எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
WFTW Body: 

கொலோசெயர் 2:2-ம் வசனத்தில் பவுல் கூறும்போது “அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்குரிய இரகசியத்தை அறிந்துகொள்கிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாய் இருக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன்” எனக்கூறினார். 'இரகசியம்' என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் சில இடங்களில் வருகிறது. அது என்னவெனில், பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனால் வெளிப்படுத்தப்பட்டால் மாத்திரமே அறியப்படும் 'ஒரு சத்தியத்திற்கே' இரகசியம் என்று பெயர். 1கொரிந்தியர் 2:8-10 கூறுகிறப்படி “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை! நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினால் வெளிப்படுத்தினார்”.

இரண்டு இரகசியங்கள் மாத்திரமே “மகா” இரகசியங்கள் என வேதாகமத்தில் அழைக்க முடியும். முதலாவது, தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டதை “தேவப்பக்திக்குரிய இரகசியமானது, யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையானது: தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்!" என 1தீமோத்தேயு 3:16 கூறுகிறது. இதுவே, 'தேவபக்தியின் இரகசியம்' அல்லது ஒரு தேவபக்தியான வாழ்க்கை வாழ்வதற்குரிய இரகசியம் என கூறுகிறது. இரண்டாவது இரகசியம், சபையை சரீரமாகவும், கிறிஸ்துவின் மணவாட்டியாகவும் கூறப்பட்ட இரகசியம். எபேசியர் 5:32-ல் “இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்! இந்த இரகசியம் பெரியது! நான் கிறிஸ்துவைப் பற்றியும், சபையைப் பற்றியும் கூறுகிறேன்" என வாசிக்கிறோம். இவ்வாறாக, சபை கிறிஸ்துவோடு ஒரே மாம்சமாய் இணைந்திருப்பது, இரண்டாவது மகா இரகசியமாகும்!

இயேசு மாம்சத்தில் வந்தார்! என்பதை விளங்கிக்கொள்வதற்கு தேவனுடைய வெளிப்பாடு தேவை! எனவேதான், அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார்! எல்லா சோதனைகளையும் ஜெயித்தார்! ஆகவே, நாமும் இப்போது அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, பாவத்தை ஜெயித்து, இந்த தேவப்பக்தியின் வழியில் நடந்து வருபவர்களோடு சேர்ந்து, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்ட முடியும் என்பதே அந்த இரகசியத்தின் அர்த்தமாகும். இவ்வாறு, சபையை கிறிஸ்துவின் சரீரமாகக் கட்டுவது, இந்த பூமியிலுள்ள எந்த செயலைக் காட்டிலும், மாபெரும் ஊழியமாகும்! இதைவிட மேலான ஒரு ஊழியம், யாதொன்றும் இல்லை! இவ்விதமான சபையைக் கட்டுவதற்கே, பவுல் தனது முழு ஜீவியத்தையும் செலவழித்தார்.

இன்று, கிறிஸ்துவோடு இந்த பணிகளில் இணைந்து அவருடைய சபையைக் கட்டும் ஊழியர்களே, மாபெரும் சிறந்த ஊழியர்களாவார்கள். ஒரு தேவபக்தியான வாழ்க்கை வாழ வேண்டியது மிக முக்கியம்! ஆனால் அதுபோதாது..... பவுல் செய்ததைப் போலவே, நாமும் சபையைக் கட்ட வேண்டும். 'சமூக சேவை செய்து' தன் ஜீவியத்தை பவுல் செலவழிக்கவில்லை. பூமிக்குரிய விஷயங்களில் எளிய ஜனங்களுக்கு உதவுவது நல்லதுதான், ஆனால் அது தேவனுடைய ‘நித்திய நோக்கத்தை' நிறைவேற்றுவதாயிருக்காது. ஒரு சவுகரியமான வாழ்க்கைக்கும், நல்ல கல்வியைத் தருவதற்கும், மருத்துவ சேவைக்கும் மாத்திரமே, நீங்கள் ஜனங்களுக்கு ஊழியம் செய்தால, நரகத்திற்குச் செல்லும் பாதையை அவர்களுக்கு இலகுவாக்கித் தந்துவிட்டீர்கள்! என்பதே உண்மையாகும். நீங்கள் அவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு முன்பாக, வாழ்வின் கரடு முரடான பாதையின் வழியாய் சென்று கொண்டிருந்தார்கள்.... இப்போதோ, நீங்கள் அந்தப் பாதையை இலகுவாக்கி கொடுத்து விட்டீர்கள், அவ்வளவுதான். எல்லா ஊழியங்களிலும் மிக முக்கியமான ஊழியம், ஜனங்களை கிறிஸ்துவிடம் நடத்துவதும், தேவப்பக்தியான வாழ்க்கை வாழும்படி நடத்துவதும, பின்பு, அவர்களை கிறிஸ்துவின் ஒரே சரீரமாய் கட்டுவதுமே ஊழியத்தின் சிறப்பு என்பதை பவுல் உணர்ந்திருந்தார். இந்த பூமியில் நாம் செய்யக்கூடிய எந்த ஊழியத்திலும், இந்த ஊழியமே மகா மேன்மையானது!

கிறிஸ்துவின் நாமத்தில் ஏழை ஜனங்களுக்கு உதவும் சமூக ஊழியங்களை செய்திடும் யாவரையும் நாங்கள் மதிக்கிறோம். அந்த ஊழியத்தை செய்யும்படி அழைக்கப்பட்ட அவர்களை தேவன் ஆசீர்வதிப்பார்! ஆனால் பவுலோ, அவருடைய நாட்களில் வாழ்ந்த உலகத்தில், ஏராளமான சமூக சேவைகள் தேவையாயிருந்தாலும், அவரோ.... அந்த சேவை ஊழியத்தில் ஒருபோதும் ஈடுபாடு கொள்ளவில்லை! ஏழை ஜனங்களுக்கு உதவும் அவர்கள், இந்த பூமிக்குரிய கனமாகிய, நோபல் பரிசு விருதுகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இயேசுவோ அல்லது பவுலோ இந்த நோபல் பரிசு விருதை அவர்களால் பெற முடியவில்லை. ஆம், சபையைக் கட்டும் பணியில் ஈடுபாடு கொண்டவர்களுக்குஒருவராது நோபல் பரிசு விருதை தருவதில்லை!

தொடர்ந்து கொலோசெயர் 4:17-ம் வசனத்தில் பவுல் அர்க்கிப்பைக்கு தரும் மேலான புத்திமதியை வாசிக்கிறோம்: “நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாக” என கூறினார். தேவன் மற்றவர்களிடத்தில் கொடுத்த ஊழியத்தைக்குறித்து நீங்கள் அக்கறைப்பட தேவையில்லை. உங்களுக்கு தேவன், ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை கொடுத்திருக்கிறார்! அதைக் குறித்து அக்கறை கொண்டு, அந்த ஊழியத்தை 'என்ன விலைக்கிரயம் செலுத்தியாகிலும்' நிறைவேற்றுங்கள். அர்க்கிப்பை என்ற பெயருக்குப் பதிலாக உங்கள் பெயரை அதில் எழுதிக்கொள்ளுங்கள். அது உங்கள் இருதயத்திற்கு தரப்பட்ட புத்திமதியாக வைத்துக்கொள்ளுங்கள். நான் ஒரு வாலிபனாய் இந்த வசனத்தை வாசித்தப்போது அர்க்கிப்பைக்கு பதிலாக என் பெயரை போட்டவுடன், கர்த்தர் என்னோடு பேசியதைக் கேட்டேன்: “நான் உனக்கு தந்த ஊழியத்தை நிறைவேற்ற கவனமாயிரு! வேறு எதையும் செய்யும்படி வழிதவறிச் செல்லாதே” என்றார். உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல விரும்புவதெல்லாம் “நீங்கள் ஒரு சபையைக் கட்ட தேவன் அழைத்திருக்கும்போது, சமூக சேவை போன்ற வேறு பாதைக்கு வழிதவறிச் செல்லாதிருங்கள்! ஏதோ ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்திற்கு ஒரு நிர்வாகஸ்தர் (Director) உத்தியோகத்திற்கு நாற்காலியில் போய் அமராதிருங்கள்! தேவன் உங்களை தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அழைத்திருந்தால், தேவன் தந்த ஊழியத்தில் கவனமாயிருந்து அதை நிறைவேற்றுங்கள்”.