலகிப் போனபின்னும் அவர்களிடத்தில் தேவன் கொண்டிருக்கும் மாறாத அன்புமே அவர்களுடைய பாரமாக இருந்தன. தேவனுடைய வாஞ்சை தம்முடைய ஜனங்களை எப்போதும் தம்மிடமாய்த் திருப்பிக் கொண்டு வருவதேயாகும். தேவன் அவர்களை சிட்சிக்கிறார். ஆனால் அந்தச் சிட்சை முடிந்தபிறகு அவர்களை தம்மிடத்தில் திரும்பக் கொண்டுவர விரும்புகிறார்.
இப்படித்தான் மெய்யான தீர்க்கதரிசன ஊழியம் சபையிலும் செயல்பட வேண்டும். இன்றும் சபையிலுள்ள ஒவ்வொரு மெய்யான தீர்க்கதரிசியும், தேவ ஜனங்கள் மத்தியிலே பரிசுத்தம் காணப்பட வேண்டுமென்று பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கொண்டிருந்த அதே பாரத்தை உடையவராகவே இருப்பர். பின்வாங்கிப் போன தம்முடைய ஜனங்களை தம்மிடத்திற்கும் உண்மையான பரிசுத்தத்திற்கும் கொண்டுவர இடைவிடாமல் விரும்புகிற தேவனுடைய மாறாத, நீடிய பொறுமையுள்ள, மனதுருக்கமான அன்பினால் தீர்க்கதரிசி அசைக்கப்படுவார். ஒவ்வொரு சபையும் ஜீவனோடு செயல்பட வேண்டிய விதத்தில் தேவனுக்காக செயல்படுவதாக இருக்க வேண்டுமானால் அங்கே ஒரு தீர்க்கதரிசன ஊழியம் இருந்தே ஆக வேண்டும்.
தேவன் உங்களுடைய இருதயத்தில் வைக்கும் பாரம்தான், அவர் உங்களுக்காக ஆயத்தம் பண்ணின ஊழியத்திற்குப் பெரும்பாலும் (எப்போதுமே) அறிகுறியாக இருக்கிறது. எனவே, கர்த்தருக்காக காத்திருந்து அவரிடத்திலிருந்து ஒரு பாரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பாரமில்லாமல் கர்த்தருக்கு ஊழியம் செய்வீர்களானால், கொஞ்சக் காலம் கழித்து கர்த்தருடைய ஊழியத்தில் சலிப்படைந்து, பணத்தையோ, மனிதனுடைய கனத்தையோ அல்லது பூமிக்குரிய சௌகரியத்தையோ தேடுகிறதில் நீங்கள் முடிவடைய வாய்ப்புள்ளது. இன்று கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ளுகிற அநேகர், தங்களுடைய ஊழியத்திற்கென்று தேவன் கொடுத்த பாரமில்லாமலிருப்பது துரதிருஷ்டவசமாக இருக்கிறது.
தேவன் ஒரு மனிதனுக்குச் சிறு பிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்யும் பாரத்தையும் இன்னொருவருக்கு சுவிஷேச ஊழியத்தைச் செய்யும் பாரத்தையும் கொடுக்கலாம். இன்னொருவருக்கோ தேவனுடைய ஜனங்களுக்குப் போதிக்கும் பாரம் கொடுக்கப்படலாம். கிறிஸ்துவினுடைய சரீரத்திலுள்ள வெவ்வேறு அவயவங்களுக்கு வெவ்வேறு பாரத்தைத் தேவன் கொடுக்கிறார். நாம் வேறொருவருடைய ஊழியத்தைப் போலியாகச் செய்யவோ அல்லது அவருடைய பாரத்தைப் பெறவோ முயற்சி செய்யக்கூடாது. உங்களுடைய பாரத்தை மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்; யாரையும் தங்களுடைய பாரத்தை உங்களுக்குக் கொடுக்கவும் அனுமதிக்காதீர்கள். தேவன்தாமே உங்களுக்கு ஒரு பாரத்தைக் கொடுக்கட்டும் - உங்களுக்காக அவர் திட்டம் பண்ணின அந்த பாரத்தைக் கொடுக்கட்டும்.
தேவனுடைய இருதயத்தோடு நாம் எவ்வளவு அதிகமாக ஐக்கியம் கொள்ளுகிறோமோ, அவ்வளவு அதிகமாய் அவருடைய பாரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம். தேவன் உங்களை ஒரு சுவிசேஷகராக அழைத்திருந்தால், அழிந்துபோகின்ற ஆத்துமாக்களுக்காக அவர் ஒரு பாரத்தை உங்களுக்கு தருவார். தேவன் உங்களை ஒரு போதகராக அழைத்திருந்தால், குருடர்களும் வஞ்சிக்கப்பட்டவர்களும் வெற்றி வாழ்க்கைக்குள் நுழையாதவர்களுமான விசுவாசிகளுக்காக அவர் ஒரு பாரத்தை உங்களுக்கு தருவார். நம்முடைய ஊழியத்தைப் பயனுள்ள விதத்தில் நிறைவேற்ற வேண்டுமென்றால், தேவனுடைய இருதயத்தோடு ஐக்கியம் கொண்டு அவருடைய மனதுருக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுவது அவசியமாகும்.
அநேக ஜனங்கள் என்னை அவர்களுடைய குறிப்பிட்ட ஊழியத்தின் பாரத்தை உடையவனாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள் - வழக்கமாக அது சுவிஷேச ஊழியமாக இருந்தது. ஆனால் இதுபோன்ற அழுத்தங்களை நான் எப்போதும் எதிர்த்தேன். மற்றவர்களுக்கு தேவன் கொடுத்த பாரத்தை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. தேவன் எனக்கு ஒரு குறிப்பிட்ட பாரத்தைக் கொடுத்திருக்கிறார், நான் நிறைவேற்ற வேண்டுமென்கிற ஒரே ஊழியம் அதுதான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தேவன் அவர்களுக்குக் கொடுத்த பாரத்திலிருந்தும் ஊழியத்திலிருந்தும், அவர்களை வழி விலகச்செய்ய தீர்க்கதரிசிகள் யாரையும் ஒருக்காலும் அனுமதிக்கவில்லை.
உங்களுக்கு எந்தவொரு பாரமும் இல்லையென்றால், நீங்கள் தேவனிடத்தில் சென்று, அவர் ஒரு பாரத்தை உங்களுக்குக் கொடுக்கும்படி கேட்க வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்தில், நீங்கள் நிறைவேற்ற ஒரு திட்டமான பணியை அவர் வைத்திருக்கிறார், அது என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
அநேக பிரசங்கிமார்கள், ஒரு ஊழியத்திலிருந்து மற்றொரு ஊழியத்திற்கு அலைந்து திரிகிறார்கள் - எந்த கிறிஸ்தவ ஸ்தாபனம் அதிகப்படியான சம்பளத்தை கொடுக்கிறார்களோ அதில் சேருகிறார்கள். உதாரணமாக, வானொலி ஊழியத்திற்கு வெளித்தோற்ற "பாரத்தை" உடையவர்களாக அவர்கள் தொடங்கலாம். ஆனால் ஏதோவொரு சிறுபிள்ளை-சுவிஷேசப்பணி ஸ்தாபனம், அவர்களுக்கு அதிக சம்பளத்தைக் கொடுக்க முன்வரும்போது, அவர்கள் திடீரென்று சிறுபிள்ளை-சுவிஷேசப்பணிக்காக ஒரு "பாரத்தை" வளர்த்துக்கொள்ளுகிறார்கள்! கொஞ்சக் காலம் கழித்து, கிறிஸ்தவ இலக்கியப்பணி ஸ்தாபனம் இன்னும் அதிக சம்பளத்தைக் கொடுக்க முன்வரும்போது, அவர்களுடைய "பாரம்" திடீரென்று இலக்கிய ஊழியத்திற்கு மாறுகிறது!! இப்படிப்பட்ட பிரசங்கிமார்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யவில்லை. அவர்கள் பாபிலோனிய "வியாபாரங்களில்" ஈடுபட்டிருக்கும் மதம் சார்ந்த மனிதர்கள்.
தேவன் உங்களுக்கு ஒரு பாரத்தைக் கொடுக்கும்போது, ஏதோவொரு ஸ்தாபனம் மேன்மையான பூமிக்குரிய சலுகைகளைக் கொடுக்க முன்வருவதினால், நீங்கள் அந்த பாரத்தை விட்டுவிட முடியாது.