இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8). நம் இருதயத்தில் சுத்தம் இல்லாததுதான் நம் கண்களைக் குருடாக்குகிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்களுக்கு தேவன் தம்மைக் குறித்து பல காரியங்களை வெளிப்படுத்துகிறார். லூக்கா 11:34 -இல் கண்ணானது சரீரத்தின் விளக்காக இருப்பதைப் பற்றி இயேசு பேசினார். அந்தப் பகுதியை மத்தேயு 5:8 -உடன் தொடர்புபடுத்த விரும்புகிறேன் (“இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்”).
“உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” (லூக்கா 11:34). குருடனாக இருப்பதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். குருட்டுத்தன்மை என்றால் என்னவென்று அப்பொழுது உங்களுக்குத் தெரியும். வெளியே இருக்கும் வெளிச்சம் முழுவதும் உள்ளே வருவதில்லை, அதனால் உங்களால் எதையும் பார்க்க முடியாது. “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் கெட்டதாயிருந்தால் அல்லது குருடாயிருந்தால் அல்லது கண்புரை நிறைந்ததாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல, உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார்” (லூக்கா 11:34-36).
இந்த வசனம் மனச்சாட்சியைக் குறிக்கிறது. மனச்சாட்சி என்பது இதயத்தின் கண். நீங்கள் உங்கள் மனச்சாட்சியைத் தெளிவாக வைத்திருக்கும்போது, உங்கள் இருதயம் ஒளியால் நிரப்பப்பட்டு நீங்கள் தேவனைக் காண முடியும். ஆனால் நீங்கள் உங்கள் மனச்சாட்சியைத் தெளிவாக வைத்திருக்கத் தவறும்போது, அதாவது நீங்கள் ஏதோ ஒரு தவறு செய்த பிறகு அதை நீங்கள் அறிக்கை செய்யவில்லை என்றால் - அதற்கான பழியை நீங்கள் ஏற்க மறுத்து அதை வேறொருவர் மீது சுமத்த முயற்சித்தால் - உங்கள் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகி, தேவனைப் பற்றிய உங்கள் பார்வையை இழக்க நேரிடும். நீங்கள் அப்படியிருந்தும் வேதத்தைப் பற்றிய அறிவால் நிறைந்த ஒரு தலையைப் பெற்றிருக்க முடியும், ஆனால் நீங்கள் இனி தேவனைக் காணமாட்டீர்கள்; ஏனென்றால் அதற்கும் மூளை அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அது இருதயத்தில் சுத்தமாய் இருப்பதோடு தொடர்புடையதாயிருக்கிறது.
இந்த வசனத்தை மற்றொரு விதத்திலும் நாம் பார்க்கலாம். இது நம் இருதயம் சுத்தமாக இருக்கும்போது நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைக் காண்பதையும் குறிக்கிறது என்று நாம் கூறலாம். என் இருதயம் சுத்தமாக இருக்கும்போது, நான் என்னைச் சுற்றிலும் பார்த்து, என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலும், அவர் செய்யும் எல்லாவற்றிலும், அவர் சொல்லும் எல்லாவற்றிலும் தேவனைக் காண முடியும். தேவன் சகலத்தையும் கட்டுப்படுத்தி ஆளுகை செய்கிறார் என்று நான் சொல்ல முடியும். மற்றவர்கள் எனக்குச் செய்யும் தீமையைக் கூட தேவன் என் நன்மைக்காகப் பயன்படுத்துவதை என்னால் காண முடியும். இயேசுவுக்கு நடந்த மிகவும் தீய காரியத்தில் கூட அவரால் தேவனைக் காண முடிந்தது. கெத்செமனேயில் ரோம போர்ச்சேவகர்கள் இயேசுவைப் பிடிக்க வந்தபோது, பேதுருவால் அங்கே பார்க்க முடிந்ததெல்லாம், ‘இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுக்கும் இந்த மாறுபாடுள்ள துரோகி யூதாஸையும், தன்னுடைய எஜமானனைப் பிடிக்க வரும் தீய ரோம வீரர்களையும்’ மட்டுமே. ஆனால் இயேசுவோ அவர்களைப் பார்க்கவில்லை. மாறாக அவர், “என் பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?” என்றார். தபால்காரராக யூதாஸ் ஸ்காரியோத்தோ அல்லது பரிசேயர்களோ அல்லது பிரதான ஆசாரியரோ இருக்கலாம், ஆனால் மொத்தத்தில் இந்த பாத்திரம் பிதாவினிடத்திலிருந்தே வந்தது. கடிதம் உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து வந்திருந்தால், தபால்காரன் ஒரு தீய மனிதனைப் போல உங்களுக்குத் தோன்றினால் அதனால் என்ன?
இயேசுவின் இருதயம் சுத்தமாக இருந்தது; ஆகையால், அவர் எல்லாவற்றிலும் தேவனைக் கண்டார். அதனால்தான் தாம் பிடிக்கப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும், சிலுவையில் அறையப்படுவதையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அவருடைய இருதயம் சுத்தமாக இருந்தது; ஆகையால், அவர் எல்லாவற்றிலும் தேவனைக் கண்டார். நாம் தேவனை முழு இருதயத்தோடு நேசிக்கும்போது, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டிருக்கும்போது, சகலமும் நம்முடைய நன்மைக்கு ஏதுவாக நடக்கும் (ரோமர் 8:28). நம் இருதயம் சுத்தமாக இருந்தால், தேவன் சகலத்தையும் நம்முடைய நன்மைக்காகவே செயல்பட வைக்கிறார். மேலும், நம் விருப்பத்திற்குப் பொருந்தாத சூழ்நிலைகளில் மற்றவர்கள் நமக்குச் செய்யும் தீமையைப் பார்க்கும்போது, ”தேவன் அங்கே இருக்கிறார்” என்று நாம் கூறமுடியும். அதனால்தான் இருதயத்தில் தூய்மையை நாடிப் பின்தொடர்வதில் மிகப்பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது.
நாம் வேதவசனங்களை அதிகமாகப் புரிந்துகொள்ளும்போது, இயேசுவை வேதத்தில் இன்னும் தெளிவாகக் காண்போம். அநேக ஜனங்கள் வேதத்தைப் படித்தும் இயேசுவைக் காண்பதில்லை. அவர்கள் ஓர் உபதேசத்தை வேதத்தில் காண்கிறார்கள்; பின்பு அந்த உபதேசத்திற்காக அவர்கள் போராடுகிறார்கள். ஆனால் நம் இருதயம் சுத்தமாகவும், நம் கண்கள் தெளிவாகவும் இருக்கும்போது, வேறொருவர் ஓர் உபதேசத்தைப் பார்க்கும் அதே வேதவாக்கியம் நமக்கு இயேசுவை வெளிப்படுத்தும். பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தும் இயேசுவின் மகிமையை நாம் காண்கிறோம். அது நம் இருதயத்தை அவரிடம் இழுத்து, அவரை இன்னும் நெருக்கமாகப் பின்பற்ற நமக்கு உதவுகிறது.
விதவையின் உவமையில் இயேசு சொன்னது போல, நம் இருதயங்களில் இரவும் பகலும் தேவனிடம் ஓர் இடைவிடாத கூக்குரலைக் கொண்டிருக்க வேண்டும் (லூக்கா 18:7 -ஐப் பார்க்கவும் - “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாயிருப்பார்கள்”). அந்த விதவையைப் போல, நம் சத்துருவின் வல்லமையிலிருந்து விடுதலை பெறவும், பரிசுத்த ஆவியின் அக்கினியை நாம் ஒருபோதும் இழக்காத தூய்மையும் வல்லமையும் கொண்ட வாழ்க்கைக்காகவும் நாம் கதற வேண்டும். எய்ட்ஸ் (AIDS) நோயைக் கண்டு அஞ்சுவதை விட, நாம் ஒரு பாவ சிந்தனையைக் கூட (அசுத்தம், வெறுப்பு, உலகப்பற்று அல்லது பண ஆசை போன்றவை) கண்டு அஞ்ச வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இஸ்ரவேலில், “தேவனைப் பற்றிக்கொள்ளும்படிக்கு விழித்துக்கொள்ளுகிறவன்” ஒருவனும் இல்லை என்று தேவன் கூறினார் (ஏசாயா 64:7). தீமோத்தேயு கூட தனக்குள் இருந்த ஆவியின் அக்கினியை “அனல்மூட்டி எழுப்பிவிட” வேண்டியிருந்தது (2தீமோத்தேயு 1:6). தேவன் நம்மில் எதுவும் தானாகவே நடக்கும்படி செய்வதில்லை, ஏனெனில் அது நமது சுயாதீன-சித்தத்தைப் (Free Will) பறித்துவிடும். ஆனால், அவருக்காக வாழவும், நம் வாழ்வில் அவருடைய சிறந்ததை அடையவும் நமக்குள் சிறிதளவு விருப்பம் இருப்பதை அவர் காணும்போது, நமக்கு உதவி செய்ய அவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
பவுலைப் போல, தேவனுக்கு முன்பாகவும் மனுஷருக்கு முன்பாகவும் தங்கள் மனச்சாட்சியை தூய்மையாக வைத்திருக்க முழு இருதயத்தோடு நாடி, தங்கள் இருதயத்தில் தூய்மையாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்; ஏனென்றால் அவர்கள் எப்போதும் - வேதவாக்கியங்களிலும், சூழ்நிலைகளிலும் - தேவனைக் காண்பார்கள்.