WFTW Body: 

"மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்திருங்கள்" என்று எபேசியர் 5:18-ல் எழுதப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கட்டளைகளையும் கவனியுங்கள். "மதுபான வெறிகொள்ள வேண்டாம்" என்பது முதலாவது கட்டளையாகவும், "ஆவியினால் நிறைந்திருங்கள்" என்பது இரண்டாம் கட்டளையாகவும் சொல்லப்படுகின்றன.

முதல் கட்டளைக்கு ஒரேயொரு தடவைகூட கீழ்ப்படிய தவறாத கிறிஸ்தவர்கள், இரண்டாம் கட்டளையைக் குறித்து எண்ணமற்றவர்களாய் இருப்பதற்கான காரணம் யாது? சாத்தானானவன் வேதத்திலுள்ள சத்தியங்களைக் காணக்கூடாதபடிக்கு நம்முடைய கண்களை எப்படியாய் குருடாக்கி உள்ளான் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். பெரும்பாலான விசுவாசிகள்,"மதுபான வெறிகொள்ள வேண்டாம்" என்று முதலில் சொல்லப்படுவதை ஒரு கட்டளையாகப் பாவிக்கிறார்கள். ஆனால் இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் "ஆவியினால் நிறைந்திருங்கள்" என்பதை ஓர் ஆலோசனையாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். இரண்டுமே கட்டளைகள்தான். இரண்டுமே சம அளவு முக்கியமானவைதான். ஆண்டுக்கொருமுறை மதுபானம் பருகினாலும், அது ஒரு சீரியசான விஷயம்தான். அதே அளவிற்கு, ஒரு வருடத்தின் ஒரு நாளிலாவது ஆவியினால் நிறைந்திருக்கத் தவறினாலும் அதுவும் சீரியசான விஷயம்தான். நீங்கள் இதை இப்படியாகக் கண்டதுண்டா?

எபேசியர் 5:18-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் வினைச்சொல்லானது, "நிறைந்து கொண்டே இருங்கள்", "நிரப்பப்பட்டுக் கொண்டே இருங்கள்", "ஒரேயொரு முறை மட்டும் நிறையப்படுவதல்ல" என்றெல்லாம் பொருள் தரக்கூடியவையாக உள்ளது. நாம் காலையிலே ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், மாலையிலும் நிரப்பப்பட வேண்டும். இப்படியாக ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக நிரப்பப்பட வேண்டும். நீங்கள் எப்பொழுதுமே ஆவியினால் நிரப்பப்படும்படிக்கு, தேவனிடத்தில் கேளுங்கள். இப்படிப்பட்ட மக்கள், "பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட புருஷரும், ஸ்திரீகளும்" என்று அப்போஸ்தலர் புத்தகத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.

நம்முடைய பேச்சிலே ஏற்படும் மாற்றத்தை ஆவியினால் நிறையப்பட்டிருப்பதற்கான பிரதான அடையாளங்களில் ஒன்றாகச் சொல்லலாம். நம்முடைய நாவானது, "அக்கினி மயமான நாவாக" மாறிவிடும் (அப் 2:3). இதைப் "பல்வேறு பாஷைகளில்" பேசுவதற்கு ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. "நம்முடைய தாய் மொழியிலே தேவ அக்கினியுடன்கூடிய, அன்புடனும், பரிசுத்தத்துடனும் பேசுவது" என்று இதைச் சொல்லலாம். நம்முடைய மொழியானது பரலோக மொழியாக மாறி விடும். "ஆவியினால் நிறைந்து, சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள்" (எபே 5:19,20). இந்த வசனங்களில் நம்முடைய பேச்சைக் குறித்து எவ்வளவாய் வலியுறுத்தப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். நாம் ஆவியினால் நிறைந்து, ஸ்தோத்திரத்தின் ஆவி நமக்குள்ளே வரும்போது, வீண் பேச்சின் ஆவியும், அவதூறும், கசப்பும், கோபமும் நீங்கி விடும். எபேசியர் 5:18-ஐத் தொடர்ந்து வரும் 5:19 முதல் 6:24 வரை உள்ள வசனங்கள் ஆவியில் நிறையப்பட்ட மக்களின் குணாதிசயங்களை விவரிக்கின்றன. ஸ்தோத்திரத்தில் தொடங்கி, சபை மற்றும் குடும்ப உறவுகளில் "ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து" (5:21 முதல் 6:9 வரை); "சாத்தானின் சேனைகளோடு போராடி, மேற்கொள்வது" (6:11) என்பது வரை தொடர்கின்றது. ஆகவே இப்பூமியில், நம்முடைய கிறிஸ்தவ போக்கு மற்றும் போராட்டம் ஆகியவற்றின் இரகசியமானது "ஆவியினால் நிறைவதில்தான்" அடங்கியுள்ளது.

நாம் ஆவியினால் நிறையாத பட்சத்தில், நம்மால் சரியானபடி தேவனைத் துதிக்க முடியாது. ஆவியினால் நிறையாத பட்சத்தில், நம்மால் தேவபக்தியுள்ள புருஷர்களாயும் மனைவிகளாயும் இருக்க இயலாது. ஆவியினால் நிறையாத பட்சத்தில், நம்மால் பிள்ளைகளைச் சரியான விதத்தில் வளர்க்க முடியாது. மேலும் ஆவியினால் நிறையாத பட்சத்தில், நம்மால் சாத்தானையும் மேற்கொள்ள முடியாது. நம்முடைய முழு கிறிஸ்தவ வாழ்க்கையுமே, ஆவியினால் நிறைந்திருப்பதையே சார்ந்திருக்கின்றது.

குடும்ப உறவைப் பொறுத்தமட்டில், மூன்று உறவுகளைப் பற்றி நமக்குச் சொல்லப்பட்டுள்ளன. அவை: புருஷர்களுக்கும் மனைவிகளுக்கும் இடையிலுள்ள உறவு (எபே 5:22-23), பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலுள்ள உறவு (எபே 6:1-4), எஜமானருக்கும், வேலையாளுக்கும் இடையிலான உறவு (எபே 6:5-9) என்பவையாகும். வேலைக்காரரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கடைசி பகுதியானது, நம்முடைய வீடுகளில் வேலை செய்கிறவர்களுக்கும், மேலதிகாரிகளை உடைய ஒரு கம்பனியிலோ அல்லது அரசாங்க அலுவலகத்திலோ வேலை செய்கிறவர்களுக்கும் பொருந்தும். ஆகவே இங்கு சொல்லப்பட்டிருக்கும் புத்திமதிகள் அனைத்தும், வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எஜமான்களாகவோ, எஜமானிகளாகவோ, வேலைக்காரராகவோ பணியாற்றும் நமக்குச் சொல்லப்பட்டவையாகும். நாம் யாவரும் நம்முடைய நேரத்தின் பெரும்பகுதியை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோதான் செலவு செய்கிறோம். ஆவியினால் நிறைந்த நபர், வீட்டிலும், வேலை ஸ்தலத்திலும் கிறிஸ்துவின் ஆவியை வெளிப்படுத்துவார். இந்த ஆவியைக் கொண்டுதான் நாம் சபையைக் கட்ட முடியும்.