உலகத்திலிருந்து பிரிந்திருத்தல் என்பது புதிய ஏற்பாடு போதிக்கும் ஓர் அடிப்படைக் கருத்தாகும். இயேசு சிலுவைக்குப் போகும் முன்பாக அவருடைய சீஷர்களிடத்திலே அவர்கள் இவ்வுலகத்திற்கு உரியவர்களல்ல என்று சொன்னார். இயேசுவும் "இவ்வுலகத்திற்கு உரியவராக இருக்கவில்லை". அதுபோலவே அவருடைய சீஷர்களும் வேறு உலகத்திற்குரியவர்கள் என்பதை அவர் உறுதிப்படக் கூறினார். அவர்கள் இந்த உலகத்திற்கு உரியவர்களாய் இராதபடியினால், இந்த உலகத்திலே வாழ்வது அவர்களுக்குக் கடினமானதாகவே இருக்கும் எனவும் அவர்களிடத்தில் சொன்னார் (யோவா 15:19; 17;16).
உலகத்தால் கறைபடாமல் வாழ்வது ஒரு சீஷனின் கடமையாகும் (யாக் 1:27). சபை என்பது அவரால் அன்புகூரப்பட்டு, ஜெயிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்ட கிறிஸ்துவின் மணவாட்டியாகும் (எபே 5:25-27). ஆகவேதான் கொரிந்து பட்டணத்து விசுவாசிகள் மேல் பவுல் "தேவ வைராக்கியம்" கொண்டிருந்தார். அவர் அவர்களை கிறிஸ்துவுக்கென்று கற்புள்ள கன்னிகையாக ஒப்புக் கொடுக்க விரும்பினார். ஆனால் அதே வேளையில் பிசாசானவன் அவர்களைக் கறைப்படுத்தி விடுவானோ என்ற பயத்துடனும் இருந்தார் (2 கொரி 11:2,3).
உலகத்தின் ஆவியோடு நட்புக் கொண்டு அளவளாவிக் கொண்டிருக்கும் விசுவாசிகளைப் பார்த்து யாக்கோபு, "விபச்சாரர்களே, விபச்சாரிகளே" என்ற மிகவும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைப்பதற்கான காரணம் இப்போது நமக்கு நன்கு விளங்குகின்றது (யாக் 4:4). பிரிந்திருத்தலைப் பற்றிக் கூறுவதற்கு வேதத்திலே ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.
"பிரிந்திருத்தல்" என்கின்ற விஷயத்தை வேதம் தொலைவு என்பதை அடிப்படையாகக் கொண்டு சொல்லவில்லை என்பதை நாம் நம்முடைய மனதிலே தெளிவாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நாம் இவ்வுலக மக்களோடு வெளிப்பிரகாரமாக சரீரத்தின்படி பிரிந்திருப்பதைக் குறித்துச் சொல்லாமல், இருதயத்திலே நாம் அவர்களைவிட்டுப் பிரிந்திருப்பதைப் பற்றியே வேதம் நம்முடன் பேசுகிறது. நாம் துறவிகளைப் போல, இவ்வுலகத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல், மனித சஞ்சாரமற்ற தனிமையான இடத்திலே வாழ்ந்தால், கடவுளை எளிதிலே நெருங்கி விடலாம் என்ற எண்ணம் அநேகரிடத்திலே உண்டு. ஒரு துறவிமடத்திலே தன்னைத் தனிமைப்படுத்தி வாழும் ஒரு சந்நியாசியும், இவ்வுலகத்திலிருந்து விலகி, நான்கு சுவருக்குள் தன்னை அடக்கி கன்னிமடத்திலே வாழும் ஒரு கன்னியாஸ்திரீயும், வேதம் போதிக்கும் பிரிந்திருத்தலைக் குறித்து சற்றேனும் விளங்கிக் கொள்ளவில்லை. ஒரு வெள்ளை ஆடையையோ அல்லது ஒரு காவி அங்கியையோ அல்லது வேறு எந்தச் சீருடையையோ அணிந்து கொள்ளுவதென்பதும் உலகத்தை விட்டுப் பிரிந்திருத்தல் என்பதற்கு அர்த்தமாகாது. வெளிப்பிரகாரமாகத் தன்னைப் பிரித்துக் காட்டுகின்ற எந்த ஒரு வழிமுறையையும், இயேசு போதிக்கவுமில்லை, பின்பற்றவுமில்லை. இவ்வுலகத்தின் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டு, இவ்வுலகத்தின் ஆவியிலிருந்து விடுபட்டு வாழ்வதையே அவர் போதித்தார்; அவ்விதமாகவே வாழ்ந்தும் காட்டினார்.
நாம் வேறொரு உலகின் தன்மையை நமக்குள்ளே பெற்று வாழுபவர்கள் என்று சொல்லலாம். ஒரு கப்பலானது நடுச்சமுத்திரத்திலே நீரால் சூழப்பட்டிருந்தாலும், கடல் நீரானது கப்பலுக்குள் ஊடுருவி வருவதில்லை. ஒரு விசுவாசியானவன் இப்படி வாழும்போது, இந்த உலகத்தின் பரிகாசத்திற்கும், எதிர்ப்பிற்கும் தப்பவே முடியாது. ஒரு வேளை அது உடனடியாக நடக்காவிட்டாலும், பின்னர் ஏதாவது ஒரு சமயத்திலாவது நடக்கவே நடக்கும். சீக்கிரத்திலேயே இவ்வுலகமானது அவன் வாழ லாயக்கற்ற இடமாக மாறிவிடும். தம்மைப் பின்பற்றுவதினிமித்தம், இந்த உலகத்தின் விரோதமானது அவருடைய சீஷர்களை பின்தொடரும் என்றும், அது தவிர்க்க இயலாத ஒன்று என்றும் இயேசு அவர்களை முன்கூட்டியே எச்சரித்தார் (யோவா 16:33). ஒரு கிறிஸ்தவன் பரத்துக்குரியவனாக இருந்தால், இப்புவியானது அவன் வசிக்க ஏற்ற இடமாயிராது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற தெளிவான விஷயமாகும். அவன் நீரிலிருந்து எடுக்கப்பட்ட மீனைப் போன்றவன். அதனால் இங்கு உயிர் வாழ்வதற்காக தான் படும் அவஸ்தயைப் பற்றியெல்லாம் அவன் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஓர் அதிசயம் நிகழ்ந்தாலொழிய, ஒரு மீனை தரையின் மீது உயிருடன் வைத்திருக்க முடியாது. அதைவிடக் குறைவான எந்த அற்புதமும் கிறிஸ்துவின் மெய்யான சபையை இப்பூமியின் மீது தாக்குப் பிடித்திருக்கப் பண்ண முடியாது. ஆனால் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையானது இது போல இருக்க வேண்டுமென்பதுதான் தேவனுடைய நோக்கமாக உள்ளது. அதாவது அவருடைய அற்புதம் நிகழ்த்தும் வல்லமையைச் சார்ந்தே அவனுடைய அன்றாட வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாகும்.
தம்முடைய ஜனங்களுக்கும், இவ்வுலகத்தின் ஆவிக்கும் இடையே ஒரு மிகப் பெரும் பிளவு உண்டாயிருக்க வேண்டுமென தேவன் எதிர்பார்க்கிறார். அப்பிளவானது, பரதீசு எப்படி நரகத்திலிருந்து பிரிந்திருக்கிறதோ அப்படிப்பட்டப் பிரிவாக இருக்க வேண்டும் (லூக் 16:26). அது பாலமிட்டு இணைக்கக் கூடாததாகவும், ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குக் கடந்து வரக்கூடாததாகவும் இருத்தல் அவசியம். தமக்குச் சொந்தமானவர்கள் இவ்வுலகத்தின் ஆவியிலிருந்து பிரிந்திருக்க வேண்டுமென்பது எப்பொழுதுமே தேவனுடைய விருப்பமாக இருந்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவெனில், பெருவாரியான விசுவாசிகள் இப்பாடத்தை இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளதால், அவர்கள் வல்லமையற்றவர்களாகவும், தோற்கடிக்கப்பட்டவர்களாகவுமே இருக்கிறார்கள்.