“நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத்தேயு 5:10). “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோகராஜ்யம் அவர்களுடையது” என்று ஏற்கனவே நாம் பார்த்தோம். நாம் மனத்தாழ்மையும், சமாதானமும், நீதியின் மேல் பசி தாகமும் கொண்டிருக்கும் போதும், சாந்தத்தைப் பின்பற்றும் போதும் நம் உரிமைகளுக்காகப் போராடாமல் இருக்கும் போதும், இவ்வுலகில் நம்மைத் துன்புறுத்தும் தீய நபர்களை நாம் சந்திப்போம். தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். எனவே, நாம் நீதியாக வாழ விரும்பினால் துன்பப்படுவோம்.
2தீமோத்தேயு 3:12, பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட முற்றிலும் உண்மையானதொரு வாக்கியமாயிருக்கிறது. “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று பவுல் கூறுகிறார். இவ்வசனத்தில், தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற “சிலர்” என்றோ, “பலர்” என்றோ, “பெரும்பாலானவர்கள்” என்றோ கூறவில்லை. அது சிலர், பலர், பெரும்பாலானவர்கள், அல்லது அனைவராகவும் இருக்கமுடியும். ஆனால் இங்கே “யாவரும்” என்றே எழுதப்பட்டிருக்கிறது. “யாவரும்” என்பது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான ஒவ்வொரு விசுவாசியையும் உள்ளடக்கியதாகும் (தான் ஒரு விசுவாசி என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொரு நபரும் அல்ல, ஆனால் தெய்வ பக்தியுள்ள ஒரு வாழ்க்கை வாழ விரும்புவோர் அனைவருக்கும் இது பொருந்தும்).
நீதியினிமித்தம் துன்பப்படுதல் என்றால் என்ன? நீதிக்காக நிற்பது என்பதின் அர்த்தம் என்ன என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதாவது, நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சூழ்நிலையிலோ, “நான் இந்தத் தவறை செய்ய மாட்டேன்” என்று கூறுகிறீர்கள். ஜனங்கள் சமரசம் செய்துகொள்ளக்கூடிய பல வேலைகள் இருக்கின்றன. அவர்கள் பொய் சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள், அநீதியான ஒன்றைச் செய்ய லஞ்சம் கொடுக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அதே வழியில் செல்லும் போது, அவர்கள் நிச்சயமாக ஒருபோதும் துன்பத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்; ஆனால் அவர்கள் அந்த வழியில் செல்ல மறுத்தால், அவர்கள் லஞ்சம் வாங்க மறுத்தால், அல்லது அநீதியான ஒன்றைச் செய்ய மறுத்தால், அந்த லஞ்சத்தில் ஒரு பங்கை விரும்பும் மேலதிகாரிகளிடமிருந்து அவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. நீங்கள் நேர்மையாக நிற்கும் போது, உங்கள் வேலையை இழக்க நேரிடும் அல்லது உங்கள் மேலதிகாரியின் ஆதரவை இழக்க நேரிடும். ஆனால் பரலோக ராஜ்யம் உங்களுக்குச் சொந்தமாயிருக்கும். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் பூமிக்குரிய ஒன்றை இழக்க நேரிடலாம். ஒருவேளை அது ஒரு பதவியாகவோ அல்லது பதவி உயர்வாகவோ இருக்கலாம் - ஆனால் அதற்கு ஈடாக நீங்கள் பரலோகத்திற்குரியவைகளைப் பெற்றுக்கொள்வீர்கள். அப்படிச் செய்வது முற்றிலும் மேன்மை நிறைந்ததல்லவா?
பள்ளி அல்லது கல்லூரியில் சேருவதற்கோ, அல்லது ஒரு வேலை கிடைப்பதற்கோ பொய் சொல்வது சரியா? அது தகுதியானது அல்லவே! ஒரு கிறிஸ்தவருக்கு அது ஒருபோதும் தகுதியானதல்ல. அவர் அதைச் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் அவர் அப்படிச்செய்வதன் மூலம் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே சென்றுவிடுவார். நீங்கள் ஒரு பொய்யைச் சொல்லி ஒரு சூழ்நிலையில் அனுமதி பெற்றால், தேவன் உங்களை நடத்தவில்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். நீங்கள் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, பிசாசு உங்களிடம், “இங்கே ஒரு பொய்யைச் சொல்லிவிடு; ஏனென்றால் அந்த ஒரு பொய் சர்வ வல்லமை வாய்ந்தது; அது உனக்கு எதையும் பெற்றுத்தரும்” என்று சொல்லலாம். ஆனால் பரிசுத்த ஆவியானவரோ, “இல்லை, அது ஒரு பொய்; தேவனே சர்வ வல்லமையுள்ளவர். நாம் விரும்புவதைப் பெறுவதற்கு பொய் சொல்வது மிகவும் சக்திவாய்ந்த வழி அல்ல. தேவனுக்காக எழுந்து நின்றிடு. தேவன் நீ என்ன பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை அவர் உனக்குக் கொடுக்க முடியும்” என்று கூறுவார். அவருக்குச் செவிகொடுத்தால், நீங்கள் பெற வேண்டியதை தேவன் உங்களுக்குக் கொடுப்பதை நீங்கள் காண்பீர்கள்.
நான் கப்பற்படையில் பணிபுரிந்தபோது, என் மூத்த அதிகாரிகளை எதிர்த்து நின்று, “ஐயா, மன்னிக்கவும், என் மனச்சாட்சி என்னை அனுமதிக்காததால் நான் அதைச் செய்ய முடியாது. நான் ஒரு கிறிஸ்தவன்” என்று கூறிய பல சூழ்நிலைகள் எனக்கு நினைவிருக்கிறது. இராணுவத்தில் அப்படிச் சொல்வது மிகவும் இடர்ப்பாடும் ஆபத்தும் நிறைந்த விஷயம். ஓர் உலக சம்பந்தமான வேலையில் நீங்கள் அப்படிச் சொன்னால், நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உங்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள். ஆனால் இராணுவத்தில் நீங்கள் அப்படிச் சொன்னால், நீங்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படும் அபாயத்தில் இருக்கிறீர்கள்; அதாவது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள். ஏனென்றால் ராணுவத்தில் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாதிருப்பது மிகவும் கடுமையான விஷயம். அது போன்று நடந்த பல சூழ்நிலைகள் எனக்கு நினைவிருக்கிறது; தேவன் என்னைப் பராமரித்துக் கொள்வார் என்று நான் நம்பினேன். அவர்கள் என் மனச்சாட்சிக்கு விரோதமான ஏதோ ஒன்றைச் செய்யும்படி கூறினால், “ஐயா, நான் ஒரு கிறிஸ்தவன், என்னால் அதைச் செய்ய முடியாது” என்று கூறுவேன். அந்த அதிகாரி எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் பரவாயில்லை.
அதன் காரணமாக நான் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அதாவது தலைமை அதிகாரி எனக்கு பதவி உயர்வுக்கான நல்ல பரிந்துரையை வழங்க மாட்டார். ஒரு முறை அரை மணி நேரத்திற்குள் நான் வேறு பதவிக்கு இடம் மாற்றப்பட்டேன். எனக்கு சிரமம் ஏற்படலாம், ஆனால் அது பரவாயில்லை. இதை நீங்கள் துன்பப்படுதல் என்று சொல்லவே முடியாது; ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களைப் பட்சித்த சிங்கங்களுடன் ஒப்பிடும்போது இவை சிறிய கொசுக்கடி போன்றவை தான். ஆனால் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இவற்றையும் எதிர்கொண்டனர்.
இதில் தேவன் உங்களைச் சோதிப்பார். தேவன் என்னை வெவ்வேறு நேரங்களில் சோதித்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அந்த இடங்களில் நான் அந்தச் சோதனையில் தோல்வி அடைந்திருந்தால், இன்று நான் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன்; தேவன் எனக்குக் கொடுத்த ஊழியம் எனக்கு இருக்காது என்று நான் நம்புகிறேன். நீங்கள் நேர்மையானவராக இருந்து, நீதிக்காக சில இடங்களில் பூமிக்குரிய இழப்பை சந்திக்கத் தயாராக இருந்திருந்தால், ஒருவேளை உங்களுக்கு ஓர் ஊழியம் கிடைத்திருக்கலாம். பரலோக ராஜ்யம் பெரும் அளவில் உங்களுடையதாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் அதில் சிலவற்றை இழந்துவிட்டீர்கள். கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது; நீங்கள் இழந்தது இழந்ததே, அதை நீங்கள் திரும்பப் பெற முடியாது. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் ஏதாவது செய்ய முடியும். “ஆண்டவரே, குறைந்தபட்சம் வரும் நாட்களிலாவது, நான் நீதியானவைகளுக்காகவும் நேர்மையானவைகளுக்காகவும் நிற்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். ஒரு கிறிஸ்தவர் எந்தப் பகுதியிலும் மாறுபாடுள்ளவராக இருக்கக் கூடாது. ஒரு கிறிஸ்தவர் எந்த வகையான இலாபத்திற்காகவும் பொய் சொல்லவோ, ஏமாற்றவோ கூடாது. தேவன் நேர்மையாய் நிற்பவர்களைத் தேடுகிறார். அப்படிப்பட்டவர்களிடத்தில் பின்னர் அவர் ஒரு பெரிய ஊழியத்தை ஒப்புவிக்க முடியும்.