WFTW Body: 

தேவன் மனிதனோடு வாசம் பண்ண விரும்புகிறார் என்கிற தம்முடைய சித்தத்தை முதன் முதலாக அவர் வெளிப்படுத்துகிறதை யாத்திராகமம் 25:8-ல் நாம் வாசிக்கிறோம். அங்கே தேவன் "அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக." என்று சொல்லுகிறார். இது தேவனுடைய அக்கினி வந்திறங்கிய வாசஸ்தலத்தைக் குறிப்பிடுகிறது. தேவனுடைய அக்கினியாகிய அவருடைய மகிமையே இஸ்ரவேல் ஜனங்களை உலகத்திலுள்ள மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் வேறுபிரித்து காட்டியது. தேவனுடைய மகிமை அதன்மேல் தங்கியிருந்ததே அந்த வாசஸ்தலத்தின் பிரதானமான விசேஷமாகும். தேவனுடைய சமூகம் அவருடைய ஜனங்களின் மத்தியில் தங்கியிருந்ததையே இது குறித்தது. நம்முடைய குடும்பத்தைத் தேவனுடைய வாசஸ்தலமாக மாற்றுவதுதான் நாம் செய்யவேண்டிய பிரதானமான காரியமாகும். நாம் ஒருவருக்கொருவர் பிரியமாய் வாழ்ந்திட முயற்சிப்பது அவசியமாயிருந்தாலும், ஒருவரையொருவர் பிரியப்படுத்துவதற்காகவே உள்ள குடும்பமாய் இருந்துவிடக் கூடாது. நம்முடைய குடும்பம் பிறரை ஆசீர்வதிக்கும் குடும்பமாய் இருப்பது அவசியமென்றாலும், பிறரை ஆசீர்வதிப்பதற்காகவே உள்ள குடும்பமாய் இருந்துவிடக் கூடாது. ஆனால், தேவன் தம்முடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய ஸ்தலமாகவும், “தம் வீட்டைப் போலவே” இயேசுவானவர் உணரக்கூடிய ஸ்தலமாகவும் இருப்பதே பிரதானமான காரியமாகும். "நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக" என்று தேவன் சொல்லுகிறார். ஒரு கிறிஸ்தவ குடும்பமானது, இயேசு வாசம் பண்ண விரும்பும் ஸ்தலமாகவே இருந்திட வேண்டும். அதனுடைய அர்த்தம் என்னவென்றால், அந்தக் குடும்பத்தில் காண்கிற ஒவ்வொரு காரியத்தைக் குறித்தும் அதாவது நாம் வாசிக்கின்ற புத்தகங்கள், நாம் வாங்குகின்ற பத்திரிக்கைகள், கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான உரையாடல்கள், நாம் பேசும் விஷயங்கள், தொலைக்காட்சியில்(TV) நாம் காணும் நிகழ்ச்சிகள், இன்னும் அங்கு நடக்கும் மற்ற எல்லாவற்றையும் குறித்து அவர் சந்தோஷமாக உள்ளார் என்பதாகும். இயேசுவை நம்முடைய வாழ்வின் மையமாய் வைத்து ஜீவித்திடும் வாழ்க்கையே நாம் வாழக்கூடிய அருமையான வாழ்க்கையாகும். நம்முடைய குடும்பத்திலுள்ள ஒவ்வொரு காரியமும் அதாவது நாம் எவ்வாறு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதும், நாம் எவ்வாறு பணத்தைச் செலவிடுகிறோம் என்பதும் மற்றும் நாம் எவ்வாறு மற்ற எல்லாக் காரியங்களைச் செய்கிறோம் என்பதும் இயேசுவுக்குச் சந்தோஷத்தைத் தருமா? தராதா? என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் வாழ்க்கையாக இருக்கும். இவ்வாறு நாம் வாழ்ந்தால், நம்முடைய ஜீவியத்தின் முடிவை அடைந்தாலோ அல்லது அதற்கு முன்பாக கிறிஸ்துவின் வருகை சம்பவித்தாலோ, நாம் அவருக்கு முன்பாக நிற்கும்போது, "நன்றாக செய்தாய் (Well done)" என்று சொல்லுவார். நம்முடைய வீடு ஒரு அரண்மனையோ அல்லது ஒரு குடிசையோ - வெளித்தோற்றம் இரண்டாம் பட்சமாகும். தேவன் நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறார். எனவே, நம்முடைய இருதயங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தேவன் வாசம் பண்ணும் ஒரு பரிசுத்த ஸ்தலமாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேவன் எங்கே வாசம் பண்ணுகிறார்?

1. ஒரு சமாதானமுள்ள குடும்பத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார்: எல்லாவற்றிற்கும் முதலாவதாக, ஒரு சமாதானமுள்ள குடும்பத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார். இயேசு தம்முடைய சீஷர்களைப் பிரசங்கிக்கும்படிக்குப் பல இடங்களுக்கு அனுப்பின போது, அவர்களைச் சமாதானமுள்ள குடும்பம் எது என்பதை கண்டுபிடிக்கும்படி சொன்னார் என்று லூக்கா 10:5-7-ல் நாம் வாசிக்கிறோம். அப்படிப்பட்ட வீட்டைக் கண்டுபிடித்த பிறகு அவர்கள் அந்த வீட்டில்தானே தங்க வேண்டுமே அல்லாமல் வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் எனக் கூறினார். ஏன் அவர்களிடத்தில் அவர் அப்படிச் சொன்னார்? ஏனெனில் சமாதானம் நிறைந்த குடும்பங்களை அதிகமாகக் காணமுடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். சண்டையில்லாத வீட்டில்தான் தேவன் வாசம் செய்வார். கணவன்மார்களும் மனைவிமார்களும் எதற்காக சண்டையிடுகிறார்கள்? அது, பெரும்பாலும் பொருளாதார சம்பந்தமானவைகளே - தவறாய் நடந்துவிட்ட பூமிக்கடுத்த ஏதோ ஒரு காரியத்திற்காகத்தான் இருவரும் சண்டையிடுவர். இந்த உலகத்திலே காரியங்கள் தவறுதலாய் போகத்தான் செய்யும். அப்படி தவறாய் போகும்போது, அதில் பாவம் மாத்திரமே சீரியஸான விஷயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிற காரியங்கள் யாவும் இரண்டாம் பட்சமானதும் முக்கியமற்றதுமாகும். பூமிக்குரிய பிரச்சனையின் நிமித்தம் ஒருவரோடொருவர் பேசாமல் எப்பொழுதாவது கசப்போடு இருந்தால், அது தேவனுடைய இருதயத்தை துக்கப்படுத்தும். பாவத்தை வெறுத்து விடுங்கள், ஏனென்றால் அது ஒன்று மாத்திரமே நம்முடைய திருமண வாழ்க்கையை அழித்துவிடும். நம்முடைய குடும்பம் தேவனுடைய வாசஸ்தலமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய குடும்பத்தின் சமாதானத்தை ஏதாவதொரு காரியம் குலைத்துவிட்டால் இனி நம்முடைய குடும்பம் தேவனுடைய வாசஸ்தலமாக இருக்க முடியாது. நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும், "கர்த்தாவே மனிதர்கள் எங்களிடத்தில் சந்தோஷமாய் இருக்கிறார்களா இல்லையா என்பதைக் குறித்து எங்களுக்கு அக்கறையில்லை; நீர் எங்களிடத்தில் சந்தோஷமாய் இருக்கிறீரா? எங்களுடைய வாழ்க்கையில், ஒருவரோடொருவர் கொண்டிருக்கிற எங்கள் சிந்தையிலோ மனப்பான்மையிலோ உம்மை துக்கப்படுத்துகிற காரியம் ஏதேனும் இருக்கிறதா? நீர் எங்கள் குடும்பத்தில் சந்தோஷமாய் இருக்க விரும்புகிறோம்” என்று சொல்லுவோம். “இதில் கர்த்தர் பிரியப்படுவாரா?” என்ற கேள்வியினால் நம்முடைய வாழ்க்கையின் எல்லா காரியங்களையும் மதிப்பிடுவோம். தேவன் நிறுவிய முதல் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ளுவோம். சாத்தான் பக்கவாட்டிலே காத்துக்கொண்டிருந்து ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடுவில் வர முயற்சி செய்தான். அதிலே அவன் வெற்றியும் கண்டான். அவன் யோபுக்கும் அவன் மனைவிக்கும் நடுவில் வந்து, அங்கேயும் வெற்றிக்கண்டான். அவன் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் நடுவில் வந்து, அங்கேயும் வெற்றிக்கண்டான். ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடுவில் சாத்தான் வருவது ஒருபோதும் தேவனுடைய சித்தம் அல்ல. எனவே, இது நமக்கு ஒருபோதும் நடக்காதிருப்பதாக. தேவன் நம் குடும்பத்தில் எப்பொழுதும் சந்தோஷமாயிருந்து, நமக்கு எல்லா நேரத்திலும் சமாதானத்தை வழங்குவாராக.

2. நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை உடைய கணவனும் மனைவியும் இருக்கும் ஒரு குடும்பத்தில் வாசம் பண்ணுகிறார்: நான் இரண்டாவதாகச் சொல்ல விரும்பும் விஷயம் ஏசாயா 57:15-ல் காணப்படுகிறது. "உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற தேவன், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறார்." நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான ஆவியுள்ளவர்களிடத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார். ஒரு நொறுங்குண்ட மனுஷன் மற்றவர்களின் தோல்வியைக் காட்டிலும் தன்னுடைய குறையையும், தோல்வியையும் குறித்தே அதிக உணர்வுடையவனாய் இருப்பான். பிறருடைய தோல்விகளைக் குறித்த உணர்வுடைய மக்களால் இந்த உலகம் நிறைந்துள்ளது. ஒரு சராசரியான இன்றைய குடும்பத்தைப் பார்க்கும் போது, மற்றவர்களுடையத் தோல்விகளையும், அவர்களுடைய குடும்பங்களின் தோல்விகளையும் பற்றியே பெரும்பாலும் உரையாடல் செய்கிறார்கள். மற்றவர்களுடையத் தோல்விகளைக் கண்டுப்பிடிப்பதில் நாம் துரிதமாகச் செயல்படுகிறோம். ஆனால் பல சமயங்களிலே அவர்களிடத்தில் உள்ள நல்ல காரியங்களைக் காணத் தவறி விடுகிறோம். நாமே பாவிகளாய் இருந்து தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டு இருக்கிறபடியால் யார்மீதும் கல்லெறிய நமக்கு உரிமை இல்லை. அதே பாவத்தைக் குறிப்பாக மற்றவர்களுடைய தவறுதல்களை பேசும் பாவத்தை நாம் திரும்பத் திரும்பச் செய்ய விரும்பாத ஜனங்களாக இருப்போம் என்பதே நம்முடைய நம்பிக்கை. குளியலறை கண்ணாடிக்கும் (bathroom mirror) வாகனத்திலிருக்கும் கண்ணாடிக்கும் (driving mirror) உள்ள வித்தியாசத்தை நம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். குளியலறை கண்ணாடியில் நம்முடைய முகத்தை நாம் பார்க்கிறோம். வாகனத்திலிருக்கும் கண்ணாடியில் வேறொருவருடைய முகத்தை நாம் பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தை கண்ணாடி போலவே இருக்கிறது என்று யாக்கோபு 1:23-25ல் உள்ள வசனங்கள் சொல்லுகிறது. ஆனால் அது ஒரு குளியலறை கண்ணாடியா அல்லது ஒரு வாகனத்திலிருக்கும் கண்ணாடியா? அதிலே யாருடைய முகத்தை நாம் பார்க்கிறோம்? வேறொருவருக்குப் பிரசங்கிக்க அதிலே ஒரு வார்த்தை நாம் காண்கிறோமா? அல்லது நாம் கீழ்ப்படியாத ஒரு காரியத்தை அதிலே நாம் காண்கிறோமா? “புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது” என்று எபிரேயர் 10:7ல் சொல்லுகிறது.

3. பரிசுத்தமான கணவனும் பரிசுத்தமான மனைவியும் இருக்கும் ஒரு குடும்பத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார்: ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தில் நடக்கும் கணவனும் மனைவியும் கொண்ட குடும்பத்தில் தேவன் வாசம் பண்ணுகிறார். “அதின் எல்லையெங்கும் (முழு பகுதியும்) மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம்" என்று எசேக்கியல் 43:12ல் சொல்லப்படுகிறது. ஆசரிப்புக் கூடாரத்தில் மூன்று பகுதிகள் உள்ளன – வெளிப் பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். இம்மூன்றில் மகா பரிசுத்த ஸ்தலம்தான் மிகவும் சிறியதாகும். ஆனால் புதிய உடன்படிக்கையிலே வெளிப் பிரகாரமும், பரிசுத்த ஸ்தலமும் இருப்பதில்லை என்பதாகத்தான் நாம் இங்கே வாசிக்கிறோம். முழு பகுதியுமே மகா பரிசுத்த ஸ்தலமாக இருக்கும். ஆசரிப்புக் கூடாரத்தின் ஒரு மூலையிலே தேவனுடைய மகிமை இறங்கினது போல் இல்லாமல், புதிய உடன்படிக்கையின் கீழ் தேவனுடைய மகிமையானது அந்த வளாகத்தின் முழுப் பகுதியிலும் வந்து தங்கும் என்பது அதற்கு அர்த்தமாகின்றது. இது நம்முடைய வாழ்க்கைக்கு எதைக் குறிக்கிறதென்றால், நாம் எல்லா நேரத்திலுமே பரிசுத்தமாக இருக்க போகிறோம் என்பதாகும் - ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் பரிசுத்தமுடையவர்களாய் இராமல், எல்லா நாட்களிலுமே பரிசுத்தமுடையவர்களாய் இருக்கப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது. நாம் வேதாகமத்தை வாசிக்கிற நேரம் மாத்திரம் அல்ல, எதைச் செய்து கொண்டிருந்தாலும் பரிசுத்தமாக இருக்கப் போகிறோம். நம்முடைய வாழ்க்கையிலும், நம்முடைய குடும்பத்திலும் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் பரிசுத்தமாக இருக்கப் போகின்றது. குறிப்பிட்ட ஒரு சில மதச் சடங்குகளைக் கைக்கொள்ளுவதினால் கிடைக்கின்ற ஒரு விஷயம் பரிசுத்தம் அல்ல. நீங்கள் பெற்றிருக்கும் வெளிச்சத்திற்கேற்ப தேவனுக்குப் பிரியமில்லாத ஒவ்வொன்றையும் புறக்கணிப்பதே பரிசுத்தமாகும்.