தாயின் பணியை தாங்கிடும் தேவன்!

எழுதியவர் :   Dr. ஆனி பூணன்
    Download Formats:

அதிகாரம் 1
தேவனுக்காகவே தூய ஆலயம் கட்டுங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய பிள்ளைகள் இளவயதாயிருந்தார்கள். அப்பொழுது நான் பல்வேறு ரீதியில், வாழ்க்கை 'சவால்களைச்' சந்தித்தேன்! என் இருதயத்தின் ஆழத்திலோ, நான் ஒரு சிறந்த மனைவியாயிருக்க வேண்டும்! சிறந்த தாயாகயிருக்க வேண்டும்! சிறந்த நபராயிருக்க வேண்டும்! என்ற தீராத ஏக்கம் கொண்டவளாயிருந்தேன்.


ஒரு சமயம், யாரோ ஒருவர் ஒரு பெரிய கட்டிட வேலை நடக்கும் ஸ்தலத்தின் வழியாய் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அந்த கட்டிட வேலையில் அநேக ஜனங்கள் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். அங்கு நடந்த பணியைப் பார்த்தபோது, ஏதோ ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டுகிறார்கள் என்பது மாத்திரம் தெளிவாய் தெரிந்தது. சில ஜனங்கள் தரையில் ஆழமான குழிகளைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்! சிலர் மரத்தடி களை தூக்கிச் சென்றார்கள் ! சிலர் சிமெண்டையும் மணலையும் கலந்து குழைத்துக் கொண்டிருந்தார்கள்...... இவ்வாறு அங்கு பல வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. சிலரை கூப்பிட்டு இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று அவர் கேட்டார். ஒருவர் கூறினார் “செங்கற்களை சுமந்து வருகிறோம்!” மற்றொருவர் “தச்சு வேலை செய்து கொண்டிருக்கிறேன்!”மற்றொருவர் “நான் சிமெண்டும் மணலும் குழைத்து கொண்டிருக்கிறேன்!” என்றனர். கடைசியாக, அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர் “நான் இந்த ஸ்தலத்தில் ஒரு பொறியாளராக பணியாற்றுகிறேன்” எனக்கூறி, "இந்த இடத்தில் ஓர் பேராலயத்தை நாங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம்!” எனக் கூறினார்.


நாம் மனைவியர்களாய், தாய்மார்களாயிருந்து, மிகச் சாதாரண அன்றாட வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்பொழுது, அந்த கட்டிட வேலைக்காரர்களைப் போலவே 'பிள்ளையின் மூத்திரத் துணியை மாற்றிக் கொண்டிருக்கிறேன்!' அல்லது 'வீட்டை பெருக்கிக் கொண்டிருக்கிறேன்!' அல்லது 'சமைத்துக் கொண்டிருக்கிறேன்!' அல்லது `பாத்திரம் விளக்கிக் கொண்டிருக்கிறேன்!' எனப் பல்வேறாக கூறலாம். ஆனால் தேவனோ, இந்த சமயத்தில்தான், நமக்குள்ளாக தன்னுடைய பரிசுத்த ஆலயத்தை கட்டிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு தேவன் நமக்குள்ளாகச் செய்யும் கிரியையை, ஒரு அற்புதமான கிரியை என்றே சொல்ல வேண்டும். நாம் தேவனுடைய கிருபையால், தேவனுக்கென்று பிள்ளைகளை வளர்த்து வருகிறோம் என்பது மாத்திரமல்லாமல், அதே சமயத்தில்..... தேவனும் நமக்குள் தமது ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்!


இவ்வாறாகவே, நம் வீட்டிலுள்ள அலுவல்களோடு, நம் குடும்ப ஜீவியமும் இணைந்து, 'இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக' ஓர் தூய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது!!


ஆம், நம்முடைய பிள்ளைகளையும் அவரிடம் ஒப்புவித்து, நம் ஜீவியத்தில் கண்ட அதே மகிமையான கிரியையை அவர்களும் அனுபவித்திட தேவனிடம் ஒப்படைத்திட வேண்டும். இவ்வாறாக நம் பிள்ளைகளையும் சேர்த்து, நம் குடும்பம் “தேவனுடைய மகிமைக்கென ஓர் அழகான ஆலயமாய்” மாறிவிட முடியும்.


இதனிமித்தமே, நான் வீட்டிலுள்ள சிறு விஷயங்களிலும் உண்மையாயிருக்க தேவன் என்னை உற்சாக மூட்டினார். அன்றாட நடைமுறை ஜீவியத்தில் திருப்தி

யாயிருக்கவும் தைரியப்படுத்தினார்! ஒரு மருத்துவராயிருந்த நான், உலகத்தின் பார்வையில் பெரிதானவைகளை சாதிப்பதைக் காட்டிலும் இதுவே மேன்மையானது' என ஆறுதல் செய்தார். இப்போது, என் அன்றாட சாதாரண வீட்டு வேலைகளில் மெய்யான மகிழ்ச்சியை கண்டடைந்தேன்! என் ஜீவியத்தில் சம்பவிக்கும் சிறு சிறு விஷயங்களையும் தேவன் முன் கூட்டியே அறிந்து திட்டமிட்டிருக்கிறார் ! என்பதையும் உணர்ந்தேன். என்னை அறிந்து கொண்ட தேவன், நான் அவருக்காக செய்த ஒவ்வொரு சிறிய செயல்களையும் கண்டு, என்னை மெச்சிக் கொண்டார்!!


சில சமயங்களில், தாய்மார்களாகிய நாம், போதுமான அளவு தூக்கமின்றி, வெகுவாய் களைத்துப்போய், மனதிலும் சரீரத்திலும் சோர்ந்துபோன நேரங்களில், “தேவன் நமக்குள் நிறைவேற்றும் கிரியையைக் குறித்த” தரிசனத்தை நாம் இழந்து விட முடியும்! இந்த சமயங்களில் நம் ஆவிக்குரிய தூரப்பார்வை கண்ணாடியைக் கொண்டு “நம் தரிசனத்தை” மீண்டும் தெளிவாய் காண கற்றுக்கொள்ள வேண்டும்! அந்த தூரப்பார்வையில், ஆண்டவர் நம் ஜீவியத்தில் "ஓர் அழகான கிரியையை செய்து கொண்டிருப்பதையும்”.... அந்த கிரியை ஓர் நாள் பூரண வடிவமடையும் என்பதையும் நம் கண்கள் காணும் !!


ஓர் பின்னல் வளையத்தில், ஊசி நூல் கொண்டு பின்னப்படும் அந்த வேலையில், அந்த வளையத்திற்கு அடியில் நீங்கள் பார்த்தால்.... அழகான ரூபம் ஒன்றும் தென்படாது! அதற்கு பதிலாக ஏராளமான முடிச்சுகளும், தையலுமே நீங்கள் காண்பீர்கள்! இதுபோலவே நம் ஜீவியத்திலும், நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத பல காரியங்கள் நம் கண்களுக்கு நேர்த்தியாய் இல்லாததுபோல் கண்டிருக்கக்கூடும். ஆகிலும், ஓர் நாளில் தேவன் நமக்கும், இந்த முழு உலகத்திற்கும்...... தையல் வளையத்தின் மேல் பகுதியில் உள்ள அழகு நிறைந்த பின்னலின் வடிவத்தைக் காட்டுவார். ஆம், இந்த பூமியில் நாம் கடந்து வந்த ஒவ்வொரு சம்பவத்தையும் கொண்டு, நம்மையும் நம் பிள்ளைகளையும் எவ்வளவாய் மறுரூபப்படுத்தி நம் ஜீவியத்தை பின்னியுள்ளார் என்பதை அன்று காண்பிப்பார். நம்மை மறுரூபப்படுத்திய அந்த பின்னல் வடிவம் “தேவனுடைய கரத்தின் கிரியையாயிருக்கிறபடியால்" அதனிமித்தம் உண்டான சகல துதியும், தேவனுடைய மகிமைக்கு மாத்திரமே உரியதாயிருக்கும்!


இந்த நாட்களில், நம்முடைய பிள்ளைகளோடு அதிக போராட்டமான பாடுகளில், இருப்பதாக தோன்றினாலும், முடிவில் அவர்கள் 'தேவனுடைய பிள்ளைகளாய் மாறுவார்கள்' என்பதை நாம் ஆழமாய் விசுவாசிக்கக்கடவோம். நம்முடைய பிள்ளைகள் செய்திட்ட கீழ்படியாமைகளை, தேவன் கணக்கு வைத்திருப்பதில்லை. நாம் ஒருவராகிலும் பிழையற்ற பூரணமடைந்தவர்களல்ல! இன்னமும் தேவன் நமக்கு உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார், அதுபோலவே நம்முடைய பிள்ளைகளுக்கும் உதவி செய்வார்! தேவன்தான் நமக்குள் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்திருந்தால் மாத்திரமே, அவர் செய்த கிரியைகளைக் கண்டு “நானே அந்த ஆச்சரியமான தாய்!” என்றோ அல்லது நான் தான் இதை பூரணமாய் செய்து முடித்தேன் என்றோ கூறிட மாட்டோம். மேலும், இதை வைத்து மற்றவர்களுக்கு நான் போதகனாய் மாறலாம் என்ற எண்ணமும் கொண்டிருக்கமாட்டோம். சகலமும் தேவனுடைய மகிமைக்காக மாத்திரமே இருந்திட வேண்டும். அன்று, அந்த கடைசி நாளிலே.... நாம் எவ்வளவு பெலவீனமும், தோல்வியும் அடைந்தவர்களாயிருந்தும், "கிறிஸ்துவின் சுபாவத்தை பெறும்படி செய்த....” அவரது வல்லமையான மகத்துவத்தை அன்று நமக்கு தேவன் வெளிப்படுத்துவார்.


ஒரு ரூபாய் காசை வைத்து, நான் ஒரு உவமானம் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் கண்களுக்கு முன்பாக அந்த ஒரு ரூபாய் நாணயத்தை, கண்ணுக்கு அருகில் வைத்தால்..... உங்கள் முன்பாக உதித்துக் கொண்டிருக்கும் சூரியனைக்கூட நீங்கள் காண இயலாது! இதுபோலவே நாம் அன்றாட சந்திக்கும் உலக காரியங்கள், நம் சம்பாத்தியங்கள், நம் சேமிப்புகள்...... ஆகிய இவைகள் நம் ஆவிக்குரிய பார்வையை மறைத்து, தேவனுடைய வெளிச்சத்தை மங்கச் செய்துவிடும்!!


நான் வசிக்கும் பெங்களூர் நகரத்தில், தண்ணீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படும். ஆகவே, தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்துவது மாத்திரமல்லாமல், தண்ணீர் கிடைக்கும் போதெல்லாம் எங்கள் தேவைக்கு சேர்த்து வைக்க நான் சுறுசுறுப்பாய் இருப்பேன். இவ்வாறு வீட்டின் அநேக காரியங்களைக் குறித்து நான் அதிக பாரமும், சிந்தையும் கொண்டிருப்பேன். ஆனால், இயேசுவோ “தேவையானது ஒன்றே!” எனக் கூறியதை நான் அறிந்திருந்தேன். இயேசுவின் பாதத்தில் அமர்வதும், அவரை கவனித்து கேட்பதும், மரியாளின் நல்ல பங்காய் இருந்தது!! (லூக்.10:42). எனக்கு இருந்த கவலையோ, இவ்வளவு நெருக்கமான வீட்டுவேலையின் மத்தியில், இயேசுவின் பாதத்தில் அமர நேரம் இல்லையே என்பதுதான்! அதன்பின்புதான், என் அன்றாட வேலையின் நெருக்கத்தின் மத்தியில், என் மனது ஆண்டவரிடத்தில் அமர்ந்திருக்க முடியும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.


இவ்வாறாக. மார்த்தாளின் சுறுசுறுப்பான கரங்களை கொண்டவளாய் நான் இருந்தாலும், மரியாளின் தியான இருதயத்தை பெற்று வாழ முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்!


அன்றாட பல்வேறு கடமைகளை நாம் செய்திடும் சமயத்திலும்கூட, நம் இருதயம் கர்த்தரை கவனித்து கேட்கும்படி தூண்டுதல் பெற்றதாயிருக்க முடியும்.


ஓர் தாயாகிய என்னிடமிருந்த மிகப்பெரிய விருப்பமெல்லாம், என் பிள்ளைகளை தேவப் பக்தியின் வழியில் வளர்க்க வேண்டுமென்பதேயாகும். ஆகிலும் கலாச்சாரம் வித்தியாசமாயிருக்கிறது போல, பெற்றோர்கள் வித்தியாசமாயிருக்கிறது போலவே, பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் வித்தியாசமாயிருக்கிறார்கள். பெற்றோர்களின் பொறுப்பைக் குறித்து, ஆவிக்குரிய புத்தகங்கள் மூலமாய் நல்ல வழிமுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்! அப்படியிருந்தும், நம் பிள்ளைகளை தேவனுடைய வழியில் நடத்துவதற்கு 'கர்த்தர் மாத்திரமே' உதவி செய்திட முடியும்.


ஒரு சமயத்தில் நான் சந்தித்த அல்லது வாசித்த பக்தியுள்ள தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை நடத்திய முறையை நானும் பாவனை செய்திட சோதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், அவையனைத்தும் 'வெவ்வேறு வழிமுறைகள்' என்பதை பிறகு விளங்கிக் கொண்டேன். என்னுடைய பிள்ளைகளை மெய்யான தேவப் பக்தியில் நடத்துவதே என் இலக்காயிருந்தது. ஆகவே பல்வேறு வழியின் மூலமாய் 'இந்த இலக்கை' நான் அடைந்துவிட முடியும் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். ஆம், மற்றவர்கள் கையாளும் முறையை நான் கண்டு, அதைக் கண்மூடித்தனமாய் நான் பின்பற்ற அவசியமில்லை! அவர்கள் கையாளும் முறையை, நான் பின்பற்ற முடியவில்லையே என அதைரியமும் அடையத் தேவையில்லை!


நம்முடைய பிள்ளைகளில் சிலர், நாம் அமைதியாய் பேசினாலே உடனுக்கு உடன் கீழ்படிந்துவிடுவார்கள். அவ்விதமான நம்முடைய பிள்ளைகளுக்கு நம் சத்தத்தை உயர்த்த தேவையில்லை. ஆனால் மற்ற பிள்ளைகள் வித்தியாசமாயிருக்கிறார்கள். எனவே, இவ்வித சமயங்களில் 'தேவனுடைய சத்தத்தை' நாம் கேட்டு நடப்பதே முக்கியமானதாகும். நாம் பிள்ளைகளுக்கு உதவி செய்ய விரும்புகிறபடியால் தேவன் நம்மை நிச்சயமாய் நடத்துவார்.


என் சொந்த பிள்ளைகளிடத்தில் தேவன் என்னை நடத்திய விதம் தனிப்பட்ட விஷயமாயிருந்தது. ஆரம்ப காலத்தில், சபை கூட்டங்கள் எங்கள் வீட்டில் தான் 6 - வருடங்கள் நடந்தன. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை கூட்டத்தை தவிர, வாரத்தில் மூன்று மாலை கூட்டங்கள் எங்கள் வீட்டில் நடந்தன. இதுத் தவிர சபையிலுள்ள மக்கள் மருத்துவ உதவிக்கோ அல்லது சில அவசிய தேவைகளுக்கோ அல்லது ஜெபத்திற்கோ, இடைப்பட்ட நாட்களில் வருவதுண்டு. சில சமயங்களில், சிலரை எங்கள் வீட்டில் இரவில் தங்குவதற்கும், நாங்கள் ஏற்பாடு செய்வதுண்டு. தூர இடத்திலிருந்து அவர்கள் வருகிறபடியால், அவ்வித தங்கும் ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.


என்னுடைய சூழ்நிலையோ, என் கணவர் அடிக்கடி வெளியே ஊழியத்திற்கு பயணமாய் செல்லுகிறபடியால், அதுபோன்ற நேரங்களில் 'அருடைய உதவி' எனக்கில்லாமற் போய்விடும். இச்சமயங்களில், ஒவ்வொரு நாளும் தன் கணவரோடு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு எவ்வளவு எளிதாயிருக்கும் என்று நான் எண்ணுவதுண்டு. அந்த நாட்களில் நான் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டேன். அது என்னவெனில், என்னைவிட எளிதாய் வாழும் ஒருவரோடு என்னை ஒருபோதும் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது! மாறாக, என்னைவிட அதிக கடின சூழ்நிலையில் உள்ளவர்களோடு மாத்திரமே என்னை ஒப்பிட வேண்டும்! என்ற பாடத்தையேக் கற்றுக்கொண்டேன். இவ்வாறு நாம் செய்தால், நான் ஆண்டவருக்கு எப்போதும் எல்லாவற்றிலேயும் நன்றி உடையவர்களாயிருக்க முடியும்.


தேவனோ, என் கணவரை சுவிசேஷம் பிரசங்கிக்கவே அழைத்திருந்தார்! ஆகவே, வீட்டிலுள்ள வேலைகளைச் செய்யும்படி என் கணவர் கட்டப்பட்டிருக்க

நான் விரும்பவில்லை. அவ்வாறு சம்பவித்தால், அவருடைய ஊழியம் குறைந்துபோகும்! பல்வேறு சபைகளுக்கு பயணம் செய்வது நின்றுவிடும்...... தேவையுள்ள ஜனங்களுக்கு உதவி செய்திடும் பணியும் நின்றுவிடும்!


எனவே. தேவன் என் வாழ்க்கைக்கும் என் குடும்பத்திற்கும் வைத்திருக்கும் திட்டம், மற்றவர்களுக்கு வைத்திருக்கும் திட்டத்தைவிட வித்தியாசமானது என்பதை உணர்ந்து கொண்டேன்.


தேவன் எனக்கென்று என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ, அந்த சூழ்நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ள தேவன் எனக்கு உதவினார். தேவன் எனக்கென்று வைத்திருந்த திட்டம், பிழையற்ற பூரணமாய் இருக்கிறது என்பதை, என்னால் இப்போது காணமுடிகிறது!


சில சமயங்களில் என் கணவர் வீட்டில் இல்லாதபோது என் பிள்ளைகள் சுகவீனம் அடைந்திருக்கிறார்கள். அதுபோன்ற நேரங்களில், நான் என் பிள்ளைகளுக்கு என்ன மருத்துவ உதவி அளிக்க வேண்டும் என்ற மருத்துவ ஞானத்தை அச்சமயங்களில் எனக்கு தேவன் ஆச்சரியமாய் அளித்திருக்கிறார்!

ஆகவே பிள்ளைகள் சுகவீனம் அடையும் ஒவ்வொரு நேரமும், நான் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்ல அவசியமில்லாதிருந்தது. அவ்வபோது ஏற்படும் சிறிய வியாதிகளுக்கு நானே என் பிள்ளைகளுக்கு மருத்துவ உதவியளித்தேன். கர்த்தரும் என் பக்கத்தில் அனுகூலமாய் நின்றார்! சில இரவுகளில், நான் தூக்கத்தை இழந்திருந்தாலும், பகல் நேரங்களில் சிறிதளவு நித்திரைக் கொள்ள தேவன் எனக்கு உதவினார்.


நான் என் பிள்ளைகளின் முக்கிய தேவைக்கு கவனம் செலுத்த வேண்டியிருந்தபடியால், முக்கியமில்லாத சில வேலைகளையும், எனது பொழுதுப்போக்கு நேரங்களையும் நான் வெகுவாய் குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். ஆகிலும், என் பிள்ளைகள் வளர்ந்து, தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு வெளியே சென்றவுடன், என்னுடைய தனிப்பட்ட விதத்தில் நான் வைத்திருந்த இலக்கை' மீண்டும் பிடித்துக்கொள்ள என்னால் முடிந்தது. ஆனால் இப்போதோ, அவர்களுடைய படிப்பிற்கும் மற்றுமுள்ள தேவைக்கும் என் உதவி அவர்களுக்கு அவசியமாயிருந்தது. ஒரு ஆயத்தமுள்ள நண்பனாய் அவர்களுக்கு நான் இருக்க வேண்டியதையே நான் உணர்ந்தேன்!


கர்த்தருடைய ஊழியத்தில் என்னுடைய பங்காய் நான் உணர்ந்ததெல்லாம், குடும்ப பொறுப்புகளை நான் முற்றிலும் எடுத்துக்கொண்டு என் கணவரைத் தாங்க வேண்டும் என்பதாகவே இருந்தது!


அதன் மூலமாய், அவர்கள் வெளியே செல்லும் பயணம் சுமுகமாயும் அவருடைய பிரசங்க ஊழியத்திற்கு இடையூறு இல்லாமலும், அவர் இருந்திட முடியும். என் வீட்டில், எல்லா சமயத்திலும் சமாதானமும் மகிழ்ச்சியுமான சூழ்நிலையைக் காத்துக் கொள்ளவே நான் விரும்பி முயற்சித்தேன். ஏனெனில் அப்போதுதான் என் கணவர் வெளியே சென்று பிரசங்கித்திட எளிதாயிருக்கும். வீட்டில் சம்பவித்தவைகளைக் குறித்து, குறிப்பாக என் பிள்ளைகளுக்கு சம்பவித்தவைகளைக் குறித்து என் கணவர் ஒருபோதும் மனசஞ்சலமடைந்து விடக்கூடாது. என் வீட்டில் நடக்கும் எந்த செயலும், என் கணவரைப் பாதித்து 'கர்த்தருடைய ஊழியத்திற்கு' இடையூறு வந்துவிடக்கூடாது என நான் விரும்பினேன்.


மூன்று வேதாகம சத்தியங்கள், என் திருமண வாழ்க்கைக்கு பேருதவியாய் இருந்தது..... அதே சத்தியங்கள், சமீப வருடங்களில் இன்னமும் அதிக முக்கியத்துவம் கொண்டதாய் எனக்கு மாறிவிட்டது. நான் புதிய உடன்படிக்கையினால் ஆட்கொள்ளப்பட்ட பிறகே, இந்த சத்தியங்களை மிகத் தெளிவாக கண்டுணர்ந்தேன். புதிய உடன்படிக்கையை நான் காணும்வரைக்கும், “என் பாவங்கள் எனக்கு மன்னிக்கப்பட்டது” என அறிந்த “மறுபடியும் பிறந்த கிறிஸ்தவளாக மாத்திரமே நான் ஜீவித்தேன்” நான் ஏதாவது பாவத்தில் தவறி விழும்போதெல்லாம் மற்ற விசுவாசிகளை போலவே, அந்த ஒவ்வொரு நிமிடத்திலும் `மன்னிப்பையே தேவனிடம் கேட்டுவந்தேன். சில சமயங்களில் என் ஆவிக்குரிய வாழ்க்கை உலர்ந்து போனதையும் நான் கண்டேன். இந்நிலையில், பாவத்தை ஜெயித்து வாழும் வாழ்க்கையை நான் தேடிய பிறகே, ஒவ்வொரு நாளும் நான் பரிசுத்த ஆவியின் பெலனை பெற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துக்கொண்டேன்.


ஆண்டவராகிய இயேசு, என்னை பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்தார்! அதே சமயம், நான் ஒவ்வொரு நாளும் ஆவியினால் நிறைந்திருக்க வேண்டும் என்ற தேவையையும் கண்டுகொண்டேன். அப்போது மாத்திரமே, அவரது வல்லமையும் பெலனும், மங்காத புத்துணர்ச்சியும், என் ஜீவியத்தில் எப்போதும் நிலை கொண்டிருக்க முடியும்! பரிசுத்த ஆவியினால் நாம் ஒவ்வொரு நாளும் நிறைந்திருக்க வேண்டும் என்ற வாக்குத்தத்தத்தை நம் பரமபிதா, நம் அனைவருக்கும் வழங்கியிருக்கிறார். நம்மில் ஒருவராகிலும் அந்த பாக்கியத்தை இழந்துவிடக் கூடாது.


நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, என் வாழ்க்கையில் முக்கியமானதாய் மாறிய 'அந்த மூன்று சத்தியங்கள்' என்னவென்றால்:


1. நான் தேவனை என் சொந்த பிதாவாக அறிந்து கொள்ள முடியும்!


2. என் கணவரோடு இணைந்த ஐக்கியத்தில் இருப்பதின் முக்கியத்துவம்!


3. என் கணவருக்கு நான் அடங்கியிருப்பதில் காணும் மகிமை!


இந்த மூன்றுபகுதிகளிலும் “இயேசு எனக்கு மாதிரியாயிருப்பதை” நான் கண்டேன். புதிய ஏற்பாடு எனக்கு உயிருள்ளதாய் அமைந்தது! ஆம், அது வெறும் பாடப்புத்தகம் அல்ல... இயேசுவின் உயிருள்ள வசனங்கள்!


அதிகாரம் 2
தேவன், என் பிதா! .... என அறியுங்கள்

தேவனை, என் சொந்த தகப்பனாய் அறிந்துகொள்ளும் சத்தியமே என் ஜீவியத்திற்கு முக்கியமான 'முதல் சத்தியமாய்' மாறியது.


இன்றைய அநேக மனைவிகள் ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம், அவர்களின் பாதுகாப்பற்ற நிலையேயாகும். ஒரு இக்கட்டான வேளையில், தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்துக்கொள்ள ஒரு நண்பனையோ, சில நபர்களையோ நாடி தேடுகிறார்கள். குறிப்பாக பெண்கள், தங்கள் திருமணத்திற்கு பின்பு அவர்களை சந்திக்கும் அநேக மாற்றங்களுக்கு ஈடுக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் யாரிடமாவது தங்கள் இருதயத்தின் பாரங்களை சொல்லுவதற்கு ஏங்குகிறார்கள். ஒரு நண்பனோ அல்லது ஒரு சகோதரியோ அல்லது தங்கள் பெற்றோரோ ஆகிய யாரோ ஒருவரைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்கள் நினைக்கும் எல்லா மனிதர்களும், உதவி செய்யக்கூடிய திராணியில் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். நம் பெற்றோர்களையோ, நம் கூடப் பிறந்தவர்களையோ அதிக பாரப்படுத்த இயலாது... ஏனெனில், அவர்களுக்கென்று சொந்த பிரச்சனைகள் ஏராளம் வைத்திருக்கிறார்கள்! நம் பிரச்சனைகளை கவனித்து கேட்பதற்கு எல்லா நண்பர்களுக்கும் போதுமான நேரமும் இருப்பதில்லை. ஆனால் எந்த இக்கட்டான நிலையிலும், நம் பரலோக தகப்பனை நோக்கி நம் முகத்தை திருப்ப முடியும்!!


ஏரேமியா 17: 5-8 கூறும் வசனங்களில் “மனுஷர் மேல் நம்பிக்கை வைத்த மனுஷன் சபிக்கப்பட்டவன்..... கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்த மனுஷனோ பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாக தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதை காணாமல் இலை பச்சையாயிருக்கிறதைப் போலவும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிக்கொடுக்கிறதுமான மரத்தைப் போலிருப்பான்” என கூறப்பட்டதைப் பாருங்கள்.


எந்த மனுஷனையும் சார்ந்து கொள்ளாமல், தேவனையே தன் சொந்த தகப்பனாகக் கொண்டு சார்ந்து கொள்ளும் மனுஷனின் ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவியத்தைப் பாருங்கள்! அப்படியானால், நாம் ஒருபோதும் வறண்டு போகமாட்டோம். பூரண பாதுகாப்பு உடையவர்களாய் திகழ்வோம்!


யோவான் 14 : 17,18 வசனங்களில் இயேசு கூறும் பொழுது, நமக்குள் தங்கி வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரை அவர் அனுப்பியவுடன்...... நாம் இனியும் அனாதைகளாகவோ, அல்லது திக்கற்றவர்களாகவோ இருந்திடமாட்டோம்! என கூறினார். ஏனெனில், தேவனே நமது சொந்த தகப்பனாய் அன்றிலிருந்து' இருப்பார்! எனக் கூறினார். நாம் ஜெபம் செய்யும் பொழுது, தேவனை நோக்கி “எங்கள் தகப்பனே” எனக் கூறி ஜெபிக்கும்படியே இயேசு கற்றுக் கொடுத்தார்.


நான் என்று “எனக்கொரு அன்புள்ள தகப்பன் பரலோகில் இருக்கிறார்” என்ற ஆச்சரியமான சத்தியத்தால் ஈர்க்கப்பட்டேனோ.... அன்றிலிருந்து, என் பாதுகாப்பற்ற காரிருள் என்னை விட்டு விலகத் தொடங்கியது!


பழைய உடன்படிக்கையில், ஜனங்கள் தேவனை “யெகோவா” என அறிந்து அவருக்கு முன் பயந்து நடுங்கியிருந்தார்கள். ஆனால் இன்றோ, நம் பாவங்களை விட்டு இயேசுவிடம் திரும்பி, அவரை நமது ஜீவியத்தின் ஆண்டவராய் வைத்திருந்தால், நாம் மெய்யாகவே தேவனை “நம் சொந்த தகப்பனாக” அறிந்து கொள்ள முடியும்!


நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறிய சிலாக்கியத்தோடு கூட பொறுப்புகளும் நமக்கு உண்டாயிருக்கிறது. “அவர் நம் ஜீவியத்தில் முழு ஆளுகை செய்திட” நாம் நம்மை ஒப்புக்கொடுத்திடவேண்டும்! என்பதே அந்த பொறுப்பாகும். இவ்வாறாக, நம் பரம தகப்பனிடமிருந்து, நாம் அநேக காரியங்களை கற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.


ஏசாயா 30 : 30 வசனத்தில் “கர்த்தர் தமது சத்தத்தின் அதிகாரத்தை கேட்கப்பண்ணுகிறார்” என வாசிக்கிறோம். அதுபோலவே, பெற்றோர்களாகிய நமது வாழ்வில், பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் “அன்புள்ள அதிகாரத்தை” அவர்கள் அறிந்திருக்கச் செய்ய வேண்டும்!


நம் தந்தை, நம்மை நடத்துகிறவர்! “நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்” என சங்கீதம் 32 : 8ல் கூறியிருக்கிறார். ஏசாயா 30 : 21ம் வசனத்தில் “நீ வலதுப்புறமாய் சாயும்போதும் இடதுப்புறமாய் சாயும் போதும் 'வழி இதுவே, இதிலே நடவுங்கள்' என்று உங்களுக்கு பின்னாலே சொல்லும் வார்த்தைகள் உங்கள் காதுகளிலே கேட்கும்” என தேவன் கூறினார். இதுவே பெற்றோர்களாகிய நமக்கும் பொருந்தும். இந்த வசனத்தில் கூறப்பட்டப்படி நாமும் நம் பிள்ளைகளை சரியான வழியில் நடத்த வேண்டியவர்களாயிருக்கிறோம்.


நாம் தோல்வியடையும்போது நம் பரமபிதா நமக்கு மன்னிக்கிறார். அதுபோலவே நாமும் நம்முடைய பிள்ளைகள் அல்லது மற்றவர்கள் தவறிழைக்கும் போது, அவர்களை மன்னிப்பதற்கு துரிதமாயிருக்க வேண்டும்.


நம் பிதா நம்மீது மன உருக்கமுடையவராயிருக்கிறார். சங்கீதம் 103 : 13ம் வசனம் “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” என வாசிக்கிறோம். ஆகவே, பெற்றோர்களாகிய நாமும் நம் பிள்ளைகள் மீது கடினமாயிராமல், அவர்களிடம் மன உருக்கம் கொண்டவர்களாயிருக்க வேண்டும்.


நம் பிதா, தம்முடைய வார்த்தைகள் மூலமாகவும், நாம் சந்திக்கும் சூழ்நிலைகள் மூலமாகவும் நம்மோடு பேசுகிறார். நம்முடைய நன்மைக்காக நம்மை சிட்சித்து திருத்துகிறார் எனவும் எபிரேயர் 17:7-8 வசனங்களில் கூறுகிறது. பாருங்கள், நமது தகப்பன் அன்புள்ளவர் மாத்திரம் அல்லாமல் கண்டிப்பும் உடையவராயிருக்கிறார். அதுபோலவே நாமும், நம் பிள்ளைகள் சந்திக்கும் சூழ்நிலைகள் மூலமாக போதித்து அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். நாம் அவர்களோடு கூட இடைப்படுதல் அன்புள்ளதாயும், கண்டிப்புள்ளதாயும் இருக்க வேண்டும்.


நம் பரம தகப்பன் எப்போதும் நிலைத்திருப்பவர்! தம் வாக்குதத்தங்களை கைவிடாது காப்பவர்! பெற்றோர்களாகிய நாமும் நம் தகப்பனை போலவே “பிள்ளைகளிடம் நாம் கூறிய வார்த்தைகளை” நிறைவேற்றிட கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய பரம தகப்பனிடம் நம்முடைய எல்லா துன்பங்களையும், எல்லா பயங்களையும், எல்லா பெலவீனங்களையும், எல்லா தோல்விகளையும், நமது எல்லா வாஞ்சைகளையும் அவரிடத்தில் சொல்ல முடியும்! இந்த உலகில் நாம் எதற்காகவும் பயந்திட தேவையில்லை! இயேசு தம் சீஷர்களிடம் “பயப்படாதிருங்கள், உங்கள் பரமபிதா, உங்களுக்குரிய தேவைகளை விசாரிப்பார்!” என இயேசு பலமுறை கூறியிருக்கிறார்.


இதைப் போலவே, பிள்ளைகளு தங்களிடமுள் பயத்தையும் பிரச்சனைகளையும் பெற்றோர்களாகிய நம்மிடம் கூறுவதற்கு 'தயக்கமான உணர்வு' ஒருபோதும் இல்லாதிருக்க வேண்டும்!


இத்தனை அன்புள்ள, சர்வ வல்லமை பொருந்திய, பிதா நமக்கு இருப்பது மிகப் பெரிய சிலாக்கியமாகும். நாம் அவர்மீது பயபக்தி கொள்ள வேண்டும்! அவரை கனம் செய்ய வேண்டும்! அவரில் அன்புகூர வேண்டும்! அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்! அவரைப் பிரியப்படுத்துவதற்காகவே ஜீவித்திட வேண்டும்!!


யோவான் 17 : 3 ம் வசனத்தில் “தேவனை நம் தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்வதே நித்திய ஜீவன்” என இயேசு கூறியதைக் காண்கிறோம். குறிப்பாக, ஆண்டவராகிய இயேசுவை பிதா அன்புகூர்ந்தது போலவே நம்மையும் அன்பு கூருகிறார் என தேவனை அறிந்து கொள்வது மிக முக்கியமானதாகும் (யோ 17 : 23). இந்த சத்தியம் ஓர் ஆச்சரியமானது! நம்முடைய பரமபிதா பட்சப்பாதம் உள்ளவர் அல்ல. இயேசுவிற்கு எதைச் செய்தாரோ அதையே நமக்கும் செய்வார். இயேசுவின் மீது கொண்ட 'அதே கரிசனையை' நமக்கும் காட்டுவார். அதுபோலவே, பெற்றோர்களாகிய நாமும், நம்முடைய எல்லா பிள்ளைகளிடமும் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.


இயேசுவை நேசித்தது போலவே, நம் பரம தகப்பன் நம்மையும் நேசிக்கிறார் என்ற ஆச்சரியமான சத்தியம் பாதுகாப்பற்ற கட்டிலிருந்து' நம்மை முற்றிலும் விடுதலையாக்கி....... வாழ்வின் எந்த கடின சூழ்நிலைகளையும் திட மனதோடு எதிர்கொள்ளச் செய்திடும்! நாட்கள் செல்லச் செல்ல, நாம் பிதாவை அதிக அதிகமாய் நெருங்கி அறிந்து..... அவரையே முற்றிலுமாய் சார்ந்துகொள்ள கற்றுகொள்வோம்! 'எனக்கு ஏன் இவ்வாறு சம்பவிக்கிறது?' எனப் பேதலிக்கும் நேரத்தில் கூட, அவருடைய ஞானத்தை நாம் முற்றிலும் விசுவாசித்திருக்க முடியும். தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கிற ஒவ்வொன்றும், 'நம்முடைய நன்மைக்காக மாத்திரமே!' என்ற முழு நிச்சயம் நமக்கு ஏற்பட்டுவிடும்! இனி ஒருபோதும், நம்மை தண்டிப்பதற்கே எப்போதும் நாடும் தேவனாக நாம் அவரை காணாமல், நமக்கு உதவி செய்வதற்கு ஆர்வமுள்ள, அன்புள்ள தகப்பனாகவே நாம் அவரை கண்டுகொள்வோம்!


இவ்வாறாக நாம் தேவனை அறிவதினிமித்தமே, நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோர்களாய் இருப்பதற்கு 'நம் பரமபிதா' நமக்கு உதவி செய்திட முடியும்!!


அதிகாரம் 3
கணவரோடு ஐக்கியமாயிருங்கள்

என் கணவரோடு நான் வைத்திருக்க வேண்டிய ஐக்கியத்தின் முக்கியத்துவம், என் திருமண வாழ்வில் நான் கண்ட 'இரண்டாவது சத்தியமாய்' இருந்தது. யோவான் சுவிசேஷத்தின் அநேக வசனங்கள் பிதாவும் இயேசுவும் ஒன்றாயிருக்கிறார்கள் எனக் கூறுகிறது! 1யோவான் 17 : 21 ம் வசனத்தில், பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறது போலவே, `நாமும் ஒன்றாயிருக்க' விரும்புவதாக இயேசு கூறினார். திருமண வாழ்க்கையில் இந்த வசனத்தை கைக்கொள்ள வேண்டுமேன்றால், நம்முடைய கணவன்மார்களோடு ஓர் உறுதியான ஐக்கியத்தின் கட்டு உடையவர்களாயிருக்க வேண்டும். அநேக குடும்பங்களில் உள்ள ஐக்கியத்தை பிசாசானவன் இன்றைய நாட்களில் அழித்து வருகிறான். குடும்பங்களும், நிலைகுழைந்து வீழ்கின்றன! ஆகவே, நாம் விழிப்புடன் கவனமாயிருக்க வேண்டும்.


அநேக மனைவியர்கள், தங்கள் கணவர்மார்களை விட....... பெற்றோர்களிடமும் அல்லது தங்கள் உடன்பிறந்தவர்களிடமும் அதிக பிடிப்புள்ளவர்களாய் இருக்கிறார்கள்!


திருமண ஜீவியத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இதுவும் ஒரு காரணமாயிருக்கிறது. நம் கணவரோடு கொண்டிருக்கும் ஐக்கியம் வலிமை குறைந்ததாயிருந்தால், நம் குடும்பத்தில் பிசாசானவன் மிக எளிதில் பிரவேசித்துவிடுவான். பெற்றோர்கள் ஐக்கியமில்லாதிருப்பதால், அவர்களின் பிள்ளைகள் ஓர் பாதுகாப்பற்ற நிலையை உணருவார்கள்! அதன் விளைவாய், சாப்பிடுவதில் குளறுபடிகள்! கெட்ட பழக்க வழக்கங்கள்! தூங்கமுடியாத பிரச்சனை! ஆகிய இவைகள் ஒவ்வொன்றாய் குடும்பத்தில் தலையெடுக்கும்!!


யோவான் 1 : 1ல் இயேசு ஆதியிலே தேவனோடிருந்தார் எனவும், அவரே தேவனாயிருந்தார் எனவும் வாசிக்கிறோம். இந்த வசனத்தில் காணும் 'ஒன்றித்த தன்மையை நம் குறைவான மனதைக் கொண்டு அறிய முடியவில்லை. அப்படியொரு வலிமையான ஐக்கியம், தேவத்துவத்தில் அடங்கியிருந்த 'மூன்று நபர்களிடம்' இருந்தது. இது எப்படியென, நாம் தேவனை தரிசிக்கும் நாளில்தான் முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும். இது ஒரு ஆச்சரியமான ஐக்கியம்! யோவான் 17-ம் அதிகாரத்தில் இயேசு ஜெபித்த போது, நாமும் அதைப் போன்ற ஐக்கியத்தைப் பெறும்படியும் அந்த ஆச்சரியமான ஐக்கியத்தை' பிதாவானவர் நமக்கு காட்டும்படியும் ஜெபித்தார்! ஒரு மனிதனையும் மனுஷியையும் திருமணத்தில் தேவன் இணைக்கும்போது “அவர்கள் ஒன்றாயிருக்க வேண்டும்” என்பதே அவருடைய பூரண சித்தமாயிருந்தது! இவ்வாறு, தேவன் ஒன்றாய் இணைத்ததை பிரித்துவிட ஒருவரும் எத்தனிக்கக் கூடாது!


ஆமோஸ் 3 : 3 - ம் வசனத்தில் “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ” என வாசிக்கிறோம். இரண்டு விசுவாசிகள் ஒருமனப்பட்டு ஐக்கியமாயிருந்தால், சாத்தானுடைய கிரியைகளை கட்டிபோட்டு, அவன் கட்டி வைத்தவர்களை விடுவித்திட முடியும் என இயேசு மத்தேயு 18 : 18,19 ம் வசனங்களில் கூறினார். இந்த வசனம், வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும்போது கணவனும் மனையியும் சேர்ந்து ஜெபிப்பதற்கு பொருந்தும். கணவனும் மனைவியும் ஒன்றான ஐக்கியமாயிருந்தால் 'அங்கே வல்லமையிருக்கிறது' என்று சாத்தான் அறிந்திருக்கிறான். ஏனென்றால், ஆண்டவர் அவர்கள் நடுவில் வருவார்! என்ற காரணமேயாகும் (மத் 18 : 19,20). ஆகவேதான், அவர்களின் ஐக்கியத்தை உடைப்பதற்கு, தன்னால் இயன்றதையெல்லாம் சாத்தான் செய்கிறான்.


கணவனும் மனைவியும்..... இயேசுவும் பிதாவும் கொண்டிருந்த ஐக்கியத்தின் இனிமையை சிறிதளவு ருசித்திருந்தால் கூட, அது எத்தனை பாக்கியமானது என அறிந்திருப்பார்கள். நம் இல்லங்களில், இதுபோன்ற ஐக்கியத்தை நமக்கு கொடுப்பதற்கே இயேசு இந்த பூமிக்கு வந்தார். இந்த ஐக்கியத்தின் ஆழத்தை நம் குறுகிய மனது அறிய முடியவில்லை.. ஆகிலும், இந்த ஐக்கியம் சாத்தியமேயாகும்.


குடும்பத்தில் ஏற்படும் ஐக்கிய குறைவுக்கு ஏற்படும் சில காரணங்கள் என்ன? ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வேறுபாடுகள் ஏற்படமுடியும்! அந்த வேறுபாடுகள் அவர்களின் வாழ்க்கை பின்னணியோ, அவர்கள் கலாச்சாரமோ, அல்லது அவர்கள் வளர்க்கப்பட்ட விதமோ, அல்லது ஒன்றைக் குறித்து வெவ்வேறு விதமாய் காண்பதாகவோ இருக்கலாம்!


ஆனால் இதுபோன்ற எந்த வேறுபாடுகளும், நம்மிடையே யாதொரு ஐக்கிய குறைவையும் ஏற்படுத்த அவசியமில்லை. எவ்வளவுதான் அவர்களுக்குள் வித்தியாசம் இருந்தாலும் 'தேவ கிருபை' அவர்கள் இருவரையும் ஒன்றாக்க முடியும்!


இவ்வித ஐக்கியம் என் திருமண வாழ்வில் நிஜமாய் மாற, நான் ஆண்டவரிடம் ஜெபித்தேன். எனக்கும் என் கணவருக்கும் இடைவெளி தோன்றி, அதனிமித்தம் என் ஜீவியம் முழுவதும் வாக்குவாதமும், மகிழ்ச்சியின்மையும், தனிமையும் ஏற்பட்டுவிட நான் விரும்பவில்லை. ஆகவே, எங்கள் வேறுபாடுகள் எனக்கு தொந்தரவாயிராமல், என் கணவரோடு இணைந்து இசைந்திருக்க உதவும்படி ஆண்டவரிடம் நான் ஜெபித்தேன். என் திருமண வாழ்வில் இந்த ஒரு மனம் ஏற்படுவதற்கு, எதையும் நான் செய்வதற்கு ஆயத்தமாயிருந்தேன். அதுவே என் இலக்காயும் மாறியது!



நாமே தவறு செய்திருந்தாலும், யாரோ சிலரை குறைகூறுவது நம்மிடத்தில் உள்ள சுபாவமாயிருக்கிறது! நம் திருமண வாழ்விலும், இவ்வாறு நடந்துவிட முடியும். அவ்வாறு ஏற்பட்டால், தேவன் இணைத்ததை நாம் பிரிக்கிறோம் என்பதையே, நாம் அப்போது நினைவுகூர வேண்டும். நாம் ஒன்றாய் இணைந்திருக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது! ஆகவே, அந்த ஐக்கியத்தைப் பாதுகாத்து கொள்வதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்திட வேண்டும். கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்து, நம்மீது நீடிய பொறுமையாயிருக்கிறதைப் போலவே, ஒருவருக்கொருவர் மன்னித்து பொறுமையாயிருப்பதற்கு ஆண்டவர் உதவும்படி நாம் ஜெபிக்க வேண்டும் (எபேசியர் 4: 2, 32).


ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதும் நம் ஐக்கியத்தை சீர்குலைக்கும் மற்றொரு முக்கிய பகுதியாகும். இதைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும். சந்தேக தீர்மானங்கள் அதிகமான பட்சத்தில் ஆதாரமில்லாததாகவே காணப்படுகிறது!


கடந்த ஜீவியத்தில், வேறு யாரிடமோ நீங்கள் நட்புகொண்டவர்களாயிருந்தால்.... அந்த நிகழ்ச்சி ஞாபகங்களையெல்லாம் புதைத்து விடுங்கள்! அதை ஒருபோதும் மீண்டும் நினைவிற்கு கொண்டுவராதேயுங்கள்! 'Face Book' போன்ற தொடர்பு இணையதளத்தில், பழைய உங்களது தொடர்புகளை ஒருபோதும் புதுப்பித்துக் கொள்ளாதிருங்கள். இந்த 'Face Book' தொடர்புகள், ஆரம்ப நாட்களில் தீமையற்றதுபோல் காணப்படும். ஆனால் இதுவே, தேவையற்ற தீய சோதனைகளை உங்களுக்கு திறந்து வைத்துவிடும்!


தூரத்திலிருக்கும் உங்கள் உறவினர்கள்கூட, இன்னமும் உங்களை ஆளுகை செய்து ஆட்டிப்படைக்க முடியும். இதன் மூலமாய், உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறு சம்பவித்திட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். சில சமயங்களில் பணமோ, பொருட்களோ அல்லது பூமிக்குரிய சில இலக்குகளோ.... கணவனுக்கும் மனைவிக்கும் இடையே, பிரிவினை கொண்டுவர முடியும். ஆகவே, உங்களுக்கு எது முக்கியமானது? என்பதில் உறுதியுடன் நில்லுங்கள்!!


கணவனோடு கொண்ட ஐக்கியமே மிக உயர்ந்த இலக்காகும்! இந்த இலக்கை நாம் வலிமையாய் விரும்பும்பட்சத்தில், அதை நாம் நிச்சயமாய் அடைந்துவிட முடியும்..... ஏனென்றால், நமக்கு உதவி செய்ய தேவன் நம் பட்சத்திலிருக்கிறார்!


உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம், ஒரு சிறிய முள் அல்லது ஒரு சிறிய குச்சி உங்கள் கையில் குத்தி விட்டதாக எண்ணுங்கள். அந்த முள் உங்கள் கையிலேயே இருப்பதற்கு நீங்கள் அனுமதித்தால், அது புறையேறிவிடும். இச்சமயத்தில் ஆண்டவரிடத்தில் துரிதமாய் திரும்பி அவர் மன்னிப்பை நாடுங்கள்! உங்கள் கணவரோடு கொண்டுள்ள ஐக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் அக்கறையோடு நடவடிக்கை எடுங்கள். உங்கள் பிழையை ஒத்துக்கொண்டு, உங்கள் கணவரிடம் மன்னிப்பு கேளுங்கள். இவ்வாறு மனந்திரும்பி ஐக்கியத்தில் நிலைத்திருக்க, உங்கள் முழு இருதயமாய் நாடுங்கள். இதுவே, தன்னை நியாயந்தீர்த்துக் கொள்வதும்! தன்னை சுத்திகரித்துக் கொள்வதுமாகும்!!


சிறு விஷயத்திற்கும் தவறாக புரிந்துகொள்ளும் அற்ப செயலை' சாத்தான் பயன்படுத்தி.... உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும் இடையில் 'பெரிய பிளவை' ஏற்படுத்திவிட முடியும்!


நம் கணவரோடு கொண்ட ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள, நாம் மிகுந்த பிரயாசத்தோடு எல்லா நேரங்களிலும் கவனமாயிருக்க வேண்டும். உங்கள் ஜீவியத்தின் முடிவை எட்டும்போது, நீங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிக்காக ஒருபோதும் வருந்தமாட்டீர்கள்!


உங்கள் குடும்ப சூழ்நிலையில், உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையில் ஏற்படும் வித்தியாசங்களை, நல்ல பக்குவமான வழியில் அவைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து பேசிக்கொள்ளுங்கள். உங்கள் கணவர், தான் முடிவு செய்த வழியில் உறுதியாய் இருந்தால், அதற்கேற்ப உங்கள் மனதை மாற்றிக்கொள்ள ஆயத்தமாயிருங்கள்! இவ்வாறு நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் போது, உங்கள் கணவர் தன் மனதை மாற்றி கொள்ள வாய்ப்புண்டு அல்லது அந்த பிரச்சனையை புதிய அணுகுமுறையில் கையாள நீங்களே ஒரு உத்தியை கூறமுடியும்! எப்படியிருந்தாலும், உங்களுக்குள் ஏற்படும் வித்தியாசங்களை யாதொரு வாக்குவாதமும் இல்லாமல், பக்குவமான வழியிலேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள வேண்டும்.


சபை விஷயங்கள், சபையின் மூப்பர்களுடைய பங்காகும். அதுபோன்ற விஷயங்களில், மனைவிமார்கள் ஒருபோதும் தலையிடக் கூடாது. ஸ்திரீகளுக்குரிய பகுதிகளில் காணும் கருத்துக்களை மாத்திரமே, நம் கணவரிடத்தில் எப்போதும் கூறவேண்டும். இச்சமயங்களில், நீங்களே ஒரு 'உதவி மூப்பராய்' முயற்சி செய்யாதிருக்க கவனமாயிருங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 2 : 20 ம் வசனத்தில், ஒரு மூப்பருடைய மனைவியை ஆண்டவர் 'யேசபேல்' என அழைத்தார்! அதுபோன்றவளே, கள்ளத் தீர்க்கத்தரிசியாகவும் சபையை துன்புறுத்துகிறவர்களாயும் மாறுவார்கள்.


எந்த சபையில் வலிமையான குடும்பங்கள் இருக்கிறதோ, அந்த சபையே வலிமையான சபையாகும். அந்த சபையில் உள்ள குடும்பங்கள் இணைந்த ஐக்கியமாயிருக்கிறபடியால், பாதாளத்தின் வாசல் அதுபோன்ற சபையை ஒருபோதும் மேற்கொள்ள முடியாது!


ஆகவே, நம் முழு முயற்சிக்கொண்டு, சபையின் ஐக்கியத்தை காப்பவர்களாயிருக்கக்கடவோம். சபையின் ஐக்கியம் ஒரு சிகரம் போல்! ஆகிலும், அதற்காக நாம் நாள் தோறும் பிரயாசப்படவேண்டும். முடிவில் இலக்கை அடைவதற்கு, பரிசுத்தாவியின் மூலமாய் தேவன் நமக்கு உதவி செய்வார். 'ஒரு பேராலய வடிவத்தை' நினைத்துப் பாருங்கள், அது கட்டப்பட பல வருடங்கள் ஆனாலும்...... அது கண்டிப்பாய் கட்டி முடிக்கப்படும்!


நம் கணவர் காண்கிற விதமாகவே, நாம் எப்போதும் காணமுடிவதில்லை. இருப்பினும், அதுபோன்ற வேறுபாடுகளை நம் கணவரோடு தனியாக பேசிக்கொள்ள வேண்டுமேயன்றி, நம்முடைய பிள்ளைகளுக்கு முன்பாகவோ அல்லது மற்றவர்களுக்கு முன்பாகவோ அந்த வேறுபாடுகளைப் பேசக்கூடாது. அதுபோன்ற விடியங்களை நம் பிள்ளைகள் தூங்கிய பின்பு, அருகில் வேறு ஒருவரும் இல்லாத நேரத்தில் கலந்துரை செய்வது நல்லது. தனிமையில் அவ்வாறு நம் வேறுபாடுகளை பேசிக்கொள்ளும்போது, மிக பக்குவமான முறையில் பேசிக்கொள்ள வேண்டும்!


கணவன் மனைவிக்குள்ளாக சமாதானம் இல்லாத நிலையில், பிள்ளைகள் உடனே அதை அறிந்து கொள்வார்கள்! அதனிமித்தமாய் 'ஒரு பாதுகாப்பற்ற நிலைக்கு பிள்ளைகள் சென்றுவிடுவார்கள். அந்த நிலையில், நம்முடைய கவனத்தை அதிகமாய் தங்களிடம் எதிர்பார்ப்பார்கள். மேலும், பல்வேறு காரியங்களைக் குறித்த எதிர்பார்ப்பும் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும்.


உங்கள் மனதில் கோபம் ஏற்படும்போது 'அமைதியாய் இருந்திட' முயற்சிப்பது நமக்கு இருக்க வேண்டிய சிறந்த கட்டுப்பாடாகும்! அவ்வித அமைதியாயிருப்பதற்கு தேவனுடைய உதவியை நாடுங்கள். அடுத்து நீங்கள் பேசுவதற்கு முன்பாக, உங்கள் இருதயத்தில் ஏற்பட்ட பதட்டத்தை முற்றிலும் மேற்கொண்டு விடுங்கள்!


உங்கள் பிள்ளைகள் திருமணமானவுடன், நீங்கள் தொடர்ந்து அவர்களுக்கு புத்தி சொல்லாதபடி, அவர்கள் விரும்பியபடி தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு விட்டுவிடுவதே சிறந்த செயலாகும். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்கள் பிள்ளைகள் உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருப்பார்கள். உங்கள் பிள்ளைகளிடமும், உங்கள் பேரப்பிள்ளைகளிடமும் கொண்ட அணுகுமுறைக்கு ஏராளமான ஞானம் தேவையாயிருக்கிறது. நீங்கள் ஏற்கனவே உங்கள் பிள்ளைகளை உங்கள் வழியில் நடத்தி வந்தீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். அதுபோலவே, உங்கள் தலையீடு இல்லாமல் அவர்களும் தங்கள் பிள்ளைகளை 'தாங்கள் விரும்பும் வழியில்' நடத்தும் வாய்ப்பை பெறுவார்களாக! இவ்வாறாகவே, உங்கள் அன்பையும் ஐக்கியத்தையும், உங்கள் பிள்ளைகளிடத்தில் நீங்கள் பாதுகாத்திட முடியும். இருப்பினும், உங்கள் உதவி எப்போதெல்லாம் அவர்களுக்கு தேவையோ, அப்போதெல்லாம் உதவி தந்திட ஆயத்தமாயிருங்கள்! ஆம், புத்திமதியை அவர்கள்உங்களிடம் கேட்கும்போது மாத்திரமே புத்திசொல்லுங்கள், அதுபோதும்!

அதிகாரம் 4
அடங்கி வாழும் மகிமை' காணுங்கள்

என் கணவருக்கு அடங்கியிருக்கும் ஜீவியத்தை முக்கியமான மூன்றாவது பங்காக காண்பதற்கு, ஆண்டவர் என் கண்களைத் திறந்தார்.

 

“அடங்கி வாழுதல் என்ற வார்த்தையை 'கேட்பதற்கு கூட' அனேகர் விரும்புவதில்லை! அது ஏனென்றால், அடங்கியிருக்கும் வாழ்க்கையின் அர்த்தம், தன்னுடைய எல்லாவற்றையும் தன் கணவரிடத்தில் கொடுத்துவிடுவதும், அவர் எதை விரும்பினாலும் அதைச் செய்ய வேண்டும்...... என்றே எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், இது அல்ல, அதன் பொருள்! நானோ அடங்கியிருக்கும் ஜீவியத்தை, இயேசு தன்னை பிதாவிற்கு ஒப்புக்கொடுத்து, தன் பிதா தனக்கு கூறியயாவற்றையும் செய்து முடித்தது போலவே கண்டேன். அவர் பூரணம் இல்லாத தந்தை யோசேப்பிற்கும் தாய் மரியாளுக்கும் 30ஆண்டுகள் அடங்கியிருந்தார்.... அவ்வாறு இருக்கும்படி இயேசுவிடம் பிதா கூறியிருந்தார். இயேசுவும் தன் பரம தந்தையை அவ்வளவாய் நேசித்தப்படியால், தன் பிதாவின் சித்தத்திற்கு முற்றிலும் அடங்கியிருந்தார். இயேசுவிடமிருந்த இந்த மனப்பான்மையே, நமக்கும் இருக்க வேண்டும்! (பிலிப்பியர். 2:5).

 

இயேசு பிதாவுக்கு சமமாய் இருந்த ஸ்தானத்தை, தனக்கென பற்றிக் கொள்ளாமல், மனப்பூர்வமாய் தன்னை வெறுமையாக்கினார் (பிலி. 2: 5-1). அவர் அடங்கியிருந்த ஸ்தானம், தேவனை விட ஒரு படி தாழ்வான “ஒரு தூதன்” என்ற ஸ்தானமாயிராமல்.... அதை விட தாழ்ந்த 'ஒரு மனுஷனாகவும்... அதிலும் மிக கடை கோடியான ஒரு அடிமை' என்ற ஸ்தானத்திற்கு இறங்கி வந்தார். ஒரு அடிமையானவனுக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுக்கு செய்யப்பட்ட யாதொன்றையும் குறித்து, அவன் கேள்வி கேட்க இயலாது! முதலாம் நூற்றாண்டு காலத்தில், ஒரு அடிமையை பட்டினி போடவோ அல்லது கொன்று விடவோ முடியும். அந்நாட்களில் அவனை பாதுகாக்க சட்டம் எதுவும் இல்லை. இயேசுவோ இந்த அடிமையை விட இன்னும் தாழ இறங்கி “ஒரு குற்றவாளியாய்” எண்ணப்பட்டு, நமக்காக சிலுவையில் மரித்தார்! இங்குதான், வீழ்ச்சியுற்ற மனுக்குலத்தின் மீது இயேசு கொண்டிருந்த ஆச்சரியமான அன்பை நாம் காண முடிகிறது.

 

இவ்வாறு தாழ இறங்குவதற்கு இயேசு தெரிந்து கொண்டிருந்தால், நாமும் நம்முடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து கீழே இறங்குவதற்கு விருப்பம் உள்ளவர்களாயிருக்க வேண்டும். அடங்கியிருத்தலையும், சாந்தத்தையும் இயேசுவின் மாதிரியிலிருந்தே நாம் கற்றுக் கொள்கிறோம்.

 

சாத்தானின் பெருமையினிமித்தமும், அடங்கியிருக்க மறுத்ததினிமித்தமும் வானத்திலிருந்தே கீழே தள்ளப்பட்டான். ஆனால் இயேசுவோ, பூமியில் வாழ்ந்த ஜீவகாலமெல்லாம், சிலுவையின் மரணம் வரை தன் பிதாவுக்கு அடங்கியிருந்து, நமக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தார். இவ்வாறாகவே, பரமண்டலத்திலிருக்கும் அவருடைய பிதாவோடு நாமும் நித்திய ஐக்கியம் பெறும்படிக்கு 'வழியை' திறந்து வைத்தார். மெய்யாகவே, ஒரு அடங்கியிருக்கும் மனைவியின் மூலமாய் ஆச்சரியமான செயல்களை தேவன் செய்திட முடியும்!

 

தேவன் உங்களுக்கு ஒரு நல்ல கணவரை கொடுத்திருந்தால், இந்த உலகில் அவருக்கு மகிழ்ச்சியுடன் அடங்கி கீழ்படிவது, இந்த உலகத்தில் எதைக் காட்டிலும் விட இலகுவான செயல் என்றே சொல்ல வேண்டும்!

 

கீழ்படிந்து அடங்கியிருப்பது, மனைவியர்களுக்கு தேவன் கொடுத்த கட்டளை என்று அறிய வேண்டும் (எபே 5:22). நாம் தேவனுடைய வார்த்தையில் இப்படி ஒரு கட்டளையை காணும்போது, நாம் தேவபயம் கொண்டவர்களாயிருந்தால்..... தேவனை ஒரு கேள்வியும் கேட்காமல், அவர் கொடுத்த கட்டளைக்கு அப்படியே கீழ்படிந்துவிடுவோம். வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு கட்டளையும், தேவனிடத்திலிருந்து வரும் உதவியோடு நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆகவே, மனைவியருக்கு தரப்பட்ட இந்த கட்டளைக்கும், தமது உதவியை நிச்சயம் தருவார்! காரியம் இவ்வாறாகயிருப்பதால், அடங்கி கீழ்படிவது ஒரு கடினமான செயலாக நமக்கு இருப்பதில்லை.

 

சில ஜனங்கள் நமக்காக பரிதபித்து “கிறிஸ்தவ பெண்மணிகளாகிய உங்கள் நிலை பரிதாபம்! உங்கள் கணவன்மார்களுக்கு இவ்வாறு கீழ்படிந்திருப்பது ஒரு

பெருந்துயரம்! உங்களால் எப்படி அடங்கி வாழ்ந்திட முடியும் ? உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் ஏன் எதிர்த்து பேசக் கூடாது?” என்றெல்லாம் கேட்பார்கள். ஆனால், இந்த உலகில் “தேவனுக்கு கீழ்படிவதுதான்” அதிக மகிழ்ச்சியான செயல் என்பதை இவர்கள் அறியார்கள்! இந்த பூமியில் இயேசு வாழ்ந்த விதமாய் வாழ்வதைக்காட்டிலும், வேறு யாதொன்றும் நமக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்திட இயலாது! "கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பதாக கூறும் யாவரும் அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்” என்றே வேதம் கூறுகிறது (1யோ 2:6). மனைவியர்களாகிய நமக்குத்தான், இத்தனை ஆச்சரியமான வாய்ப்பு கிட்டியுள்ளது! இந்த பூமியில் வாழ்ந்த தன் ஜீவிய காலம் முழுவதும், பிதாவுடைய சித்தத்திற்கு இயேசு முற்றிலுமாய் அடங்கி கீழ்படிந்திருந்தார்...... அவரது செயலின்' ஒரு பங்கைத்தான் மனைவியர்களாகிய நாம் இப்போது செய்கிறோம்.

 

நாம் தேவனை பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்ந்திட நாடும்போது, இந்த உலகம் ஒரு போதும் தர முடியாத சமாதானத்தையும், சந்தோஷத்தையும் ஆண்டவர் நமக்கு தருகிறார்! இந்த அனுபவத்தை தேவனை பிரியப்படுத்தி வாழும் என் ஜீவியத்தில் அதிகமதிகமாய் ருசித்திருக்கிறேன். நான் திருமணமாகி 46 வருடங்களுக்குப் பிறகு, தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படிந்து வாழ்வதே மிக மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என்பதில், என் கணவருக்கு கீழ்படியும் பிரமாணமும் அதில் அடங்கும்! இதை, எனது நேர்மையான சாட்சியாய் கூற முடியும். சில சமயங்களில், நான் எவ்வாறு அடங்கி கீழ்படிந்திருக்க வேண்டுமோ, அதன்படி இல்லாமல் நான் தவறிய செயலே, என்னை ஆண்கொண்ட ஒரே வருத்தமாயிருக்கிறது. இத்தனை மகத்துவமுள்ள வாழ்க்கை வாழ்ந்திட வல்லமை தந்திடும் பரிசுத்தாவியானவருக்கே ஸ்தோத்திரமுண்டாவதாக! இவ்விஷயத்தில் அவ்வப்போது நாம் தவறும்போது, மனத்துருக்கத்துடன் மன்னிப்பு அருளும் ஆண்டவருக்கே ஸ்தோத்திரமுண்டாவதாக!

 

தன் கணவனாகிய ஆபிரகாமை ஆண்டவர் நடத்தும் பாதையில், உறுதியான விசுவாசம் கொண்டிருந்த சாராளை பரிசுத்தாவியானவர், நமக்கு மாதிரியாக 1பேதுரு 3:1-6 வசனங்களில் எடுத்துரைத்திருக்கிறார். அந்த விசுவாசத்தோடுதான் தன் கணவனை சாராள் பின்பற்றினாள் ! அநேகம் சமயங்களில், அவ்வாறு கீழ்படிந்திருப்பது சாராளுக்கு கடினமாய் தோன்றியிருக்கலாம். உதாரணமாய், ஆபிரகாம் தன் மனைவியை பார்த்து “இவள் என் சேேகாதரி ” எனக் கூறியதினிமித்தம், 'சாராளின் ஜீவன்' புறஜாதி ராஜாவின் கையில் அபாயத்திற்குள் சிக்கிக் கொண்டது! ஆனால் தேவனோ சாராளை பாதுகாத்தார்! தன் ஒரேபேறான மகனை பலிபீடம் வைத்திட, ஆபிரகாமிடம் தேவன் கேட்டார் என அறிந்த சாராள்...... தேவனை முழு இருதயமாய் நம்பியிராவிட்டால், எவ்வளவு வேதனையால் துடித்திருக்கக்கூடும்? அந்த பாச துடிப்பில், தன் கணவன் ஆபிரகாம் தேவனுக்கு கீழ்படிய வேண்டிய செயலை, அதிக சஞ்சலமானதாய் ஆபிரகாமிற்கு கொண்டு வந்திருக்க முடியும்!

 

நம்முடைய கணவன்மார்களுக்கு நாம் கீழ்படியும் செயல், நமது குடும்பத்தை கணவருடைய தலைமையில் நடத்தும் ஆண்டவரை மெய்யாய் விசுவாசிக்கும் செயலாகவே பிரதிபலிக்கிறது!

 

இவ்வாறாகவே, தேவனுடைய அதிகாரத்தின் படிகள் 1கொரிந்தியர் 11:3ல் கூறப்பட்டுள்ளது. “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார் ! ஸ்திரீக்கு புருஷன் தலையாயிருக்கிறார்! கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்!” என வேதம் கூறுவதை நாம் அறிந்திருக்க வேண்டும்.

 

பிதாவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் சமமாயிருந்தாலும், தன் பிதாவிற்கு அடங்கி வாழவே இயேசு தெரிந்து கொண்டார். அதுபோலவே மனைவியர்களாகிய நாம், கணவன்மார்களுக்கு சமமாய் இருந்த போதும், கணவனின் தலைமைக்கு கீழ்படிந்திருப்பதையே தெரிந்து கொள்ள வேண்டும்...... ஏனென்றால், இது தேவன் ஏற்படுத்திய ஒழுங்காயிருக்கிறது! நாம் தேவனுடைய கட்டளையைப் பின்பற்றும் போது, தேவனுடைய ஆசீர்வாதம் நம் குடும்பங்களில் நிச்சயமாய் வந்திறங்கும் என எதிர்பார்த்திட முடியும்.

 

நம்முடைய அபிப்பிரயாங்களை தம் கணவனிடத்தில் தாராளமாயும், வெளிப்படையாயும் சொல்லிட முடியும். ஆனால் 'இறுதியான முடிவு' என வரும்பொழுது, ஆண்டவர் தனது ஆளுகையில் ஆண்டுகொண்டு நம் கணவன் நல்ல முடிவு எடுக்கச் செய்வார் என்பதில், நாம் ஆண்டவரை நம்பியிருக்க வேண்டும்! கணவனுக்கு மாறான அபிப்பிராயத்தை நாம் கொண்டிருந்தாலும், முடிவான தீர்மானத்தை நம் கணவன் எடுப்பதற்கே விட்டுக் கொடுத்திட வேண்டும். இவ்வாறாக, நாம் தேவனுடைய ஒழுங்கை நம் குடும்பத்தில் மதித்து நடக்க வேண்டும் என்பதை நம் பிள்ளைகள் காண்பது நல்லது!

 

கணவன் மனைவிக்குரிய உறவு, கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள உறவாகவே எபேசியர் 5 : 22,23 வசனங்களில் காண்கிறோம். இது ஒரு பெரிய இரகசியமாகவே அழைக்கப்படுகிறது. ஒரு மனைவி தன் கணவனுக்கு கீழ்படிந்திருக்கும் போது..... உண்மையாய் நடந்தேறும் செயல் என்னவென்றால் “சபை கிறிஸ்துவுக்கு அடங்கியிருக்கிறது!” என்ற சத்தியத்தை, இந்த மனைவி உலகிற்கு காட்டுகிறாள். ஆகவே, ஓர் தேவ பக்தியுள்ள குடும்பம் “ஒரு குட்டி சபையாகவே” திகழுகிறது! அமெரிக்க தேசத்தின் 'சுதந்திரா தேவியின் சிலையை' வேறொரு இடத்தில் பார்க்கும் போதும்.... இந்திய தேசத்தின் 'தாஜ்மஹால்' போன்ற கட்டிடத்தை வேறொரு இடத்தில் பார்க்கும்போதும்..... அவை அசலுக்கு ஒப்பாகவே காணப்படுகிறது! மெய்யாகவே அசலுக்கு பிரதிபலிப்பாய் காணப்படும் அந்த சிலையையோ, அந்த கட்டிடத்தையோ காண வேண்டும் என்கிற விருப்பம் யாவருக்கும் உண்டாகும்! அதுபோலவே, “நம் குடும்ப ஜீவியம்” ஜனங்களை கிறிஸ்துவின் சபைக்குள் ஈர்த்துக் கொள்ள வேண்டும்.

 

தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்ற “சாந்தமும் அமைதலுமுள்ள” ஆவியை மனைவியானவள் பெற்றுக்கொள்ளும்படி 1பேதுரு 3 :4 புத்தி கூறுகிறது. அதுபோலவே, “சாந்தத்தையும் மனத்தாழ்மையையும்” தன்னிடம் வந்து கற்றுக்கொள்ளும்படி இயேசு கூறினார் (மத்தேயு 11 : 28,29).

 

குணசாலியான ஸ்திரீ “தயவுள்ள போதகத்திலிருந்து” எடுத்துப் பேசுகிறாள் என நீதிமொழிகள் 31 : 26ல் கூறுகிறது. மனைவியர்களாகிய நாம், நம் கணவன்மார்களிடம் “மரியாதையுடன் பேசும் பழக்கத்தை” வளர்த்துக்கொள்ள வேண்டும். எப்பொதெல்லாம் நாம் தடுமாறி, கடினமாகவோ அல்லது கிறிஸ்துவைப் போல் அல்லாது பேசியிருந்தால்... உடனடியாக மன்னிப்பு கேட்டு, ஒப்புரவாக வேண்டும். அநேகமாக, ஒரு தாயிடம் இருந்தே பிள்ளைகள் கடினமாய் பேச கற்றுக் கொள்கிறார்கள் என்பதை நாம் அறிந்து விழிப்பாயிருக்க வேண்டும்!

அதிகாரம் 5
பிள்ளைகளைப் போதித்து சிட்சியுங்கள்

நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டிய மிக முக்கியமான பாடங்களில் ஒன்றே பெற்றோர்களுக்கு கீழ்படியும் பாடம்' (எபேசியர் 6:1). நம்முடைய கணவனுக்கு கீழ்படியும் நம் சுபாவத்தை பிள்ளைகள் கவனித்து பார்ப்பதைக் கொண்டே அவர்களுக்கு ஒரு தாய் கீழ்படிதலை கற்றுக்கொடுத்திட முடியும். நம்முடைய கணவர் வீட்டிலிருந்து தூர இடத்திற்கு போகும்போது, அவர் கூறிச் சென்ற சில ஒழுங்குகளை நீங்கள் மீறுவதை பிள்ளைகள் கண்டால்..... அவர்களும் ஒரு நாள் நமக்கு எதிராக முரட்டாட்டம் செய்வார்கள். அதைபோல், நம் கணவனிடம் நாம் மரியாதையுடன் நடந்தால், நம்முடைய பிள்ளைகள் நமக்கு மரியாதை கொடுக்கவும், மற்றவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளவும் கற்றுக் கொள்வார்கள்!

 

நம் பிள்ளைகளுக்கு “உண்மை ஜீவியத்தையும்” எல்லா நேரங்களிலும் கற்றுத்தர வேண்டும். எப்போதாவது தன் தாய் உண்மை பேசாமலிருந்தால், நம் பிள்ளைகள் அதை மிக எளிதில் அறிந்து கொள்வார்கள். நேர்மையற்ற குணத்தை இள வயதிலேயே பிள்ளைகள் கண்டுபிடித்துவிடுவார்கள்!

 

நம் பிள்ளைகள் 'சுத்தமும் ஒழுங்குமாயிருப்பதற்கு நாம் கற்றுத்தர வேண்டும். நாம் சுத்தமுள்ளவர்களாயிருந்தால், நம்முடைய வீட்டையும் நாம் சுத்தமுள்ளதாக வைத்திருப்போம். நம்மைப் பார்த்து நம் பிள்ளைகளும் சுத்தமாகயிருப்பதற்கு கற்றுக்கொள்வார்கள். விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடி முடித்தவுடன், அவைகளை உரிய இடத்தில் வைத்துவிடும்படி போதிக்க வேண்டும்.

 

வீணாக்காதிருக்கவும் நம்முடைய பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். சாப்பிடும் நேரத்தில், முதலில் கொஞ்ச உணவே பரிமாற வேண்டும்! அதை சாப்பிட்டு முடித்த பின்பே, அடுத்த பங்கு தர வேண்டும். இதன் மூலமாய் தட்டில் வைக்கப்பட்ட உணவு முழுவதையும் சாப்பிட்டு உணவை வீணாக்காமலிருக்க நாம் கற்றுத் தரமுடியும்.

 

இவ்வாறு நேரம் கடைப்பிடிப்பது, 'பேச்சிலும்' 'தூய்மையிலும்' 'சாப்பிடும் பழக்கத்திலும்' நாம் ஒழுங்கான கட்டுப்பாடு பெற்றிருந்தால்...... அந்த ஒழுங்கின் கட்டுப்பாட்டை பிள்ளைகளும் கற்றுக்கொள்வார்கள். நம் பிள்ளைகள் சுயநலம் இல்லாமல், தங்களுடையதை பிறருக்கு பங்கு தரவும் கற்றுத்தர வேண்டும். நாம் பிறரிடம் கரிசனை கொண்டிருந்தால், அதுபோன்று கரிசனையாயிருப்பதற்கு அவர்களும் கற்றுக்கொள்வார்கள்.

 

‘போதுமென்ற மனம் நாம் கற்றுத்தர வேண்டிய மற்றொரு குணாதிசயமாகும். அநேகமான பிள்ளைகள் தங்கள் ஆடைகள், மற்றும் விளையாட்டு சாமான்கள் நிமித்தம் அதிருப்தி கொண்டவர்களாயிருக்கிறார்கள். ஏனெனில், இவர்கள் வசதியான வீடுகளில் உள்ள பிள்ளைகளை வைத்தே தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். நீங்கள் வாழும் விதத்தை வைத்து “போதுமென்ற குணாதிசயத்தையும், மதிப்பையும் அவர்களும் கற்றுக் கொள்வார்கள்” உங்கள் மாதிரியையே, பிள்ளைகள் எப்போதும் நினைவுகூருவார்கள்.

 

பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தை நாம் எப்போதெல்லாம் பேசுகிறோமோ, அனேகருடைய மனதில் முதலாவதாக தோன்றுவதெல்லாம் “அவர்களை சிட்சித்து திருத்தும் செயலேயாகும்!” நம் பிள்ளைகளை எவ்வாறு கண்டித்து திருத்த வேண்டும்? என்ற கேள்வியே அநேக தாய்மார்களிடத்தில் உள்ளது.

 

சாதகமான நிலையில் நம் பிள்ளைகள் இருந்தால்..... அவர்களோடு அமர்ந்து உறையாடவும், வேதாகம கதைகள் சொல்லிக் கொடுப்பதும், மற்ற நல்ல புத்தகங்களிலிருந்து கதைகளை சொல்லிக் கொடுப்பதும், வீட்டிற்கு உதவி செய்ய வேண்டிய நேரத்தில் `தங்களுக்குரிய ஆர்வத்தை ஒதுக்கி விட்டு உங்களுக்கு உதவி செய்யவும் போதிக்க வேண்டும். இவ்வாறு, நல்ல வளர்ச்சியான விதத்தில் பிள்ளைகளுக்கு போதித்து நடத்த முடியும். இப்படியிருந்தால், அவர்களை திருத்துவதற்கென அதிகமான வேலைகள் இருக்காது. ஆனால், உங்கள் பிள்ளைகளை விட்டு விட்டு, உங்கள் அலுவலின் நிமித்தம் நீங்கள் அடிக்கடி வெளியே செல்பவர்களாயிருந்தால், பிள்ளைகளிடத்தில் பாதிப்பு உண்டாகி பல தவறான பழக்க வழக்கங்களில் வீழ்கின்றபடியால், நீங்கள் அவர்களை கண்டித்து திருத்தும் நிலை ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில், பிள்ளைகள் இளமையாயிருக்கும்போதே, நேரம் செலவழித்து அவர்களை திருத்துங்கள்.

 

உங்கள் பிள்ளைகளைக் குறித்த முதல் முக்கியத்துவத்தை' நீங்கள் உணர்ந்தவர்களாயிருந்தால், அவர்களின் இளம்பிரயாத்திலேயே நீங்கள் கடினமாய் பிரயாசப்பட்டு “நல்ல அஸ்திபாரத்தை போடுவதினிமித்தம், பிள்ளைகள் வளர்ந்து வரும் பருவத்தில், அவர்களுக்குரிய நெருக்கமான அழுத்தங்களை தாங்களாகவே கையாண்டு, நல்ல தீர்மானங்களும் எடுப்பதை காண முடியும்!

 

பிள்ளைகளை திருத்துவதற்குரிய "பொன்னான விதி” என்னவென்றால் “பிள்ளைகளை உங்கள் கோபத்தில் திருத்த முயற்சிக்காதீர்கள்” என்பதுதான். கோபத்தில் நீங்கள் பிள்ளைகளை அடித்தால், அவர்களுக்கு தர வேண்டிய போதுமான தண்டனையை விட மிக அதிகமாய் நீங்கள் கொடுத்திருப்பீர்கள். நீங்கள் அடித்த தடங்கள் பிள்ளைகளின் மீது இருந்தால், நீங்கள் தந்த அடிகள் கடினமானது என்று அறிந்து கொள்ளலாம்! “கோபப்படாமல் இருக்க வேண்டும்” என்று சொல்வது எளிது.... ஆனால், அதை செயல்படுத்தியவர்களோ மிக கொஞ்சம்! இருப்பினும் நாமோ கோபத்தை ஜெயிக்கும்படி ஆண்டவருடைய உதவியை கேட்டு, தேவ பக்தியான முறையில் நம் பிள்ளைகளை திருத்தக்கடவோம்!

 

பிள்ளைகளை திருத்துவதற்குரிய பல்வேறு வழிமுறைகள் செயலற்று போனால்

மாத்திரமே...... கடைசியாக பிரம்பு கொண்டு அடிக்கும் தண்டனையை கையாள வேண்டும். சில சிலாக்கியங்களை அவர்களுக்கு தராமல் தள்ளிவைப்பது, ஒரு நல்ல திருத்தும் வழியாகும். உதாரணமாய், விளையாட அனுமதிக்காமல் ஒரு மூலையில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் அமரச்செய்வது, அல்லது படுக்கையில் சுமார் பதினைந்து நிமிடங்கள் படுத்திருக்கும்படி செய்வது நல்லது. அந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் அமைதியானவுடன், இந்த சிட்சையை நீங்கள் ஏன் அவர்களுக்கு தந்தீர்கள் என்பதை போதித்து கூற வேண்டும்.

 

நாம் தரும் போதனையை பிள்ளைகள் சீக்கிரத்தில் மறந்து விடுவார்கள் என்பதை நம் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே தான், அந்த போதனைகளை

மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். சிறு பிள்ளைகளாய் இருக்கும் அவர்களை, வயதுக்கு வந்த பிள்ளைகளின் ஸ்தானத்தில் வைத்து கடிந்து திருத்துவது கூடாது!

 

பெற்றோர்களாகிய நாம் நிலைத்திருக்கும் சுபாவம் கொண்டவர்களாயிருக்க வேண்டும். உதாரணமாய், ஒரு தவறான செயலை செய்யக் கூடாது என நீங்கள் கூறிய பின்பு, அதற்கு அவர்கள் உங்களுக்கு கீழ்படியாமல் மீண்டும் அதையே செய்கிறார்கள். இந்த நிலையில், அவர்களின் கீழ்படியாமையை நீங்கள் கண்டும் கவனிக்காதவர்களாயிருந்தால்... அதுவே, நிலைத்திராத சுபாவம்! அதை சாதகமாக பயன்படுத்தி, உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து தவறு செய்வார்கள். இதற்கு மாறாக, அவர்களின் கீழ்படியாமையை நீங்கள் கவனமாய் பார்த்து, திருத்துவதற்கு செயல்படுகிறீர்கள் என்பதை, பிள்ளைகள் நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும், வீட்டில் விருந்தாளிகள் வரும் சமயம், அதை பிள்ளைகள் சாதகமாய் கையாள முடியும். அச்சமயங்களில் பிள்ளைகளை தனியே அழைத்து, அவர்களுடன் பேசி திருத்த வேண்டும்.

 

பிள்ளைகளின் கடந்த காலத் தவறுகளை திரும்பத் திரும்ப கூறி நினைவு படுத்தக்கூடாது. ஆண்டவரின் இரக்கம் காலைதோறும் புதிதாயிருக்கிறது போலவே, நாமும் இரக்கமாயிருக்க வேண்டும், எப்போதுமே விதிமுறைகளை கையாளுபவர்களாய் இருக்க கூடாது. தவறு செய்யும் சில சமயங்களில் “பரவாயில்லை, அடுத்த முறை இதுபோன்று செய்யக்கூடாது!” என விட்டுக் கொடுக்கும் மனதையும் பெற்றிருக்க வேண்டும்.

 

என் கணவர் வீட்டை விட்டு ஐந்து வாரங்கள் கூட தொடர்ச்சியாய் வெளியே சென்றிருக்கிறார்... அந்த நாட்களில் என் பிள்ளைகளோடு பல்வேறு பிரச்சனைகளை நான் கையாள வேண்டியதாயிருந்தது. சில கீழ்படியாமைகள் அவ்வளவு பெரிதாயிருப்பதில்லை. அவைகளை அவர்களிடம் சாதாரணமாய் நான் பேசி திருத்துவதுண்டு. பெரிதான கீழ்படியாமை என்று வரும்போது, அவைகளை ஒரு புத்தகத்தில் நான் எழுதி வைத்துக் கொள்வேன். அதைக் குறித்து, பின்பு அவர்களிடம் அதிக நேரம் அமர்ந்து பேசுவதுண்டு. அதற்கும் கேளாத பட்சத்தில் “இவ்விஷயத்தை அப்பா திரும்பியவுடன் நான் கூற வேண்டியது வரும்” என அவர்களை எச்சரிப்பதுண்டு. நானோ, என் பிள்ளைகள் அப்பா திரும்புதை 'ஒரு போலீஸ்காரர்' தங்களை கண்டிக்க வருகிறார் என பயமுறுத்தும் சூழ்நிலை போல் உருவாக்கிட விரும்பியதில்லை. அப்பா திரும்பி வரும்போது நல்ல சாக்லேட், பரிசுப் பொருளுடன் வருவார்! என ஆசையோடு எதிர்பார்த்திருக்கவே நான் விரும்பினேன். ஆகவே என் கணவர் வரப்போகும் நாட்களுக்கு முன்பாக, பிள்ளைகளின் பிழைகளை எழுதி வைத்த நோட்டை வைத்து, அவர்களின் கீழ்படியாமையை விளக்கிக் கூறுவேன்! பிரமாணத்தின் ஒவ்வொரு மீறுதலுக்குமுள்ள மோசமான விளைவை அவர்களுக்கு விவரித்துக் கூறுவேன். நான் எடுத்து சொல்லும் ஒவ்வொரு பகுதிக்கும், பிள்ளைகள் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார்கள். இவ்வாறு செய்து முடித்த பின்பு, அவர்களின் கீழ்படியாமை குறிப்புகளை என் நோட்டிலிருந்து அழித்து விடுவேன் ! இவ்வாறாகவே, “கீழ்படிவதை” மிகச்சிறந்த செயலாக என் பிள்ளைகள் அறிந்து

கொள்ள வேண்டும் என நான் விரும்பினேன்.

 

பிள்ளைகள் எழுத கற்றுக்கொண்ட பிறகு, கீழ்படியாதிருந்தால்...... “ நான் இதுபோன்ற கீழ்படியாமையை இனி செய்ய மாட்டேன்” என இருபது முறையோ அல்லது நூறு முறையோ கூட எழுதும்படி செய்திருக்கிறேன். இவ்வாறாக, அந்த

கீழ்படியாமையை அவர்கள் மீண்டும் செய்யாதிருக்க நான் முயற்சித்தேன். இதன் மூலமாய், அவர்களின் கீழ்படியாமை செயல்களை நான் அசட்டையாய் விட்டு விடுவதில்லை என்பதையும் என் பிள்ளைகள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் நான் நம்பிக்கையாயிருந்தேன். இவ்வாறு பலமுறை தங்கள் கீழ்படியாமைகளை நோட்டில் எழுதியதினிமித்தம் அவர்களின் கையெழுத்தும் நன்கு சீரடைந்தது!

 

பிள்ளைகளின் சில கீழ்படியாமைகள், என் கணவருக்கும் தெரிந்திருக்க வேண்டியதின் அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன். நாங்கள் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது “அந்த முக்கிய கீழ்படியாமையை” அதை யார் செய்தார்கள் என குறிப்பிடாமலே என் கணவரிடம் ஆலோசனை கேட்பதுபோல் கேட்பேன். அதற்கு என் கணவர் அதுபோன்ற கீழ்படியாமைக்குரிய திருத்துதலையும், புத்தியையும் கூறுவது, நான் ஏற்கனவே பிள்ளைகளுக்கு கூறிய புத்திமதிகளை உறுதிபடுத்துவதாயிருக்கும். பிள்ளைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாய் இருக்கும். என் வீட்டில் ஒழுங்கை பாதுகாக்க நான் எப்போதும் விரும்பினேன். கீழ்படியாமை' மிக மோசமான செயல் என நன்கு அறிந்து கொள்ளவும் விரும்பினேன். ஆகிலும், ஒரு கடினமான பள்ளி டீச்சராகவோ, கொடிய நீதிபதியாகவோ இருப்பதற்கு நான் சிறிதும் விரும்பவில்லை. ஏனெனில் தேவன் நமக்கு மன்னித்ததைப் போலவே, அவர்களும் மன்னிப்பை அனுபவிக்க நான் விரும்பினேன்!

 

சில சமயங்களில் என் பிள்ளைகளுக்குப் பிடித்த விளையாட்டாகிய ‘கிரிக்கெட் விளையாட்டை' ஒரு நாள் முழுவதும் விளையாட அனுமதி தர மறுத்து, என் கணவர் பிள்ளைகளைத் திருத்தியிருக்கிறார்.

 

பிள்ளைகள் இன்னமும் நியாயபிரமாணத்திற்கு கீழிருக்கிறபடியால், நம் மூலமாய் கிருபையையும் ருசிபார்த்திட வேண்டும். வெறும் பிரமாணங்களை வைத்து நாம் அவர்களை ஆண்டுகொண்டால், அவர்கள் வளர்ந்து வரும் சமயம் நமக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்கிறவர்களாய் மாறிவிட வாய்ப்புண்டு!

 

மேலும், எப்பொழுது வீட்டைவிட்டு வெளியேறி தாங்கள் விரும்பியதை யெல்லாம் செய்யலாம் என அந்நாளுக்காக காத்திருப்பார்கள். நானோ, என் பிள்ளைகள் தங்கள் வீட்டை நேசிக்க வேண்டும் என விரும்பினேன். கொடுமையான இந்த உலகில், தங்கள் வீடு ஒரு 'அடைக்கல பேழை' என அவர்கள் காண வேண்டும்...... எப்பொழுது வீட்டிற்குத் திரும்பி தங்கள் பெற்றோரோடு இருக்கலாம் என ஆவலாய் அவர்கள் எதிர் நோக்கியிருக்கவே நான் விரும்பினேன்.

 

பெற்றோர்களாகிய நமக்கு 'ஞானமே' மிகப்பெரிய தேவையாயிருக்கிறது! நம் பிள்ளைகளிடம், நாம் எந்த பகுதியில் அளவுக்கு மீறிய கண்டிப்பாய் இருந்தோம்? என்பதும், எந்த பகுதியில் மிகுந்த நிர்விசாரமாய் விட்டு விட்டோம்? என்பதையும் நமக்கு காண்பிக்கும்படி ஆண்டவரிடம் நாம் ஜெபிக்க வேண்டும். குறிப்பாக பிள்ளைகளின் வயது வந்த வருடங்களில், நாம் எப்போதும் அவர்களிடம் மிகுந்த ஞானத்தோடும், பொறுமையோடும், அன்போடும் நடக்க வேண்டும்.

 

தேவ பக்தியுள்ள குடும்பத்தைக் கட்டுவதற்கு கணவனுக்கும், மனைவிக்கும் இருக்க வேண்டியதெல்லாம்...... அவர்களின் தனி ஜெபமும்! சேர்ந்து ஜெபித்திடும் ஜெபமுமேயாகும்!! இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் தேவனுடைய உதவியை வாஞ்சையோடு நாடி தேட வேண்டும். ஒரு நாளின் எல்லா நேரத்திலும் எப்போதெல்லாம் நமக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நம் இருதயத்தில் அமைதியுடன் ஜெபிக்கிறவர்களாயிருக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகள் குறிப்பாய் பிரச்சனைகளை சந்திக்கும்போது, நாம் அவர்களுக்கு ஜெபிக்க வேண்டியது மிக அவசியம். நம் கணவரோடு இணைந்த ஐக்கியத்திலிருக்கும்போது, நம்முடைய ஜெபங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இவ்வாறு, ஜெபத்திற்கு அற்புதமான பதிலை நானும் என் கணவரும் ருசித்திருக்கிறோம்.

 

குடும்ப ஜெபம், ஒரு சடங்காச்சார ஜெபமாக மாறி, நம்முடைய பிள்ளைகள் அதை 'வழக்கமான ஒன்று' என எளிதாய் எண்ணும் நிலைக்கு சென்று விடக் கூடாது! அப்படி நடந்தால், குடும்ப ஜெபம் சலிப்பானதொன்றாய் மாறிவிடும். ஆகவே, 'ஜெபம் என்றாலே' பெற்றோர்களாகிய நம்மிடம் பிள்ளைகள் பேசுவதைப் போலவே, தங்கள் பரம பிதாவிடம் விடுதலையோடும் மகிழ்ச்சியோடும் பேசும் இனிமையான பங்காகவே நம் பிள்ளைகள் காண வேண்டும்.

 

கடைசியாக, யாதொரு காரணதினிமித்தம் நம் இருதயத்தில் “இளைப்பாறுதலை இழக்கும்” நிலையைக் காண்கிறோமோ... அதற்கு உடனடியாக ஆண்டவரின் உதவியை கேட்டு, அந்த நிலையை மேற்கொள்ளவும், துரிதமாய் இளைப்பாறுதலை கண்டடையவும் வேண்டும். இவ்விஷயத்தில் நாம் துரிதமாய் செயல்படவில்லை யென்றால் ஐக்கிய குறைவும், குழப்பங்களும் நம் குடும்பத்துக்குள் வந்துவிடும்! இதுவே, சாத்தானுக்கு வாசலையும் திறக்கச் செய்து ஏராளமான குழப்பங்கள் நுழைந்துவிட ஏதுவாயிருக்கும். இதனிமித்தம் உங்கள் பிள்ளைகள்தான் அதிக கஷ்டப்படுவார்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பவர்களாயிருந்தால், வெகு துரிதமாய் இளைப்பாறுதலை இழந்த காரணத்தைக் கண்டறிந்து, கணவன் மனைவி ஐக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

 

தேவ பக்தி நிறைந்த இல்லத்தைக் கட்டுவதற்கு, ஆண்டவர் மாத்திரமே நமக்கு உதவி செய்ய முடியும்! நம் ஆண்டவரும், இது போன்ற பரலோகத்தின் முன் ருசியாயிருக்க வேண்டிய' நம் இல்லத்தை கட்டுவதற்கு எப்போதும் ஆயத்தமாயிருந்து நமக்கு உதவி செய்வார்! இந்த பாக்கியத்தை நம் எல்லோருக்கும் தேவன் அருளுவாராக!

 

சகல துதியும் மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே உண்டாவதாக!!