மார்க்க கண்மூடித்தனத்தை இனம் காணும் அடையாளங்கள்

Article Body: 

தலையாகிய கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீர வளர்ச்சியை விட்டுவிட்டு, ஊழியர்களை ஆராதனை செய்யும் மார்க்ககண்மூடித்தனத்திற்கு பலியாகி உங்கள் பந்தயப்பொருளை இழக்கும்படி யாரும் உங்களை வஞ்சித்திட இடம் தராதிருங்கள்"(கொலோ. 2:18,19-பெர்க்லி மொழிபெயர்ப்பு)

"நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற ஜனங்கள் பிறரைப்பார்த்து "நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே", "உன்னை பார்க்கிலும் நான் பரிசுத்தன்" என்று சொல்கிறார்கள்" (ஏசா. 65:2;5).

"உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால்... விழித்திருங்கள்" (அப் 20:30,31), என்றெல்லாம் வேதம் நம்மை முன்கூட்டியே கரிசனையோடு எச்சரிப்பதைப் பாருங்கள்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் அவரோடு சேர்ந்து, யாரோ ஒரு மானிடனிடமோ அல்லது யாதோ ஒரு உபதேசத்தினிடமோ விசேஷப் பற்றுதல் கொண்டிருப்பதே மார்க்க கண்மூடித்தனம் ஆகும். இது

எப்படியெனில் ஆண்டவரோடு சேர்த்து எலியாவிற்கும், மோசேக்கும் கூடாரம் அமைப்பதற்கு ஒப்பாகும். இதுபோன்ற செயல் தேவனுடைய சமூகத்தை நம்மைவிட்டு மறைக்கும் மேகத்தையே எப்போதும் கொண்டு வருகிறது. ஆகையால், நம்முடைய ஜீவியம் "இயேசுவை மாத்திரமே"(JESUS ONLY) மையம் கொண்டதாய் இருப்பதுதான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (மத். 17:1-8).

நாம் வாழும் இக்கடைசி நாட்களில், மார்க்கக்கண்மூடித்தனம் கொண்டவர்கள் கிறிஸ்தவ உலகில் ஏராளமாய் பெருகுவார்கள். அநேகர் தலையாகிய கிறிஸ்துவுடன் நெருங்கிய உறவு கொள்வதற்குப் பதிலாய் கர்த்தருடைய ஊழியர்களை ஆராதித்து இக்கொடிய வலையில் பலியாய் சிக்குவார்கள். இக்கொடிய அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், முக்கியமான சில மார்க்க கண்மூடித்தனத்தின் அடையாளங்களை நாம் அறிந்துவைத்திருப்பது மிகவும் நல்லது. இவைகளை நாம் அறிந்து கொண்டு, மற்றவர்கள் மார்க்கக்கண்மூடித்தனம் கொண்டிருக்கிறார்களா? இல்லையா? என நாம் நியாயம் தீர்க்க வேண்டாம்! ஆனால், அதற்கு பதிலாய் நம்மைக் கவனமாய் சோதித்துக் காத்துக்கொள்வதற்கே பயன்படுத்தக் கடவோம்!!

மார்க்ககண்மூடித்தனத்தில் ஓர் அங்கமாயிருப்பதற்கு மார்க்க கண்மூடித்தன மனப்பான்மை கொண்டிருப்பதற்கு இடையில் தெளிவான வித்தியாசம் இருக்கிறது. உபதேசங்கள் யாவும் ஆவிக்குரிய அடிப்படையில் சரியானதாகவும், சபையில் உள்ள மூப்பர்கள் அனைவரும் மெய்யான தேவபக்தி கொண்டவர்களாகவும் இருக்கிற ஒரு நல்ல சபையில், நீங்களோ உங்களை நடத்தும் மூப்பரிடத்திலும், உங்கள் குழுவினரிடத்திலும், மற்ற சபைகளிலுள்ள விசுவாசிகளிடத்திலும் மார்க்ககண்மூடித்தன மனப்பான்மை கொண்டவர்களாய் இருக்கமுடியும்! எனவே மார்க்க கண்மூடித்தனமானது தவறான உபதேசத்தில் மாத்திரமல்லாமல், தவறான மனப்பான்மையிலும் அடங்கியிருக்கிறது. இன்று பொதுவாக, தங்கள் உபதேசங்களில் சரியாய் இருப்பவர்களும் தங்கள் ஜிவியத்தில் நேர்மையாய் இருப்பவர்களும், தங்கள் மனப்பான்மையில் மார்க்ககண்மூடித்தனம் கொண்டிருக்கமுடியும் என்ற அபாயத்தை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

(1) கிறிஸ்து மற்றும் இன்னொரு மனிதன்:

மார்க்கக்கண்மூடித்தனத்தின் பிரதான அடையாளம் யாதெனில், அந்த குழுவின் அல்லது ஸ்தாபனத்தின் தலைவர் மிக மேன்மையான மரியாதைக்குரியவராயும், அவருடைய ஜீவியம் பிழையற்றதாயும், அவருடைய போதனைகள் தேவனுடைய வார்த்தைக்கு சமமானதாயும் கருதப்பட்டிருக்கும். பெரோயா பட்டிணத்திலுள்ன யூதர்களை "நற்குணசாலிகள்" என பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுத்தார். ஏனென்றால், இவர்கள் பவுலினுடைய போதகங்கள் வேத ஆதாரம் கொண்டதுதானா என அறியும்படி "தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்". பார்த்தீர்களா?, பவுல் ஒரு உயர்த்த அப்போஸ்தலன்! இருப்பினும், அவருடைய போதகங்கள் கூட வேத வாக்கியத்தின்படி சரிதானா என சோதிக்கப்பட அவசியமாய் இருந்தது (அப் 17:11). மேலும், சபை கூட்டங்களில் தீர்க்கதரிசிகள் பேசினால் கூட "மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்" (1கொரி14:29) என வேதம் கூறுகிறது. மற்றவர்கள் எதை நிதானிக்க வேண்டும்? அந்த பெரோயா கிறிஸ்தவர்கள் எப்படி நிதானித்தார்களோ அதைப்போலவே, தீர்க்கதரிசிகள் பேசியவைகள் வேதத்தின்படி சரிதானா? இல்லையா? என நிதானிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதே நாம் மார்க்ககண்மூடித்தனத்திலிருந்து நம்மை விலக்கிப் பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழியாகும்.

ஆனால், மார்க்ககண்மூடித்தனத்தில் சிக்கிய விசுவாசிகளோ தங்கள் தலைவர்களை அதிகமாய் மதிக்கின்றபடியால் அவர்களுடைய போதகங்கள் எல்லாவற்றையும் வேதவாக்கியங்களோடு ஓப்பிட்டு சோதித்துப் பார்க்காமலே ஏற்றுக்கொள்ளுகிறார்கள். ஆம், இவர்கள் பெரோயா பட்டணத்தாரைப் போன்று குணசாலிகள் அல்ல! மார்க்ககண்மூடித்தன குழுவில் அக்குழுவின் ஸ்தாபகர் மரித்தவுடன் அவரைத் தொடர்ந்து அடுத்த தலைவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இவ்வாறு தொடர்ந்து தலைமை பொறுப்பேற்பவர் "தான்தான் மற்ற எந்த தேவ மனிதனைக் காட்டிலும் மேலானவர்" என தன்னுடைய குழுவினர் தன்னை அங்கீகரிக்க வேண்டுமென எதிர்பார்ப்பார். இதன் விளைவாய் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அத்தலைவரின் போதகங்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அவர் ஜனங்களை நடத்துகிறார். இத்தலைவர் ஜனங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம் போப் ஆண்டவர் வைத்திருக்கும் அதிகாரத்துக்கு ஒப்பாகவே இருக்கிறது. இந்த போப் ஆண்டவரின் வார்த்தைகள் அனைத்தும் ஒரு சட்டமாகவே மாற்றப்பட்டிருக்கிறது!

பெரும்பாலான மார்க்கண்மூடித்தன குழுவில், அத்தலைவருக்கு ஒரு மகனிருந்தால், அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சியளிக்கப்பட்டு தலைமைப் பொறுப்பை அவருடைய மகனே ஏற்றுக்கொள்ள வகை செய்கிறார்கள். அக்குழுவில் உள்ள எல்லா ஜனங்களும் நாளாவட்டத்தில் அந்த தகப்பனுக்கு கொடுத்த அதே மரியாதையை அவருடைய மகனுக்கும் கொடுக்கத் துவங்கிவிடுகிறார்கள்!

(2) வேதப்புத்தகம் + மற்றுமோர் புத்தகம் :

மார்க்ககண்மூடித்தனத்தின் இரண்டாவது அடையாளம், வேத புத்தகத்தோடு சேர்த்து அக்குழுவின் தலைவர் எழுதிய புத்தகமும், எல்லா நடைமுறை வாழ்க்கைக்கும் பயன்படுத்தப்படும். இவ்வாறாக இவருடைய புத்தகம் வேதாகமத்தைப்போலவே பிழையற்றதாக கருதப்பட்டிருக்கும்.

ஒரு மார்க்ககண்மூடி குழுவினரின் துவக்கக் காலத்தில் அதிகமான உண்மையும், கர்த்தரைப் பற்றிய மெய்யான தியான வாழ்க்கையும் இருந்திருக்கக்கூடும். இன்னும் சில இடங்களில் அந்த குழுவின் ஸ்தாபகர் கூட ஒரு சிறந்த தேவ மனிதாரகவே இருந்திருக்கிறார். ஆனால் பொதுவாய் நடப்பது என்னவென்றால், இந்த ஸ்தாபகரைப் பின்பற்றினவர்கள் அவர்போதித்த போதகங்களையும் அவர் எழுதிய புத்தகக் குறிப்புகளையும் அவ்வப்போது கோடிட்டுக் காண்பித்து வேதாகமத்தின் அதிகாரத்திற்கு ஒப்பாகவே அவைகளை நிரந்தர உபதேசமாய் மாற்றிவிடுகிறார்கள்.

இவ்வாறு மரித்துபோன அந்த "சிறந்த தலைவரின்" தனிப்பட்ட ஆலோசனைகளும், அபிப்பிராயங்களும் அவரைப் பின்பற்றின குழுவினருக்கு தேவனுடைய வார்த்தையாகவே மாறிவிடுகின்றன. இந்த தேவபக்தியுள்ள தலைவர் தான் உயிரோடு இருந்த நாட்களில் இதுபோன்று நடப்பதற்கு ஒருபோதும் அனுமதித்திருக்கவே மாட்டார்! ஆனால் அக்குழுவின் ஸ்தாபகர் தேவனுடைய மனுஷனாய் இல்லாத பட்சத்தில், அவர் உயிரோடு இருக்கும் நாட்களிலும், தான்பேசுகிற யாவும் தெய்வ அதிகாரம் கொண்டவைகள் என துணிந்து சொல்லிவிடுவார். ஒரு மார்க்ககண்மூடி குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதன் ஸ்தாபகர் எழுதிய ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை திரும்பத் திரும்ப படித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் பயணம் செல்லும் இடங்களில் எல்லாம் இப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு, தாங்கள் பேசும் கூட்டங்களில்கூட அவருடைய குறிப்புகளை வேத புத்தகத்தின் அதிகாரத்திற்கு ஒப்பாகவே கோடிட்டு பேசுவார்கள்.அவர்கள் வைத்திருக்கும் புத்தகத்தில், வசனங்களுக்கு விளக்க உரையோ அல்லது உபதேச விளக்கங்களோ சொல்லப் பட்டிருந்தால், அக்குழுவில் உள்ளவர்கள், அக்குறிப்பிட்ட வசனங்களுக்கு அந்த விளக்கத்திற்கு மாறாக வேறு எதையும் சிந்திக்கக்கூட மாட்டார்கள்! அவர் எழுதியிருக்கும் உபதேச விளக்கங்களுக்கு மாற்று எண்ணம் எதுவும் கொள்ளவே மாட்டார்கள்!!

இவ்வாறு தொடர்ச்சியாக அத்தலைவனின் புத்தகத்தை மார்க்க கண்மூடி குழுவினரின் விசுவாசிகள் வாசித்து "மூளை சலவை" செய்யப்பட்டவர்களாய் மாறி, தேவனுடைய வார்த்தையை அப்புத்தகத்தில் சொல்லப்பட்ட விதமாகவே வியாக்கியானம் செய்து பிரசங்கிக்கத் தொடங்குவார்கள். இவ்வாறு இவர்களுடைய மனம், மூளை சலவையினால் மாற்றம் கொண்டிருக்கிறபடியால் ஆவியானவரிடமிருந்து எவ்வித புதிய வெளிச்சத்தையையும் பெறமுடியாத கொடிய நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

இவர்கள் வேதாகமத்தின் எந்தப் பகுதியை வாசித்தாலும் அதனுடைய அர்த்தத்தை ஏற்கனவே "மூளை சலவைக்குள்ளான மனதில்" வைத்திருக்கிறபடியால், அந்த அர்த்தத்தின்படிதான் வேதாகமத்தை விளங்கிக் கொள்வார்கள். இவ்வாறு இவர்களுடைய மனம் ஆவியானவரின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டது கொடிய பரிதாபமேயாகும்!

இது கிட்டத்தட்ட ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களின் உபதேசத்திற்கு ஒப்பாகவே இருக்கும். ரோமன் கத்தோலிக்க வேதவிளக்கத்தின் அடிப்படையில் தான் வேதப்புத்தகம் வியாக்கியானம் செய்யப்பட வேண்டுமென்றே இவர்கள் தங்கள் மார்க்கத்தார்க்குப் போதித்திருக்கிறார்கள். இதற்கு மாறாக, இவர்களுடைய உபதேசங்களையோ அல்லது இக்குழுத் தலைவர்களின் போதகங்களையோ குறிப்பிட்டு யாரேனும் கேள்வி கேட்டால், அதை இவர்கள் சாதுரியமாய்த் தவிர்த்து விடுவார்கள்.

(3) ஐக்கியத்தைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை:

மார்க்ககண்மூடித்தனத்தின் மூன்றாவது அடை யாளம் "ஓர் தனித்தன்மை கொண்ட ஐக்கியமாய்" தங்களைப் பிரித்துக் கொள்ளும் நிலையாகும். இந்த மார்க்கண்மூடித்தனம் கொண்ட விசுவாசிகள், தங்கள் குழு அல்லாத மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியம் கொள்வதை சொற்ப பிரயோஜனமென்றோ அல்லது எவ்வித ஆவிக்குரிய பிரயோஜனமும் அற்றது என்றோ எண்ணுகிறார்கள். ஆகவே இம்மார்க்ககண்மூடி குழுவினர் நீங்கள் மற்ற விசுவாசிகளோடு தொடர்பு கொள்வதை ஒருக்காலும் ஆதரிக்கவே மாட்டார்கள். ஒருவேளை மற்ற குழுவினரை தங்கள் குழுவிற்குள் இழுத்து வர முயற்சித்தால், அதை வேண்டுமானால் இவர்கள்அனுமதிக்கக்கூடும்! இவர்கள் தாங்கள் மாத்திரமே உண்மையான சபை என்றும், கிறிஸ்துவின் மணவாட்டியாய் இருப்பவர்கள் முடிவில் தங்கள் குழுவிற்கே வருவார்கள் என்றும் விசுவாசிக்கிறார்கள்! இவர்களின் அகங்காரத்தின் உச்சகட்டத்தை நாம் என்னவென்று சொல்வது!!

இவ்வாறு, இவர்கள் தங்கள் ஐக்கியத்தைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்நிலை, நாளாவட்டத்தில் தங்களுக்கு கீழ்ப்பட்டுள்ள விசுவாசிகளை மதவாதிகளாயும், சட்டத்திட்ட ஆவி கொண்ட பரிசேயர்களாயும் மாற்றிவிடுகிறது. நாங்கள் தான் வேதவாக்கியத்தில் ஆழ்ந்த கண்நோக்கு உடையவர்கள் என்ற இவர்களது எண்ணம், தங்கள் குழுவை "நாங்கள்" என்றும், மற்ற விசுவாசிகளை "அவர்கள்" என்றும் எண்ணுகிற மனப்பான்மைக்குள் நடத்திச் செல்லுகிறது. இதுபோன்ற மார்க்க கண்மூடி விசுவாசிகள், பொதுவாக தங்களின் "பரிசேயத்துவ நிலையை உணர முடியாதவர்களாய் மாறி, அதற்கு பதிலாய் தாங்கள் தான் இயேசுவை பின்பற்றிச் செல்லும் தாழ்மை மிகுந்த பக்தர்கள் என எண்ணிக் கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

தேவ கிருபையிலிருந்து விளைவதுதான் உண்மையான பரிசுத்தமாகும் (ரோ 6:14 இதைத் தெளிவுபடுத்துகிறது). தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கு மாத்திரமே தன் கிருபையைத் தருகிறார் (1பேது 5:5). எனவே மெய்யான பரிசுத்தத்தின் முக்கியமான குணாதிசயம் தாழ்மையே ஆகும். எங்கெல்லாம் தாழ்மையில்லையோ, அங்கு உயர்வாய் கூறப்படும் பரிசுத்தமெல்லாம் வெறும் சுயமுயற்சியினால் நிலைநிறுத்தப்படும் நியாயப்பிரமான நீதிகள் மாத்திரமேயாகும்". இதனிமித்தமே மார்க்ககண்மூடி குழுவினர்கள். "தங்கள் பரிசுத்த ஜீவியத்தையும் தங்கள் பரிசுத்த குடும்ப வாழ்க்கையையும்" பெருமையடித்துக்கொள்ளும் நிலையில் இருப்பதைக் காண்கிறோம். இவர்களுடைய பரிசுத்தம் மெய்யாகவே தேவகிருபையினால் பெற்றதாய் இருக்குமென்றால், இவர்கள் மேன்மை பாராட்டுவதற்கு இடமில்லையே!!

இவ்வித மார்க்ககண்மூடித்தனத்திற்கு பலியான விசுவாசிகள் தங்கள் குழுவைச் சார்ந்த தங்கள் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை மாத்திரம் படிப்பார்கள். இவர்களுடைய பத்திரிக்கைகளில் தங்கள் சொந்த குழுவைச் சார்ந்த தலைவர்களின் செய்திகள் மாத்திரமே இடம் பெற்றிருக்கும். இதற்குமாறாக, யாராவது வேறு செய்திகளை வாசித்துப் படிப்பதைக் கேள்விப்பட்டால், அவர்களை இக்குழுவினர் மிகக் கடுமையாய் எச்சரிப்பார்கள்! ஏனெனில், இவர்களுடைய கூற்றின்படி "அப்போஸ்தலர்கள் காலத்திற்குப் பிறகு இன்றைய கிறிஸ்தவம் யாதொரு சிறந்த தேவ மனிதர்களையும் காணவில்லை... ஆனால், எங்கள் குழுவில் உள்ள தலைவர்கள் தான் சிறந்த தேவபக்தியுள்ள மனிதர்கள்" எனக்கூறுவார்கள். இந்த மார்க்ககண்மூடித்தனம் எத்தனை வலிமையாய் ஜனங்களை வஞ்சிக்கிறது என்பதைக் கண்டீர்களா?

மேலும், மார்க்ககண்மூடித்தனத்திற்கு உட்பட்டிருக்கும் விசுவாசிகள் தங்கள் குழுவினர் எழுதிய பாடல்களை மாத்திரமே பாடுவார்கள் ! அவர்கள் பாடல் புத்தகங்களில் வேறுபாடல்கள் இடம் பெறுவதே இல்லை. மற்ற குழுவினர் எழுதிய பாடல்களில் தவறான ஆவி இருப்பதாக கருதப்பட்டு, அவைகளைப் பாடுவது அபாயமானது என எண்ணுவர்கள். இவ்வாறாக இந்த மார்க்ககண்மூடித்தன குழுவினர்கள் தங்கள் சபை உறுப்பினர்களைத் தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் "கூட்டுபுழுவின் கூண்டில்"அடைத்து வைத்துக் கொள்வார்கள். இதனிமித்தமாய் "தேவன் மற்ற தேசங்களில் வேறு தேவ மனிதர்களைக் கொண்டு செய்திருக்கும் கிரியைகளை இவ்வித கூண்டிற்குள் அடைபட்டிருக்கும் விசுவாசிகள் முற்றிலும் அறியாமலே இருந்து விடுகிறார்கள். அதுமாத்திரமல்லரமல், தங்கள் சொந்த கண்களுக்கு முன்பாகவே இவர்கள் காணும் கிறிஸ்தவ சபைகளில், வேறு தேவ மனிதர்களைக் கொண்டு தேவன் நிறைவேற்றியிருக்கும் கிரியைகளையும் இவர்கள் காணத்தவறிவிடுகிறார்கள்.

இவ்வாறாக, தேவபக்தியுள்ள மற்ற விசுவாசிகளிடமிருந்து இவர்கள் தங்களைத் தனிமைப்படுத்தி வாழ்வதால் நடைமுறை உண்மைக்குரிய விஷயங்களின் தொடர்பைக்கூட இழந்து விடுகிறார்கள். அதற்கு மாறாக இவர்கள் சுய-வஞ்சகத்திலும், பெருமையிலும் வாழ்ந்து மாய்கிறார்கள்.

நம்முடைய பரமபிதா ஏற்றுக்கொண்ட அவருடைய பிள்ளைகளில் ஒருவரையாகிலும் நம்மோடு ஐக்கியப் படுவதிலிருந்து தள்ளி வைத்திருப்போமென்றால் அதனிமித்தம் நஷ்டமடையப் போவது நாம்தான்!

ஏனென்றால், "நாம் சகல பரிசுத்தவான்களோடும்கூட சேர்ந்துதான் கிறிஸ்துவின் அன்பை அளந்து..... தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிரப்பப்படமுடியும்" என எபேசியர் 3:18,19 கூறுகிறது.

மேற்கண்டவாறு நாம் கூறுகிறபடியால், நாம் எல்லோரோடும் ஒத்துப்போகும் ஓர் குழுவினராய் மாறவேண்டுமென குறிப்பிடவில்லை. இன்றும், நாம் காணும் பாபிலோனிய குழுவில் உள்ள அநேக விசுவாசிகளோடு சேர்ந்து ஊழியம் செய்திடக்கூடாமல் இருக்கலாம். இதுபோன்ற "அமைப்புகளில்' (System) சிக்கிக்கொண்டவர்களோடு நமக்கு எவ்வித ஊழிய தொடர்பும் கிடையாது!! அது மாத்திரமல்லாமல் இத்தகைய அமைப்புகளில் சிக்கிக்கொண்டவர்களிடம் "பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்'' என்றே இன்னமும் அழைப்புக் கொடுக்கிறோம் (வெளி18:4). அதே சமயம், நம்முடைய இருதயமோ தேவபக்தி கொண்ட எல்லா இயேசுவின் சீஷர்களோடும் ஐக்கியம் கொள்வதற்கு மனம்திறந்ததாயிருக்க வேண்டும். சிலரை ஏற்றுக்கொள்வதற்கு நம்முடைய ஆண்டவரே பட்சமாயிருக்கும்போது, அந்த சிலர் நம்மோடு ஒத்துப்போகாதவர்களாயிருத்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்க்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை! (லூக்கா 9:49,50)

இதற்கு பவுலும் பர்னபாவும் சிறந்த உதாரணமாய் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வெவ்வேறு குழுவாய் பிரிந்து ஊழியம் செய்தாலும் இருவரும் ஒரே ஐக்கியமாய்த்தான் இருந்தார்கள் (அப் 15,36-41). ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இவர்கள் இருவரும் ஒருமித்த கருத்து கொண்டிட முடியாதபடியால் இனியும் சேர்ந்து ஊழியம் செய்வது அவர்களால் கூடாமல் போனது. ஆனால் இவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த ஐக்கியத்தை விட்டுப்பிரியவோ அல்லது ஒருவரையொருவர் வெறுக்கவோ ஒருவர் பெயரை ஒருவர் திட்டிப்பேசவோ இல்லை! இவைகளில் ஏதாவது ஒன்றை இவர்கள் செய்திருப்பார்களென்றால், இவர்களும் மார்க்ககண்மூடிகர்களாகவே மாறியிருப்பார்கள்". ஆனால் இவர்களோ தனித்தனியாய் ஊழியம் செய்தார்கள்; ஒருவரையொருவர் நேசித்தார்கள்; சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒருவருக்காக ஒருவர் ஜெபமும் பண்ணினார்கள். இதுபோன்ற இசைவு கொள்வது மார்க்ககண்மூடிகளுக்கு ஒருக்காலும் கூடாத காரியமாகும். இவர்கள், தங்களோடு முழுவதுமாய் ஒத்துப்போகிறவர்களோடுதான் ஐக்கியம் கொள்ளமுடியும்!!

(4) சுவிசேஷ ஊழியத்திற்கு பாரமற்றிருத்தல்:

மார்க்ககண்மூடித்தனத்தின் நான்காவது அடையாளம், உலகத்திலுள்ள புற ஜாதியாருக்கு சுவிசேஷத்தை எடுத்துச் சொல்ல இவர்களுக்கு மெய்யான பாரம் இருப்பதில்லை!

ஒரு சில மார்க்க கண்மூடித்தன குழுவினர்கள் 'குறைந்த அனவில்' புற ஜாதியார் மத்தியில் ஊழியம் செய்யக் கூடும். ஆனால், இக்குழுவினர் பொதுவாக, கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில் மாத்திரமே ஊழியம் செய்வார்கள். இவர்களுக்கு இயேசு கட்டளையிட்டதுபோல, சகல ஜாதியாரிடத்திலும் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்திட எவ்வித ஆர்வமும் அற்றிருப்பார்கள் (மாற்கு 16:15). இதற்கு பதிலாக, மற்ற விசுவாசிகளிள் குழுவில் உள்ளவர்களை சீஷர்களாக்கி தங்கள் குழுவோடு

அவர்களைச் சேர்ப்பதற்கே பிரதான கவனம் செலுத்துவார்கள்.

மேலும், மார்க்ககண்மூடி குழுவினர்கள் தங்களுக்குள் மிக நெருக்கமான ஐக்கியம் கொண்டிருப்பார்கள். இந்த நெருங்கிய ஐக்கியக்கட்டிற்குள் உட்பட்ட விசுவாசிகள் நிறைவான பாதுகாப்பைப் பெற்றிருப்பார்கள். இவர்கள், ஒருவருக்கொருவர் மிகுந்த அக்கறையுள்ளவர்களாய், ஒருவருக்கொருவர் உதவிசெய்து எத்தனையோ வழிகளில் ஒருவருக்கொருவர் நன்மைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால், இவ்வித பாதுகாப்பை இழந்த மற்ற விசுவாசிகள், அன்பற்ற ஒரு சூழ்நிலையில் அக்குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 'அந்த பாதுகாப்பை' அடைந்திட மிகவும் வாஞ்சை கொண்டிருப்பார்கள். பார்த்தீர்களா? இவர்கள் அன்பும் பாதுகாப்பும் தேவனிடத்தில் அல்ல... இந்த குறுகிய வட்டத்திற்குள் உள்ள விசுவாசிகளிடத்திலேயே வாஞ்சித்து நாடுவார்கள்! ஆனால், தங்கள் பிற்கால கிறிஸ்தவ ஜீவியத்தில் சொல்லி முடியாத அளவிற்கு தாங்கள் "தனிமைப்படுத்தப்படும்" அபாயத்தை இவர்கள் அறியாதவர்களாகவேயிருக்கிறார்கள்.

மார்க்கக்கண்மூடித்தன விசுவாசிகள், புதிதாய் வந்த நபர்களிடம் மிகுதியான அன்பும் அக்கறையும் காட்டி, அதன் மூலம் அவர்களைத் தங்கள் குழுவில் ஒருவராக மாற்றிவிடுவார்கள். தங்களோடு அவர்கள் சேர்ந்தவுடன், படிப்படியாய் தங்கள் போதகங்களை ஏற்றுக் கொண்டு, தங்கள் தலைவரின்

"திவ்விய அதிகாரத்திற்குள்" உட்படுவார்கள் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்! சில வருடங்கள் கழிந்த உடன் இதுபோன்ற குழுவில் உள்ள அதிகபட்சமான விசுவாசிகள், இக்குழுவை விட்டு விலகுவதற்கு மிகவும் அஞ்சுவார்கள்! ஏனெனில், தாங்கள் கைவிடப்பட்டு தனிமையாக்கப் படுவோம் என்ற அச்சமே அதற்குக் காரணமாகும். இந்த பயம் "தாங்கள் உண்மையான சபையிலிருந்து விழுந்து விடுவோம்" என்ற எண்ணத்தோடு இரட்டிப்பான பயமாக மாறி, பெலவீன மனம் கொண்ட மார்க்ககண்மூடி விசுவாசிகள் தங்கள் ஜீவகாலமெல்லாம் அக்குழுவில் "சிறைப்பட்டிருக்கும்"

நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிடுகிறது! மார்க்ககண்மூடித்தனத்திற்கு உட்பட்ட விசுவாசிகளிடம் எல்விதத் தியாகத்தையும் காண முடியாது. ஆனால் பலநூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த தெய்வ பக்திகொண்ட மிஷனெரிகள் புற ஜாதியார் மத்தியில் மிக எளிய முறையில் வாழ்ந்து, அவர்களைக் கிறிஸ்துவினிடத்திற்கு கொண்டு வருவதற்காக எண்ணற்ற தியாகம் செய்திருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக மார்க்ககண்மூடிகள் மிஷனெரிப்பணியை முக்கியமில்லாதது போலவே கருதுவார்கள்! ஏனெனில், மிஷனெரி ஊழியம் மிகவும் கடினமானது என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்!

இம்மார்க்ககண்மூடித்தன பிரசங்கிகள்,ஒருவேளை புறஜாதியார் தேசத்திற்குப் போனாலுமே கூட ஓர் மேற்பார்வை செலுத்தும் பிரசங்கிகளாகவே செல்வார்கள். அதிகப்பட்சமாய் இவர்கள் விரும்பிச் செய்வ தெல்லாம், அந்தந்த புற ஜாதியார் தேசங்களில் தங்கள் ஊழியங்களைத் தொடர்வதற்காகவும், இவர்கள் வரும்போது வருடாந்தர கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்காகவும் "ஸ்தல பிரதிநிதிகளை" நியமனம் செய்வதுதான்! இந்த ஸ்தல பிரதிநிதிகளின் ஊழியங்களுக்குப் பிரதிபலனாக, இவர்கள் அவர்களுக்கு 'வெகுமதிகளைக்' கொடுப்பார்கள் ....அல்லது தங்களின் தலைமை ஸ்தலத்திற்கு (நாட்டிற்கு) எப்போதாவது ஒருமுறை வந்து செல்லும்படியான சொகுசுப் பயணத்திற்குரிய விமானச்செலவை இவர்களுக்கு "லஞ்சமாய்" தருவார்கள் !!

ஆனால் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களோ இதுபோன்ற லஞ்சங்களை அந்நாட்களில் யாருக்கும் தரவேயில்லை! ஏனென்றால், அப்போஸ்தலர்கள் இந்த பூமியில் ஏழையாக இருந்ததே காரணமாகும்!! எனவேதான், இவர்கள் புறஜாதியார் தேசங்களில் ஓர் மெய்யான அர்ப்பணிப்பின் ஊழியத்தைச் செய்ய முடிந்தது.

(5) விசுவாசத்தினால் நீதிமானாகும் பாக்கியத்தின் மேன்மையை மங்கச்செய்தல் :

மார்க்ககண்மூடித்தனத்தின் ஐந்தாவது அடையாளம், இவர்கள் விசுவாசத்தினால் நீதிமானாகும் மேன்மையை மங்கச்செய்து, கிரியைகளினால் நீதிமானாகும் மேன்மையை அதிகமாய் வலியுறுத்தவார்கள்.

விசுவாசத்தின் நிரூபணம் "கிரியைகள்" என வேதாகமம் கூறுவது உண்மைதான் (யாக் 2:24). ஆனால் அதேசமயம் வேதாகமம், "ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்" (ரோ. 4:5) என்றும் வேதவாக்கியம் நமக்குப் போதிக்கிறதே!!

எனவே இங்கு அபாயம் என்னவென்றால், ஏதோ "சமநிலைக் குறைவை" சமப்படுத்துவதைப் போல் இராமல், வேதப் புரட்டாய் இருப்பதுதான்! எப்படியெனில், வேதாகமத்தின் ஒரு சத்தியம் ஒரு உச்ச கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அதன் மறுபக்கத்தின் சத்தியம் தள்ளப்பட்டுவிட்டால் அதுவே வேதப்புரட்டாய் மாறுகிறது!! மேலும், நாம் ஒரு வேதாகம உபதேசத்தைக் கைக்கொண்டிருந்தும், நம்முடைய சபைகளில் அதை ஒருபோதும் போதியாமல் இருந்தாலும் அதுவும் "அந்த சத்தியத்தை விசுவாசியாதவர்களுக்கு" சமமாகவே நம்மை மாற்றுகிறது. ஏனெனில், பேசப்படாத சத்தியங்கள் "உபயோகப்படுத்தாத தசைநார்களுக்கு" ஒப்பாகவே இருக்கிறது. இதனிமித்தம் அக்குறிப்பிட்ட சத்தியம் (தசைநார்) கொஞ்சம் கொஞ்சமாய் செயலிழந்து முடிவில் சபையில்அந்த சத்தியம் காணப்படாமலே போய்விடமுடியும். "சத்தியம் ஒருகோடியிலோ அல்லது அதன் மறுகோடியிலோ அல்லது இரண்டிற்கும் நடுவிலோகூட காணப்படுவதில்லை. மாறாக இரண்டு கோடியும் ஒன்றாய் சந்திக்கும் இடத்தில்தான் சத்தியம் இருக்கிறது"

மற்றவர்கள் ஒருகோடிக்கு இழுத்துச் செல்லப்பட்டிருப்பதைக் காண்பதினால் உண்டாகும் "எதிர் பிரதிப்பலிப்பாக" நம்முடைய போதனைகள் மாறிவிடாதிருப்பதற்கு நாம் கவனம் கொண்டிருக்க வேண்டும். இன்று அநேக பிரசங்கிகள் விசுவாசத்தினால் நீதிமானாகும் போதகத்தை, "பாவம் செய்ததற்கு லைசென்ஸாக" மாற்றி விட்டார்கள். இதனிமித்தமாய், ஓர் எதிர்பிரதிபலிப்பாக நாம் இந்த வேதாகம சத்தியத்தை தூக்கியெறிந்துவிட்டு, "கிரியைகளினால் நீதிமானாகும்" சத்தியத்தை மாத்திரமே பிரசங்கிக்கும் நிலைக்கு ஒருக்காலும் சென்றுவிடக்கூடாது.

பொதுவாக, மார்க்ககண்மூடி விசுவாசிகள் நற்கிரியைகளினால் நாம் நீதிமானாக்கப்படுவதை மாத்திரமே பிரசங்கிப்பார்கள். இதைத்தான் இந்து மார்க்கமும் மற்ற புறஜாதி மார்க்கங்களும்கூட கடைப்பிடிக்கின்றன. ஓர் மார்க்ககண்மூடித்தனத்திற்குட்பட்ட விசுவாசி ரோமர் 4-ம் அதிகாரத்தை எடுத்துப்பேசினாலும், முடிவில் அந்த அதிகாரமும் நாம் கிரியைகளினால் நீதிமானாகுவதைப் போதிப்பதைப்போலவே நிரூபித்துக் காண்பிப்பார்கள். இவ்விதமாய் மார்க்ககண்மூடி விசுவாசிகள் "அவரே (கிறிஸ்துவே) நமக்கு நீதியுமானார்" (1கொரி 1:30) என்ற சத்தியத்தை மங்க வைத்து "நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்" (ரோ 8:4) என்ற சத்தியத்தையோ அதிக முக்கியப்படுத்திப் பேசிவிடுவார்கள்!!

மார்க்ககண்மூடி விசுவாசிகள் "கிறிஸ்துவின் இரத்தத்தின் மேன்மையை" அதிகமாய் பேசவே மாட்டார்கள். அப்படியே பேசினாலும் அந்த செய்தியை ஏதோ ஆழமான ஆவிக்குரிய தாற்பரியத்தை விளக்குவதுபோல் பேசிவிடுவார்கள். பொதுவாக, ஒருசபையில் பாடப்படும் பாடல்கள் அந்த சபையின் முக்கிய நம்பிக்கைகள் யாதென்பதை சுட்டிக்காட்டும் அடையாளமாய் இருக்கிறது. மார்க்ககண்மூடிக் குழுக்களின் பாடல் புத்தகங்களை நீங்கள் கவனித்துப் பார்த்தால், அவைகளில் பாவ மன்னிப்பைக்குறித்தும், விசுவாசத்தினால் நீதிமானாகுவதைக்குறித்தும், இயேசுவின் இரத்தத்தினால் பாவங்கள் கழுவப்படுவதைக் குறித்துமுள்ள பாடல்கள் அபூர்வமாகவே காணப்படும்.

கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தைக்குறித்து இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பேசினார்கள்! (லூக்.22:20; எபே.2:13). இந்த இரத்தத்தின் மேன்மையை நாமும் நித்தியகாலமாய் பரலோகத்தில் பாடி மகிழப்போகிறோம்!! (வெளி 5:8). ஆனால் இந்த பரவசம் மார்க்ககண்மூடி குழுவினரின் பாடல் புத்தகங்களில் அற்பமாகவோ அல்லது ஒன்றுகூட இல்லாமலோதான் இருக்கும்.

மார்க்ககண்மூடி விசுவாசிகள் வெளித்தோற்றத்தின்படி ஒரு நல்ல ஜீவியம் கொண்டிருப்பார்கள் என்பது உண்மைதான். அதேசமயம் அவர்களுடைய தலைவர்களின் போதனைகளினிமித்தம் தாங்க முடியாத சுமையினால் நசிந்திருப்பதும் உண்மைதான்! அக்குழுவிலுள்ள அநேக விசுவாசிகள் "மெய்யாகவே தேவன் தங்களிடத்தில் மகிழ்ச்சியாயிருக்கிறாரா இல்லையா" என்ற உறுதி அற்றவர்களாய் இருக்கிறபடியால், சகோதரர்களைக் குற்றம் சாட்டும் சாத்தானுடைய தொடர்ச்சியான குற்றச்சாட்டிற்கு உட்பட்டே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இருப்பினும், இவ்விதபிரச்சனைகள் தங்களுக்கு உண்டு என்பதை ஒத்துக்கொள்வதற்கோ இவர்கள் வெகுவாய் தயங்குவார்கள்! ஏனென்றால், தாங்கள் "அவிசுவாசம் கொண்டவர்கள்" என தூற்றப்படுவோம் என்ற பயமே அதற்குக் காரணமாகும்!!

இவ்வித குற்ற உணர்வுகளைப் பயன்படுத்தி, தங்கள் குழுவிலுள்ள விசுவாசிகளை இம்மார்க்ககண்மூடித்தலைவர்கள் "தங்கள் பிடிக்குள்" வைத்துக் கொள்ளுகிறார்கள். இதனிமித்தமே, இக்குழுவினர்களின் பிரசங்கங்கள், ஜனங்களைக் குற்ற உணர்வுக்குள் நடத்தும்படியாய் இருப்பதை நாம் காண்கிறோம். உண்மையில் பார்த்தால், இந்த குற்றவுணர்வு எந்த ஒரு குறிப்பிட்ட பாவத்தைச் சுட்டிக்காட்டுவதாய் இராமல், வெறுமையானதொன்றாகவே இருக்கும்.

இருப்பினும், இக்குழுவிலுள்ள உறுதியான மனம் கொண்ட விசுவாசிகள் இவ்வித குற்ற உணர்வுகளை மேற்கொண்டு விடுவார்கள். ஆனால் பெலவீன மனம் கொண்டவர்களோ சாத்தானால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். இவையாவும் விசுவாசத்தினால் நீதிமானாகும் போதகத்தை அலட்சியப்படுத்தியதால் ஏற்படும் நேரடியான விளைவுகளேயாகும்.

(6) தங்கள் நம்பிக்கைகளை இரகசியப்படுத்துதல் :

மார்க்ககண்மூடித்தனத்தின் ஆறாவது அடையாளம் இவர்கள் தங்கள் நம்பிக்கைகளை இரகசியமாய் வைத்திருப்பார்கள்.

வெளியிலுள்ள விசுவாசிகள், மார்க்ககண்மூடி விசுவாசிகளிடம் வேதவசனத்தின் ஆதாரமில்லாத அவர்களின் நம்பிக்கைகளைக்குறித்து கேள்விகேட்டால், அதற்கு மழுப்பலாகவே பதில் கூறுவார்கள். இவ்வாறு வேத வாக்கியத்தின்படி தங்கள் உபதேசங்களை நிரூபிக்க முடியாத கட்டத்தில் அவர்களிடமிருந்து வரும் நிரந்தரமான பதில் யாதெனில், "உங்களுக்கு பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு வேண்டும்!" என்பதே. வேதவசனத்தில் இல்லாத விசேஷித்த வெளிப்பாடுகள் தேவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் இவர்கள் சொல்லிக்கொள்வார்கள்.

மேலும் இம்மார்க்ககண்மூடி விசுவாசிகள் "இரகசியங்களைக்" குறித்துப் பேசுவதில் அகமகிழ்ந்திருப்பார்கள்! இவ்வாறு பேசி, அவைகள் தங்களுக்கு ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவும்... இந்த வெளிப்பாடு முழுஇருதயம் கொண்டவர்களுக்குத்தான் தேவன் வெளிப்படுத்துவார் என்றும் சொல்லிவிடுவார்கள்! இவ்வாறாக இவர்கள் சொல்லும் போக்கை நீங்கள் கவனித்தால், யாரெல்லாம் தங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டு அந்த குழுவில் சேர்ந்திருக்கிறார்களோ "அவர்கள்தான் முழுஇருதயம் கொண்டவர்கள்" என இவர்கள் அர்த்தப்படுத்துவது நமக்கு விளங்கும்!! தங்கள் சொந்த குழுவிற்கு வெளியே வேறு யாரும் முழு இருதயம் கொண்டவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதே இவர்கள் விசுவாசம்!! இவ்வாறாக பரபரப்பான வாஞ்சை கொண்ட விசுவாசிகளை "சத்தியத்தில் வெளிச்சம் பெற்ற" தங்களின் "தேர்ந்தெடுக்கப்பட்ட மையக் குழுவில்" சேரும்படி செய்து அவர்களைச் சிக்கவைக்கிறார்கள்.

ஆனால், தேவனைப்பற்றிய ஒவ்வொரு இரகசியமும் வேதப்புத்தகத்தில் மிக எளியமுறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே உணமையாகும்.

கிறிஸ்துவைப்பற்றிய இரகசியம் பழைய ஏற்பாட்டு காலங்களில் தான் மறைக்கப்பட்டிருந்ததேயல்லாமல் இப்போதல்ல. இதை எபேசியர் 3:4-6 வசனங்கள் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. கொலோசயர் 1:26,27 வசனங்கள் தேவன் இப்போது இரகசியங்களை "எல்லா பரிசுத்தவான்களுக்கும்" தெரியப் படுத்தியிருக்கிறார் என்றும் கூறுகிறது. ஆகவே, இப்போது இரகசியமென எதுவுமேயில்லை'. ஏனென்றால், புதிய ஏற்பாடு எல்லாவற்றையும் வெளியரங்கமாகவே நமக்குத் தெரியப்படுத்திவிட்டது!!

மாபெரும் இரகசியங்களென இரண்டு இரகசியங்களை புதிய ஏற்பாடு கூறுகிறது. அவைகள் தேவபக்தியயையும், சபையையும் பற்றியதாகும் (1தீமோ 3:16, எபே 5:32). இந்த இரண்டு இரகசியங்கள்கூட மிக எளிய முறையில்தான் தெளிவாய் எழுதப்பட்டும் போதிக்கபட்டும் இருக்கிறது.

இல்வாறு இருப்பினும், ஜனங்கள் இந்த இரகசியங்கனைக் காண முடியவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் இவர்கள் வேதப் புத்தகத்தை கவனமாய் வாசிக்கவில்லை என்பதேயாகும்! அல்லது இவர்கள் தாங்கள் ஏற்கனவே மனதில் கொண்டிருக்கும் கருத்துக்கள் மீது பற்றுதல் கொண்டு ''பெருமை" கொண்டிருக்கிறபடியால், இந்த இரகசியங்களை இவர்களால் காணமுடியவில்லை... அவ்வளவுதான்!! எப்படி இருப்பினும் தேவன் யாரோ சிலருக்கு இரகசியமாய் வெளிப்படுத்தியிருக்கும் வேத இரகசியமென எதுமே கிடையாது!! ஆகவே இந்த மார்க்ககண்மூடிகள் அடிக்கடி பேசிக்கொள்ளும் ''இரகசியங்களைக்" குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

(7) ஒரே சமநிலையை வலியுறுத்துதல்:

மார்க்ககண்மூடித்தனத்தின் ஏழாவது அடையாளம், தங்கள் குழுவினர்களிடம் ஒரே சமநிலையை எதிர்பார்ப்பது தான்.

மார்க்ககண்மூடி விசுவாசிகள் விசுவாசிப்பது யாதெனில், எங்கே ஒரேவித சமநிலை காணப்படுகிறதோ அங்கு தான் ஒற்றுமை காணப்படும் என எண்ணுகிறார்கள். இவர்கள் தங்கள் கூற்றை வலியுறுத்துவதற்காக 1கொரிந்தியர் 1:10 குறிப்பிடும் "நீங்கள் எல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும்..." என்ற வசனத்தைத் தங்களுக்குச் சாதகமாய் தவறாக சுட்டிக்காட்டுகிறார்கள். ஆகவே தங்கள் குழுவினரிடம் ஏதாகிலும் ஒரு சிறு வேறுபாட்டைக்கூட இவர்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். இவ்வசனம் குறிப்படும் "ஒரே காரியம்" ஒரே ஆவியுடையவர்களாய் இருப்பதைக் குறிப்பிடுகிறதேயல்லாமல், ஒவ்வொறு சிறுசிறு காரியங்களையும் சமமாய் ஏற்றுக்கொள்வதைக் குறிப்பிடவில்லை என்பதை இவர்கள் அறியாமலிருக்கிறார்கள்.

"நீங்கள் எவைகளைத் தவறென்றும் சரியென்றும் எண்ணுகிறீர்களோ அதற்கு மாறாக வித்தியாசமான கருத்துக்களைக் கொண்ட எந்த சகோதரனையும் அன்போடு வரவேற்று ஏற்றுக்கொள்ளுங்கள்" (ரோ14:1 - Living Bible மொழி பெயர்ப்பு) என்ற இவ்வசனம் குறிப்பிடும் அன்பான வரவேற்கும் பண்பை இம்மார்க்ககண்மூடி விசுவாசிகள் அறியாதிருக்கிறார்கள். இவர்களின் "அன்பின் வரவேற்பு" இவர்களுடைய காரியங்களை 100% ஏற்றுக்கொள்பவர்களுக்கென்றே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ரோமர் 14 - ம் அதிகாரம் மார்க்ககண்மூடிகள் மத்தியில் போதிக்கப் படுவதேயில்லை! ஏனென்றால் இவர்கள் "தங்களுக்குள் வேற்றுமை இருக்கமுடியும்" என்பதற்கு ஒரு துளியும் இடம் கொடுக்க மறுப்பதே அதற்கு காரணமாகும்.

ஒவ்வொறு மார்க்ககண்மூடிக் குழுவிலும், அந்தந்த தலைமை ஸ்தலத்தில் காணப்படும் முறைமைகள்தான் பின்பற்றப்படும். கூட்டங்கள் நடத்தும் விதம்கூட அதேபோலவே பின்பற்றுவார்கள்.

அநேக இடங்களில், தங்கள் தலைவர்களின் கலாச்சார பழக்கங்களைக் கூட இந்த கண்மூடி விசுவாசிகள் விட்டுவைக்காமல் அதையும் காப்பியடித்துப் பின்பற்றுகிறார்கள்!! இவ்வாறு தங்கள் தலைமை ஸ்தலத்தில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அப்படியே பின்பற்றும்படி அங்குள்ள யாவருக்கும் ஒருவித இனம் தெரியாத அழுத்தம் அவர்களை நெருக்கிக் கொண்டிருக்கும்.

ஊமையைப்போல் புத்தியற்ற செம்மிகளாய் அல்லது ரோபோட் இயந்திரத்தைப்போல் எந்த கேள்வியும் கேட்காமல், இவர்கள் வடிவமைத்திருக்கும் வார்ப்புகளில் தங்களை ஊற்றிவிட மனதாயிருப்பவர்கள் மாத்திரமே தாழ்மையுள்ளவர்களென்றும், தெரிந்து கொள்ளப்பட்ட முழுஇருதயம் கொண்டவர்களென்றும் கருதப்படுவார்கள்! இதைத்தவிர மற்ற யாவரும் "பெருமையுள்ளவர்களென்றும்", "வெளிச்சம் பெறாதவர்களென்றும்" கருதப்படுவார்கள்.

மேலும், யாரெல்லாம் தங்கள் குழுவின் தலைவர்களுக்கு ஏற்றவிதமாய் நடக்கவில்லையோ அவர்களைக் குறிப்பிட்டு "இவர்கள் வாழ்வில் சம்பவிக்கும் மோசமான சம்பவங்களைப் பாருங்கள்!" என கதை கட்டி விட்டு, தங்கள் குழுவிலுள்ள பெலவீன மனம் கொண்ட விசுவாசிகளை ஒருவித அச்சத்தில் நிறுத்தி அவர்களைத் தங்கள் வசம் அடங்கியிருக்கச் செய்வார்கள் !! இதனிமித்தமாய், இவர்கள் தாங்கள் சுயமாய் பகுத்தறியும் தன்மையை கொஞ்சகொஞ்சமாய் இழந்து, இந்தக்குழுவிற்கு அடிமையாகவே மாறிவிடுகிறார்கள்!! இயேசுவோ, இவ்வாறு கட்டுண்டவர்களை விடுதலையாக்கும்படிக்கே வந்தார். இன்றும் இவ்வாறு மார்க்ககண்மூடி பிரசங்கிகளின் மூலமாய் சிறைக் கூண்டில் அடைப்பட்டிருக்கும் எண்ணற்ற விசுவாசிகள் விடுதலையாக வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது!!

ஒருவராகிலும் தங்களுக்கென்ற உறுதியான உணர்த்துதல் இல்லாமல் எந்தவொரு முறைமைகளையும் ஒருவித நெருக்கத்தில் பின்பற்றிவர நம் தேவன் விரும்புவதேயில்லை. தேவன் விரும்புவதெல்லாம் "மனப்பூர்வமாய்" கீழ்ப்படியும் கீழ்ப்படிதல் மாத்திரமே. ஏனெனில் "உற்சாகமாய் (மனப்பூர்வமாய்) கொடுக்கிறவனிடத்தில் தான் (பணமோ அல்லது கீழ்ப்படிதலோ) தேவன் பிரியமாயிருக்கிறார்" என வேதம் தெளிவாய்க் கூறுகிறது ( 2கொரி 9:7). ஆம், அவர் எவ்வித கட்டாயத்தையும் அருவெறுக்கிறார்.

நம்முடைய சுயசித்தத்தில் தேவன் ஒருபோதும் தலையிடுவதேயில்லை! நாம் அவருக்கு கீழ்ப்படிவதற்கோ அல்லது கீழ்ப்படியாமல் இருப்பதற்கோ நமக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் இவ்வித பூரண சுதந்திரத்தின் வழியாகத்தான் உண்மையான பரிசுத்தம் வளரமுடியும் என்பதை தேவன் அறிந்திருக்கிறார்.

மெய்யான பரிசுத்தமாகுதல் "தெய்வ பயத்தில்தான்" பூரணப்படுகிறதேயல்லாமல் மனுஷருக்குப்பயப்படும் பயத்திலல்ல!! (2கொரி 7:1)

ஆகவே தேவன் நம்மிடத்தில் விரும்பும் கீழ்ப்படிதல், அன்பினால் தூண்டப்பட்டோ அல்லது நன்றியினால் உந்தப்பட்டோ இருக்க வேண்டுமேயல்லாமல், "நியாயத்தீர்ப்பின் பயத்தினாலோ" அல்லது

"பிரதிபலனைப்பெறும் நம்பிக்கையினாலோ" இருந்துவிடக்கூடாது !! தங்களுடைய குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவோ அல்லது எவ்வித பயத்தின் அழுத்தத்தினாலோ உண்டாகும் எந்த கீழ்ப்படிதலும் செத்த கிரியையாகும். இவ்வித கிரியைகளுக்கு தேவனிடத்தில் எந்த மதிப்பும் இல்லை! இவ்வித கிரியைகள் உங்கள் குழுவினரிடத்தில் வேண்டுமானால் கனத்தைப் பெற்றுத் தரலாம்!!

இங்கு தான், நாம் தேவனுடைய அங்கீகாரத்தை நாடுகிறோமா அல்லது நம்முடைய சக விசுவாசிகளின் அங்கீகாரத்தை நாடுகிறோமா என்பதைக் காண்பதற்கு தேவன் நம் எல்லோரையும் சோதித்தறிகிறார்!!

(8) சுயாதீனமான சுதந்திரத்தில் நிலைகொண்டிருப்போமாக:

"ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்" (கலா 51:1).

கிறிஸ்தவ ஜீவியத்தின் மாபெரும்போராட்டம் கோபத்திற்கு எதிரானதோ அல்லது அசுத்த சிந்தைகளுக்கு எதிரானதோஅல்ல. ஆம், மனுஷர்களுடைய அங்கீகாரத்தைப்பெறும் விருப்பத்திற்கு எதிராகவே இந்த மாபெரும் போராட்டம் அமைந்திருக்கிறது. நாம் மெய்யாகவே சுயாதீன சுதந்திரத்தை நாடுபவர்களாயிருந்தால், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவர்களாய் தேவனுடைய முகத்திற்கு முன்பாக மாத்திரமே ஜீவித்திட உறுதியான தீர்மானம் எடுத்திட வேண்டும்.

நீங்கள் ஓர் மார்க்ககண்மூடித்தன மனப்பான்மை கொண்டவர்களாய் இருந்து கொண்டே ஓர் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க முடியும் என்ற அபாயத்தை இன்றாவது அறிந்து கொள்ளுங்கள். இவ்வித மனப்பான்மையை கொண்டிருக்கும் நீங்கள் "தேவனுடைய பரிபூரண நோக்கத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றிட ஒருக்காலும் முடியாது" என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். தங்களைச் சுற்றிலும் தங்கள் மார்க்க கண்மூடி பிரசங்கிகளால் போடப்பட்டிருக்கும் "சிறை கம்பிகளுக்கு" எதிராக பலவந்தம் செய்பவர்கள் எவர்களோ அவர்கள் மாத்திரமே தேவனுடைய இராஜ்ஜியத்தைப் பற்றிக் கொள்ள முடியும்!

ஆகவே "மனுஷருடைய அபிப்பிராயங்களின்" எல்லா அடிமைத்தனத்தையும், என்ன விலைக்கிரயம் செலுத்தியாகிலும் உடைத்தெறிவதற்கு நாம் தீர்மானிக்கக்கடவோம்! அப்போது மாத்திரமே தேவபுத்திரர்களுக்கே உரிய மேன்மையான "சுயாதீன சுதந்திரத்திற்குள்" நாம் பிரவேசிக்க முடியும்!! கேட்பதற்குக் காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்! ஆமென்.

- சகரியா பூணன்