இந்த ஸ்திரீகளே தேவனுக்குத் தேவை!

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   மகளிர் சீஷர்கள்
Article Body: 

ஆதியில் தேவன் படைத்த ஒரே ஸ்திரீயாகிய ஏவாள் மூலம் வெளிப்படுத்தும்படி மனதிற்கொண்டாரே, "அந்த மகிமையை" தங்களின் உத்தமமான ஜீவியத்தின் மூலம் பிரகாசிக்கச் செய்திடும் ஸ்திரீகளே தேவனுக்கு இன்று தேவை!

மனிதனின் ஏற்ற துணையாய் இருப்பதன்றோ அவளின் மகிமை!

ஸ்திரீயானவள் மனிதனுக்கு ஏற்ற துணையாய் அல்லது ‘உதவுகின்றவளாய்’ (HELPERS) இருக்கவேண்டும் என்றே தேவன் ஏவாளை சிருஷ்டித்தார் (ஆதி 2:18). இந்த ஊழியத்தின் மகிமைதான் எத்தனை பெரியது! ஏன் தெரியுமா? இயேசுவானவர் பரிசுத்தாவியானவரை குறிப்பிடும் போதெல்லாம் அவரையும் தேற்றுதல் செய்து "உதவுபவர்" (HELPER) என்றே (யோவான் 14:16) குறிப்பிட்டார்!

பரிசுத்தாவியானவர் எவ்வாறு ஒரு விசுவாசிக்கு மறைந்து நின்று, மௌனமாய் ஆனால் அதே சமயம் வல்லமையாய் உதவி செய்கிறாரோ, ‘அதைப்போலவே’ ஸ்திரீயானவளும் மனிதனுக்கு உதவும்படி படைக்கப்பட்டாள். ‘காட்சிக்கு பின்னாக மறைந்து’ ஊழியம் செய்வது பரிசுத்தாவியானவரின் தனிச்சிறப்பு. ஆ, அதுவே ஸ்திரீக்கும் உரித்தாகும்!

1. கீழ்படிதலின் ஆவியையுடைய மனைவியே இப்பாருலக வல்லமைகளுக்கெல்லாம் மேலான வல்லமை பெற்றவள்! இவள் தன் புருஷன் மாமன்னாய் இருக்கும்படி முடிசூட்டி, தன் இல்லத்தை இராஜ அரண்மனை ஆக்கிவிடுகிறாள்!!

இயேசுவின் வாழ்க்கையும் ஸ்திரீகளுக்கு மாதிரியாய் அமைகின்றது. எப்படியென்றால், புருஷன் எவ்வாறு ஸ்திரீக்கு தலையாய் இருக்கிறானோ அதைப்போலவே, பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குத் தலையாய் இருக்கிறார் என வேதம் கூறுகிறது (1கொரி 11:3). இயேசுவானவர் எப்போதுமே தன் பிதாவுக்கு அடங்கி கீழ்ப்படிந்தே ஜீவியம் செய்தார். கர்த்தருக்குப் பயந்த ஓர் சகோதரியும் இதைப்போலவே, தன் கணவனுக்கு அடங்கியிருப்பாள். ஆனால், அந்தோ! ஏவாள் தீர்மானம் எடுக்கும் முன்பு தன் புருஷனைக் கலந்தாலோசிக்கத் தவறி, ஏதேன் தோட்டத்தில் பெரும் பிழையைச் செய்தவளாய் நின்றாள்! இப்படிதான் அவள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டாள் (1தீமோ 2:14). ஏவாள் எங்கு தோற்று வீழ்ந்தாளோ, அதே இடத்தில் இப்போது தங்கள் புருஷர்களுக்கு ‘அடங்கி ஜீவிக்கும் மகிமையை’ ஜொலித்திடச் செய்யும்படி, தேவன் இன்று கிறிஸ்தவ மனைவியர்களை அழைக்கிறார்! ஆம், இயேசு தன் பிதாவுக்கும், சபை கிறிஸ்துவுக்கும் அடங்கி இருப்பதற்கொப்பான (எபே 5:24) அதே மகிமை!!

பாவமானது, முரட்டாட்டமான லூசிபரினால் இவ்வையகம் பிரவேசித்தது! இரட்சிப்போ அடங்கி கீழ்படிந்த கிறிஸ்துமூலமாய் மலர்ந்து விரிந்தது!! தேவன் நியமித்த அதிகாரத்திற்கு தாழ்ந்து கீழ்படிந்திருக்கும் ஆவியே, இம்மண்ணுலகில் காணும் சகல வல்லமையிலும் மேலான வலிமை நிறைந்தது. ஏன்தெரியுமா? ஏனெனில், அதுவே கிறிஸ்துவின் ஆவி! இந்த ஆவியே, முரட்டாட்ட ஆவிகளின் மொத்த ரூபத்தை சிலுவையின் மேல் வெற்றி சிறந்து கெம்பீரித்தது. ஓர் மனைவி தன் புருஷனுக்கு அடங்கி கீழ்படியும்போது, அவள் செய்வதெல்லாம், அவ்வாறு கீழ்படியும்படி கட்டளையிடும் தேவ வார்த்தையின் அதிகாரத்திற்கே கீழ்படிந்தவளாகிறாள்! இப்போது நடப்பது என்ன? கேளுங்கள்! அவள் இப்பாருலக வல்லமைகளுக்கெல்லாம் மேலான வல்லமையால் நிறைந்தவளாகிறாள்! இந்த வல்லமையால், அவள் தன் மனந்திரும்பாத புருஷனையும் ஆதாயம் செய்துவிடுகிறாள்! (1பேதுரு 3:1,2). இவ்வாறு தன் ஜீவியகாலமெல்லாம் கீழ்படிதலின் ஆவியில் ஜீவிப்பாளென்றால், அவள் ஜெயம் பெற்றவளாய் சீர் பெற்று, இயேசுவோடு நித்திய காலமாய் ஆளுகை செய்யும் பாக்கியத்தையும் (வெளி 3:21) பெற்று விளங்குவாள்!.

சத்துருவாகிய சாத்தான், எவ்வாறு தூதர்களை வழி தப்பிச் சீரழிய நடத்தினானோ, அதைப்போலவே முரட்டாட்ட ஆவியின் மூலமாக ஸ்திரீயையும் நடத்தி அவளை வஞ்சிக்கிறான். முரட்டாட்டமான மனைவி தன் இனிய இல்லத்தைப் பாழான பாலைவனத்திற்கும் கேடான வனாந்திரமாய் மாற்றி விடுகின்றாள். இப்படித்தான் நீதிமொழிகள் 21:19 விவரிக்கின்றது. இதற்கு நேர்மாறாக, குணசாலியான கீழ்படிந்து ஜீவிக்கும் மனைவியோ தன் புருஷன் மாமன்னனாய் இருக்கும்படி முடிசூட்டி (நீதி 12:4) தன் இல்லத்தை இராஜ அரண்மனை ஆக்கி விடுகின்றாள்!. ஆவிக்குரிய வர்ணிப்பின்படி, சகோதரியே! உங்கள் இல்லம் இராஜ அரண்மனையாகவோ அல்லது பாலைவன வனாந்திரமாகவோ மாறிவிட முடியும். இவையாவும் நீங்கள் எந்த ரக மனைவியாய் இருப்பீர்களோ அதைப் பொருத்தே உள்ளது. காரியம் இப்படியாயிருக்கும்போது, தேவனுடைய பார்வையில் சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியே (1பேதுரு 3:4) விலையேறப்பெற்றதாய் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!

2. குணசாலியான ஸ்திரீ அழகில்லாமல் இருக்கலாம். ஆனால், தேவனின் மகிமையை ஜொலித்திடச் செய்வதெல்லாம் இவளின் சுத்த இருதயமே! வேலை செய்து காய்த்துப் போன இவளின் சொரசொரப்பான கரங்களே! மென்மை விளங்கும் தயை பொருந்திய அவளின் நாவே!!!

குணசாலியான ஸ்திரீயைப்பற்றிய சில குணாதிசயங்களை நீதிமொழிகள் 31:10-31- ஆம் வசனங்கள் மிக அழகாய் சித்தரிக்கின்றது. அவளின் இருதயம், அவளின் கரங்கள், அவளின் நாவு மிக அருமையானது என கூறப்பட்டுள்ளது. ஆனால், அவளின் சரீர அழகைப்பற்றியோ, ஸ்திரீகளுக்குரிய கவர்ச்சியைப்பற்றியோ.... ஒன்றுகூட சொல்லப்படவில்லை! ஏனென்றால், அவைகளெல்லாம் வஞ்சனையும் வீணனதுமே என (வசனம் 30) பகிரங்கப்படுத்தப்பட்டு விட்டதே!! இந்த உண்மையை எல்லா ஸ்திரீகளும், வாலிபப் பெண்களும், குறிப்பாக..... திருமணம் செய்ய காத்திருக்கும் வாலிபர்களும் தீர்க்கமாய் உணர்ந்துவிட்டால் காரியம் மிக அருமையாக மாறிவிடுமே!!

போற்றி சொல்லப்பட்டிருக்கும் இந்த குணசாலியான ஸ்திரீ, ‘கர்த்தருக்குப் பயந்திடும் இருதயம் கொண்டவள்’! இதுவன்றோ அவளின் முழுஜீவியத்திற்கும் அரண் போன்ற அஸ்திபாரம்! அவள் தன் கரங்களால் உற்சாகத்தோடு வேலை செய்கிறாள்; உடுப்புகளைப் பின்னித் தைக்கிறாள்; தன் வீட்டாருக்கு ஆகாரம் சமைக்கிறாள்; மரங்களை நடுகின்றாள்; ஏழைகளுக்கு உதவிகரம் நீட்டுகிறாள் (வசனம் 13-22). தன்நாவை ஞானமும் தயையும் விளங்கவே எப்போதும் உபயோகிக்கின்றாள் (வசனம் 26). பார்த்தீர்களா இவளை! இவளுக்கு ஒருவேளை அழகில்லாவிட்டாலும், இவளோ கர்த்தருக்குப் பயந்தவள், கடினமாய் உழைக்கும் அன்பு நிறைந்தவள்!! தேவனின் மகிமையை ஜொலித்திடச் செய்வதெல்லாம் இவளின் சுத்த இருதயமும், இவளின் சொரசொரப்பான கரங்களும், மென்மை விளங்கும் தயைபொருந்திய இவளின் நாவேயாகும்! இவ்வாறு அவரின் மகிமையை விளங்கச்செய்யும் ஸ்திரீகளைக் காண்பதற்கே தேவன் தவித்து நோக்குகின்றார். ஆனால், லௌகீகமான இவ்வுலக ஸ்திரீகளோ நேருக்குமாறாய், அருவருக்கும் இருதயம் உடைவர்களாயும்; முரட்டு நாவுடையவர்களாயும்; ஆனால், கரங்களோ....... பூப்போன்ற மென்மையுடையவர்களாயும், இருக்கின்றனர்! இது பரிதாபமன்றோ!

3. தன் புருஷனின் அழைப்பு, சம்பாத்தியத்திற்கேற்ப ‘இணங்கி’ செல்லுவாள் இக்குணவதி! எளிய உணவேயானாலும், படுக்கத் தரையேயானாலும் அதை மனமுவந்து கொடுத்து விருந்தோம்பலில் மேம்பட்டு நிற்ப்பாள் இக்குணசீலி!

மனைவியின் ஸ்தானத்தில், இக்குணசீலியான ஸ்திரீ தன் கணவனுக்கு உதவும்படி அவனுக்கு உறுதுணையாய் நின்றிடுவாள். எப்போதோ தனக்கு இஷ்டமான நேரத்தில் அல்ல, ‘அவள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எக்காலமும் தன் புருஷனுக்கு நன்மையையே செய்கிறாள்’ (வசனம் 12). சரியாய்ச் சொல்லவேண்டுமென்றால், இவள் தன் புருஷனிடம் கொண்ட ஆதி அன்பை ஒருபோதும் இழக்காத பெண்மணி! இவள் தன் புருஷனின் சம்பாத்தியத்திற்கும், அழைப்பிற்கும் ஏற்ப "இணங்கி" செல்லுவாள். தன் வீட்டில் அமைதலாய் உழைக்கும் உழைப்பையும், ஒரு காசுகூட வீணாக்காமல் ஜாக்கிரதையாய் செலவுசெய்யும் அவள் சிக்கனத்தையும், ‘கூடுதல்படியாக’ தன் புருஷனின் சம்பாத்தியத்தோடு கூட்டி வழங்குவாள்! தேசத்தில் கர்த்தர் தன் புருஷனுக்கு நியமித்த ஊழியத்தை நிறைவேற்றும் பொருட்டு, அவனை வீட்டு வேலைப் பொறுப்புகளிலிருந்து விடுதலை செய்கிறாள் (வசனம் 23-27). இப்பேர்ப்பட்ட குணசாலியான ஸ்திரீயை, அவள் இவ்வுலகத்தில் உள்ள எல்லா ஸ்திரீகளிலும் (பெண் பிரதம மந்திரிகளோ, பிரசங்கிக்கும் ஸ்திரீகளேயானாலும்) அவர்களைக் காட்டிலும் நீயே மேற்ப்பட்டவள் என அவள் புருஷன் புகழ்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை (வசனம் 29). தான் ஸ்திரீயாக அழைக்கப்பட்டதின் மகிமையை உண்ர்ந்திருக்கும் இக்குணசீலி, பகிரங்கமாயும் புகழப்பட தகுதி பெற்றவளாவாள் (வசனம் 31).

நம் வீட்டில் ‘பரிசுத்தவான்களுக்கு செய்யும் பணிவிடை குறித்து புதிய ஏற்பாடு அதிக முக்கியத்துவம் தருகிறது. ‘உணவோ அல்லது இரவு தங்குவதற்கு இடமோ தேவையானோருக்கு பகிர்ந்தளிக்கும்படி உங்கள் இல்லத்தை மகிழ்வுடன் திறந்திடுங்கள்.... விருந்தாளிகளை விருந்துண்ண அழைக்கும் நற்பழக்கத்தை நாடுங்கள்’ என Living Bible மொழிபெயர்பு 1பேதுரு 4:9; ரோமர் 12:13 வசனங்களில் கூறுகின்றது. வீட்டில், விருந்தோம்பலின் பொறுப்பு மனைவிக்கே பிரதானமானது. ஒரு ஸ்திரீ தீர்க்கதரிசியாய் இல்லாமலே, ஒரு தீர்க்கதரிசியை தன் வீட்டிற்கு வரும்படி வரவேற்றதினிமித்தம் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைந்திட முடியும் (மத் 10:41) இயேசுவின் மிகச் சிறிய சீஷனுக்கு செய்த பணிவிடை நிமித்தமும் தன் பலனை அடையாமலிருக்கமாட்டாள் (மத் 10:42). நம் வீட்டில் ஓர் அப்போஸ்தலனை மனமுவந்து ஏற்றுக்கொள்வது இயேசுவையே ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும் (மத் 10:40). அதுப்போலவே, இயேசுவின் நாமத்தில் ஓர் சிறு பிள்ளையை ஏற்றுக்கொள்வதும் இயேசுவையே ஏற்றுக்கொண்டதற்கு இணையாகும் (மத் 18:6). உபசரிக்கும் விருந்தோம்புதலின் மூலம் சகோதரிகளுக்குதான் எத்தனை அருமையான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது! ஆதிக்கிறிஸ்தவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே மிக ஏழைகள், ஆனால் இவர்களுக்குத்தான் பவுலும், பேதுருவும் விருந்தோம்புதலைக் குறித்து நிருபங்கள் எழுதினர். எளிய உணவேயானாலும், படுத்துறங்க வெறும் தரையே ஆனாலும், அதைத்தான் மனமுவந்து பரிசுத்தவான்களுக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மனுஷீகப் புகழ்ச்சியை நாடும் விசுவாசிகள் மட்டுமே, கொழுத்த உணவும், ஆடம்பர தங்கும் வசதியும் இருந்தால்தான் உபசரிக்கமுடியும் என எண்ணிக்கொள்ளுகிறார்கள். ஆனால், 1தீமோ 5:10 - ம் வசனம் கூறும் உண்மையைக் கேளுங்கள்! முதலாம் நூற்றாண்டில் காணப்பட்ட ஏழை விதவைகள் கூட தங்கள் வீட்டில் பரிசுத்தவான்களுக்குப் பணிவிடை செய்திருக்கிறார்கள்!

ஆம், தான் ஒரு வீட்டை உருவாக்குபவள் என்ற தன் அழைப்பை கண்டுகொண்ட ஓர் ஸ்திரீயிடமே தேவனின் மகிமையைக் காண முடியும்!!

சிறந்த தாயாக ஜொலிக்கும் அவளின் மகிமை!

ஆதாம் தன் மனைவியை ‘ஏவாள்’ என அழைத்தான். அதற்கு காரணம், அவள் ஒரு தாயாக இருந்ததேயாகும். ஏதேன் தோட்டத்தில், தேவ பிரசன்னத்தின் அத்தூய ஒளியில் அவன் தன் மனைவியின் ஊழியம் இன்னது என அவ்வளவு துல்லியமாக அறிந்துணர்ந்தான்! ஏவாளும் அதை மனுஷீகப் பாரம்பரியங்களும் ஸ்திரீயானவள் ஓர் தாயாக இருக்கும் அவளின் மகிமையைக் காணக் கூடாதபடி அவளின் மனக்கண்களை மந்தாரமடையச் செய்துவிட்டது. தேவன் பிள்ளைகளை ‘சுதந்திரம்’ (சங் 127:4) என அழைக்கும்போது, இன்று பிள்ளைகள் சாத்தானுக்குரிய முத்திரையான ‘விபரீதங்கள்’ என்றல்லவா அழைக்கப்படுகின்றனர்! மேலும், தேவன் அவர்களை ‘ஆசீர்வாதமாகக்’ கருதும்போது (சங் 127:5, 128:1) இன்று அவர்கள் ‘தொந்தரவு பிடித்ததுகள்’ என்றல்லவா கருதப்படுகின்றனர். இவையெல்லாம், இன்று எவ்வாறு கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் கூட எத்தனை வெகுதூரம் தேவனைவிட்டு வழிவிலகிச் சாத்தானுக்குரிய சிந்தைகளால் வீணராய் வீழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு!

1. தீமோத்தேயுவின் தாய் ஐனிகேயாள் 100 வருடம் இந்த உலகம் முழுவதையும் சுற்றிய ஓர் பிரசங்கியாய் இருந்து சாதிப்பதைக் காட்டிலும், தன் வீட்டில் சுமார் 20 வருடங்கள் முதல்தரமான தாயாகத் தரித்திருந்து ஆண்டவருக்கும் சபைக்கும் அதிகமானதைச் செய்து சாதித்துக் காட்டினாள்!

தீமோத்தேயுவின் தாயாகிய ஐனிக்கேயாளோ முற்றிலும் வேறுபட்ட பெண்மணி! ஆம், அவள் தன் அழைப்பைத் தெளிவாகக் கண்டிருந்தாள். தன் கணவன் அவிசுவாசியாய் இருந்தபோதும் (அப் 18:1) அது அவளின் விசுவாசத்தை மங்கச் செய்துவிடவில்லை. அவள் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்த ‘உத்தம விசுவாசம்’ (2தீமோத் 1:4) நிறைந்த குணவதி! அவள் தீமோத்தேயுவுக்கு சிறுவயது முதல் தேவனுடைய வார்த்தைகளைக் கற்று கொடுத்தாள் (2தீமோ 3:14,15). இதற்கெல்லாம் மேலாக, அவள் தன் உத்தம விசுவாசத்தை அவனுக்குள் பொதித்து வைத்துவிட்டாள்! அவிசுவாசத்தின் நச்சுப்புகை சூழ்ந்த ஓர் உலகில், தன் மகன் சுத்தமான ‘விசுவாசக்’ காற்றை சுவாசிக்கச் செய்திட்ட சிறந்த தாயை உடைய ஓர் இனிய இல்லமாயிருந்தது தீமோத்தேயுவின் வீடு! அவன் தன் தாய் இடைவிடாமல் ஜெபித்ததைக் கண்டிருந்திருக்கக் கூடும். தன் தாய் எப்போதும் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பதைப் பார்த்திருப்பான், கஷ்டம் நிறைந்த சூழ்நிலைகளில் தன் தாய் தேவனையே சார்ந்து நம்பியிருந்ததைக் கவனித்திருப்பான். சண்டையிடுவதும், குறை சொல்லி முறுமுறுப்பதும் ஆகிய ஜீவியம் சிறிதும் இல்லாதிருந்ததையும் கண்டிருப்பான். ஆம், இவைகளெல்லாம் ‘உத்தம விசுவாச’ குணாதிசயங்களில் ஒரு சிலவாகும். எனவேதான், தீமோத்தேயு ஓர் அப்போஸ்தலனாக உருவெடுத்ததும், அப்போஸ்தலனாகிய பவுலின் நெருங்கிய உடன் வேலையாளாய் இருந்ததும் ஆச்சரியம் தருவதாகவே இல்லை. பார்த்தீர்களா! அவன் தாயின் பிரயாசங்கள் முடிவில் கனிகொடுத்துக் குலுங்கிவிட்டதே!!

இதுவே, இன்றைய 20 ம் நூற்றாண்டின் எல்லாத் தாய்மார்களுக்கும் ஓர் சவாலாய் மாறட்டும்! தீமேத்தேயுவின் தாய் ஐனிக்கேயாள் 100 வருடம் இந்த உலகம் முழுவதும் சுற்றிய ஓர் பிரசங்கியாய் இருந்து சாதிப்பதைக் காட்டிலும், தன் வீட்டில் 16- முதல் 20 வருடங்கள் முதல் தரமான தாயாகத் தரித்திருந்து ஆண்டவருக்கும், சபைக்கும் அதிகமானதைச் செய்து சாதித்துக் காட்டினாள்!! சமீபகாலங்களில், 15- குழந்தைகளுக்கு தாயாக இருந்த சூசன்னாள் வெஸ்லி என்ற குணசாலியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமே, அவள் இல்லத்தில் தரித்திரம் தாண்டவமாடி அதனிமித்தம் அவளின் சில குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போனது. ஆனால், மீதியாயிருந்த பிள்ளைகளுக்கோ அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் போதித்து தெய்வபயத்தில் வளர்த்தார்கள்! இவ் உத்தமியின் புத்திரர்களுள் ஒருவனான ஜான்வெஸ்லி தேவனுடைய கரத்தின் வலிமையான ஆயுதமாக உருவெடுத்து வளர்ந்து நின்றான். இந்த மகனின் ஊழிய உழைப்பாலும், எழுத்தினாலும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இவ்வையகமெங்குமுள்ள கோடிக்கணக்கானோர் ஆசீர்வதிக்கப்பட்டனர். ஒருவேளை சூசன்னாள் வெஸ்லி தன் இல்லத்தை உதாசினம் செய்து, பணம் அதிகம் சம்பாதிக்க வேலைக்கு சென்றிருந்தாலோ அல்லது வேத போதகியாய் அல்லது சுவிசேஷகியாய் இவ்வுலகம் முழுவதும் சுற்றி வந்திருந்தாலோ, தன் புத்திரன் சாதித்த கிரியைகளில் ஓர் இம்மி அளவுகூட செய்திருக்கமுடியாது.

2. பிள்ளைகளை அலட்சியம் செய்து, சுகபோக வாழ்விற்காக பணம் சம்பாதிக்க வேலைக்குச் சென்ற பெண்களும், வசனத்திற்கு முரணாய் பிரசங்கிக்கச் சென்ற ஸ்திரீகளும், பிற்காலத்தில் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் ஓர் தீமையில் வீழ்ந்து அல்லலுறுவதையேக் கண்டிருக்கிறார்கள்!

புருஷர்களுக்கும் - ஸ்திரீகளுக்கும் உரிய ஊழியங்கள் குறித்து பவுல் தீமோத்தேயுக்கு எழுதும்போது, ஸ்திரீகளுக்கு போதக ஊழியத்திலும், மூப்பரின் ஊழியத்திலும் அனுமதியில்லாவிட்டாலும், "தாய்மையின்" ஊழியத்தில் தனக்கு உரிய பங்கைப் பெறுகின்றாள் என எழுதினார் (1தீமோ 2:12,15). இந்த நிருபத்தின் வாயிலாக, தாய்மையை பவுல் ஓர் சபை ஊழியமாகவே சிறப்பித்துக் கூறியது தெளிவாய் விளங்குகிறது. ஸ்திரீகளை தங்கள் பிள்ளைகளுக்கு கர்த்தருக்குப் பயந்த ஓர் தாயாக இருக்கும்படி தேவன் அழைத்ததே, அவர்கள் ஊழியத்தின் இரண்டாவது ஸ்தானம். தீமோத்தேயு தன் இளம்பிராயத்தில், தன் வீட்டில் பிரவாகித்த இம்மகிமையைக் கண்டிருந்தான். இப்போது அதைக் குறித்து எபேசுவில் உள்ள மற்றவர்களுக்கும் போதிக்கிறவனாய் பேறு பெற்றான்.

வாழ்வின் அனேக பகுதிகளில் ஸ்திரீகளைக் காட்டிலும் புருஷர்களே மேம்பட்டு நிற்கின்றனர். இருப்பினும், ஸ்திரீகள் தங்களுக்கே உரிய தனி சிறப்புப் பெற்று விளங்கும் ஒரே இடம் ‘தாய்’ என்ற ஸ்தானமே. இதுவே, ஸ்திரீயைத் தேவன் ஏன் படைத்தார் என்பதை தெளிவுபட சுட்டிக்காட்டுகின்றது. ஆரம்ப காலத்தில் தன் பிள்ளைகளை அலட்சியம் செய்து, சுகபோக வாழ்விற்காக பணம் சம்பாதிக்க வேலைக்குச் சென்ற பெண்களோ அல்லது பெண்பிரசங்கிகளோ ஆனாலும் பிற்காலத்தில் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் ஓர் தீமையில் வீழ்ந்து அல்லலுறுவதைக் காணும் அபாக்கிய அனுபவத்தையே அடைந்திருக்கிறார்கள். இப்போது, அப்பிள்ளைகளுக்காய் இந்த ஸ்திரீகள் மனம் நொந்து இருப்பதைத் தவிர்த்து அவர்களால் வேறு ஒன்றும் செய்திடமுடியாது! இதுவே இன்றைய இளைய தாய்மார்களின் சந்ததிக்கு ஓர் எச்சரிக்கையாய் மாறட்டும்! ஓர் தாய் தன் குடும்பத்தின் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றால், அக்குடும்பத்திற்கு தேவன் தன் கிருபையை அபரிதமாக நிச்சயம் தருவார். ‘ஆனால்’ ஆடம்பரத்தையும், உயர் ரக வாழ்க்கையையும் தங்கள் நோக்கமாய் கொள்ளும் ஸ்திரீ, கறைப்பட்ட அறுவடையின் பலனைதான் எதிர்நோக்க முடியும். ஆம், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார் (கலா 6:7,8).

ஆ! தங்கள் அழைப்பின் மகிமையைகாணும் பொருட்டு இன்றைய எல்லாத் தாய்மார்களின் கண்களும் திறக்கப்படுவதாக!

கிறிஸ்துவுக்கு சாட்சியாக நின்று மிளிரும் அவளது மகிமை!

நாம் மேற்கண்டதுப்போல, மனுஷனுக்கு ஏற்றதுணையாய் இருப்பதும், தன் பிள்ளைகளுக்கு சிறந்த தாயாக இருப்பதுமே பெண்கள் பிரதானமாய் கிறிஸ்துவுக்கு சாட்சியாகத் திகழுவதற்கும் தேவன் அழைத்திருக்கிறார், இப்புதிய ஏற்பாட்டின் காலத்தில், தேவன் ஒரு ஸ்திரீயை அபோஸ்தலராகவோ, தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகனாகவோ, மேய்ப்பனாகவோ, போதகனாகவோ இருக்கும்படி அழைக்கவே இல்லை. பழைய உடன்படிக்கையின் கீழ் மாத்திரமே பெண்தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். அவர்களின் வரிசையில் அன்னாள் கடைசியாக முற்றுப்பெற்றாள். பெந்தேகொஸ்தே நாளுக்குப்பிறகு புதியஏற்பாட்டில் காணப்படும் ஒரே ஒரு பெண் தீர்க்கதரிசி ‘யேசபேல்’ என்னும் (வெளி 2:20) கள்ளத்தீர்க்கதரிசி. காரியம் இப்படியாய் இருக்கும்போது, தங்களை ஓர் தீர்க்கதரிசி அல்லது பிரசங்கி என கூறிக்கொள்ளும் எந்த ஸ்திரீயும் யேசபேலின் அடிச்சுவட்டைப் பின் தொடர்ந்து செல்பவர்களே! சிறிதும் பிழையற்ற இவ்வுண்மையை யாவரும் அறிந்திடுங்கள்! இப்படிப்பட்ட ‘யேசபேல்களை’ வல்ல தேவனின் ‘எலியாக்கள்’ (1இராஜா 21:20-23) கடுமையாய் எதிர்த்து நின்று, அவர்களின் மூடுதிரையை கிழித்து வெளியரங்கப்படுத்த வேண்டும்! புதிய ஏற்பாட்டின் ஸ்திரீகள், பிலிப்புவின் குமாரத்திகளைப் போல அவ்வப்போது தீர்க்கதரிசனம் சொல்லலாம். ஆனால் அந்த சகோதரிகள் தீர்க்கதரிசிகளாய் இல்லை எனபது தெள்ளத்தெளிவாக உள்ளது. எப்படியெனில், தேவன் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஓர் செய்தியைக் கொடுக்க, பவுல் பிலிப்புவின் வீட்டில் இருந்த போதும், அவனின் நான்கு குமாரத்திகளில் ஒருவரையும் உபயோக்கிக்கவில்லை. மாறாக, அகபு என்னும் தீர்க்கதரிசியை தேவன் ஐம்பது மைல்கள் அப்பாலிருந்து கொண்டு வந்தார் (அப் 21:8-11). இயேசுவானவர் ஒரு ஸ்திரீயை தன் அப்போஸ்தலராக இருக்கும்படி ஒருபோதும் தெரிந்துக்கொண்டு அழைக்கவேயில்லை. அதற்குக்காரணம், ஸ்திரீயானவள் புருஷன்மேல் எக்காலமும் அதிகாரஞ்செலுத்தக்கூடாது (1தீமோ 2:12) என்ற அவரின் நியமனமே! இவ்வாறு ஊழியங்களில் ஒரு இடம் கூட ஸ்திரீகளுக்கு வாய்ப்பு இல்லாது போனாலும், அவள் வேறு பல வழிகளில் கிறிஸ்துவுக்கு சாட்சியாக நின்று மிளிருவது சாத்தியமாயிருக்கிறது!!

1. மகதலேனா மரியாளைப் போன்று, தான் கண்டு அனுபவித்ததை ஆவியில் நிறைந்த ஒவ்வொரு சகோதரியும், தங்களிடம் தொடர்பு கொள்பவர்களுக்கு சுவிசேஷத்தை வழங்குவதில் உத்தம சாட்சிகளாய் திகழவேண்டும்!

உயித்தெழுந்த கிறிஸ்துவுக்கு முதல் சாட்சியாக விளங்கியது மகதலேனா மரியாளே! அவள் ஓர் சுவிசேஷகி அல்ல; ஆனால் தான் கண்டு அனுபவித்ததை சாட்சி பகிர்ந்த உத்தம சாட்சியாவாள்! இவ்வாறு கிறிஸ்துவின் உத்தம சாட்சிகளாய் விளங்குவதற்கு, ஒவ்வொரு ஸ்திரீயும் (பெந்தகொஸ்தே நாளில் பங்கு பெற்ற மரியாளையும் மற்ற ஸ்திரீகளையும் போல) பரிசுத்தாவியினாலும் அக்கினியினாலும் அபிஷேகம் (அப் 1:8,14) பெற்றிடவேண்டும். புருஷர்களின் வாயின் மூலமாக ஸ்திரீகள் சுவிசேஷத்தைக் கேட்பதற்கு தடை செய்யும் இந்திய கலாசாரத்தின் மத்தியில், அவர்களை சந்தித்து சுவிசேஷப்பணியை நிறைவேற்றிட ஆவியில் நிறைந்த ஸ்திரீகளால் மாத்திரமே முடியும். எனவே, தேவனுக்குப் பயந்த ஒவ்வொரு சகோதரியும் இம்மேன்மையான பங்கைத் தங்களின் தலையான பொறுப்பாக எடுத்துகொண்டு, தாங்கள் தொடர்பு கொண்டுள்ள உறவினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார்கள், பெண் வேலையாட்கள் போன்றோருக்கு சுவிசேஷத்தை வழங்க வேண்டும்.

2. ஸ்திரீகள் சபை கட்டப்பட ஜெபிக்க முடியும்; கீழ்ப்படிந்த ஆவியோடு அவள் போதகம் செய்வதற்கு முயலாதிருக்கும்பட்சத்தில் தேவவார்த்தைகளை சபைக் கூட்டங்களில் பகிர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லவும் முடியும்!

சபையில் ஸ்திரீகள் தங்கள் தலையை முக்காடிட்டுக் கொண்டு, ஜெபிக்கவும், தீர்க்கதரிசனம் சொல்லவும் கூடும் என (1கொரி 11:5) புதியஏற்பாடு போதிக்கிறது. ஸ்திரீகள் ஈடுபடும் ஊழியங்களில் பிரதானமானவைகளில் ஜெபமும் ஒன்றாகும். ஆம், எல்லா சகோதரிகளுமே சபை கட்டப்படுவதற்காய் பாரத்தோடு ஜெபித்திட முடியும். இவ்வாறு தன் தூயபணி நிறைவேறுவதற்காக அந்தரங்கத்தில் ஜெபிக்கும் ஸ்திரீகளை தேவன் வாஞ்சித்து நோக்கிக்கொண்டிருக்கிறார்! அப்போஸ்தலர் 2:17,18 -ஆம் வசனங்கள் ஆவியானவர் ஊற்றப்படும்போது, புருஷர்களும், ஸ்திரீகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் எனத் தெளிவாகக் கூறுகிறது. புதியஏற்பாடு ஸ்திரீகளுக்கு வழங்கும் பாக்கியத்தில் இதுவும் ஒன்றாகும்! ஆம், கீழ்படிந்த ஆவியோடு, அவள் போதகம் செய்வதற்கு முயலாதிருக்கும் பட்சத்தில் (1தீமோ 6:7,8) தேவனுடைய வார்த்தைகளை சபைக் கூட்டங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்! இருப்பினும், முதிர்வயதுள்ள ஸ்திரீகள், பாலிய சகோதரிகளுக்கு அவர்கள் தங்கள் குடும்பத் தொடர்பான காரியங்களில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டுமென அவர்களுக்குப் போதிக்க வேண்டுமென்று புத்தி சொல்லப்பட்டிருக்கிறார்கள் (தீத்து 2:4-5). மேலும் சபையில் தேவன் நியமித்த வரங்களில், ‘உதவியாளர்கள்’ என்பதும் ஒன்றாகும் (1கொரி 12:28). நடைமுறை வழிகளில், சபைக்கு ‘உதவி’ செய்யும் பொருட்டு எல்லா சகோதரிகளுமே இவ்வரத்தை நாடவேண்டும். ஆதி சபைகளில் இது போன்ற பக்தியுள்ள பெண்கள் காணப்பட்டனர். ரோமர் 16:1,2 -ம் வசனங்கள் ‘பெபேயாள் அனேகருக்கு உதவியாயிருந்தாள்’ எனக் குறிப்பிடுகின்றது. மேலும், குறிப்பிடப்பட்டுள்ள 3,6,12 - ஆம் வசனங்களை வாசித்துப்பாருங்கள். இன்றும், இதுப்போலவே சபைகளில் அனேகஸ்திரீகள் காணப்பட தேவன் வாஞ்சிக்கிறார்.

3. ஸ்திரீயானவள், தலையை முக்காடிட்டுக் கொள்வது, கிறிஸ்துவுக்கு உத்தம சாட்சியாய் விளங்குவதில் ஒன்றாகும்!

ஸ்திரீயானவள், தலையை முக்காடிட்டுக் கொள்வது (1கொரி 11:1-16) மூன்று காரியங்களை பொருள்படுத்தி சாட்சியளிக்கிறது.

1. சபையில், மனிதனின் மகிமையானது மூடப்பட வேண்டும் (வசனம் 7).

2. சபையில், ஸ்திரீயின் மகிமை மூடப்பட வேண்டும் (வசனம்15). ஏனென்றால், ஸ்திரீயானவளின் நீளமான மயிர் அவளுக்கு மகிமையாயிருக்கிறது. (இதை எல்லா ஸ்திரீகளும் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். எனவேதான், தங்கள் தலையை மூடிக்கொள்ளும் அநேக ஸ்திரீகள், மிக ஸ்டைலாகப் பாதித்தலையை மூடிக்கொள்கிறார்கள்).

3. ஸ்திரீயானவள் மனுஷனின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்தவள் (வசனம் 10). மனுஷன் என்பது அவள் கணவன், தகப்பன் அல்லது மூப்பர்கள் ஆவார்கள்.

1கொரி 11:15-16 - ஆம் வசனத்தின்படி, உண்மையான தேவனுடைய சபையாய் இருக்கும் ஒவ்வொரு சபையும், ஸ்திரீகள் முக்காடிட்டுக் கொள்வதை வலியுறுத்தும்.

4. நாகரீகக் கூந்தல் அலங்காரம், இறக்கமாய் சொருகிய சேலை, தாழ்வாக வெட்டிய ஜாக்கட், சாயம் பூசிய உதடுகள்- நகங்கள், ஆபாரண மினுக்குகள், ஆண்களின் ஆடை அணிதல் போன்ற ஒழுங்கீனத்தின் மத்தியில், தங்கள் உத்தம ஜீவியத்தின் மூலம் ஸ்திரீகளுக்குரிய உண்மையான மகிமையை பிரவாகிக்கச் செய்யும் ஸ்திரீகளே இன்று தேவனுக்குத் தேவை!

தன் ஆடை மூலமாகவும், ஒரு ஸ்திரீ கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சியாக விளங்கவேண்டும். எல்லா கிறிஸ்தவ ஸ்திரீகளுக்கும் பரிசுத்தாவியானவர் மூன்று காரியங்களை மிகக்கண்டிப்பாக தடை செய்கிறார். 1. அவளின் நாகரீக கூந்தல் அலங்காரம். 2. விலையுயர்ந்த ஆடைகள். 3. ஆபரணங்கள். இது குறித்து 1தீமோ 2:9; 1பேதுரு 3:3 ஆகிய இரண்டு இடங்களிலும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தைகளுக்கு நடுங்கும் தெய்வபயமுள்ள ஒவ்வொரு சகோதரியும் இந்த மூன்று கட்டளைகளுக்கும் அதில் ஏதேனும் ஒன்று மிகச் சிறியதே ஆயினும் (மத் 5:19) இம்மியும் பிழையில்லாமல் அப்படியே கீழ்ப்படிந்திடுவாள். மேலும், ஸ்திரீகள் தங்கள் ஆடை உடுத்துவதில் முன்மாதிரியாய், கண்ணியமாய் காணப்பட வேண்டும் (1திமோ 2:10). வஸ்திரங்கள் ஸ்திரீயின் உடலை மறைப்பதற்கேயல்லாமல், நிர்வாண கோல அலங்கரிப்புக்கு அல்ல. இவ்வுலக ஸ்திரீகளின் நாகரீகத்திற்கு ஏற்ப, கர்த்தருக்குப் பயந்த எந்த ஸ்திரீயும் ஒரு டெய்லர் தன் ஆடையை வெட்டி அழகுப்படுத்த ஒருக்காலும் அனுமதிக்கவே மாட்டாள்! மிக இறக்கமாய் சொருகிய சேலை, தொட்டிப்போன்ற தாழ்வாக வெட்டிய ஜாக்கெட், சாயம் பூசிய உதடுகள்- நகங்கள் போன்ற இவைகள் எல்லாம் ‘யேசபேலை’ பின்பற்றுவோரின் (2இராஜா 9:30) அடையளங்களாகும். இவர்கள் இயேசுவின் சீஷர்கள் அல்லவே அல்ல! ஏசாயா 3:16-24 -ஆம் வசனங்களை கவனமாய் வாசியுங்கள். தேவன் லௌகீகமான சீயோன் குமாரத்திகளின் ஒய்யார ஆடை அலங்காரத்தையும், ஆபரண மினுக்குகளையும் எவ்வளவு கடுமையாய்ச் சாடுகின்றார் பாருங்கள்!!

ஆண்-பெண் பாலகரை வேறுபடுத்தத் தேவன், நியமித்த நியமனத்தை அழிப்பதற்கு சாத்தான் எவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளான் தெரியுமா? இருபதாம் நூற்றாண்டு பெண்கள் தங்கள் முடியை ஆண்களைப் போல வெட்டிக்கொள்ளும்படி சாத்தான் செய்துவிட்டான்! பெண்கள், ஆண்கள் அணியும் ‘ஜீன்ஸ்’ மற்றும் ‘கால்சட்டைகளை’ அணியும்படி வைத்துவிட்டான்! இவையெல்லாம் தனக்கு அருவருப்பானவைகள் என தேவன் உபாகமம் 25:5- ல் எச்சரித்துள்ளார். இதுமாத்திரமல்ல, இவர்களைப் பிரசங்கிகளாயும் உருவாக்கிவிட்டான்! குட்டைமுடி, அடக்கியாளும் மனைவியர், பெண்பிரசங்கிகள் ஆகியோர் எல்லாம், இன்று தேவனை விட்டும் அவரது வார்த்தைகளை விட்டும் தூர தூர விலகிச் சென்று, மாயும் கிறிஸ்தவப் பெண்களில் ஒரு கூட்டத்தாராவார்கள்!

இவைகளுக்கு மத்தியில்தான், தேவன் தன் வார்த்தைகளில் நியமித்த எல்லைக்குள் தங்கி நின்று தங்கள் உத்தம ஜீவியத்தின் மூலம் ஸ்திரீகளுக்குரிய உண்மையான மகிமையைப் பிரவாகிக்கச் செய்யும் ஸ்திரீகளே, ஆ! இந்த ஸ்திரீகளே தேவனுக்குத் தேவை! பாவமும், வேசித்தனமும் நிறைந்த சந்ததி நடுவே, ஒத்தவேஷத்தில் மூழ்கித்திளைக்கும் கிறிஸ்தவத்தின் மத்தியில் நீங்களே தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவளாய் இருப்பதற்கு உங்கள் முழு இருதயத்தோடும் தீர்மானம் எடுங்கள்!

நீங்கள் மாத்திரம் இப்படிப்பட்டவர்களாய் மாறுவதற்கு முழு இருதயமாய் வாஞ்சை கொண்டு விடுங்கள் போதும்! தேவன் நிச்சயம் அப்படியே ஆகும்படி தன் கிருபையைப் பொழிந்திடுவார்!

கேட்பதற்கு காதுள்ளவன் எவளோ அவள் கேட்கக்கடவள்!